Tuesday, October 1, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J K  SIVAN 


                             பீஷ்மோபதேசம் தொடர்கிறது  


மகா பாரதத்தில் சாந்தி பர்வத்தில்  பீஷ்மர்  அம்புப் படுக்கையில் உத்தராயணத்தை எதிர் நோக்கி  அந்திம நேரத்தில்  யுதிஷ்டிரனுக்கு  நிறைய  அறிவுரை கூறுவதை  இந்த தொடரில் வரிசையாக கேட்டு வருகிறோம்.

ஒரு அரசனின் கடமை என்ன, அவன் எப்படி எல்லாம் நடந்து கொள்ளவேண்டும், எதிரிகள், குடி படைகளை  எவ்வாறு அணுகவேண்டும்,   ராஜ்ய நிர்வாகம், குடும்பம், தனி மனித சுதந்திரம், நேர்மை நியாயம், பக்தி எண்ணற்ற  இவை பற்றி கூறும்போது நடுநடுவே  யுதிஷ்டிரனுக்கு புரியும்படியாக  நிறைய  குட்டிக் கதைகள் சொல்கிறார். அதை எல்லாம் தொகுத்து முழுமையாக  எழுத வேண்டும்  என்று ஒரு ஆசை.  அதுவே ஒரு பெரிய புத்தகமாகிவிடும் போல் இருக்கிறது.

மஹா பாரதம் என்றாலே மிக நீண்ட ஒரு விஷயம் அல்லவா. எனவே அதில் நிறைய பேர்கள். ஊர்கள். நிகழ்ச்சிகள். சம்பவங்கள். கடவுள்கள். ரிஷிகள். நதிகள், எல்லாமே நிறைய வரும்.  அதில் எது சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதை  மட்டுமே  சுருக்கி முடிந்தவரை தெளிவாக தருவதில் தான் நான் ஈடுபட்டுள்ளேன். இவை அதிகம் வெளியே தெரியாதவை, பரவாதவை,  என்பதால்  வாசக  நண்பர்களுக்கு புத்தம் புதியதாகவே தோன்றும்.

பீஷ்மர் தொடர்ந்து யுதிஷ்டிரனிடம் பேசுகிறார்:

''நஸத்யன், தஸ்ரன் எனும் இரு அஸ்வினிகளும் மார்த்தாண்டன் பிள்ளைகள். பித்ருக்கள் பிரிவை சேர்ந்த கடவுள்கள். த்வஷ்த்ரிக்கு நிறைய பிள்ளைகள். அவர்களில் சிலர் தான் விஸ்வரூபன், அஜைகபாத், அஹி , பிரத்னன், விருபாக்ஷன், ரைவதன் ஆகியோர்.

அஷ்டவசுக்கள் பிரஜாபதி மனுவின் காலத்தில் தெய்வமாக வழிபடப் பட்டவர்கள். இவர்கள் ரிபுக்கள் என்றும் மருத்துக்கள் என்றும் அடையாளம் காணப் பட்டவர்கள். .ஆதித்யர்கள் க்ஷத்ரியர்களாகவும், மருத்துக்கள்  வழி வந்தவர்கள் வைஸ்யர்களாகவும், ஆங்கிரஸ் ரிஷி வழி தோன் றியவர்கள் ப்ராம்மணர்களாகவும் அஸ்வினி தேவதைகள் வழி வந்தவர்கள் இதரர்க ளாகவும் நால்வகை வர்ணம் செய்யும் தொழில் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டது.   எனவே ரிஷிகளும் முனிவர்களும் பல திசைகளில் உருவானார்கள்'' என்கிறார் பீஷ்மர்.

''தாத்தா, எனக்கு ஸ்ரீ கிருஷ்ணன் பற்றி சொல்லுங்கள். கேட்க ஆர்வமாக இருக்கிறது'' என்றான் யுதிஷ்டிரன்.

"யுதிஷ்டிரா, ஒருமுறை நான் வேட்டையாட சென்றபோது மார்க்கண்டேய ரிஷியின் ஆஸ்ரமத்தை ஒரு காட்டில் பார்த்து அங்கே சற்று  இளைப்பாற சென்றேன். . ஆயிரக்கணக்கான சாதுக்கள் முனிவர்கள் அங்கே குழுமி இருந்தார்கள். காஸ்யப ரிஷியும் இருந்தார். அவர் அங்கு சொன்னதை கேட்டேன்.. அதை சொல்கிறேன் கேள்:

''முன்னொரு காலத்தில் அசுரர்களும், தானவர்களும் பூமியை ஆக்கிரமித்து மிக்க பலங்கொண்டு தேவர்களை யும் பூமியில் மக்களையும் வாட்டி வதைத்தனர். ஆதித்யர்கள், ரிஷிகள் எல்லோரும் நேராக பிரம்மனிடம் சென்று தங்கள் கஷ்டங்களை முறையிட்டனர். பூமிக்கடியில் ஒளிந்திருந்த தானவர்களையும் ஒழிக்க விஷ்ணுவே ஒரு காட்டுப் பன்றி உருவெடுத்து பூமியைக் குடைந்து அந்த தீய தானவர்கள் இருந்த இடம் அடைந்து பயங்கர உறுமலுடன் அவர்களை துரத்தினார். அந்த மிகப் பெரிய பன்றியின் உருவத்தையும், அதன் ஹூங்காரத்தையும் கேட்டு நடுங்கி, அதை எதிர்த்த தானவர்களும் தைத்தியர்களும் கொல்லப்பட்டனர்.

இப்படி மாய தோற்றம் கொண்டு தீய சக்திகளை அழித்தது கிருஷ்ணனே (விஷ்ணுவே . அவனே சனாதனன் யோகீஸ்வரன்.விஷ்ணு. வாசுதேவன் எனும் சர்வ சக்தி வாய்ந்தவன்.பிரபஞ்ச, வேத முதல்வன்.கால சக்ரன். யுக முடிவில் சகலமும் அழிந்து புது யுகத்தில் அனைத்தையும் மீண்டும் உருவாக்குபவர். அப்படித்தான் மீண்டும் ரிஷிகள், பித்ருக்கள், வேதங்கள், அசுரர்கள், நாகர்கள், ராக்ஷஸர்கள் கூட தோன்றினார்கள். ப்ரக்ரிதி தோன்றி பலமாக வளர்ந்தது. பிரமன் வேதங்களை மீண்டும் கொணர்ந்தான் அல்லவா? ரிஷிகள் தவமிருந்து அதை பரப்பினார்கள். நாரதரின் கானம் வெளிப்பட்டது. பாரத் வாஜரின் ஆயுதங்கள் உண்டானது. நியாயம், வைசேஷிகம், சாங்க்யம், பதஞ்சலியின் பாதஞ்சலம், அனைத்தும் அறியப்பட்டன. மனித குலம் பெருகியது.

பஞ்ச இந்திரியங்கள், புத்தி, அவற்றின் செயல்கள் பகுத்து உணரப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலான புருஷன் எனும் ஆத்மா போற்றப் பட்டது. உடல் ஆத்மாவுக்கு கட்டுப்பட்டு செயல் படுகிறது. தானாகவே  அல்ல என்ற போதனை புரிந்தது. ஒவ்வொரு உடலிலும் ஆத்மாவே உயிராக இருந்து செயல்ப டுவது உணரப்பட்டது.

உடலைக் கூறு போட்டு  உள்ளே எங்காவது இருக்கிறதா என்று தேடி ஆன்மாவைக் கண்டு பிடிக்கமுடியாது. சூரியனின் கதிர்களில் சூரியனை காணமுடியாது. ஆனால் ஆன்மா இல்லையென்றால் உடல் இல்லை. எப்படி சூரியன் இல்லையென்றால் சூரிய ஒளிக்கதிர்கள் இல்லையோ அது போல் என்று விளக்கப் பட்டது. எங்கே, எப்போது, என்றைக்கு  ஆன்மா ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்கு தாவும் என்று உறுதியாக சொல்லமுடியாது என்று புரிய வைக்கப் பட்டது.

அஞ்ஞானம் ஆன்மாவை இருளில் ஆழ்த்தினாலும் ஆன்மா அதோடு சம்பந்தப் பட்டதல்ல. சூரியன் ஒளி வீசிக்கொண்டிருந்தாலும் மேகங்கள் சூழ்ந்து அவன் ஒளி வெளியே பரவாமல் தடுப்பது போல் தான் இது. அதற்காக சூரியன் ஒளிஅற்றுப் போய்விடவில்லை. ஆன்மாவும் தன்னில் தானாகவே இருப்பதால் உடலின் கட்டுப் பாட்டில் இல்லை. 

வாழ்வின் எந்த கறையும் ஆன்மாவில் ஒட்டாது. தூசி, தும்பு எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு சென்றாலும் காற்றுக்கு அதால் களங்கம் ஒட்டாது. அது போல் தான் ஆன்மா உடல்கள் சம்பந்தத்தால் பாதிக்கப் படாதது. அது வேறு. இது வேறு.

வேதங்களை பூரணமாக கற்று, ஞானம் அடைபவர் மிகவும் குறைவு. பஞ்சஇந்திரியங்கள் வசமாகி ஆசை முதலானவற்றால் அழிவு ஒன்றே இந்த உடலைச் சாரும். உடல் பஞ்சபூதசேர்க்கை. உடல் உணவால் இயங்குகிறது. உணவே பஞ்சபூத சேர்க்கை தானே. ஆன்மா ஞானமயமானது. அஞ்ஞானம் ஜீவனை பற்றிக் கொண்டபோது பிரபஞ்சம் அதை சூழ்ந்துகொண்டு எதிர்கொள்கிறது. அந்த நிலையில் தான் உணர்வுகள் ஜீவனை நெருங்குகின்றன.'' என்று விளக்குகிறார் பீஷ்மர். 

இன்னும் கிருஷ்ணன் பற்றிய விவரங்கள் அதிகம் வரவில்லை. இனிமேல் தான் வரும்.

''அடேயப்பா, பீஷ்மர் எத்தனை விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். யுதிஷ்டிரன் அதிர்ஷ்டம் செய்தவன் என்பதால் அவரிடமிருந்து இதெல்லாம் அறிகிறான்.அவனால் நமக்கும் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் புரிகிறது அல்லவா.

சாந்தி பர்வம் 2ம் பகுதியில் தொடர்ந்து யுதிஷ்டிர- பீஷ்ம சம்வாதங்கள் சொல்லப்படுகிறது. முழுதும் ஆன்மீக, வேதாந்த பக்தி விஷயங்களாக அவை அமைந்திருக்கிறது. அதிலே ஒரு இடத்தில் யுதிஷ்டிரன் பீஷ்மரை ஏன் மரணம் சம்பவிக்கிறது, எதற்கு அது நேரவேண்டும் என்று கேட்கிறான். அப்போது அவர் ஒரு கதை சொல்கிறார்.  அதை கேட்போமா ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...