Saturday, May 4, 2019

sivavakkiyar



சித்தர்கள், மஹான்கள்,   J K  SIVAN 
சிவவாக்கியர்.
                                                                      
             நமஸ்காரம் சிவவாக்கியரே!

என்னென்னவோ பேர்  அதற்கெல்லாம்.  மாங்காய் மாலை, பதக்கம், நெக்லெஸ்,  மாம்பழ சங்கிலி, கோதுமை  சங்கிலி,  குண்டலம்,தோடு, எந்த பேரோடும், உருவத்தோடும் இருந்தாலும் எல்லாமே  ஒரே தங்கம் தான். ஆதாரம் ஒன்று, உருவங்கள் பல.  அப்படித்தான் எங்கள்  மஹா  விஷ்ணுவும் பரமேஸ்வரனும், ரெண்டு பேரும்  அந்த பரம்பொருள் ஒன்று தான்.  இது தான் ஒஸ்தி, உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று வாய் கிழிய பேசும் மனிதர்களே, எங்கும் நிறைந்த பல் வேறு பெயர்கள் உருவங்கள் கொண்ட  அந்த ஒன்று தான் பரம்பொருள்.  அதன் பெயர் தான் பரமாத்மா.  இதை அழகாக  சொல்கிறார் சிவவாக்கியர்: 


''தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம்இந்த நாமமே!''
                         

தேவாதி தேவன் பரமன் எங்கிருக்கிறான்?  அதை யார் அறிவார்கள்?  ஞானிகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்,  அவன்  அங்கோ இங்கோ

 தனியாக எங்கோ  இல்லை. எங்கும்  எதிலும் நிறைந்தவன் என்று அறிவார்கள். இது  பழம்பெரும் உண்மை.  எல்லோருக்கும் தெரிந்த உண்மையும்  கூட .  வேதங்கள் எல்லாமே  அதை தானே  திரும்ப திரும்ப சொல்கிறது.  இதெல்லாம் ஏன்  மறந்து போகிறது? எதற்கு  அதோ இருக்கிறதே அந்த ஊரில் உள்ள கோவிலில் தான்  அவன் இருக்கிறான் என்று கை  நீட்டி எதையோ காட்டுகிறாய்.  எங்கெங்கோ ஊர் ஊராக செல்கிறாய்?  அங்கும் தான் இருக்கிறார் ஆனால் அங்கே மட்டும்  தான்  என்று இல்லை அப்பனே'' என்கிறார் சிவவாக்கியர். 



''அண்டர் கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மை  தன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறுகூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.''

''அடடா  கணக்கு பார்க்க முடியவில்லை. இதுவரை எத்தனை செடிகளில் எத்தனை பூக்கள் பறித்து அவனை அர்ச்சித்திருக்கிறேன்.  எத்தனை லக்ஷம், கோடி தரம் மந்திரங்கள் ஜெபித்து  உச்சரித்திருக்கிறேன். எங்கி ருந்தெல்லாம் தீர்த்தம் கொண்டு வந்து அவனுக்கு அபிஷேகம் செய்திருக்கிறேன். எத்தனை சிவாலயங்கள் நடந்து சென்று அவனை தரிசித்து சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். அவனை என்னுள் காணாமல் போனேனே!  இதை சிவவாக்கியர் எவ்வளவு அழகாக தெளிவாக சொல்கிறார் பாருங்கள்.

''பண்டு நான் பறித்  தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்து விட்ட மந்திரங்கள் எத்தனை?
மீண்டனாய்த் திரிந்தபோது இறைத்த  நீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?''

'' ஓ, கைலாஸமா?  வைகுண்டமா?  அடேயப்பா!  இந்த பூமியிலிருந்து எவ்வளவு தூரம். நம்மால் கடந்து போக முடியுமா? என்று சொல்பவர்கள் சோம்பேறிகள் என்கிறார்  சிவ வாக்கியர். நான் சொன்னதாக 
நினைத்துவிட வேண்டாம்.  இந்த பரந்த பூமியோ,  மேலே ஆகாசத்தில், எங்கும்  பரந்து விரிந்து  இருப்பதாக காணும்   விண்ணுலகமோ, உண்மையில்  அவ்வளவு தூரத்தில் இல்லை.  எங்கோ இல்லை. ஒவ்வொரு ஊராக சென்று விசாரித்து அவன் கோவில்களுக்கு சென்றேன், நாடெல்லாம் நடந்தேன், காடுகள் மலைகளில் அவனை தேடிச்  சென்றேன். என்னைப்  போன்ற  ஊமைகளே, அறியாதோரே , அஞ்ஞானிகளே, கொஞ்சம் கண்ணை மூடி  அவனை தியானித்து  உங்களுக்குள்ளே தேடுங்கள். ''அடாடா  இங்கே பளிச்சென்று தெரிகிறானே  அந்த பரமனை, பராபரத்தை, எங்கெங்கோ தேடி   காணாமல்   வாழ்நாளை வீணாக்கினாயே''  என்கிறார் சிவவாக்கியர். 

சின்ன நாலுவரி அற்புத பாடல்.   ''தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணு மெங்குமாய்ப் பரந்தவிப் பராபரம்
ஊருநாடு காடுதேடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.''

நேரம் கிடைத்தபோது சிவவாக்கியரை ருசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...