Thursday, August 6, 2020

DO YOUR DUTY

                            நீ உன் கடமையைச் செய்.         J K  SIVAN 
                          

சென்னை நகரத்திலும் கொஞ்சம்  அமைதியான  ஒரு  சிறு  குடியிருப்பு  கண்ணனூர்,  ஏதோ, நங்கநல்லூர் பக்கத்தில் என்று வைத்துக் கொள்வோம்.  எத்தனையோ கோயில்கள் அருகே நங்கநல்லூரில் இருந்தாலும் இந்த சின்ன கிராமத்தில்  ஒரு  புராதன அழகான  அமைதியான  கிருஷ்ணன்  கோவில்.   ராமானுஜாச்சாரி வெகுநாளாக  கிருஷ்ணனுக்கு  பட்டாச்சாரியார்.  இந்த  உலகில்  அவரும்  அந்த கோயிலின் கிருஷ்ணனும்  தான்  இணைபிரியா நண்பர்கள்.   

வெகுநாளாக  ஒரு கேள்வி  ராமானுஜசாரி  மனதில்.  ஏன்  கிருஷ்ணன் யாருடனும் பேசுவதில்லை. எது சொன்னாலும், செய்தாலும் கிருஷ்ணன்  வெறும் சிலையாகவே  சிரித்து கொண்டே  பார்த்து கொண்டிருக் கிறானே இது ஏன்?    மண்டைக்குள்  கேள்வி குடைந்தது. பக்தர்கள்  நாள்தோறும் வந்து  எத்தனையோ குறைகள் சொல்லி, நன்றி சொல்லி,  சிரித்து  அழுது,  கோபித்து, வருந்தி   என்னென்னவோ உணர்சிகளை  கிருஷ்ணனிடம்  பரிமாறிக்  கொள்கிறார்கள். அனைத்தையும் சிரித்துகொண்டே, நாள் முழுதும் நின்று   கொண்டே, களைப்பை காட்டாமல்  இந்த கிருஷ்ணன்  கேட்டுக் கொண்டு   பொறுமையாக வாய் திறக்காமல் வெறுமே  பார்த்துக்  கொண்டே உணர்ச்சி காட்டாமல்  இருக்கிறாரே.  எவ்வளவு ஆயாசமாக இருக்கும்? நாற்பது வருஷங்களாக  நான்  சற்று நேரம்  நின்றுகொண்டு அவனுக்கு சேவை செய்யும்போதே  எனக்கு கால் வலிக்கிறழ்து  என் அப்பா காலத்திலிருந்து எனக்கு தெரிந்து இவன் நின்றுகொண்டே இருக்கிறானே அதற்கு முன்னால் எத்தனை வருஷமோ?
 எனவே  பட்டர்.  ஒருநாள்  வாய் திறந்து மனதில் உள்ளதை கேட்டுவிட்டார்.

"கிருஷ்ணா!, :இவ்வளவு பொறுமையோடு கால் கடுக்க தினமும் நிற்கிறாயே, உனக்கு கொஞ்சமாவது  ஒய்வு வேண்டாமா? "
"ஆமாம் அப்பா,  ஒய்வு தேவைதான்,  என்ன செய்வது.?"  
நான் வேண்டுமானால்  உனக்காக  ஒருநாள்  நிற்கட்டுமா?"
"ரொம்ப  சந்தோஷம், அப்படியே  ஆகட்டும்.    நான்  உன்னை  என் போல் சிலையாக்குகிறேன்,  ஒரு  கண்டிஷன்.   நான் உன்னைப்போல்  இங்கு வரும் பக்தர்களுக்கு சேவை செயகிறேன். திருப்தியா.
'' ரொம்ப சரி கிருஷ்ணா''  உனக்கும் ஒரு சேஞ்ச்  change  வேண்டாமா?
''பட்டரே , ஒரு  கண்டிஷன்.   எந்த காரணம் கொண்டும்  நீர்   உமது  உணர்சிகளை  காட்டவோ,  பேசவோ,  எந்த பக்தர் விஷயத்திலும்  தலையிடவோ  கூடாது.   என்னைப்போல்    புன்னகையோடு அனைவருக்கும்  பாரபட்சமின்றி  அருளும் ஆசியும்,  தர்சனமும்  வழங்கவேண்டும்.  செய்வீரா, முடியுமா உம்மால் ?"
" பேசாமல் நிற்பது ஒன்றும் கஷ்டம் இல்லை கிருஷ்ணா. அவ்வாறே செய்கிறேன்  கிருஷ்ணா. பாவம் , ஒருநாளாவது   நீ  சற்று  உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள் ".


மறுநாள் பட்டர்  கிருஷ்ணன்  சிலையாக நின்றார், கிருஷ்ணன் பட்டாச்சாரியரானான். 

 முதலில்  அன்று  கோவிந்த ராவ், கவுன்சிலர்,  பணக்கார பில்டிங் கன்டிராக்டர்  வந்தார். கிருஷ்ணனை  வேண்டிக்கொண்டு, பெரும்  தொகையை  நன்கொடையாக  கோயிலுக்கும் வழங்கினார்.  போகும்போது தன்னுடைய  பணம் நிறைந்த தோல்  பையை  ஞாபக மறதியாக  கோவிலில்  விட்டு விட்டு சென்று விட்டார்.      கடவுளாக நின்ற  பட்டருக்கோ  ராவுக்கு அதை ஞாபகப்படுத்தவேண்டும் என்று தோன்றியது.    "  கவுன்சிலர்,உங்கள்  பணப்பை  இங்கே விட்டுட்டீளே , ஜாக்கிரதையாக எடுத்துக்  கொண்டு போங்கள் "  என்று சொல்ல  நா எழும்பியது.  ஆனால் கிருஷ்ணன் வாயே  திறக்க கூடாது  என  கட்டளையிட்டது  நினைவுக்கு வர,   பேசாமல் பார்த்து கொண்டே  நின்றார்.  

சிறிது நேரம் கழிந்து  கிராம கணக்கு   பிள்ளை கண்ணப்பன்-- நேர்மையானவர் . அப்படி இருப்பது  அபூர்வம்.  ரொம்ப  ஏழை.  கிருஷ்ணன்  முன்னால் நின்று தன்னிடமிருந்த  ஒரு  ரூபாயை  மனமார  காணிக்கையாக  செலுத்தி விட்டு பிரார்த்தனை செய்தான்.

"கிருஷ்ணா  நான் பல வருஷங்களாக உன் கோவில் வரும் பக்தன்.  என் குடும்பம்  நிர்கதியாய்  நிற்கிறது. பெண்ணுக்கு  மணம் செய்ய வழியில்லை  கடன் தொல்லை வாட்டுகிறது.  எவ்வளவு  உழைத்தாலும்  ஊதியம்  போதவில்லை. நீயே கதி. பிள்ளைவீட்டுக்காரர்கள் வந்து  நிறைய  சீர் செய்ய  சொல்கிறார்கள், பணத்துக்கு எங்கே போவேன். நீ தான் வழிகாட்டவேண்டும். ''


கண்ணப்பன்  வேண்டிக்கொண்டு கண்ணை திறந்தான்.  என்ன ஆச்சர்யம்.  விண்ணென்று பணம் நிரம்பி  ஒரு பை அவன்  எதிரில்  தென்பட்டது  “கடவுளே,  இதுவும்  உன் மாயா லீலை தானோ?  இது தான் உன் கட்டளை  என்றால்  அவ்வாறே ஆகட்டும். மகிழ்ச்சியோடும்  நன்றியோடும்  கண்ணப்பன்  பணப்பையை எடுத்து சென்றுவிட்டான்.  பட்டருக்கு படு கோபம் வந்தது. 

 "ஏலே,  அது  அந்த  கவுன்சிலர்  மறதியா விட்டு விட்டுப் போனதையா.  அங்கேயே  வைத்து விட்டு போ!!"  என  கத்தவேண்டும்போல தோன்றியது  ஆனால்  கிருஷ்ணன் கட்டளை  இட்டது நினைவுக்கு வர  வாய் கப் சிப்.  கண்ணப்பன் பணப்பையோடு மறைந்தான்.

கொஞ்ச நேரத்தில் ஒரு  துபாய் கப்பலில் மாலுமியான மணவாளன் வந்தான்.   அந்த ஊரில் பிறந்து வெளிநாட்டில் வேலை  செய்பவன்.   சிறுவயது முதல்  அந்த கோயில் கிருஷ்ணன்  குடும்ப தெய்வம். 

 "கடவுளே,  இன்று இரவு  என் கப்பலில்  வெளிநாடு சென்று  மீண்டும்  குடும்பத்தை பார்க்க வருவதற்கு   ஒரு வருடம்  ஆகுமே,  நீ தான்  என்னையும்,  என் கப்பலையும்,  அனைத்து சிப்பந்திகளையும்,  என் குடும்பத்தையும் காத்தருள வேண்டும்"   என வேண்டி நின்று கொண்டிருந்த போது அங்கு  திடீரென்று  பணம் கோட்டை விட்ட  கவுன்சிலர்  கூட ஒரு  போலீஸ்காரனுடன் வந்துவிட்டார்.  கவுன்சிலர்  முகமெல்ல்லாம்  வியர்க்க பதட்டத்துடன்   வேக வேகமாக  சந்நிதியருகில்  வந்து தன்  பணப்பையை  தேடினான்.   கிருஷ்ணன் முன்னால்  நின்று கொண்டிருந்த கப்பல்  மாலுமி மணவாளனை கண்டதும்  அவன்  சந்தேகம்  வலுத்தது.  போலீஸ் காரனிடம்

"இதோ  நிற்கிறானே  இவன் தான்  என்  பணத்தை அபேஸ் பண்ணியிருக்கிறான். இவனை கைது செய்து
 உதை  திங்க வைத்தால்  உண்மையை  கக்கி விடுவான்" என்று முறையிட்டான்.

“சார்  நீங்க  யார் என்றே தெரியாது.   நீங்கள் சொல்வது புரியவில்லை.   நான்  எந்த  பணப்பையையும்  பார்க்க வில்லையே"   என்று மாலுமி  கதற,  அவனை  போலீஸ்காரன்  அழைத்து  செல்லும்  நேரத்தில்,  கடவுளாக  நின்று காட்சியளிக்கும்  ராமானுஜாச்சாரிக்கு   கோபம் தாங்கமுடியாமல் வந்து விட்டது.  கிருஷ்ணன் இட்ட கட்டளை, கண்டிஷன் மறந்து போயிற்று.

"ஐயா  போலீஸ்காரரே,   இது அக்ரமம்  இந்த மனிதர்  திருடனில்லை.  பணப் பையை  அந்த கிழட்டு கணக்க பிள்ளை கண்ணப்பன் தான்   இங்கே  வந்தபோது  எடுத்து செனறதை   நான்  பார்த்தேன். இவரை
விட்டு விடுங்கள்"    என  திருவாய்  மலர்ந்தார்."  

கவுன்சிலர், பட்டாச்சாரி யாக நின்ற கிருஷ்ணன், மாலுமி, போலீஸ்காரன் அனைவரும் திடுக்கிட்டனர்.  ''சாமி பேசுது  '' என்று போலீஸ் காரன்  பயந்து நடுங்கினான்.    மாலுமி மணவாளனோ ஆனந்தத்தில் மிதந்தான். "கலியுகத்தில்  கண் கண்ட  தெய்வமே ,  நீயே  பேசி   உண்மையை  உணர்த்தி என்னை காப்பாற்றினாய் "  என  வணங்கினான். கவுன்சிலருக்கு  ஆச்சர்யம்.சந்தோஷம்.  ஏழை பக்தன் கண்ணப்பன்  எங்குள்ளான் என்று தேடி  அவனிடத்திலிருந்து பணத்தைப்  பெற  போலீஸ்காரன்  உதவியுடன்  ஓடினார் . 

 கடவுளே  பேசிய  அதிர்ச்சியில் ஓட்டமாய்  ஓடி  போலீஸ்காரர்  பொன்னுசாமி  கண்ணப்பனை தேடி  ஓட்டமாய்  ஓடி னார்.   அதுவரை இன்றிரவு  மாலுமியை விடுவதில்லை என்று கவுன்சிலரும் அவனை பிடித்து வைத்துக்கொண்டார்கள்  

ராமானுஜாச்சாரிக்கு தான் ஒரு  நீதிமானாக நடந்ததில்  தலை கால்  புரியாத  சந்தோஷம்.  அன்றிரவு கிருஷ்ணன்  பட்டர் முன் தோன்றினான் 

"நண்பா!  போதும்  உன் உதவி.  என்  வேலையை  நானே  பார்க்கிறேன்.  நீ உன் வேலையை மட்டும்  இனி  பார் என அதிருப்தியுடன்சொன்னான். 

"ஏன்  நான்  என்ன தப்பு செய்தேன்??

“ஒண்ணா  ரெண்டா, கேள் சொல்கிறேன்.  கவுன்சிலர்  கொடுத்த  நன்கொடையும்,  அவன்  பையில் இருந்த பணமும் அராஜக  வழியில்  பதவியால் அவன் அபகரித்தது.   கோவிலுக்கு நன்கொடை என்கிற  நல்ல  காரியத்தில்  அப்பணம் ஈடுபடும்போது  பாவத்தின்  சம்பளமாக,  விலையாக, கொஞ்சம்  பணம்  ஒரு உண்மையான  ஏழைக்கு  உதவினால் அந்த  புண்யமாவது  பணக்காரனின்  பாவத்தை  குறைக்கட்டுமே  என கான்ட்ராக்டரை  பணப்பையை மறக்கவைத்து, கண்ணப்பனிடம்  அதை  சேரச்  செய்தேன்.   உன்னாலான உதவி  அதைக்  கெடுத்தாய்.

மாலுமியை  போலீஸ் காரன் சிறை செய்து கப்பலில்  வெளிநாடு  செல்லாமல்  செய்வதற்காக  நான்  போட்ட பிளானை  நீ ரத்து செய்தாய்.   இன்றிரவு  கடலில்  பிரயாணம்  செய்யும்  அவன் கப்பல் சுனாமியில்  மூழ்கப்  போகிறது.  அவனையும்,  கப்பலில்  இருக்கும்  மற்றவரையும், மாலுமியின்   குடும்பத்தையும்  காப்பாற்ற  நான்  செய்ய நினைத்ததை  நீ மாற்றி அமைத்தாய்.

 "ஒரு நாளில்  இவ்வளவு  செய்து விட்டாயே.  பேசாமல்  பார்த்து கொண்டிருந்தால்  இது நடந்திருக்குமா?  நான் பேசாமல் ஏன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு  சைலண்டாக எல்லாம் செய்கிறேன் என்று உனக்கு புரிகிறதா? என  கிருஷ்ணன் கேட்டதும்  பட்டருக்கு வெலவெலத்தது.

இறைவனின் ஒவ்வொரு சங்கல்பமும் செயலும், அருளும்,  நம்  சிற்றறிவுக்கு எட்டாதவை  அல்லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...