Thursday, May 30, 2019


அறுபத்து மூவர் --          ஜே கே சிவன்
திருநாவுக்கரசர் 4
                                                              
கல் தெப்பம் 

பல்லவ  ராஜா  மஹேந்திரனுக்கு   என்ன  செய்வது என்றே  புரியவில்லை. மாளிகையை விட்டு  குதிரை மேல் வேகமாக  கொண்டிருந்தவன்  கண்ணில் கெடில நதி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது தென்பட்டது.  கடலில் அது சங்கமமாகும் இடத்தில் பெரும் வெள்ளமாக ஓடியது.   அவன்   கண்ணெதிரே ஒருவன் வெள்ளத்தில் சிக்கி  உயிர்தப்ப முயன்று  ஆற்றோடு செல்வது தெரிந்ததும்   திடீரென்று  ஒரு யோசனை தோன்றியது. அரண்மனைக்கு திரும்பியவன் உடனே  அவனது காவலர்களை அழைத்து திருநாவுக்கரசரை  ஒரு பெரிய கனமான பாராங்கல்லோடு  பிணைத்து  கடலில் எறியுமாறு  ஆணையிட்டான்.

அமைதியாக  வீற்றிருந்து   சிவ தியானம் செய்துகொண்டிருந்த  நாவுக்கரசரை சில வீரர்கள் பிடித்து ஒரு பெரிய  கல்லோடு கட்டி கடல்மாதிரி ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் தூக்கி  வீசினார்கள். அவர்கள் தன்னை கொல்லவந்தவர்கள் என்று அறிந்த  நாவுக்கரசர்  பதட்டமடையவில்லை.  ஓம் நமசிவாய மந்திரத்தை விடாமல் ஜபித்துக் கொண்டிருந்தார்.  அவர்களை தடுக்கவில்லை. எதிர்க்கவில்லை.

விஷத்தை கொடுத்தோம். அதை உண்டும் அவன் சாகவில்லை,  யானையை ஏவி தலை சிதறச்செய்தோம் . தப்பித்தான்.  இந்த முறை அவன் தப்பிப்பது முடியாத  காரியம் என்று அரசன் நம்பினான்.

''
சிவா,  இதுவும் உன் விளையாட்டா. நடக்கட்டும்  உன் கட்டளையை நான் மீறேன் என்று  திருநாவுக்கரசர் கண்களை மூடி  பரமேஸ்வரனை, வீரட்டானேஸ்வரனை வேண்டிக்கொண்டார். கல்லில் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார்.  

கடலில் வீழ்ந்தது தெரிந்தது. அப்புறம்?  எப்படி  அந்த பெரிய  பாறாங்கல் ஒரு தோணியாக மாறி அதன் மேல் அவர்   சொகுசாக வீற்றிருந்தார்?  ஆஹா  பரமேஸ்வரா  என்னே உன் கருணை என்று கண்களில் நன்றியோடு கண்ணீர்  பெருக ஒரு பதிகம் பாடினார்.

பண் : காந்தார பஞ்சமம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நம சிவாயவே-    (நான்காம் திருமுறை, 4262)

என்னை கல்லோடு  பிணைத்திருக்கும்  இந்த  கயிறு எது   தெரியுமா.என் பழவினைப் பயனும் இந்த பிறவியில் நான் இழைத்த பாபங்களும்  தான். கல்  என்னை ஆட்டிப்படைக்கும்   மும்மலங்கள்.  உன்  திருவருள்.  இந்த கடல்  பிரவிப்  பெருங்கடல். எல்லையற்றது.   கரையேற்றுபவன்  பரமேஸ்வரன் நீயே .  ஓம் நமசிவாய என்ற  ஐந்தெழுத்து ஒன்றே என் வாயில் பிறக்கும் வேதச்  சொல். அதுவே எனக்கு துணை. உன் நாமம் உன்னை விட  சக்தி வாய்ந்தது.  பரஞ்சோதியான உன்னை , உன் திருவடிகளை போற்றி  என் இருக்கைகளை கூப்பி வணங்குவதை விட  எனக்கு  சிறந்த செயல் எது?   என்னை எவ்வளவு பெரிய கல்லோடு  எவ்வளவு  ஆழமான கடலில் கொண்டு போய்  எறியட்டுமே . உன் ஐந்தெழுத்து  நாமம் துணை  நிற்கட்டும்.

நாவுக்கரசர் வேண்டிய மறுகணமே  அவரை கல்லோடு  பிணைத்திருந்த கயிறுகள் அறுந்து விழுந்தன. கல் ஒரு  தெப்பமாக மாறி  கரையை நோக்கி மிதந்தது.  அந்த கல்  தோணியில்  திருநாவுக்கரசர்  கைகளை கூப்பி கண்மூடி  வீரட்டானேஸ்வரனை வணங்கியவர் அமர்ந்திருந்தார்.  கல் தோணி  திருப்பாதிரிப்புலியூர்  கரையை  நெருங்கியது.குப்பம் என்று இப்போது நாம்  காணும் இடம்தான்   அப்பர் கரையேறிய இடம்.  திருவண்ணாமலையில்  8 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 3 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமம்.    மூன்று  நான்கு முறை  இந்த  ஆலயத்தை தரிசிக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது  
திருப்பாதிரிப் புலியூர்  274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம்.  ரயில் நிலையம் அருகே  உள்ளது.  இப்போது நாம்  கடலூர் எனும்    ஊர் தான்  திருப்பாதிரிப்புலியூர்.    அருமையான சிவன்கோவில்.  ஈஸ்வரன் பெயர் பாடலீஸ்வரர்   தோன்றாத்துணை நாதர்.    ஸ்வயம்பு   லி ங்கம்.  அம்பாள் பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவ நாயகி.   கிழக்கு நோக்கிய   ஆலயம்.   ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம்.  படித்துறைகளுடன் உள்ளது. முன்னால்  மண்டபத்தை  அடுத்து  5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன.  உள்ளே உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி. 

 திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தி.  அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த ஸ்தலத்தில் .மட்டும் தான்.  வ்யாக்ர பாதர் எனும்  புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். . பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.

அப்பர்  கல் தெப்பத்தை விட்டு   கரையேறி  எதிரே தோன்றிய  திருப்பாதிரி புலியூர் சிவனை வணங்குகிறார்.  பாடிய தேவாரத்தில்   என்னை  என்றா தாய்  தந்தையரே,  தோன்றாத்துணையே  என்று பாடிய  இந்த  ஸ்தல பதிகம்:

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே. 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே. 
இந்த  அதிசயக்  காட்சி யைக்கண்ட  அரசனின் ஆட்கள், மற்றும் சிவபக்தர்கள்  சிலையாகினர்.  அப்பரை வணங்குகிறார்கள்.

மகேந்திர பல்லவன் விஷயம் அறிகிறான்.  அவன் இதுகாறும்  பின்பற்றிய  சமண மதம் அவனை விட்டு விலகுகிறது. சிவபக்தன் ஆகிறான். நமக்கும் எண்ணற்ற  சிவன் கோவில்களை கட்டி நாம் தரிசிக்க வழி செய்திருக்கிறார்கள் அவனுக்குப் பின் வந்த  பல்லவர்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...