Wednesday, May 22, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்  J K SIVAN 
பகவத் கீதை. 12


                          பக்தி ஒன்றே  பிரதானம் 

 இதுவரை ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு குருக்ஷேத்ரத்தில் உபதேசித்த பகவத் கீதை நமக்காகவே என்றாலும் நாம் அதை புரிந்துகொள்வது அரிதாக இருக்கிறது.  எப்படியோ  இதுவரை 10 அத்தியாயங்கள்
உங்களோடு சேர்ந்து நானும்  அறிந்து கொண்டேன்.  இன்று  பன்னிரெண்டாம் அத்தியாயத்தை அறிவோம்.

''கிருஷ்ணா,   நீ அறிவுறுத்தியபடியே  மனத்தை அடக்கி  பக்தி மார்கத்தில் உன்னை வழிபடுபவர்கள் வெற்றி  பெறுவார்களா,  அல்லது அழிவற்ற உருவற்ற பரம்பொருளாக உன்னை மனதில்  உபாசனை செய்பவர்கள்  வெற்றி பெறுவார்களா?.  இதை விளக்க வேண்டும் பிரபோ' என்கிறான் அர்ஜுனன்.

''அர்ஜுனா,  இரண்டுமே முடிவில் என்னையே அடையச் செய்யும் வழிகள் தான்.  உள்ளத்தை எனக்கே அர்பணித்து முழு ஸ்ரத்தையோடு என்னை பூஜித்து உபாசனை செய்பவன்,  யோகத்தில் ஆழ்பவன் பூரண வெற்றி அடைவான். ஆனால் உருவற்ற,  வடிவமற்ற  பரம்பொருளை த்யானித்து யோகம் செய்வது   கடினமப்பா.  என்னை த்யானித்து எல்லா கர்மங்களையும் எனக்கே  அர்பணித்து என்னை உபாசிப்பது  சுலபம் தானே. உனக்கு தான் என்னைத் தெரியுமே.  என்னையே  கதி என்று நாடி, சிதையாத மன அடக்கத்தோடு உபாசனை செய்பவனை பிறப்பு இறப்பு என்னும்  சம்சார சாகரத்திலிருந்து விடுவிப்பது தானே  என் கடமை.  இதற்கும் விடா முயற்சி தேவை. உன் மனதை என்னிடம் கொடு. உன் புத்தி என் மீதே பதியட்டும். பிறகென்ன. நீதான் என்னையே அடைந்தாய் விட்டதே''.

 ''ஒருவேளை சித்தத்தை என் பால்  நிலை நிறுத்த இயலாதவன்  பயிற்சி செய்து யோக முறையில் என்னை நாடலாம். அப்படி ஒரு வழி இருக்கிறது.  சரி, அதுவும் கை கூட வில்லை என்றால், செய்யும் கர்மங்களை எனக்காகவே  செய்வதாக,  விடாமல் தொடர்ந்து செய்து வருவதால்  தானாகவே சித்தி அடைவான்.  ஞானம் அடைய  தியானம் ஒன்றே சிறந்த வழி.  அது கடினம் என்று தோன்றும்போது  கர்மத்தை பயன் கருதாது மனதோடு பூரணமாக  கலந்து எனக்கே அதை அர்பணித்து செய்பவன், அகங்காரம் இன்றி, எவரிடத்தும் எதனிடத்தும் அன்பு பூண்டு சுக துக்கங்களை சமமாக பாவித்து மனம் புத்தி இரண்டையுமே எனதாக்கி விட முடியும். அவன் தான் யோகி ஆகி விட்டானே அப்போது.

 இப்படி அசையாத மனதோடு எவ்வுயிர்க்கும் தீங்கின்றி  ஐம்புலன்கள் அடக்கி  விடுபட்ட நிலையில் இருக்கும் சுதந்திரன் தான் என் அன்பன். ராக த்வேஷம் இன்றி  பற்றற்று என்னிடம் பக்தி பூண்டவன் என் அன்பன்.''

இப்படி அர்ஜுனனுக்கு  ஸ்ரீ  கிருஷ்ணன் உபதேசித்தது தான்  கீதையின்  பன்னிரெண்டாவது அத்யாயம். இதற்கு  பக்தி யோகம் என்று பெயர்.

மேலே சொன்ன விஷயத்தை படித்தவர்கள் அர்ஜுனன் எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணனை சங்கடத்தில் ஆழ்த்தினான் என்று  கவனித்தீர்களா?  ஒரு அம்மாவுக்கு ரெண்டு பிள்ளைகள். ஒருவன் அம்மா கோண்டு. அவளை ஒரு கணமும் பிரியாமல் சுற்றி சுற்றி வருபவன்.அவளிடம் அத்தனை அன்பு அவனுக்கு. தூக்கத்திலும் அவளை  விட்டு  அகலாதவன்.  அவ்வளவு பாசம்.

 இன்னொருவன் எங்கோ இருக்கிறான். வேலை செய்கிறான், கடின உழைப்பாளி.  தாய்க்காக  உழைத்து சம்பாதித்து, வாயை வயிற்றை கட்டி மாசா மாசம் அவளுக்கும் முடிந்தவரையில் நிறைய  பணம் அனுப்புகிறான்.  அவனுக்கும்  இருபத்தி நாலு மணி நேரமும் தாயின் நினைவு தான் . அனால் தன்  வேலையில் கவனத்தோடு தான் அவளை மனதில் நினைவில்  இருத்தி  பூஜித்து வாழ்பவன்.  நேரிலே  தேடி ஓடிவராதவன்.
இப்போது அந்த அம்மாவையே  கேட்போம். 

''அம்மா,  உனக்கு  இந்த ரெண்டு பிள்ளைகளில் யாரைப்  பிடிக்கும்?.  நீ  ஒருவனை  தான் தேர்தெடுக்கவேண்டும். யார் வேண்டும் சொல்''  என்று ராஜா கட்டளையிட்டால் யாரை முதலில் ஆதரிப்பாள்?  அம்மா  யாரை வேண்டாம் அல்லது வேண்டும்  என்று சொல்வாள்?  கொஞ்சம் யோசித்து  விட்டு இந்த சின்னப் பயல் என்னோடு இருக்கட்டும் என்பாள். ஏனென்றால் அவளுக்கு தெரியும்  பெரியவன் என்னை நெருங்காமலே நெருங்கியவன் என்று.  ஸ்ரீ கிருஷ்ணன் இப்படி   இந்த அம்மா மாதிரி பதில் சொல்லவில்லை. அவன் தான்  ஸ்ரீ கிருஷ்ணன் ஆயிற்றே. அவனுக்கா பதில் சொல்ல தெரியாது?

அவன் சொல்லும் விதம்:

என்னை  சகுணத்தில் உபாசிப்பவனும், நிர்க்குணத்தில் உபாசிப்பவனும் இருவருமே  என்னை அடைவார்கள். இருவருமே என் அன்பர்கள்.  சகுண  உபாசனை கொஞ்சம் சுலபம் என்று  என்னை நாடுகிறவர்கள் என்னை  அடைகிறார்கள்.  

நிர்க்குண உபாசனை  எல்லோருக்கும்  எளிதல்ல.  யோகிகளுக்கு தான் சௌகரியம் அல்லவா.? நாம் எல்லாரும் யோகிகள் இல்லையே.  யோகேஷ், யோகீச்வர், யோகேஸ்வரி, யோகாம்பாள், யோகம்   என்று பெயர் வேண்டுமானால் வைத்துக்  கொள்ளலாம்.

சகுண  உபாசனை செய்யும்  பக்தன் புலன்களை உபயோகித்து உபாசிக்கிறான். நிர்குண உபாசனை செய்யும்  யோகி  மனத்தாலேயே, லோக க்ஷேமார்த்தம்  பக்தி பூர்வமாய் ஆண்டவனை உபாசிக்கிறான்.   இது முன்பே விளக்கின  விஷயம்.  சகுண  உபாசகன் கர்மம் செய்தும் அதை ''செய்யாமலே''  அதாவது அதை சிந்திக்காமல், பலன் எதிர்பாராமல், முழுமனதோடு, ஆண்டவனுக்கு அர்ப்பணித்து  கிருஷ்ணனை அடைகிறான்.   உருவமற்ற (நிர்க்குண) உபாசகன், மனதிலேயே  ஏகாக்ர சிந்தையோடு, வைராக்யத்தோடு  தனக்கென இன்றி  பிறர்க்கென  தனது சேவையை,  உபாசனை மூலம் அர்பணித்து,  எதுவும் ''செய்யாமலே செய்பவன்''.     இதில்  புலன்களுக்கு வேலையில்லை.  தனிமையில்  எங்கோ அமர்ந்து செயல்படும்  அவனுக்கு மனமும் புத்தியும் மட்டுமே பக்தியில் திளைக்கிறது .''எல்லோரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே ''    என்ற  தாயுமானவர்  ரக  யோகிகள் இப்படிப் பட்ட நிர்க்குண உபாசிகள்.

 நிர்க்குண  உபாசனைக்கு  நிறைய மனப் பக்குவம்,  பயிற்சி வேண்டும்,    சகுணத்தை  ஆதாரமாக  கொண்டு தான், முதல் படியாக கொண்டு தான்   நிற்குண  உபாஸனைக்கு  உயர வேண்டும்.  அப்போது தான்  நிர்க்குண  உபாசனை  சாத்தியமாகும்.  அது உயர்ந்த நிலை என்பதில்  சந்தேகமில்லை.  ஆனால் எளிதல்ல என்று மீண்டும் சொல்கிறேன்.

கங்கை  ஆகாயத்திலிருந்து  கீழே  படு வேகமாக இறங்கினாள்.  பகீரதன் தவத்தை மெச்சி பரம சிவன் ஜடாமுடியில் இறங்குவதோடு அது  முடியவில்லையே.  சிவனுக்கு  கங்காதரன்  என்ற பெயர் வாங்கிக் கொடுக்க மட்டுமா   கீழே  இறங்கினாள்?    அதன் பிறகு  கீழே  பூமியில் இறங்கி எண்ணற்ற  உயிர்களுக்கு இன்றும் ஜீவாதாரமாக நிலைக்கிறாளே.  சகுண  உபாசனை இவ்வாறு  கடைசியில் நிர்குண உபாசனையில் சங்கமிக்கும். அது அப்படி தான் பூரணத்வம் அடையும்.

ஒரு அருமையான உதாரணம் சொல்கிறேன்.  ராமாயணத்தில்  லக்ஷ்மணன் 14 வருஷம் ராமனோடு காட்டில் இருந்தான். அவனை யாரும் காட்டுக்கு போகச் சொல்லவில்லை. அந்த பதினாலு வருஷமும் ராமனோடு சேர்ந்து தானும் மரவுரி தரித்து  இரவு பகலாக அன்ன ஆகாரம், தூக்கம் இன்றி ராம சேவைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டு அதே அவனது கர்மமாக இருந்தது ,   இது சகுண பக்தி.  ராமனை விட்டு கணமும் பிரியவில்லை அவன்.  

பரதன்  அப்படி இல்லை.  ராமனே  அவனை  அருகே அழைத்து  ''இனி நீயே   இந்த அயோத்தியை ஆள்வாய்'  என்றதும்  அந்த  ஆணையை தலைமேல்  ஏற்று,  ராமனது பாதுகையை தலைவனாகக் கொண்டு   சிரத்தில் தாங்கி,  அவனும் மரவுரி தரித்து   அயோத்தியை விட்டு அகன்று நந்திக் கிராமத்தில் அதே  14 வருஷமும்  ராம சிந்தனையோடு ராமன் வரவுக்காக  காத்து நின்றான்.    ராமன் அருகே அவன் இல்லை. ஆனால் ராமன் ''அவனில்''  இருந்தான்.   இது நிர்க்குண உபாசனை. ராமனை விட பரதன் உயர்ந்தவன் என்று சொல்லும் அளவுக்கு  பக்தன்  ஆனான்.  இப்போது  கொஞ்சம் புரிகிறதா?

எனவே தான்  இந்த  பக்தி யோகம் என்ற  அத்யாயத்தில்  பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  சகுணமோ  நிர்க்குணமோ எந்த உபாசனையிலும்  ஆதாரமானது சிறந்த பக்தி ஒன்றே என்பதை,  ஒரு ஸ்தித ப்ரஞன் எவ்வாறு பக்தி புரியவேண்டும் என்று  ஆச்சர்யமாக   விளக்குகிறார்.  எப்படி  கிருஷ்ணன் உபதேசம்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...