Sunday, August 2, 2020

THE CORRECT DECISION


                   
சரியான முடிவு   J K  SIVAN 


கிருஷ்ணன் துவாரகை  அரண்மனையில்  அவன் தனிமையில் வழக்கமாக அமரும்  சிறிய  குளத்தின் கரையில்  மரத்தின் வேரின் மேல் நாற்காலி போல் அமர்ந்து நீர் அசைவதையும்,  தாமரை இதழ்கள் அவனை நோக்கி  ஆடுவதையும் ரசித்தவாறு அமர்ந்திருந்தான்.    

அவனைஅறியாமல் ஒரு நீண்ட  பெருமூச்சு வந்தது. அதை அடுத்து  புன்சிரிப்பும் தொடர்ந்தது. அவனருகே வந்து நின்ற ருக்மணியை அவன் கவனிக்கவில்லை.

'' ப்ரபு, என்ன உங்களுக்கு நீங்களே  யோசனை, சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி என்ன ஒரு சம்பவம், பெருமூச்சும் அதை தொடர்ந்து புன்னகையும்.... ஏதோ விஷயம் இருக்கிறது. எனக்கும் சொல்லுங்கள்''  
               
அதெல்லாம் ஒன்றுமில்லை  ருக்மணி, இதோ இந்த தாமரை இதழ்கள் எவ்வளவு  ஆனந்தமாக  நீரில்  மிதந்து அசைந்துகொண்டிருக்கின்றன.  நீரை ஆனந்தமாக அனுபவித்தாலும் ஒரு சொட்டு கூட  நீர் அவற்றின் இலையில் ஒட்டவில்லை  பார்த்தாயா?  வாழ்க்கையை  எந்த பற்றுமில்லாமல் ஆனந்தமாக அனுபவிக்க என்ன வழி என்று இந்த தாமரை இதழுக்கு  இலைக்கு, தெரிவது கூட மனிதர்களுக்கு தெரியவில்லையே என்று நினைக்கும்போது சிரிப்பு வந்தது. அவ்வளவு தான். 


''அது சரி  ருக்மணி,     நீ  ஒரு  உதவி செய்.  
என்றுமில்லாமல் இன்று  எனக்கு களைப்பு மிகுந்து  அதிக  தூக்கம் வருகிறது. நான் என் அறையில் தூங்கப் போகிறேன்.  யாராவது என்னை தேடி வந்தால் நான் எழுந்திருக் கும்வரை காத்திருக்க  முடியும் என்றால் காத்திருக்கட்டும் என்று சொல். ''

''ஆஹா,   அப்படியே செய்கிறேன் பிரபு '' என்று ருக்மணி  கண்ணனைத் தொடர்ந்து அரண் மனைக்குள் சென்றாள் .

துவாரகையில்  அன்று  பகலில்  வெகு  வெப்பமாயிருந்தது. காற்றிலே அனல்  வீசியது.  தெருக்களில் நடமாட்டமே இல்லை.  அரண்மனையில் கிருஷ்ணன் தனது பெரிய  அறையில் கட்டிலில் படுத்து  உறங்கிவிட்டான்.  சாயந்திரம்  வரை  வந்தவர்களை  ருக்மணி அப்புறமாக  வர சொல்லி  அனுப்பிவிட்டாள் . 

“இன்று  மாலை  கண்டிப்பாக  வாயேன்  நாம்   பேசுவோம்” என்று  கிருஷ்ணன்  ஏற்கனவே  அர்ஜுனனை வரச் சொல்லியிருந்தான்.பாரதப்போர்  நடக்கப்போவது  உறுதியாகிவிட்டது.  கௌரவர்கள்  தங்கள்  பக்கம்  யாரையெல்லாம் சேர்க்க முடியுமோ  அந்தந்த  ராஜாக்களுக்கு  ஆள்  மூலம்  செய்தி  அனுப்பி  படை  திரட்டி கொண்டிருந்தனர் என்று கிருஷ்ணன்  அறிவான்.  அவ்வாறே  யுதிஷ்டிரனும்  தன்  உறவினர்  நண்பர்கள் உதவியை  நாடி படை திரட்ட  ஆரம்பித்தான்.  இன்னும் யுத்தத்துக்கு நாள் குறிக்கவில்லை. 

துவாரகை மன்னன்  கிருஷ்ணனின்   உதவியை  இருபக்கமும்  நாடியது.  அவன்  இருவர்க்கும் வேண்டியவன்,  உறவினன் அல்லவா?  துரியோதனனும்  முன்பாகவே  செய்தி  அனுப்பி யிருந்தான் கிருஷ்ணனை  சந்திப்பதற்கு  இன்று  வருவதாக. 

“ஆஹா,  அதற்கென்ன  வாயேன்  பேசுவோம்”  என்று  கண்ணன் பதில் அனுப்பியாயிற்று. 

 சொல்லி வைத்தாற்போல்  சற்று நேரத்திற் கெல்லாம்  துரியோதனனின்  ரதம்  துவாரகையில் நுழைந்தது.  அரண்மனை வாயிலில் வந்து இறங்கிய   துரியோதனன்   ருக்மணியின் உபசரிப்பை பெற்று  உரிமையோடு  கிருஷ்ணன் அறைக்கு வந்துவிட்டான்.  கண்ணன் உறங்குவதால் அவன் தலைமாட்டில் இருந்த   ஒரு  ஆசனத்தில் அமர்ந்து கண்ணன்  துயிலெழ  காத்திருந்தான்.


 நேரம் ஓடியது.  அர்ஜுனன் தேரும்  கிருஷ்ணன் அரண்மனை வாயிலில் வந்து நின்றது. அடிக்கடி வருக்கின்ற   இடம் என்பதால்  அர்ஜுனன் கிருஷ்ணன் அறைக்குள்  நேராக  நுழைந்தவன்  அங்கே  துரியோதனன் கிருஷ்ணன் தலைமாட்டில் அமர்ந்திருப்பதைக்  கண்டான். முகம் சிவந்தது. பற்களை கடித்தான்.  கோபத்தை அடக்கிக்கொண்டு  கிருஷ்ணன்  படுக்கையில்  கால் நீட்டி படுத்திருப்பதை பார்த்து அவன் காலடியில்  இருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தான்.  அசந்து தூங்கிக்   கொண்டிருந்த கிருஷ்ணன் அழகை ரசித்து அவனை மனதால் துதித்துக் கொண்டி ருந்தான் அர்ஜுனன்.  

எப்படி  கிருஷ்ணன்  தூங்கும்போது  கூட ஒரு  தனியான  இனிய  காந்த சக்தியோடு காட்சி யளிக்கிறான்  என்று  ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்த  அர்ஜுனன் கண்கள் இமைக்காமல் கிருஷ்ணன் முகத்தையே  பார்த்துக்  கொண்டிருந்தன.  என்ன  வினோதம் இது.  இதை எதிர்பார்த்தமாதிரி கிருஷ்ணன் கண்களை திறந்து விழித்தான்.   கிருஷ்ணனின்  பார்வை முழுதும் அர்ஜுனன் முகத்திலேயே  இருந்ததால் அவன் துரியோதனன் அந்த அறையில் இருப்பதையோ, தனது தலை மாட்டில் அமர்ந்திருப்பதையோ காணவில்லை.

ஒரு எறும்போ  கொசுவோ  சுவற்றில்  அமர்ந்த ஈயோ, நமது  கவனத்தை  கவர்கிறதா? .  இந்த நிலையில்  தான்  துரியோதோதனனை இது வரை மதித்தான் அர்ஜுனன்.

கண் விழித்த கிருஷ்ணனின்  பார்வை  நேராக  தனது   கால்மாட்டில் அமர்ந்திருந்த  அர்ஜுனன் முகத்தில்  நிலைத்ததும்   அவன் கண்களோடு  கலந்தது.  ஒரு  புன்முறுவல்  கிருஷ்ணன் முகத்தில் தோன்றியது. 

“ அட  அர்ஜுனனா,  வா  அர்ஜுனா  வா! .  ரொம்ப  நேரமாக  தூங்கிவிட்டேன்  போல் இருக்கிறதே.  உன்னை   வெகுநேரம்  காக்க வைத்து விட்டேனோ?”.  என்றான் கிருஷ்ணன் ஆர்வத்துடன்.

துரியோதனன்  தான் இருப்பதை  உணர்த்த  தொண்டையை  கனைத்தான்.  பக்கத்தில்  திரும்பி பார்த்த கிருஷ்ணன்  “  ஓஹோ,  துரியோதனனா.  நீ  எப்போ வந்தாய்?.  எப்படி நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து என்னை பார்க்க கிளம்பினீர்கள்?  ஒற்றுமையாகிவிட்டீர்களா?

“ இல்லை  கிருஷ்ணா, நான்  தான்  முதலில்  உன்னை பார்க்க  ஹஸ்தினாபுரத்திலிருந்து தனியாக  வந்தவன் ''

“ நீங்கள்  இருவருமே  ஒரு சேர  இங்கு வந்தது மிக்க   மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன விஷயம்  சொல்லுங்கள்?”

“கிருஷ்ணா,  உனக்கு  தான்  நன்றாக  தெரியுமே   எங்களுக்கும்  பாண்டவர்களுக்கும்  போர்  நிச்சயமாகிவிட்டது.   போரில்  கௌரவர்களுக்கு  உன் உதவியை கேட்கவே  நான் வந்தேன்”  என்றான் துரியோதனன்.  

“நீ  என்ன  விஷயமாக வந்தாய்  அர்ஜுனா?”  

“இதே  விஷயம்  தான் கிருஷ்ணா”  என்றான்  அர்ஜுனன்.  

“சுயோதனா,  இதோ  பார்  நான்  இரு பக்கத்துக்கும்  வேண்டியவன்.  எனக்கு  இது  ஒரு அக்னி பரிக்ஷை அல்லவா?. யார் வேண்டும்  யார் வேண்டாம்?   ஆகவே  நான்  என்ன  நினைக்கிறேன்  என்றால்.  எங்களது துவாரகை  ராஜ்ய  நாராயணி  சேனை, எந்த பக்கம் சேறுகிறதோ, நான்  அதிலிருந்து  விடுபட்டாக வேண்டும்.  நான் பாண்டவர்களை எதிர்த்து  கௌரவர்களுடனோ  அல்லது  கௌரவர்களை  எடுத்து பாண்டவர்களுடனோ  யுத்தம்  புரிய முடியாது.  எனவே என்னுடைய  உதவியை  நாடும்  உங்கள்  இருவருக்கும்  ஒரு  யோசனை  சொல்கிறேன்.   கேளுங்கள்.  என்னையும்  என் ராஜ்யத்தின் நாராயணி சைன்யத்தையும் உங்கள் இருவருக்கும்  அளிக்கிறேன்.  நான்  ஏற்கனவே  சொன்னபடி  ஆயுத மெடுத்து  உங்கள் எவருக்கும்  உதவியாக  யுத்தம்  புரிய போவதில்லை.  ஆகவே  ஒருபக்கம்  நான்  மட்டும்  தான்  இருப்பேன்  யுத்தம் புரியாமல்.   மற்றொரு பக்கம்  என்  நாராயணி சேனை அனுப்புகிறேன்.  யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக்  கொள்ளுங்கள்.  

''எங்களுக்கு எது வேண்டும் என்பதை முதலில்  நான்  சொல்கிறேன். நான் தானே  முதலில் உன்னை பார்க்க வந்தவன். '' என்றான் துரியோதனன்.

''நீ முதலில் இங்கே வந்திருக்கலாம். ஆனால் நான் முதலில் என் அறையில் பார்த்தது  அர்ஜுன னை  அல்லவா?  ஆகவே  இளவலான  அவனையே முதலில்  கேட்கிறேன்.   அப்பா,  அர்ஜுனா  உனக்கு   நான்  மட்டும்  வேண்டுமா  அல்லது  என்னுடைய  சைனியம்  மட்டும் வேண்டுமா?”.

“கிருஷ்ணா,   இதில்  நான்  யோசனை செய்ய  என்ன  இருக்கிறது. எனக்கு  எந்த  சேனையும்  தேவையில்லை. என்  சேனையே  போதும் இந்த  யுத்தத்திற்கு.  எனக்கு  வேண்டியது எல்லாம்  நீ  ஒருவன்  மட்டும்  தான்.  நீ என்னருகில் இருந்தால் போதும். யுத்தம் புரிய தேவையில்லை''
   
“இதோ  பார்  அர்ஜுனா  அவசரப்படாதே.   இது  பயங்கர   யுத்த விஷயம்.  உனக்கு எதிராக  உங்களை அழிக்க காத்திருப்பது பல அக்ரோணி பலம் மிகுந்த சைன்யங்கள்.   ஆகவே  சரியாக யோசித்து சொல்.  நான் மட்டும்  வந்தால்  உனக்கு என்னால்   எந்த  உதவியும் இல்லை.  நான்  உன்  ரதத்தை  மட்டுமே  ஒட்டி உதவ முடியும்.  ஆயுதங்கள் ஏந்தி  உதவ முடியாது என்று சொன்னே னே கவனமிருக்கிறதா?  ஆகவே  நிதானமாக  யோசித்து உன் முடிவைச்  சொல்.   என்  சேனையை   உபயோகித்தால்  பலம் உன் பக்கம்  கூடுமே!. நான் மட்டும் இருந்தால்  உனக்கு துணை மட்டும்  தான். யோசி!”.

“கொஞ்சம்  கூட  தயக்கமோ மயக்கமோ  எனக்கில்லை  கிருஷ்ணா.    யோசிக்கவே தேவையில் லை  நான்.   நீ   ஒருவனே எனக்கு போதும்”.  

“சரியப்பா,  அவ்வாறே  ஆகட்டும்.  கௌரவர்களோடு பாண்டவர்கள் புரியப்போகும்  போரில் அர்ஜுனா,  நான் உன்னோடு இருப்பேன்.  திருப்தியா.    
துரியோதனா  நீ எதுவும் கேட்கவேண்டிய அவசியமே இல்லை.  என் நாராயணி சேனையை, எனது  படைகள்  அனைத்தையும்  உனக்கு  அனுப்பி வைக்கிறேன்  உனக்கும் இதில்  திருப்தியா?” என்றான் கிருஷ்ணன்.

துரியோதனனுக்கு  மட்டற்ற  மகிழ்ச்சி.  “முட்டாள்  அர்ஜுனன். யுத்தத்திற்கு  ஒரு நிராயுத பாணியை  கேட்கிறானே.  நல்ல  வேளை அர்ஜுனனுடைய தவறான அவசரக்குடுக்கை  முடிவால்,  எனக்கு  கிருஷ்ணனின்   நாராயணி  சைன்யம்  கிடைத்ததே  என்று   மகிழ்ந்தவன்   “நன்றி  கிருஷ்ணா”   என்று  ஆனந்தத்தோடு  திரும்பினான்.  

அர்ஜுனன்  கிருஷ்ணனை  பூரண  திருப்தியோடு  நன்றி சொல்ல  வார்த்தையில்லாமல் ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர்  உகுத்தான்.  

கிருஷ்ணன் தனக்கு  பிடித்த  நண்பன்  அர்ஜுனனின்  பூரண  அன்பை  உணர்ந்து பேரானந்தம் கொண்டான்.  சரியாகவே  முடிவெடுத்தான்  அர்ஜுனன். எங்கே  தப்பான முடிவெடுத்து எனது படையை கேட்பானோ என்று  ஒரு கணம்  நிம்மதியற்று உள்ளூர பெருமூச்சு தொடர்ந்து இருந்தது.  

கிருஷ்ணன் ஏன் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது முதலில் பெருமூச்சு விட்டான், பிறகு புன்னகைத்தான் என்று ருக்மணி இதெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவள் புரிந்து  கொண்டாள் .

''இறைவா, கிருஷ்ணா,   உன் மீது  வைக்கும்  நம்பிக்கையே பெரிய  பலம்''     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...