Tuesday, December 19, 2017

THIRUVEMBAVAI. 4




மணிவாசகரின் மனம் இனிக்கும் திருவெம்பாவை. 4 - J.K. SIVAN

''ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !! (4)


மணி வாசகர் ஆண்டாள் திருப்பாவையில் சிந்தித்தவாறே திருவெம்பாவையில் காட்சிகளை வைக்கிறார். அற்புதமான தமிழ் இருவருடையதுமே. ஒன்று விஷ்ணு பக்தர்களை மகிழ்த்துவது போல் மற்றது சிவ பக்தர்களை சந்தோஷப்படுத்துகிறது. இரண்டுமே தமிழ் விரும்பிகளுக்கு அமிர்தமாக கிடைத்தவை.

திருவெம்பாவையில் தலைவியான பெண் மற்ற பெண்களையும் சேர்த்து சிவனை வணங்கி விரதமெடுக்க விடிகாலையில் இன்னும் வந்து சேராத பெண்களை வீடு சென்று எழுப்பி நீராட அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி.
ஒரு பெண் வீட்டில் அரைத்த தூக்கத்தில் இருப்பவள் ''என்னடி அவசரம் என்னை எழுப்புகிறாய், எல்லோரும் வந்து விட்டார்களா என்று எண்ணிப் பார்த்து விட்டு என்னை அப்புறமாக எழுப்பு '' என்கிறாள்.
''எல்லோரும் வந்தாகி விட்டார்கள் உன்னைத்தவிர. சீக்கிரம் கிளம்பு '' என்று எழுப்பும் பெண் கூற அவளும் தயாராகி கிளம்புகிறாள்.

இந்த பாடல் சொல்வது: ஜொலிக்கும் முத்தைப்போல வெண்மைநிற முத்துக்களை கோர்த்தது போன்ற பற்களை உடையவளே, இன்னுமா உனக்கு பொழுது விடிந்துவிட்டது தெரியவில்லை.

''என் பல் இருக்கட்டும். அழகிய கிளியைப் போன்று பேசுபவளே, நீ முதலில் எண்ணி ப்பார்த்து சொல் மற்றவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?'' என்று வீட்டிற்குள் இருப்பவள் கேட்க,

''நான் எண்ணிச்சொல்வது இருக்கட்டும், அதுவரை நீ சும்மா விருதாவாக படுக்கையில் படுத்து காலத்தை ஓட்டாதே. நினைத்துப்பார் அந்த தேவர்களும் விண்ணுலகோரும் போற்றும் அமிர்த ரூபனை, வேதங்கள் தொழுதேத்தும் ஞான தேசிகனை, கண்ணுக்கினியானை, பரமசிவனை, போற்றி பாடு, மனம் உருக வேண்டுவாயாக.

அதைவிட்டு நான் எண்ணிச் சொல்வதற்குள் நேரத்தை வீணாக்காதே. நீயே வந்து எண்ணிக்கொள். அப்படி யாராவது விட்டுப்போயிருந்தால், அவர் களும் வரும்வரை கிடைக்கும் நேரத்தில் மீண்டும் போய் தூங்கு.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...