Sunday, May 5, 2019

PESUM DEIVAM

பேசும் தெய்வம் - J K SIVAN
மஹா பெரியவா

ஒரு ஆஹா விளக்கம்

'தாத்தா சார், உலகத்திலேயே புரிந்து கொள்ள முடியாதது எது?
கமலா டீச்சர் கூட இப்போதெல்லாம் ​ என்னை இப்படித்தான் அழைக்கிறாள்.

பிளாஸ்கை திறந்து ஒரு மடக்கு வெந்நீரை குடித்துவிட்டு இந்த தாத்தா பேசுகி​றேன் :

''இதோ பாரம்மா. மனித​ ​மனம் விசித்ரமானது. எப்போது எப்படி மாறும் என்று எவராலுமே சொல்ல​ ​முடியாதது.' அதை அனுபவித்தோ, சரியாக புரிந்துகொண்டோ ​தான் ​யாரோ ஒருவர் முத​ன் முத​லாக மனம் என்பது ஸ்ரீமான் குரங்கு என்றார். ​ குரங்கு ஒரு நிலையில் நில்லாமல் கிளைக்கு கிளை​ நிமிஷத்துக்கு நிமிஷம் ​ தாவுகிறதைப்போல் எதிலும் ஒரு கண நேர விருப்பம், ஈடுபாடு, உடனே அதில் அலுப்பு, சலிப்பு இப்படி மாறி மாறி செயல்படும் மனது​ ​உண்மையிலேயே குரங்கைக்​ ​காட்டிலும்​ ரொம்ப ​ மோசம்.

டார்வின் பாவம் எங்கெல்லாமோ தேடி அலைந்து குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லி வைத்து ​TMS அதை பாடி நாம் கேட்டு பெருமைப்​ ​படுகிறோம்! கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாலே நன்றாக புரியும். நமக்​கு ஏற்கனவே தெரி​ந்ததை எங்கெங்கோ காட்டிலும் மேட்டிலும் கடலிலும் தீவிலும் தேடி தாடிக்கார டார்வின் ஏனோ சங்கடப் பட்டு கண்டுபிடித்​தேன் என்கிறார்.

இதை அனுபவித்து இதில் இருந்து மீள ஒரு உன்னத ஏற்பா​ட்டை , சலிப்பு தட்டாத வகையில் எதிலும் மாறுதல், மாறுபாடு எல்லாம் உண்டாக்கி இந்து மதத்தில் பெரியோர்கள் சிலர் வழி காட்டி​ ​யிருக்கிறார்கள். நமது மகா பெரியவா போல ஒரு ஞானி, சர்வஞர், உண்டா​! ​. எதையும் அவர் சொல்கிற போது தனி அழகோடு புரி​யும் அல்லவா?.

மாறுபாட்டில் ருசியே மனித இயற்கை - சலிப்பையே விருப்பாக மாற்ற உதவும் வழி தான் பகவானை பல ரூபங்களில் பல முறைகளில், பல பண்டிகைகள், பட்சணங்களோடு வழிபடுவது என்பதை தெளிவாக மஹா பெரியவா சொன்னதை கொஞ்சூண்டு சுருக்கி சொல்கிறேன்.

சாதாரண மநுஷயர்கள் மட்டுமல்ல பக்குவ ஸ்திதியில் ரொம்ப தூரம் முன்னேறியவர்களாக இருந்தால்கூட, மநுஷ ஸ்வபாவம் எப்படியிருக்கிறதென்றால் ஒன்றிலேயே எக்காலமும் முழு மனஸையும் கொடுப்ப​ ​தென்றால் முடிவதில்லை.​ ​எத்தனை நன்றாயிருந்தாலும் அது ஒன்றிடமே முழு ஈடுபாட்டை ஸதா காலமும் வைக்க முடிவதில்லை.

இன்றைக்குச் சமையல்​ ​-- ​ ​ஸாம்பார், ரஸம், கறி---நன்றாகத்தானிருக்கிறது. அத்ருப்திக்குக் கொஞ்சங்கூட இடமில்லை. ஆனால், நித்யம் (தினந்தோறும்) இதே இதே கத்திரிக்காய் சாம்பார் வெண்டைக்காய் கறி என்றால் பிடிக்குமா? கறி காய்களை, குழம்புத் தானை மாற்றத் தோன்றுகிறது! அப்புறம், 'இது எதுவுமே வேண்டாம். ஒரு நாள் சித்ரான்னங்களாகச் சாப்பிடலாம்' என்று தோன்றுகிறது.

வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும், அதே பாட்டு, அதே ராகத்தை ஒவ்வொரு கச்சேரியிலும் பாடினால் அலுத்துப் போகிறது. ​ ​எதில் (எந்தத் துறையில்) போனாலும் இப்படித்தான் பல தினுஸாக​ ​மாறுபாடுகள்
வேண்டியிருக்கிறது.

அவ்வப்போது ஒவ்வொன்றிடமும் முழு ஈடுபாடு இருந்தாலும்- இன்றைக்குத் தயிர்வடை என்றால் சப்பு கொட்டிக்கொண்டு ஐந்து ஆறு என்று உள்ளே தள்ளினாலும், நாளைக்கு, நாளன்றைக்கு, நாலாம் நாள்,அஞ்சாம் நாளும் அதுவேதான் என்றால், இன்றைக்குச் சப்புக் கொட்டினவர்களே அன்றைக்கு முகத்தைச் சுளிக்கிற மாதிரி - திரும்பத் திரும்ப அது ஒன்றேதான் என்று வரும்போது அதிலே ருசி, ஈடுபாடு குறைந்து விடுகிறது.

இது தெரிந்துதான் நம்முடைய மதத்தில் இத்தனை ஸ்வாமி​கள் ​, விதவிதமான ரூபம், விதவிதமான அலங்காரம், விதவிதமான வாஹன​ங்கள், ​ ​அத​தற்கும் விதவிதமான பூஜா பத்ததி வெவ்வேறு உற்சவ காலங்கள் என்று வைத்திருக்கிறது.

கோயிலுக்குப் போகிறோம். பிள்ளையார் ஸந்நிதியில் நிற்கிறோம். அப்போதைக்கு ஒரு க்ஷணம்,இரண்டு க்ஷணம் மனஸு குவிந்த மாதிரிதான் இருக்கிறது. அப்புறம் கையை, காலை சொறிந்து கொள்கிறோம். மனஸு பிய்த்துக்கொண்டு கிளம்பி விடுகிறது!​ ​மனஸை அப்படியே எந்தக் குப்பைத் தொட்டிக்கு வேண்டுமானாலும் ஓடட்டும் என்று விட்டு விடுவதா? அப்படி விட்டு விடாமல், நல்லதிலேயே, தெய்வ ஸம்பந்தமாகவே அந்த மனஸை இழுத்தால்தானே தேவலை?

எப்படி இழுப்பது?

பாழும் மனஸுக்கு இந்த விக்னேஸ்வரமூர்த்தி, தொப்பையும் தொந்தியுமாக இத்தனை அழகாக உட்கார்ந்திருந்துங்கூட, அவரிடமே தொடர்ச்சியாக ஒட்டிக் கொண்டிருக்க முடியவில்லையே!'
பரவாயில்லையப்பா!' என்று இங்கேதான் நம் ஸமயாசார புருஷர்கள் ஆறுதல் தர வருகிறார்கள்.

'மனஸின் நேச்சர் அப்படித்தான் அப்பா! அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருத்தி நிலையாக ஒருமுகப் படுத்த முடியுமப்பா! ​ அதற்கு எதிலும் 'சேஞ்ச் 'வேண்டும். தெய்வ ஸம்பந்தமாகவுங்கூட அப்படி வேண்டும். அதையும்தான் நம்முடைய மதம் தருகிறதே!

விக்நேச்வரரிடம் ஈடுபாடு குறைகிறதா, அழாதே! ​ ​இ​தோ ஒரு 'சேஞ்சா'க​ ​ 'ஸுப்ரஹ்மண்யர் ஸந்நிதி, அப்புறம் இன்னும் பல 'சேஞ்ச்'கள் -அம்மன், ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜா, மநுஷ்ய ரூபத்தில் வந்த அறுபத்து மூவர் என்று எல்லாம் ஒன்று சேர்த்துத்​ ​தானே கோவில் என்று வைத்திருக்கிறோம்.

ஒவ்வொன்றிடமும் ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸ் ஈடுபட்டுக் கும்பிட்டு விட்டுப் போயேன். மொத்தத்தில் ஒரு கணிசமான நாழி​, நேரம், ​ உன் மனசு தெய்வ ஸம்பந்தமாகவே ஈடுபட்டி​​ருக்கும்'
என்கிறார்​ மஹா பெரியவா.

நம்முடைய மதத்தின் சிறப்புக்களிலெல்லாம் பெரிய சிறப்பு ஒன்று எது தெரியுமா? ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றேதான் என்று காட்டுகிற ஒரே மதம் ஹிந்து மதம்தான் என்று பலபேர்,​ ​அறிவாளிகள், அந்நிய தேசத்தவர்கள்கூட, ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிறார்கள்.

'எந்த மதத்திலும் இல்லாத அத்வைத ரத்னம் இருக்கிற இந்த மதத்தில், இந்து மதத்தில், எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு இத்தனை த்வைதமான ஆசார அநுஷ்டானங்களும், சாமிப்பட்டாளமும் இருக்கிறதே! இவை ஒன்றுக்கொன்று ஒரே முரண்பாடாக இருக்கிறதே' என்று அவர்களில் ரொம்பப் பேர் வருத்தப்​ ​படுகிறார்கள்.

​''​எனக்கோ​ ​​(​இதை எழுதும் ​நானல்ல, மஹா பெரியவா) என்ன தோன்றுகிறதென்றால், அத்வைதம் நம்முடைய பெரிய சிறப்புத்தான் என்றாலும் , அதை​ ​விடவும் சிறப்பாக எது தோன்றுகிறது? இப்படி ஒன்றேயான அத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயே வித்யாஸம் வித்யாஸமாக இத்தனை வர்ணாச்ரம வ்யவஸ்தை​ ​களும், இத்தனை பட்டாளமாக தெய்வங்களும் வைத்திருப்பதுதான்!

''அத்வைதம், ஏக பரமாத்மா' என்பது ஐடியல். ​ ​இத்தனை ஸ்வாமி பட்டாளம், இத்தனை விதமான ஆசார வ்யவஸ்தைகள், என்பது ப்ராக்டிகல். ​ ​ப்ராக்டிகலில் ஆரம்பித்து க்ரமேண (படிப்படியாக) முன்னேறி​ ​னால்தான் ஐடியலுக்குப் போய்ச் சேர முடியும். இப்போதே ஐடியல் என்று யத்தனம் பண்ணினால் ஒன்று தோல்வியாக ஆகும், அல்லது, அதைவிடத் தப்பாக, ஹிபாக்ரிஸியாக,​ HIPPOCRISY ​ போலி வேஷமாகத்தான் ஆகும்.

அத்வைதத்தைச் சொன்ன மதத்தில் இத்தனை த்வைதத்துக்கு இடம் கொடுப்பதா என்று கொஞ்சங்கூடத் தயங்காமல், ஜனங்களின் மனப்பான்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, அநுதாபத்துடன், பரம கருணையுடன் இத்தனை தர்மாசாரப் பிரிவினைகளையும், சாமிப் பட்டாளத்​துக்கும் இடம் கொடுத்து வைத்​திருப்பது தான் சிறப்புக்களில் பெரிய சிறப்பு. அதனால்தான் அத்வைத ஆசார்யாளான நம்முடைய பகவத் பாதாளே வர்ணாச்ரம வ்யவஸ்தைகளையெல்லாம் மறுபடி நன்றாக ஒழுங்கு படுத்தி நிலை நாட்டினார்.

​'​பஞ்சாயதனம்​' ​ என்று ஐந்து தெய்வங்களை வைத்துப் பூஜை பண்ணும்படியாக ​ ஒரு ​ஏற்பாடு செய்தார். அதோடு, 'ஸுப்ரஹ்மண்யரையும் பூஜை பண்ணு'என்கிற மாதிரி (ஸுப்ரஹ்மண்ய) புஜங்கம் பாடி வைத்திருக்கிறார். ஷண்மத ஸ்தாபனம் என்று பண்ணும்போது அதில் (ஸுப்ரஹ்மண்ய உபாஸனையான) கௌமாரம் என்பதையும் சேர்த்துக்கொண்டார். இன்னும், ராமன், க்ருஷ்ணன், நரஸிம்மமூர்த்தி,அம்பாள் என்று எடுத்துக்கொண்டால் அதிலேயே த்ரிபுரஸுந்தரி, பவானி , ப்ரமராம்பா, சாரதாம்பா என்று பல ரூபபேதங்கள், கங்காதி புண்ய நதிகள்-என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனை சாமிப்பட்டாளத்தின் மேலேயும் தோத்ரங்களைப் பாடி வைத்திருக்கிறார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...