Thursday, December 24, 2020

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம்  J K  SIVAN  


               ''நமஸ்காரம்  பெரியவா.....''

இன்று  எல்லோரும் மோக்ஷம் பெறுவதற்கு  பெரிய மனசு பண்ணி  பெருமாள்  பரம பத வாசலை திறந்து வைத்திருக்கிறார்.  கூட்டமாக  முண்டியடித்துக்கொண்டு மோக்ஷம் பெற ஆசையிருந்தாலும்  காவலுக்கு  கொரோனா ராக்ஷஸன்  ஒவ்வொருவராக
 மூன்றடி தூரத்திலாகத் தான்  விடுவான். இனிமேல்  கொரோனா  இல்லாவிட்டாலும் கூட  முகமூடி அணிந்து  ரெண்டடி தூரமாக இடைவெளி விட்டு  சர்க்கரைக்கு கூட  ரேஷனில் நிற்க பழக்கமாகிவிடும்.

விடிந்தும் குளிர் விடவில்லை. என் அறையில் நானும்  பரமாச்சார்யாளும் மட்டும் தான்.  இந்த வருஷம்  பரமாச்சார்யா படம்  அச்சிட்டு  விநியோகித்தேன்.  மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.  படம்  கிடைக்காதவர்களுக்கு  அதன்  பிரதியை இத்துடன் இணைத்திருக் கிறேன். 

சிறியதாக ஒரு தீபம் ஏற்றி வைத்து,  தோட்டத்தில் இருந்து புத்தம் புதிதாக பூத்த ஒரு சில புஷபங்களை அவருக்கு  சாத்திவிட்டு, துளசி தளங்களை சில பரிசித்து அர்பணித்துவிட்டு  எதிரே கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறேன். மனதில் மஹானைத்தவிர வேறு யாருமில்லை.  பேசினார்.   

''என்னடா,   ஏதோ தயங்கி தயங்கி மென்னு முழுங்கறே. சொல்லேன்  '' அதே கோணல் பரிகாச சிரிப்பு. அதிலும் தான் எவ்வளவு  வாத்சல்யம். கொப்புளிக்கும் பேரன்பு.  அபய ஹஸ்தம் காட்டி  கூரிய விழிகள்  பாதாதி கேசம் வரை ஸ்கேன் scan  பண்ணியது.

''இல்லே பெரியவா  உங்களை  சிலது கேக்கணும் னு  தோணறது ''

''எனக்கு தெரிஞ்சதெல்லாம் நிறைய   ஏற்கனவே  சொல்லி இருக்கேனே.  கணபதி வேறே புஸ்தகமா போட்டிருக்கானே ''

''அதுலே சிலதை தான் உங்க கிட்டே கேக்கணு ம்னு ஒரு அபிலாஷை''.

''எனக்கு தெரியும் டா. உன்னைப்பத்தி. நீ எதையும் உனக்குன்னு கேக்கறவன் இல்லே. எல்லோருக் கும் கொடுக்க தான் கேப்பே'' இல்லையா?''

''ஆமாம்  பெரியவா, உங்க ஆசிர்வாதம் அதை நான் நிறைய பண்ணனும்னு தான் எப்பவும் உங்களை வேண்டிக்கறேன் ''

''சரி  சரி  உன் புராணம் வேண்டாம்  கேள்வியைக்  கேளு''

''எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். நீங்க கிருஷ்ணனை பத்தி நிறைய சொல்லியிருக்கேள். கிருஷ்ணன் சொன்ன கீதையை பத்தி சில வார்த் தைகள் சொல்லுங்கோ''

'' கிருஷ்ணன் சொன்னது ஆத்மா பத்தி தான் அதிகம். ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே  அதையெல்லாம்  கடந்திருக் கிறது என்றால், அதெப்படின்னு  குழப்பமா யிருக்கா?   ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில்  இந்த குழப்பத்தை தீர்த்து தெள்ளத் தெளிவாகப் பண்ணியிருக்கார்.  சொல்றேன் கேளு.

‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின் றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற குழப்பம்  உன்னைப்போல  பலருக்கும்  ஏற்பட லாம்.

ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற் றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும் உயிரும்.    இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல.   இவர்  தான் சகலத் தையும் ஆட்டிப் படைப்பவர், இதைத்தான்  ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கி றார் என்கிற மாதிரி  தோன்றும்.

‘எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன’ என்று கூறுபவரே, ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை’ என்கிறார். (ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித:). இங்கே ஆத்மா எல்லாவற் றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.  இது என்ன புதிர்னு பார்க்கிறியா?''

''ஆமாம்  பெரியவா  ‘இது என்ன குழப்பமா  இருக்கே''

 ''புரிஞ்சுக்கோ.  கிருஷ்ணன் என்ன சொல்றார் னா : ‘நான்  ''எல்லாருக்கும்''   விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோக மாயை (யோக மாயா ஸமாவ்ருத:)’ என்று ஒரு போடு போடுகிறார்.

 ''புரியவில்லையே பெரியவா''

''நன்னா ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத் துக்குத் தெளிவு காணலாம். ‘நான்   '''ஒருவருக் கும்''' விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், ‘ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம் பேருக்கும் விளங்க மாட்டேன்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, ‘நான் ''எல்லோருக்கும்'' விளங்க மாட்டேன்’ என்றால், ‘ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் ‘எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை. அப்படியா னால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது இல்லையா?

''பெரியவா, அப்படின்னா  அந்தச்  சிலர் யார்?''

'அந்த சிலர்  யார்  என்றால்  கிருஷ்ணன்  சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவ தற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலை தான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகி றார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான் பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படித்தான். இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலை யைத் தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வை யில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத போது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள் இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை’ என்று கூறிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா?

''பெரியவா  நீங்க  கம்பர்  ராமாயணத்தில் இதை பத்தி சொல்லியிருக்கிறார்  என்று சொல்லியி ருக்கிறேளே, அதைப்பற்றி  சொல்லுங்கோ ''

 ''ஆமாம் .கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:

‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.’

அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப் போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.

நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூ பத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷை யில் சொல்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...