Wednesday, October 30, 2019

VISHNU SAHASRANAMAM

ஐந்தாம் வேதம்    J K  SIVAN  

                                                                
   
    ’ஆயிர நாமன்’’   - விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

 'வைசம்பாயனரே, நீங்கள் சொல்வது விறுவிறுப்பாக இருக்கிறது. மேற்கொண்டு நடந்த விபரங்களை கூறுங்கள்'' என்றான் ஜனமேஜயன்.

 ''ஜனமேஜயா, யுதிஷ்டிரன் பீஷ்மரை வணங்கி ''தாத்தா, உங்களிடம் இருந்து எல்லா அறிவுரைகளும் நல்வழிகளும் பெற்றேன். எத்தனையோ ஜென்மங் களுக்கு உங்களுக்கு கடமைப் பட்டுள்ளேன். கிருஷ்ணன் பற்றி தாங்கள் எடுத்துக் கூறியவை ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய சில கேள்வி களுக்கு தாங்கள் பதில் சொல்லவேண்டும். நான் தெளிவு பெற வேண்டும் '' என்கிறான் யுதிஷ்டிரன்.

சரி அப்பா கேள். சொல்கிறேன் என்கிறார் பீஷ்மர். யுதிஷ்டிரன் கேட்கிறான்:
''தாத்தா,  கிருஷ்ணன்  ஸ்ரீமன் நாராயணன் ஆகிய  விஷ்ணுவின் அம்சம் என்கிறீர்களே,அவரைப்பற்றி சொல்லுங்கள் கேட்கிறேன்.

‘’யுதிஷ்டிரா, மிக அருமையான கேள்வியைக் கேட்டாய். இந்த பூவுலகிலேயே வாசுதேவன் ஒருவனே நாராயணன் அம்சம். அவனுடைய நிழலாக இருக்கிறானே உன் சகோதரன் அர்ஜுனன், அவன் தான் முன்னர் நரனாக இருந்தவன். இந்த இருவருமே நர-நாராயணர்கள் . பதினாயிரம் ஆண்டுகள் பதரியில் தவம் இருந்தவர்கள். நீ கேட்ட கேள்விகளுக்கு ஒரே விடை எது தெரியுமா? விஷ்ணு. மஹா விஷ்ணு. நாராயணன். அவன் திவ்ய நாமங்கள். ஆயிரம் நாமங்கள்.

''யுதிஷ்டிரா, இதற்காகவே  இன்னும் இங்கே  காத்திருக்கிறேன்.. இதோ உனக்கு  அந்த மஹா விஷ்ணுவின்  ஆயிர நாமங்களை பற்றி சொல்கிறேன். அதுவே போதும்.  விஷ்ணுவை விட அவரது நாமம் வலிமை மிக்கது. மஹிமை வாய்ந்தது. 

''வியாசர் ஸஹஸ்ரநாம மஹிமையை எடுத்துக் கூறும்போது முதலில் விஷ்ணுவின் ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்:

''ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே''

''வெள்ளை வெளேர் என்ற வஸ்திரம் உடுத்தியவர். சர்வவியாபியாக எங்கும் நிறைந்தவர். பூர்ண சந்திரன் போன்ற குளுமையான பால் நிலவு வண்ணம். நான்கு கரங்கள். இன்றெல்லாம் மட்டும் இல்லை என்றும் கண் கொட்டாமல் பார்த்து மகிழத்தக்க திரு முகம்.

எல்லாவற்றுக்கும் மேலாக எடுத்த காரியம் அனைத்தும் தங்கு தடை இன்றி நடத்திக் கொடுக்கும் தெய்வம். அவரை வேண்டி தொழுவோம்.''

யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே

''அடுத்ததாக யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே வணங்கி வருபவர்களுக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்ப வருமாகிய ஸேனை முதல்வர் விஷ்வக் சேனரை அடி பணிந்து தொடர்வோம்.''

''வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்’’

வியாசர் இல்லையென்றால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஏது? ரிஷிகள் எப்போதோ எங்கெங்கோ பூர்வமாக பல காலங்களில் உரைத்ததை எல்லாம் எடுத்து தொகுத்த வர் வேத வியாசர். விஷ்ணுவின் மஹாத்ம்யயத்தை ஒரு சேர அவர் அளித்த பொக்கிஷம் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் . இந்த வேத வியாசர் யார் என்று தெரிய வேண்டாமா? ஸ்ரீராமாயணத்தில் மிகவும் சிறப்பான இடம் பெறுபவர் வசிஷ்ட மகரிஷி. வசிஷ்டரின் வாரிசாக தோன்றியவர் சக்தி. சக்தியின் மகனாக அவதரித்தவர் பராசர மகரிஷி . பராசரரின் திருக் குமாரராக தோன்றியவர் நமது வேத வியாசர். இந்த வேத வியாசரின் புத்ரன் சுகப்பிரம்ம ரிஷி என்று வம்சாவளி. அவர்களை அடி பணிந்து வணங்குவோம்.

‘’வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே
நமோ வைப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம: ||

 பீஷ்மர் வியாசரை மனதில் துதித்து வணங்கி ஆரம்பிக்கிறார். விஷ்ணுவே வியாசர் என்பதும் வியாசரே விஷ்ணு என்று சொன்னாலும் ஒன்றே. வியாசர் சாமான்யர் அல்லர். ப்ரம்மம் நிரம்பிய ப்ரம்ம பொக்கிஷம். நிதி.

‘’அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே |
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே |

மகா விஷ்ணு பரமாத்மா, நமஸ்காரங்கள் .குறையொன்றும் இல்லாத கோவிந்தா பரிசுத்த ஸ்வரூபமே, என்றும் சாஸ்வதமான தெய்வமே கருணாமூர்த்தி, ஜெயவிஜயீபவ’’ .

நூற்றுக்கணக்கான மகா விஷ்ணு ஒருவரே எல்லாமும். யாதுமாகி நிற்பவர்.

‘’யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே||

அரைக் கணமாவது ஹே ப்ரபோ என்று நினைத்த மாத்திரத்தில் பல ஜென்ம பாபம் விலகி சம்சார கட்டிலிருந்து நம்மை விடுவிப்பவர் மகா விஷ்ணு.

‘’ஓம் நம விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே’’
இப்படிப் பெருமை வாய்ந்த மஹா விஷ்ணுவை வணங்கி போற்றுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...