Sunday, August 30, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்      J K  SIVAN                                                             


'உங்க பையன் சொல்றது நிஜம்''

பாலா  திரிபுர  சுந்தரி, ராஜராஜேஸ்வரி, மாதங்கி பற்றி சமீபத்தில் கூட ஒரு அற்புத அனுபவம் எழுதி இருந்தேன்.   ஆச்சர்யமாக எனக்கு  இது வரை அறிமுகம் ஆகாத ஒரு நண்பர் நெமிலி ஸ்ரீ பாலாவின் பக்தர்  டெல்லியிலிருந்து எனக்கு  டெலிபோன் செய்தார். டெல்லியில், 40 ஆண்டுகளுக்கும் மேலே வாசம். . தமிழ் பேசத்தான் தெரியும், படிக்கவோ, எழுதவோ தெரியாத பாலக்காட்டு பிராமணர்.
'' பாலா மேல்  நான் தமிழில் பாட்டு  கற்பனையா எழுதி இருக்கேன். எனக்கு தமிழ் எழுத தெரியாததால் அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறேன். அதற்கு அர்த்தம் எழுதி உதவுகிறீர்களா. உங்களைபற்றி நிறைய கேள்விப்பட்டு உங்களோடு தொடர்பு கொண்டேன்''
''ஆஹா  அதற்கென்ன  அனுப்புங்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்றேன்.''  150 க்கும் மேல் பாட்டுகள் கூரி யரில் அனுப்பியுள்ளார். அதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.   ரெண்டு நாளுக்குப் பிறகு  நெமிலியிலிருந்து குங்கும பிரசாதம், பாலா வின் படங்கள் ஒரு சின்ன பார்சல் கௌரியர்  எனக்கு அனுப்பா ஏற்பாடு பண்ணி இருக்கிறார். ரொம்ப சந்தோஷம் எனக்கு.
நெமிலி பாலா ஒரு  தனியார் இல்ல கோயிலில் மட்டுமல்ல  எண்ணற்றோர்  உள்ளக்கோயி லிலும்  உள்ளாள். மிக சக்தி வாய்ந்த குழந்தை.  அவளுக்கு சாக்லேட்,மிட்டாய்கள் தான் பிரசாதம். வருவோர்க்கு எல்லாம் இனிப்பு கள்.  முழுதும் தங்கத்தில் ஆன அவள் விக்ரஹம்  அதீத பக்தியோடு  வழிபடப் படுகிறது. நான் நண்பர்களோடு சென்று இரு முறை பார்த்திருக்கிறேன்.
ஆச்சர்யமாக இன்னொரு  நண்பர் இன்று மாலை  அவளைப்பற்றிய  மஹா பெரியவா சம்பந்தப் பட்ட  ஒரு அதிசயச் செயதி  அனுப்பி னார். அதைச் சுருக்கிச் சொல்கிறேன் கேளுங்கள்/படியுங்கள்.
ஒரு நாட்டுக்கோட்டை செட்டியார் பெரியவா பக்தர்.  நகரத்தார் பல ஆலயங்களுக்கு வாரி வழங்கிய தர்மிஷ்டர்கள். தெய்வபக்தி நிரம்பிய குடும்பங்கள்.  இந்த செட்டியார்  நேரம் கிடைத்தபோதெல்லாம் காஞ்சிபுரம் வந்து பெரியவா தரிசனம் செய்ய மறப்பதில்லை. ஒரு தடவை தனது ஆறு ஏழு வயது பிள்ளையோடு பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.
வரிசையில் நின்று  மெதுவாக  பெரியவா அருகில் வந்தபோது தட்டில் இருந்த பழங்கள், வில்வம் எல்லாம் மஹா பெரியவா எதிரே வைத்துவிட்டு  அப்பாவும் பிள்ளையும் நமஸ்கரித்தார்கள் .
மஹா பெரியவா அந்த செட்டியாருக்கும்  பையனுக்கும்  பிரசாதம் அனுகிரஹித்து ஆசிர்வதித்தார்.அவர்கள் நகர்ந்தனர். அடுத்தவர்கள் தரிசனம் செய்ய வேண்டுமே.  அப்போது அந்த பையன்
“அப்பா…! என்றான்.
''என்னடா  வா போகலாம்''
''குனிந்து உன் காதைக் கொடு சீக்கிரம்''
செட்டியார் குனிந்தார்.  பையன் ரஹஸ்யமாக ஏதோ சொன்னான்.  செட்டியார் பேந்த பேந்த விழித்தார்.  மஹா பெரியவா இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். செட்டியார் மஹா பெரியவாளை மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மீண்டும் பார்த்துவிட்டு பையனை மெதுவாக அழைத்துக்கொண்டு  திரும்ப முயற்சித்தார்.  பையன் மீண்டும்  அவர் காதில் ஏதோ சொன்னான்.பையன் நகர மறுத்தான்.  செட்டியார்  மஹா பெரியவாளை  மீண்டும் பார்த்தார்.   வாயைப் பிளந்தார் .பையன் விடவில்லை! அப்பாவின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்து, அங்கிருந்து நகராமல்  முணுமுணு வென்று ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.பையன் முணுமுணு வென்று மெல்லிதாக அப்பாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருப்பதை  மஹா பெரியவா கவனிக்க தவறவில்லை.   அவர்களை பார்த்து புன்னகைத்தார்.
”உங்க கொழந்தை என்ன சொல்றான்?''
“ஒண்ணுமில்ல பெரியவா….! ஏதோ தெரியாம சொல்றான்”
”பரவாயில்ல, என்கிட்டே சொல்லுங்கோ''
''எப்படி சொல்றதுன்னு தெரியல சுவாமி.
உங்க மடியிலே  ஏதோ ஒரு  சின்ன கொழந்தை,  பச்சை கலர்ல, பட்டுப் பாவாடை கட்டிக்கிட்டு உக்காந்திருக்குதாம் அது யாருப்பா?…ன்னு கேக்கறான். ''எனக்கு ஒண்ணுமே புரியல, என் கண்ணுக்கு உங்க மடியில எந்த குழந்தையும் தெரியலயே  சுவாமி''
செட்டியார் நடுங்கிக் கொண்டே சொல்லி முடித்தார். குழந்தை சொல்வதை நம்பவும் முடிய வில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
மஹா பெரியவா அந்த பையனை பார்த்து தலையாட்டினார்.
“என்ன தாத்தா? நா பொய் சொல்லலேல்ல?” உங்க மடியிலே  ஒரு குழந்தை தெரியறது எனக்கு . அது யாரு? 'ன்னு அப்பாவை கேட்டேன். அப்பா சொல்லமாட்டேங்கறார்..
“ஒன் கொழந்தை சொல்றது நெஜந்தான்!
செட்டியார் மட்டுமல்ல  அருகில் இருந்தவர்கள் எல்லோருமே  பெரியவா சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார்கள்.
“என்னது? பெரியவா மடியில கொழந்தைன்னா
பாலா த்ருபுரஸுந்தரியாத்தான் இருக்கும்!.”
அத்தனை பேர் மனஸிலும் ஏறக்குறைய இந்த எண்ணந்தான்!  பெரியவா  விளக்கமாக சொன்னார்:
“நம்ப ஸ்ரீமடத்தோட குரு பாரம்பர்யத்துக்கு அப்டி ஒரு வரப்ரஸாதம்… ஒரு அனுக்ரஹம் இருக்கு. மடத்ல… ஸ்வாமிகளா இருக்கற எங்களோட மடியில, ஸாக்ஷாத் ஶாரதாதேவி ஒக்காந்துண்டு இருக்கறதா ஒரு ஐதீகம்! அது பல ஸமயங்கள்ள, “எங்களோட” கண்ணுக்கே கூடத் தெரியாமப் போறதுண்டு.! ஆனா, இப்டியொரு காக்ஷி, ஒரு குபேரனோட கண்ணுக்குத்தான் தெரியும்
'' குபேரனா?'''  என்று  எல்லோரும் திகைத்து நிற்க   பெரியவா மேலும் விளக்கினார்:
“உங்க பிள்ளை கண்ணுலே  பாலா  தெரிஞ்சி ருக்கா. ரொம்ப  ஸீக்ரம்… அவன்  குபேரனா ஆய்டுவான்”
மகா  பெரியவா  கையைத் தூக்கி ஆஶிர்வாதம் பண்ணினார். வியப்பின் விளிம்புக்கே போய் விட்டார்கள் எல்லாரும்! செட்டியாரோ தான் இப்போதிருக்கும்  ஏழ்மை நிலையை எண்ணிப் பார்த்தார்.
“குபேர அந்தஸ்தா!” கற்பனைகூட பண்ண முடியாதே!  எப்படி என்று  புரியவே இல்லை . எப்போ  மஹா பெரியவா சொன்னாரோ, இனி அது ஸத்யம். எனவே ஸாத்யம்!   மனசில் இந்த  நம்பிக்கையோடு செட்டியார்  பிள்ளை யோடு  ஊர் திரும்பினார். நாளாக நாளாக  இந்த  விஷயம் மறந்தே போனார்.
காலம் ஓடியது. வருஷம் ரெண்டு அதோடு சேர்ந்து நகர்ந்தது.   ஒருநாள்  செட்டியாரின்  தூரத்து உறவுக்காரர்   பலராம செட்டியாரைப் பார்க்க அவர்  ஊருக்கு வந்தார்.
''வாங்க  ஆனந்தம் செட்டியார் '' என்று அவரை வரவேற்றார் நமது செட்டியார். ஆனந்தம் செட்டியார் குளித்து சாப்பிட்டு விட்டு திண்ணையில்  அமர்ந்து பேச்சை ஆரம்பித் தார்.
''பலராமா , உனக்கு தெரியுமில்ல.  எனக்கு வயசாயிடுச்சி, ஆச்சியும் போயிட்டுது. இப்போதெல்லாம் கழனி, கடை வ்யாவாராம் ஒண்ணும்  முன்னே மாதிரி கவனிக்க முடியல. பரம்பரை சொத்துக்கு வாரிசு இல்ல. நல்லா யோசிச்சேன். சொந்தம் பந்தம் வுட்டுப் போகக்கூடாதுன்னு  தோணுச்சு. உன்னைப் பாக்க வந்தேன். உன் ரெண்டாவது பிள்ளையை எனக்கு சுவீகாரம் கொடுத்துடு. நான் அவனை நல்லா பாத்துக்குவேன், நீயும் வந்து அப்பப்போ பாத்துக்கோ,  என்னுடைய ஆஸ்தி பாஸ்தி எல்லாத்துக்கும் இனிமே உன்பிள்ளை, என் சுவீகாரப் பிள்ளை தான் நேர் வாரிசு. நம்ம குலதெய்வம் கோவில்லே திருவுளச்சீட்டு போட்டு உத்தரவு ஆயிடுச்சி. நேரே இங்கே வந்துட்டேன். சரின்னு சொல்லு ''
பலராம செட்டியாருக்கு தலை சுற்றியது.  ரெண்டு வருஷம் முன்னால்  காஞ்சி பெரியவா எதிரில் நடந்த சம்பவம், பெரியவா சொன்னது எல்லாம் மின்னல் வெட்டாக பளிச் பளிச் என்று திரும்ப வந்தது.
பையன்  பெரியவா மடியிலே  பாலாவை குபேரனாகத்தான் பார்த்திருக்கிறான் இல்லையா?  பெரியவா அவன் குபேரானாகப்போகிறான் என்று சொன்னது பொய்க்குமா?  காஞ்சி  காமாக்ஷி ஸ்வரூபம் அல்லவா மஹா பெரியவா. காமாக்ஷி தானே காமகலா காமேஸ்வரி, பாலா. ராஜ மாதங்கி..
பலராம செட்டியார் ரெண்டாவது மகன் ஆனந்தம் செட்டியாருக்கு சுவீகார புத்திரனாக ஏற்கப்பட்டு அவன் குபேரனாக ஆனதை எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...