Thursday, May 23, 2019

NARASIMMA


 நரசிம்மா ஆ ஆ ஆ ...! -- 4

ஸ்ரீமந்  நாராயணன் நரசிம்ம  அவதாரம் எடுத்ததே  ஹிரண்யனை கொல்வதற்காகத்தான் என்று    நாம் எல்லோரும் அலறிவோம்.  இருந்தாலும் நாராயணனுக்கு ஹிரண்யனைக்  கொல்வதை விட குழந்தை ப்ரஹ்லாதனின் வாக்கு பொய்க்கக்கூடாது, அந்த தெய்வக்குழந்தையின் பக்திக்கு செவி சாய்த்து அருளவேண்டும் என்ற நோக்கமே முக்கியமாக இருந்தது. ஹிரண்யனை கொல்வது அவருக்கு எளிதான  காரியம் அவருக்கு.

எனக்கு நரசிம்மனை ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அஹோபிலத்திற்கு மோட்டார் காரில் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு சென்றேன். சென்னையிலிருந்து பல நூறு KM விடாமல் துரத்தினார் அந்த வண்டியை.    நந்தியால் வழியாக  அல்லக் கட்டா மண்டலத்தில் கர்னூல் ஜில்லாவில் இருக்கிறது அஹோபிலம். நந்தியாலிலிருந்து 70 கி.மீ. தூரம். நல்ல பாதை. ஹிரண்யனை நரசிம்மனாக அவதரித்து விஷ்ணு வதம் செய்து ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்த ஸ்தலம்.

அஹோபிலம் என்றால் அசாத்திய பலம் என்று ஒரு அர்த்தம். aho viryam aho shauryam aho bahuparakramah
narasimham param daivam ahobilam aho balam -- அஹோபிலம் அஹோபலம்.

வாஸ்தவமாகவே அஹோபிலம் மலை ஏறுவதற்கு உடலில் அசாத்திய பலம் இருக்கவேண்டும் என்று புரிந்து கொண்டேன். ஆனால் ரொம்ப லேட்.   எனக்கும் என் முதுகு தண்டுக்கும் சில வருஷங்களாக நல்ல நட்போ உடன்பாடோ இல்லை. ஏதோ ஒரு சமாதானத்தில் நாங்கள் இருக்கும்போது இந்த அஹோபில காடு மலை ஜீப் சவாரி மூலம், என் எலும்பை நான் விரோதப் படுத்திக்கொள்ள விருப்பமில்லை. காசு கொடுத்து மற்றவர் தோளில் ஏறி புண்ணியம் சம்பாதிக்கும் எண்ணமும் இல்லை. எனவே தான் தரிசிக்க முடிந்த நரசிம்மர்களை மட்டும் தரிசனம் செய்தேன்.

அஹோபிலம் என்றால் அதிசய, அற்புத குகை என்று இன்னொரு அர்த்தம். அதுவும் சரியே. கருடன் குகையில் ஆயிரம் வருஷங்கள் தவமிருந்து நாராயணன் அருள் பெற்ற மலை. கருடன் தவம் செய்த மலைப்பகுதிக்கு கருடாசலம்,கருடாத்ரி, கருடசைலம் என்று பெயர் உண்டு.

கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டாக, கீழ் அஹோபிலம், மேல் அஹோபிலமாக நரசிம்மர் ஆலயங்கள் நிரம்பி இருக்கிறது. வடகலை வைணவ மரபு. அதோடு நெருங்கிய தொடர்புகொண்ட சிறந்த வைணவ ப்ரவசன கர்த்தா, உ.வே. ஸ்ரீ ஒரகடம் லட்சுமி நரசிம்மச்சாரியார் நல்ல ஆப்தர் .நண்பர். கிருஷ்ணார்ப்
பணம்  சேவா  சங்க சார்பில் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அன்போடு ஈடுபாடு கொண்டு பங்கேற்று எங்களை கௌரவிப்பவர்.  இதெல்லாம்  விட என்னுடன் முதல் புத்தகமான  '' விஸ்வரூபனின் வாமன கதைகள்'' என்ற முதல் நூலை (நூறு கிருஷ்ணன் கதைகள், குழந்தைகளுக்காக எழுதியது)  வெளியிட்டவர் அவரே. 

கிழக்கு தொடர்ச்சி மலையை ஆதிசேஷனாக உருவகித்தால் ஏழு தலைகள் தான் திருப்பதி. வயிறு அஹோபிலம். வால் ஸ்ரீசைலம் என்று ஒரு ஐதீகம். பத்ம புராணம், கூர்ம புராணம், விஷ்ணு புராணம் எல்லாமே ''ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ர'' அஹோபிலத்தை பற்றி கூறுகின்றன. மஹாபாரதத்திலும் அஹோபிலம் வருகிறது.

மொத்தம் இங்கே ஒன்பது (நவ) நரசிம்மர்கள். மலை மடிப்பு மடிப்பாக பழைய பேப்பர் காரன் அட்டைகளை அடுக்கி வைப்பதுபோல் பாறைகள் ஒழுங்காக சமத்தாக ஒன்றன்மேல் ஒன்றுபோல் அரக்கு கலரில் காண்கிறது.

அஹோபிலம் தான் ஹிரண்யகசிபு அசுரன் ஆண்டு வசித்த இடம் என்று பிரம்மாண்ட புராணம் சொல்கிறது.
எட்டு கிலோ மீட்டர் ஏறினால் மலைமேல் உள்ள நரசிம்மர்கள் மாலோல நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், உக்ர நரசிம்மர், அஹோபில நரசிம்மர். கீழே யோகானந்த நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், பாவன நரசிம்மர், பார்கவ நரசிம்மர், லட்சுமி நரசிம்மர்.

உக்ர நரசிம்மருக்கு இன்னும் கோபம் தீரவில்லை. கீழேயிருந்து அண்ணாந்து பார்த்து விட்டு ஆவென்று வாயைப் பிளந்து, மெதுவாக 60-70 படிகள் ஏறினேன். முதலில் மலைமேல் தரிசனம் தந்தவர் உக்ர நரசிம்மர். ஒரு சிறு குகையில் இருக்கிறார். அவரைச் சுற்றி கோயில் கட்டியிருக்கிறார்கள். ஸ்வயம்பு.. அவரையே அஹோபில நரசிம்மன் எனும் புராதன நரசிம்மன். இந்த மலைப் பிரதேசம் செஞ்சுக்கள் என்ற வனவாசிகள் இருந்த இடம். லட்சுமிதேவி செஞ்சு லட்சுமியாக நரசிம்மரோடு காட்சி தருகிறாள். நரசிம்மர் ஸ்வயம்பு என்பார்கள். சின்ன வயதில் நாகேஸ்வர ராவ் நடித்த செஞ்சு லக்ஷிமி கருப்பு வெளுப்பு தெலுங்கில் அர்த்தமே புரியாமல் பார்த்த லேசான ஞாபகம் வருகிறது. கண்டசாலாவின் அர்த்தம் புரியாத  தெலுங்கு பாடல்கள் காதில் ஒலிக்கிறது.   கதை மறந்து போய்விட்டது. பாஷை புரியாதே.

நான் பார்க்க முடியாத க்ரோதகார நரசிம்மரை, வராஹ நரசிம்மரை மானசீகமாக வணங்கினேன். அவரோடு லட்சுமியையும் சேர்த்து தான். இன்னும் மேலே போனால் ஜ்வாலா நரசிம்மர். மேலே இன்னும் போகாததால் அடுத்த ஜென்மத்தில் இளைஞனாக இருக்கும்போதே தரிசிக்க உத்தேசம். அவர் இருக்கும் மலைக்கு அசலசய மேரு என்று பெயர். இங்கு தான் படு கோபத்தோடு இரண்யனை சந்தித்தார் நரசிம்மர்.

அடுத்ததாக இன்னும் 2கி.மீ மேலே சென்றால் மாலோல நரசிம்மரை தரிசிக்கலாம். பாவம் இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை பார்க்க வந்தாயே என்று வரும் பக்தர்களை சௌமியமாக இனித்தமுகத்துடன் அருள் பாலிக்கிறாராம். நான் தான் மேலே ஏறமுடியாமல் பார்க்கவில்லையே.       மா என்றால் லட்சுமி. லோலன் என்றால் பிரியன். லக்ஷ்மியோடு ஆனந்தமாக என் போன்றோர் வரவினால் தொந்தரவு இன்றி நிம்மதியாக ஆனந்தமாக காட்சி அளிக்கிறார்..

நிறைய குரங்குகள். வயதான குரங்குகள் கூட அனாயாசமாக மலைமேல் தாவி ஏறுகின்றபோது ஒருவேளை நாம் ஏன் குரங்கிலிருந்து மனிதனானோம், நரசிம்மர்களை தரிசிக்க வழியில்லாமல் போய்விட்டதே என்று தோன்றியது. பழசு இன்னும் விட்டுப்போகவில்லை. இப்போது உடல் மனிதனாக இருந்தும் மனது இன்னும் குரங்காகவே இருக்கிறதே என்ற ஒரே ஆறுதல் தான்.     மலை மேல் பாவனா நதிக்கரையில் ஆறு கி.மீ. தூரம் சென்றால் அருள் பாலிப்பவர் பாவன நரசிம்மர்.

மேல் அஹோபிலத்தில் எட்டு கி.மீ தூரத்தில் ஒரு மலைப்  பிளவு காணப்படுகிறது. அது தான் தூண். அந்த தூணைப் பிளந்து நரசிம்மர் படு கோபமாக ஹிரண்யனை வதம் செய்ய வெளிப்பட்ட உக்ர ஸ்தம்பம்  அது தான்  என்கிறார்கள். தூணாக இருந்த அந்த மலை நரசிம்மன் வெளிப்பட்டதும் பொடியாயிற்று. நரசிம்மம் எடுத்த முதல் அடியில் 172 சப்தங்கள் வெளிவந்தன. அவையே ராகங்கள். அதில் இப்போது மிஞ்சி இருப்பது தான் 72 மேளகர்த்தா ராகங்கள்.

கரஞ்ச விருக்ஷம் என்றால் தமிழில்  எது வென்று புரியவில்லை.  தேட நேரமில்லை. இன்னும் ஒரு கிமீ தூரம் மேலே ஏறியவர்கள் ஒருவேளை அறிவார்கள். அந்த மரத்தடியில் காட்சி கொடுக்கிறார் நரசிம்மர். ஹொங்கே மரம் என்று உள்ளூர்க்காரர்கள் வைத்த பெயர். சார்ங்கம் கையில் காண்பதால் சாரங்க நரசிம்மன் என்றும் பெயர். ஒரு தரம் ஹனுமான் இங்கே வந்து ராமனை வேண்டி தவம் இருந்தார்.

''யாரப்பா நீ என்னை கூப்பிட்டாயா?'' என்று நரசிம்மர் ஹனுமான் முன் வந்து நின்று பேசியதும் ஹனுமானின் தவம் கலைந்தது.

தவம் கலைந்ததால் கண்விழித்த ஹனுமான் ஆச்சர்யமாக பாதி சிங்கம் மீதி நரனாக நின்ற நரசிம்மனை பார்த்து ''தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் யாரோ உங்களை நான் என் ராமன் என்று கூப்பிடவில்லையே!. போய்வாருங்கள்'' என்கிறார் ஹனுமான்.

'' என்னப்பா இது. என்னை ராமா என்று நீ கூப்பிட்டதால் தானே நான் வந்தேன் ? என்கிறார் நரசிம்மர்.

''நீங்கள் எப்படி என் ராமனாக முடியும். கையில் வில்லேந்திய என் ராமன் எங்கே விசித்திர உருவில் தோன்றும்  நீங்கள் எங்கே?'' என்கிறார் ஹனுமான்.

''அப்படியா. இதோ பாரேன்'' என்று ராமனாக கோதண்டத்துடன், சுதர்ஸன சக்கரத்துடன் விஷ்ணுவாகவும் காட்சி தருகிறார் நரசிம்மர்.

மனமகிழ்ந்து ஹனுமான் நரசிம்மனை வழிபட்ட இடம் இது. இங்கு ஒரு குட்டி ஹனுமான் கோவில் உள்ளது.

அருமையாக ஸ்ரீ லட்சுமி சமேத உக்ர நரசிம்மரை தரிசித்துவிட்டு அவர் மூலம் மற்றவர்களையும் மனதால் தரிசித்து வேண்டிக் கொண்டு கீழே திரும்பினோம்.

கீழ் அஹோபிலத்தில் தென் கிழக்காக யாருமில்லாத தெருவில் 2 கி.மீ. சென்றபோது எதிரே ஒரு பட்டாச்சாரியார் ஸ்கூட்டர் வேகமாக கருடன் போல் பறக்க அதில் ஆரூடராக வந்தார். ஆஹா இவரை விட்டால் கோயில் பூட்டி இருக்குமோ என்று நரசிம்மரை வேண்டியபோது மற்றொருவர் எங்களை கடந்து இன்னொரு ஸ்கூட்டரில் முன்னே சென்றார். அவர் போய் கதவை திறக்கட்டும் என்று காத்திருந்து மெதுவாக போனோம் .

யோகானந்த நரசிம்மர் இரண்யனை கொன்றபிறகு யோகத்தில் ஆழ்ந்து காட்சியளிக்கும் கோலம். ப்ரஹ்லாதனுக்கு யோக பயிற்சி ஆசனங்களை கற்பித்த இடம்.

haahaa hoohoo vakya gandharva nrittageetha hritaatmaney
bhavahantritat chathravataimhaya mangalam

ஆஹா ஊஹூ என்று கந்தர்வர்கள் ஆடிப்பாடி நரசிம்மனை உக்ரம் தணிய வைத்து அவர் யோகத்தில் ஆழ்ந்த இடம்.

கீழே முக்கியமாக லட்சுமி நரசிம்மனை தரிசிக்கலாம். பெரிய கோவில். மூன்று நான்கு பிரகாரங்கள். நரசிம்மனுக்கு இங்கே ப்ரஹ்லாத வரதர் என்றும் பெயர்.கீழே உள்ள நரசிம்மர்கள் ஐந்து கி.மீ. விஸ்தீரணத்தில் உள்ளார்கள்.

நாராயணன் ஒருவனே தெய்வம் என்ற கோட்பாட்டில் மஹா விஷ்ணுவைத்தவிர வேறு யாரையும் வழிபடாத வைஷ்ணவ சம்ப்ரதாயத்தால் நவகிரஹங்களை விஷ்ணு ஆலயங்களில் சாதாரணமாக காண்பதில்லை. வைகானச பாஞ்சராத்ர ஆகமங்கள் சொல்படி தான் வைஷ்ணவ ஆலயங்கள் அமைக்கப் படுவன. நவகிரஹங்களை பற்றி இந்த ஆகமங்கள் ஒன்றுமே பேசவில்லையோ?. எனவே அவ்வாலயங்களில் நவகிரஹங்கள் இல்லை. நித்யஸூரிகள் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் மட்டும் தான் காணப்படுவர். நாராயணனே நவகிரஹங்களை வேண்டுவதின் பலனை தருபவர் என்பது நம்பிக்கை. எனினும் அஹோபிலத்தில் நவ நரசிம்மர்களும் நவகிரஹத்தை குறிப்பதாக அற்புத சிலைகளாக வடித்து இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கீழே அஹோபிலத்தில் யோகானந்த நரசிம்மர் ஆலயத்தில் நவநரசிம்மர்களையும் நவகிரஹங்களோடு சேர்த்து பார்த்து அதிசயித்தேன்.

இப்படியே நேராக போனால் பாவன நரசிம்மரை பார்க்கலாம்.

சத்ர வட நரசிம்மர் ஆலயம் மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சுற்றி எங்கும் மலைகள். ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்த நரசிம்மருக்கு அது குடை போல் நிழல் தந்திருக்கிறது. சத்ரம் என்றால் குடை. வடம் (vata) என்றால் ஆலமரம். சிலர் அரசமரம் என்கிறார்கள். திருவாலங்காட்டில் ரத்ன சபையாக சிவன் காட்சி அளிக்கிறார் அதற்கு வடாரண்யம் (vata aaranyam) என்று தானே பெயர். கல்லால மரம் என்று தானே சொல்கிறார்கள்.ஆலமரம் எப்படி அரசமரமானது என்று புரியவில்லை. அதிசயங்கள் எப்படியும் நேரலாம் எதுவும் நடக்கலாம் என்பதால்  மேலே அது பற்றி பேசவில்லை.

கீழே அஹோபிலத்திலிருந்து இன்னும் 2 கி.மீ தூரத்தில் பார்கவ நரசிம்மரை தரிசிக்கலாம். பார்கவ தீர்த்தம் என்ற புனித குளம் இருக்கிறது.பார்கவ ராமர் (பரசுராமர் பிருகு வம்சக்காரர் என்பதால் பார்கவ ராமர்) தவம் செய்த இடம். .

ஒரே நாளில் எங்கிருந்தெல்லாமோ வந்து ஒன்பது நரசிம்மர்களை தரிசித்தவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள். அஹோபிலத்தில் தரையில் அமர்த்தி சாப்பாடு போட்டார்கள். பெங்களூர்க்கார தம்பதி. எல்லாமே காரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த இடத்தில் கொஞ்சம் தித்திப்பாக இருந்தது. இரவு தங்கிவிட்டுட்டு அடுத்த நாள் பற்றிய சிந்தனையை காலையில் வைத்துக்கொள்ளலாம் என்று உறங்கினோம்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...