Sunday, August 30, 2020

SRI RAMANUJA

 



               

          ஒரு  அதிசய மனிதர்     J K SIVAN  

ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர்  என்றாலும்  ஸ்ரீ  ராமாநுஜரைத்  தெரியாத  ஹிந்துக்கள் இல்லை.  அதிலும்  அவரை வழிபடாத  ஸ்ரீ வைஷ்ணவர்கள்கிடையாது  என்று  அருகிலிருக்கும்  யார் தலையிலாவது அடித்து கற்பூரம் ஏற்றலாம்.   அவர்  ஒரு அபூர்வ மனிதர். சமூகநலத்தில் அக்கறை கொண்ட ஒரு சீர்த்திருத்தவாதி. 


எப்படி இந்த மனிதர் இந்தியா முழுதும் நடந்தே ஒருதடவைக்கு மேல் சென்றிருக்கிறார்?. எப்படி 120 வயது வரை  வாழ்ந்தார்? 
ஒருவேளை இவர்  ஆதிசங்கரர் காலத்தில் இருந்தால்  இருவரும் சமகாலத்தில் இருந்தால் எப்படி மோதி இருப்பார்கள்? யார் ஜெயித்திருப்பார்?...

 இது கற்பனையில் தான் நிகழக்கூடியது. சரித்திரத்தில் கற்பனைக்கு இடமே இல்லை.  ஒரு ராஜா யானை மீதிருந்து விழுந்து மார்பில் யானை மிதித்து மாண்டான் என்பதை  ஆறு கப்  பால் பாயசம் சாப்பிட்டு விட்டு ஏழாவது கப் பாதி குடிக்கும்போது அனாயாசமாக சப்ர மஞ்ச கட்டிலில் படுத்தவாறே   மரணமடைந்தான் என எழுத முடியாது. அது சரித்திரமாகாது. எது எப்படி நடந்ததோ அது தான் சரித்ரம். நமது துரதிர்ஷ்டம்  நமது சரித்திரத்தையே  வெள்ளைக்காரர்கள், இதர மதத்தினர் மாற்றி எழுதிவிட்டார்கள் நம் நாட்டில். 
அது  இருக்கட்டும். 

 ஸ்ரீ  ராமானுஜருக்கும்   ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் ஒரு ஒப்புமை கவனித்தீர்களா?:
 
1. கிருஷ்ணன்  ''பல'' ராமனின் அனுஜன் (இளையவன்)   ராமானுஜன்  என்று பெயர் கொண்டவன்.  ராமானு ஜருக்கும் அதே தானே  பெயர்.

2. கிருஷ்ணன்  எட்டாவது  குழந்தை.   இந்த எட்டு ராமானுஜர் விஷயத்தில் எப்படி?  அவர் தான் ஆச்சார்யர்கள் பரம்பரையில் எட்டாவது ஆச்சே.   விஷ்வக் சேனர்/ சடகோபர்/நாதமுனிகள்/புண்டரீகாக்ஷன்/ ராமமிஸ்ரர்/யமுனாச்சர்யர்/மகா பூர்ணர் /ராமானுஜர்

3.கிருஷ்ணன்  கம்சனை வதைத்தான்.  ராமானுஜர்  அவரது விசிஷ்டாத்வைததத்தை  எதிர்த்தோரை வாட்டினார்.

4. கிருஷ்ணன்  மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து, த்வாரகையில் அரசாண்டான்.  ராமானுஜர் என்ன பண்ணினார்?  பூதபுரியில்  பிறந்து, காஞ்சியில் வளர்ந்து, ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீ வைஷ்ணவத்தை ஸ்தாபித்தார்.

5. கிருஷ்ணன்  குபேரன் பிள்ளைகள்  நள கூபர்களுக்கு  (யமுலார்ஜுனபங்கம்) சாப விமோசனம்  செய்தார்   ராமானுஜர்  சுக துக்கம், பாப புண்ய கட்டிலிருந்து எல்லோருக்கும்   ஆத்மாவை விடுவிக்க வழி காட்டினார். அதுவே  ஒரு சாப விமோசனம் தானே.  

6. கிருஷ்ணன்  ஏழு உலகங்களையும் (கீழே ஏழு தனி) அடக்கி  ஆண்டான். ராமானுஜர்  சுருதி, ஸ்ம்ரிதி, புராணம்,, இதிகாசம் ஆகமம், பிரபந்தம், ஆச்சர்ய சூக்தி எல்லாவற்றிலும் நிபுணரானார்.

7) கிருஷ்ணன்  பஞ்ச பாண்டவர்களை  ரட்சித்தான். கீதை வழி காட்டினான்.   ராமானுஜர்  அர்த்த பஞ்சகத்தை  காப்பாற்றினார். ஞானமார்க்கம் காட்டினார்.

8 )  ராமருக்கு  வசிஷ்ட விச்வாமித்ரர்கள் போல்,  கிருஷ்ணனுக்கு  சாந்தீபனி மகரிஷி போல்,  ராமானுஜருக்கு  யாதவப்ரகாசர், யமுனாச்சர்யர் ஞான குருவாக  அமைந்தார்கள்.  காஞ்சி பூரணர் மேல் மட்டற்ற  அன்பும்  பக்தியும், ராமானுஜர்  கொண்டிருந்ததற்கு ஒரு காரணம்  காஞ்சி பூரணர்  காஞ்சி வரதராஜரின் சிறந்த பக்தர்.  எனவே தான்  அவர் அறிவுரைகளைப் பெற்று  தானும்  காஞ்சி வரதராஜனின்  தீர்த்த கைங்கர்ய சேவையில் முழுதுமாக  தன்னை  அர்ப்பணித்துக்கொண்டார்.
ஸ்ரீ ரங்கத்தில்  ஆச்சார்யனாக இருந்த ஸ்ரீ  யமுனாசார்யரைப்  பொருத்த வரை  ராமானுஜர் தான்  தனது  வாரிசு என தீர்மானித்தார். ஆகவே  காஞ்சி சென்று தனது த்ரிஷ்டியாலேயே  ராமானுஜருக்கு அனுக்ரஹம் பண்ணினார்.  ஸ்ரீரங்கம் திரும்பி சென்றவர்  அங்கிருந்து தனது பிரதம  சிஷ்யர் மகாபூர்ணரை  காஞ்சிக்கு அனுப்பி ராமானுஜரை  ஸ்ரீரங்கம் அழைத்து வரச்செய்தார்.

அப்போது  ராமானுஜர் அத்வைத கோட்பாட்டை  பின் பற்றிய யாதவப்ரகாசரை  குருவாகக் கொண்டு  அவரோடு இருந்தார்.  விதி வசமாக  ராமானுஜர்  ஸ்ரீ ரங்கம்  சென்று  விசிஷ்டாடவைத  குரு யாமுனாசர்யரை  சந்திப்பதற்கு முன்பாகவே அந்த மகான் திருநாடு எய்திவிட்டார்.   ஏகலைவனுக்கு துரோணர் மாதிரி  ராமானுஜருக்கு  யமுனாச்சார்யர்  நேரில் பார்த்து உபதேசம் பெறாத  மானசீக குரு.

ராமானுஜர் இல்வாழ்க்கையைப் பொறுத்தவரை  ராமானுஜருக்கும் தஞ்சம்மாளுக்கும்  விவாஹம் பொருத்தம் பார்த்து நடந்தாலும், மனப்பொருத்தம் என்னவோ அவளிடம் இல்லை போலிருக்கிறது.  பாவம், கட்டுப்பெட்டி, பழைய பஞ்சாங்கம் அவள். அவரோ  புரட்சிகரமாக, புயலாக,  மேம்போக்காக,  தாராள மனத்தோடு  சிந்திப்பவர். அவர்களது மணவாழ்க்கை  ஒரு  ரேஸ் குதிரையோடு  முட்டி தட்டின குதிரையை சேர்த்து ஒட்டிய வண்டியோ?   இல் வாழ்க்கையைத்  துறக்க  சில  சம்பவங்கள் ராமானுஜரை தூண்டியது.

ஒருமுறை  ராமானுஜர்  போஜனத்துக்கு அழைத்த  திருக்கச்சி நம்பிகளைக்  கூட அவள்   தக்கவாறு  உபசாரம் பண்ணவில்லை.  

மற்றொருமுறை,  பசியோடு வந்த  ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு  ''சாப்பாடு  எல்லாம்  இல்லை   போ அப்பா'' என்று சொல்லிவிட்டாள்.

இதுவும் போதாதற்கு  ஒரு சமயம்வீட்டுக்கு விருந்தாளியாக வந்த  ராமானுஜரின் குரு  மகா பூர்ணரின்  மனைவியிடம்  மனம் நோக,  கோபமாக நடந்து கொண்டுவிட்டாள். 

இனிமேலும் தாங்காது என்று நினைத்த  ராமானுஜருக்கு  ஒளவையார் சொன்னது  ஞாபகம் வந்தது .   

''பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும் 
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.''

தஞ்சம்மாள்  தனது மனதைப் புரிந்துகொண்டு ஏற்ற மனைவியாக இருந்தால்  ராமானுஜரின் இல்வாழ்க்கை தொடர்ந்திருக்குமோ?   அவள் சற்று ஏறு மாறாக  நடந்து கொண்டதால் ராமானுஜர் சன்யாசம் பூண்டாரோ?














No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...