Tuesday, May 7, 2019

AGNI NAKSHATHRAM


                      ''ஆஹா    ஊஹு  வெயில் தாங்கலையே ...''
                                                         J K SIVAN 

வால் நக்ஷத்ரம்,  எரி நக்ஷத்ரம்,  இதனால்  நமக்கு  அன்றாட வாழ்க்கையில் தொல்லை இல்லை.  ஆனால்  அக்னி நக்ஷத்ரம் சமாச்சாரம் வேறு..

அக்னி நக்ஷத்ரம் இப்போது  நடக்கிறது.  .அதைப்பற்றி சில விவரங்கள் அவசியமாக  
தெரிந்து
 கொள்ளவேண்டும்.   அன்புடைய   மஹா ஜனங்களே,  நான் சொல்ல வந்ததற்கும்  1988 ல் மணிரத்னம்,  பிரபு,  கார்த்திக்,அம்லா வை எல்லாம் வைத்து  இயக்கி நடிக்க  வைத்த ''அக்னி நக்ஷத்ர சினிமா'' சமாச்சாரத்திற்கும்  யாதொரு சம்பந்தமோ,  ஸ்நானப்ராப்தியோ  இல்லை.

அக்னி நக்ஷத்திரம் என்றால், சூடு, எரிச்சல், கொதிப்பு.    வருஷா  வருஷம் சித்திரையில்  பட்டை தீர்க்கும் வெயில் வெப்பத்தை அதிகம் வாரி  வீசும் சமயம்.   இந்த வருஷம்  4.5.19 லிருந்து  25.4.19 வரை நம்மை அப்பளமாக  வாட்டி 
 எடுக்கப்போகிறது.  கார்த்திகை, உத்திரம், உத்திராடம்  எனும்  மூன்று நக்ஷத்திரங்கள்  சூரியனுக்கு  பிடித்தவை.  ‘அக்னிர்ந: பாது க்ருத்திகா’ என்கிறது வேதம்.   கார்த்திகை நக்ஷத்திரத்தில்  சூரியன்  வலம்  வரும்  காலம்  தான் அக்னி நக்ஷத்திரம்.  பரணி நட்சத்திரம் 3ம் பாதத்திலே  ஆரம்பித்து,  கார்த்திகை  முழுதும் காய்ச்சி எடுத்து விட்டு , அப்புறம்  ரோகிணி நட்சத்திரம் 2ம்  பாதம் வரை  சூரியன் கொளுத்துவது தான் அக்னி நட்சத்திர காலம். 

 வெயிலில்  வெளியே  தலை   காட்ட முடியவில்லை.  ரயில்வே வேலையில் இருந்த என் பெரியப்பா  மாத்ருபூதமய்யர் கருப்பு குடை மேல் வெள்ளை உரை  தைத்து மாட்டி  நடப்பார்.   ராஜ கலவை என்ற  நாடக பாத்ரம்  வெயிலில் குடை சீக்கிரம் பழுது பட்டுவிடும் என்று குடையை பிரிக்காமலேயே  மரத்தடி ஓரமாகவே   நடப்பான்.  குடை காணாமல்,  தொலைந்து  போகிற ஒரு  வஸ்து .  குடையை எடுத்துக் கொண்டு  போனால் மறக்காமல் திருப்பிக் கொண்டு  வரும்  சாமர்த்தியம் எல்லோருக்கும் கிடையாது.   குடையை   சில  பொது  இடங்களில் வைத்தால் மாற்றி எடுத்துக்கொண்டு போகவே சிலர் உண்டு.  நமது குடை என்று எதையோ ஒன்றை  எடுத்து வந்து பிரித்தால் கம்பிகளும்  குடைத் துணியும்  இந்தியா   பாகிஸ்தான் உறவாக  பிரிந்து  நிற்கும். கடன் காரர்களை, பிடிக்காதவர்களை,    வேண்டாதவர்களை,  எதிரில்  கண்டு விட்டால், பார்த்து பேசாமல்   மறைத்துக் கொள்ள சிறந்த வசதி குடை ஒன்று தான். குடையை கோட்டைவிடும் ''கொடை வள்ளல்கள்'' நம்மில் அநேகர் உண்டு.     
அக்னி நக்ஷத்திரத்தை கத்திரி வெய்யில் என்கிறோம்.  பள்ளிகள் விடுமுறை காலம் இது.  மின்சாரம்    விட்டு விட்டு நின்று போய்  பிராணனை   வாங்கும்.   FAN  ஓடாது.  பனை  ஓலை விசிறியின்  அருமையும் ,  வெட்டிவேர் தட்டியில் தண்ணீர் ஊற்றி கிடைக்கும்  சுகமும் மணமும் மனத்தை கொள்ளை கொள்வது அப்போது தான்  புரியும்.   இன்னொரு சமய  சஞ்சீவி  பானைத் தண்ணீர். 

 என் இளம் வயதில்   மின்சாரம் கிடையாது.  ஆகவே AC   FAN   எல்லாம்  தெரியாது. ஈரத்துண்டை   மேலே போர்த்திக்கொண்டு  திண்ணையில் உட்காருவோம்.  எதிரே வேப்ப  மகிழ மர  காற்று  வீசும்போது  ஆனந்தம். SG   கிட்டப்பா  காலத்தில்  கத்திரி வெய்யிலை  எப்படி  சமாளித்தார்கள் என்று  அவரே உச்சஸ்தாயியில்  பாடியது ஞாபகம் இருக்கிறதா? '' கோடையில்  இளைப்பாற்றிக்  கொள்ள  ஒரு குளிர்ந்த தரு, அதன் நிழல்,  நிழலில் கனிந்த கனி,  அருகில் ஓடும்  ஓடை,அதன் தீஞ்சுவை தண்ணீர்,  மேடையில்  அமர்ந்தால்  அது வீசும்  தென்றல்....''.. போதுமா....!

இப்போது பெரிய  பட்டணங்களில் பல்வேறு  அடுக்கு கட்டிடங்களில் வெயிலோ மழையோ வெப்பமோ தெரியவில்லை.   எப்போதும் சில்லென்ற செயற்கை  குளிர்ச்சி . கல்யாண கூடங்களை  கூட சில்லென்று மாற்றி  வைத்து காசு  பிடுங்குகிறார்கள்.   கத்திரி  வெயிலின் தாக்கம் இல்லை.  பெரிய  ஹோட்டல்கள்,  மால்கள், சினிமா கொட்டகை,  எல்லாமே குளிர் சாதன வசதி கொண்டவை.   

''உன்னை தூக்கி  வெய்யிலில் போட'' என்று வார்த்தைக்கு வார்த்தை  தங்கவேலு சொல்லிய ஜோக்குகள்  இப்போது எடுபடாது.  ஆடுமாடு, நாய், பறவைகள்  படும் அவஸ்தை கொஞ்சநஞ்சம் இல்லை.  ஒவ்வொரு வீட்டிலும் கொஞ்சம் ஏதாவது ஒரு  பாத்திரத்தில் தண்ணீர்,  பழங்கள், காய்கறிகள்  அவைகளுக்கு வைக்க வேண்டும்.  வீட்டுக்கு வருவோர்க்கெல்லாம்  சில்லென்று நான்   நீர் மோர் தருகிறேன்.

அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகள்    பாளம்  பாலமாக வெடிக்க, அதில் உலர்ந்த சருகுகள் இலைகள் சிக்கி வைகாசிக்கு பிறகு காற்றில் பூமி   குளிரும்.அப்புறம்  மழை.  மழை நீர்  வெடிப்புகளில் இறங்கி பூமி வளம் பெறும் .  இதை  ''கர்ப்ப ஓட்டம்' என்று  சொல்வது. 

அக்னி பற்றி ஒரு கதை சொல்கிறேன். 

யமுனை ஆற்றங்கரையை   ஒட்டிய  காடு  காண்டவ வனம்.  நிறைய மூலிகைகள் தாவரங்கள் கொண்ட செழுமை.  இந்திரனுக்கு  சொந்தமானது.    அர்ஜுனனும்  கிருஷ்ணனும்  யமுனையில் நீராடி  வனத்
தருகே பேசிக்கொண்டிருந்தபோது ஒரு   ஏழை பிராமணன் அருகே வந்து:

''உங்களைப் பார்த்தால் கருணை உளம்  கொண்ட  பிரபுக்களாக தெரிகிறது.  எனக்கு பசி காதை அடைக்கிறதே.  என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசியை தீர்க்கும்  மருந்தோ,  விருந்தோ இருக்கிறது. நீங்கள் தான் உதவ வேண்டும்' .கண்ணன்  ஒரு நொடியில் அந்த பிராமணர் அக்னிதேவன், பிராமண  வேஷம்  போட்டு வந்ததை உணர்ந்து  கொண்டான். 

"அக்னி தேவா, இது என்ன வேஷம்.   நேரிடையாக சொல், உனக்கு என்ன வேண்டும்?''

"  பரமாத்மா, சுவேதசி என்ற  ஒரு ராஜாவுக்காக,  துர்வாச முனிவர் 100  வருஷங்கள் தொடர்ந்து ஒரு  யாகம் நடத்தும்போது   அக்னியான நான்    அபரிமிதமாக  அவர் அளித்த  யாக நெய்யை
 உட்கொண்டுவிட்டேன். வேறு வழியில்லையே.  யாகத்தில் அளித்ததை எப்படி நிராகரிக்க  முடியும்.  மந்தமாகி விட்ட  நான் மீண்டும் சரியாக வேண்டுமானால்   மந்த  நோய் நீக்கும்  மூலிகைகள் கொண்ட  இந்த வனத்தை நான் கபளீகரம் பண்ணவேண்டும்.   செய்தால் என் பிணி பசி  ரெண்டுமே  தீரும்'' என்றான் அக்னி..
"அதற்கு எதற்கு  எங்கள் தயவு?''  என்றான் அர்ஜுனன்.
"நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்து  விடுகிறான். நான் எப்படி பசியாறுவது?'' என்றான் அக்னி.

 கிருஷ்ணனுக்கு  காண்டவ வனத்தை   அழித்து  அங்கே இந்திரப்பிரஸ்தம் மாளிகைகளை பாண்டவர்களுக்கு  அமைக்க  எண்ணம். அர்ஜுனனுக்கும் அது   விருப்பம் என்றும் கிருஷ்ணனுக்கு  தெரியும்.  காண்டவ வனத்தை  எப்படி அழிப்பது  என்று பாண்டவர்கள் யோசித்த வேளையில் இது நடந்தது.  கிருஷ்ணனின் சிரிப்பு அர்ஜுனனுக்கு புரிந்தது. 

"அக்னி தேவா,  நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம்.   ஆயுதங்கள்  கொண்டுவரவில்லையே.  எனவே இந்திரன் மழையை அனுப்பினால் தடுக்க எனக்கு ஆயுதங்கள் வேண்டுமே''என்றான் அர்ஜுனன்.    அக்னி  அர்ஜுனனுக்கு  சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் 

"அக்னிதேவனே, உன் பிணியை,  பசியைத்  தீர்த்துக்கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் நீ பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்கள் கிருஷ்ணார்ஜூனர்கள்.

அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான்.    எதிர்பார்த்தபடி,  இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கிருஷ்ணன்,  ''அர்ஜுனா  வருணனைத் தடு''  என்று சொல்ல,  த வனத்தில் மழை பொழியாமலிருக்க " அம்புகளான கூரை' ஒன்றை  அர்ஜுனன் கட்டினான்.   அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான்.
அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை எரித்து உணவாகக் கொண்டான்.
அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு திருப்தி  அடைந்த  அக்னி  இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும்.தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்;
நோயாளிகளுக்கு இளநீர் தரலாம்; உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம்; ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்;  எல்லோருக்கும்  விசிறி தானம் அளிக்கலாம்.

பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.

பாஸ்கராய வித்மஹே மஹாயுதிஸ்ட்ராய தீமஹி
தன்ன: சூர்ய ப்ரஜோதயாத்:
அஸ்வத்வஜாய வித்மஹே பாஸஹஸ்தாய தீமஹி
தன்ன: சூர்ய ப்ரஜோதயாத்.  

பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி: பரேசாய நமோ நம:
    அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோநம:
கமலாஸன தேவேச பானு மூர்த்தே நமோ நம:
    தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:
ஸகலேசாய ஸூர்யாய சாயேசாய நமோ நம:
-  ஸ்ரீசூர்ய ஸ்தோத்ரம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...