Saturday, December 5, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்    J  K  SIVAN 

                                      
                    விதண்டாவாதம் 

பக்தர்களில்  எத்தனையோ ரகம். மனித குணத்தின் பிரதிபலிப்பு  அவரவர் பழகுவதில் நமக்கு  வெளிப்படுவதைப் போல்  மஹா பெரியவரை  தரிசிக்க வரும் பக்தர்களிடமும்  வெளிப்பட்டதுண்டு. 
நமக்கு ஆச்சர்யத்தை ஊட்டும் ஒரு சம்பவம்  நடந்திருக்கிறது.

காஞ்சி மடத்தில்  ஒரு  பக்தர்  பெரியவரை தரிசனம் செய்ய வந்தார்.  உண்மையான பக்தி அவருக்கு.   ஆனால் வாய்  அவருடைய முதல் விரோதி. எதற்கெடுத்தாலும் எல்லோருடனும் விதண்டாவாதம் பண்ணும்  டைப். அதை  அவரையறியாமல்  மஹா பெரியவாளிடமும்  காட்டி விட்டார்.  தரிசனம் முடிந்த அன்று இரவு   ஊருக்குப்  புறப்பட      பெரியவாளிடம்  உத்தரவு கேட்க சென்றார். 

''பெரியவா,  நான் நாளை  விடிகாலை  பஸ் லே புறப்படறேன். உங்க கிட்டே இப்பவே  உத்தரவு வாங்கி

ண்டு போக வந்திருக்கேன்''

''என்ன  நாளைக்கு  விடிகாலையிலேயா ஊருக்கு போறேங்கறே . நாளைக்கு   ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" 

 "இல்லே  பெரியவா,  நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்றவன். வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே சொல்லி  இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே ராமன் கிருஷ்ணன் எல்லோரும் ? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக் கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார்  அந்த  முரட்டு பக்தர்.

மஹா பெரியவாளுக்கு கோபம் வராது. வந்தால் கடுமையாக வரும் சந்தர்ப்பங்களும் நிகழ்ந்திருக்கிறது. அதில் ஒன்று இது. 

'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவாளா  இப்படி  பேசுகிறாரென ஆச்சர்யமாக  இருக்கும். விளாசித் தள்ளிட்டார்  அந்த பக்தரை!

"ஓஹோ  ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லி யிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன் னதுதானோ? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" 

''இல்லே  பெரியவா....... வந்து......''

''என்ன  இல்லை ?   உனக்கு தேவையா இருக்கே  மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட்  லொட்டு லொசுக்கு..... அதெல்லாமும்  உபயோகப்படுத்துன்னு  வேதத்தில் சொல்லியிருக்கா? 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு?

''பக்தர்  மென்று விழுங்கினார்.  அருகில் இருந்த மற்ற பக்தர்கள்  திகைத்து  சிலையாக நின்றார்கள். ஒரு பெரிய லெக்சர் கொடுத்துட்டார்  மஹா பெரியவா....  மேலும் தொடர்ந்து சொல்கிறார் கேளுங்கள்: 

" ஏண்டா,  வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறதுஇல்லையா?   போய்ட்டு வா!  உனக்கு பிரசாதம்  எல்லாம் வேதத்திலே கொடுக்க சொல்லலே''

''மஹா பெரியவா  க்ஷமிக்கணும்.  நான்  முட்டாள்தனமா பேசிட்டேன்.  என்னை மன்னிச்சுடுங்கோ''இனிமே அந்த அதிகப்பிரசங்கத்தை இன்னியோடு உட்டுடறேன்... ''   ஆடிப்போன  அந்த  விதண்டாவாதி பக்தர்  அப்படியே கீழே விழுந்து  நமஸ்கரித்து  ''எனக்கு நல்ல புத்தி கொடுங்கோ''  என்று வேண்டினார். 

அடுத்த கணமே மஹா பெரியவா கோபம்  இருந்த இடம் தெரியாமல்  பழையபடி புன்னகையோடு  அங்கிருக்கும் அனைவருக்கும்  கேட்கும்படியாக  பேசினார்: 

'''ஒரு பெரிய  விருக்ஷத்துலே  அநேக  புதுகே  கிளை, இலை , பூ காய், கனியெல்லாம்   விருக்ஷத்தை  அனுசரித்தே  விளையறமாதிரி   வேதகாலத்திற்கு  அப்பறமும்   அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, சிற்சில  மாற்றங்கள்  புதிதாக ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாத்தையும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணியிருக்கிறதை  புரிஞ்சிக்கணும்''

"இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம் என்ன தெரியுமா. வேதத்தில் என்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ,  அதுக்காகவே,  ஆனால்  வேதத்தில் சொல்லாத உபகரணங்களை  பிற்காலத்தில் 
  கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த  தாவனம்-(பல் தேய்க்கறது), ஸ்நானம்,  சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கையிலே  அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். 

ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கு.  அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணினா .இன்னிக்கு ஸ்கூட்டர்,   கார், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கு.  இதுகளை பற்றி   வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரம் உண்டாக்கறதோ அதெல்லாம் தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]

சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேர்ந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.

"ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான முறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். 

ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப் படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்  பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப் போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட் எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல் லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்? அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு MAIN  அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.

அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.

இவ்வளவு விவரமாக  சொல்லி விட்டு  மஹா பெரியவா அந்த  விதண்டாவாதியிடம் சொல்கிறார்: 

''  நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியாகணும் . நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா! 


அந்த விதண்டாவாதி பக்தர்   மறுநாள் மடத்தை விட்டு போகும்போது ஒரு புது மனிதனாக மாற்றம் அடைந்தி ருந்தார்  என்று சொல்ல அவசியமே இல்லை.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...