Saturday, September 3, 2022

BRINDHAVANAMUM

 பிருந்தாவனமும் நந்தகுமாரனும்-  நங்கநல்லூர் J.K. SIVAN


 ராதாஷ்டமி

இன்று ராதாஷ்டமி, எப்படி கிருஷ்ணாஷ்டமி கொண்டாடுகிறோமே அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் கொண்டாடும்  ஒரு புனித நாள். ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லை என்பதால் தானோ ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்ததினம். சத்தியத்தின் ஆணுருவம் கிருஷ்ணன் என்றால் நேசத்தின், பாசத்தின் ப்ரேமையின் பெண் உருவம் ராதா. கிருஷ்ணனின் பிரதம பரம பக்தை. கிருஷ்ணனின் சர்வ சக்தி.   மொத்தத்தில் ஜீவாத்மா  பரமாத்மா உருவகம்.

புராணம் என்ன சொல்கிறது? ஸ்ரீ லக்ஷ்மியும் ராதாவும் நாராயணனின் வலது இடது பக்கத்திலிருந்து உருவாகி லட்சுமி நான்கு கரம் கொண்ட விஷ்ணுவை கணவனாக வேண்டி பெற்றாள். ராதா ரெண்டு கை கொண்டவனை வேண்டி கிருஷ்ணனை அடைந்தாள். விஷ்ணு வைகுண்டத்தில் லக்ஷ்மியோடு இருக்கும்போது கிருஷ்ணன் கோலோகத்தில் ராதாவோடு.    லக்ஷ்மி செல்வத்திற்கு அதிபதி. ராதை பேரன்புக்கும் ப்ரேமைக்கும் புனித பக்திக்கும் அதிபதி. கௌடிய வைஷ்ணவர்கள் இன்று அரை நாள் உபவாசம். பலர் முழுநாள் ஏகாதசி விரதம் போல அனுஷ்டிக் கிறார்கள்.சிலர் நிர்ஜல ஏகாதசி விரதம். தண்ணீர் கிட்டே வரக்கூடாது.

ராதா பிறந்தது துவாபர யுகத்தில் என்றாலும் என்றும் அவள் மனதில் நிறைந்திருக்கிறாள்.  கிருஷ்ணனை ராதாவோடு  நினைப்போம். அஷ்டபதி தான் பாடவேண்டும் என்றில்லை. ''ராதையின் மோகனம்'' கூட பாடலாம். ராதாவைப் பற்றி அநேக எண்ணற்ற சுவையான பாடல்கள் உள்ளனவே. ஊத்துக்காடு எங்கே போனார்? . அவரின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. முண்டாசு பாரதியாரும் கண்ணதாசனும் கூட கொள்ளை கொள்ளையாக தந்திருக்கிறார்களே . இந்த பாடல்களில் ராதை கிருஷ்ணன் நிழலாக கலந்திருக்கிறாளே .

உலகமுழுதும் ISKCON கோவில்கள் இந்த நன்னாளைக் கொண்டாடுகிறது. . இன்று ராதாவின் தாமரைப் பாதங்களை எண்ணற்ற கிருஷ்ண பக்தர்கள் கண்டு தரிசித்து மகிழ்கிறார்கள். இன்று ஒரு நாள் மட்டுமே. மற்ற நாட்களில் அந்த பொற்பாதங்களை மறைத்து வைக்கிறார்கள்.

ராதாவும் கிருஷ்ணனும் எப்படி பழகினார்கள் என்று ஒரு சின்ன  கற்பனை.

பிருந்தாவனத்தில் சிலு சிலு வென்று யமுனையின் குளிர்ந்த காற்று வீசி தென்றலை இடைவிடாது தெளித்துக் கொண்டிருந்தது. அந்த காற்று சும்மா வரவில்லை. வரும் வழியில் மனோரஞ்சிதம் மலர்களின் ஊடே பாய்ந்து அவற்றின் நறுமணத்தை நிரப்பிக் கொண்டு தாழைப்புதரில் இருந்து வந்த தாழம்பூ வாசனையை அதோடு கலந்து, மல்லிகைப் பந்தல் கோபித்துக் கொள்ளப் போகிறதே என்று பயந்து அதன் மொட்டுகளில் இருந்து வாசனையையும் கலந்து அந்த மகிழமரத்தின் அடியில் இருந்த இருவர் மீது அபிஷேகம் செய்தது.

' ஹே காற்றே, நில். என் விருந்தாளிகளாக இவர்கள் என் நிழலில் அமர்ந்திருக்கும்போது என்ன தைரியம் இருந்தால் நீ மற்ற மலர்களின் மணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இவர்களை அபிஷேகிக்க வந்தாய். இந்தா, கொஞ்சம் என் மகிழம்பூ மலரையும் எடுத்துக்கொள். அதையும் கலந்து அவர்கள் மேல் வீசு'' என்றது.
''நன்றி மகிழா, என்று காற்று மகிழம்பூ மனத்தையும் கலந்து அந்த இருவர் மேல் அபிஷேகம் செய்தது.
ஆனால் அந்த இருவரோ ஒருவரை ஒருவர் பாராமல் திரும்பி அமர்ந்து கொண்டிருந்தனர்.பேச்சு மட்டும் வந்தது.வழக்கம்போல் என்னவோ அவர்கள் இருவருக்குள் ஏதோ ஒரு பிணக்கு.

''நீ ஏன் நான் கூப்பிட்டு வரவில்லை?- அவன்.
''நீ கூப்பிடும்போது எல்லாம் நான் ஓடி உன்னிடம் வரவேண்டுமா?''- அவள்.
''ஆமாம், அது தான் எனக்கு பிடிக்கும்''
'' எனக்கும் தான் பிடிக்கும். ஆனால் எனக்கு வேலை இருந்ததே''
'' என்ன வேலை அப்படி?''
'' எத்தனையோ வேலை, உனக்கு தான் என்னை கூப்பிடுவதைத் தவிர வேறு வேலையே யில்லை?''
'' உனக்கு என்னிடம் வர மனமில்லை என்று சொல்லேன். ஏன் சுற்றி வளைக்கிறாய்?''
''போ போ, உனக்கு பதில் சொல்ல எனக்கு சக்தியில்லை. நீ எதையும் புரிந்து கொள்பவன் அல்ல.''
''எனக்கு நீ வேண்டுமே?''
''எனக்கும் தான். அதற்காக?''
'' நான் கூப்பிட்டபோது வரவில்லை என்றால் நீ என்னை மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?''
'' கிருஷ்ணா, உன்னை நினைத்துத் தானே நான் உருகுகிறேன். என் கடமை என்னை கட்டிப்போட்டிருக்கிறதே என்ன செய்ய?''
''இதோ பார் ராதா, உன்னைத் தவிர நான் வேறு யாரிடமாவது இப்படி உரிமை கொண்டாடி இருக்கிறேனா? அது எதைக் காட்டுகிறது?''
''புரிகிறது கிருஷ்ணா. உன் பிரேமை என் பிரேமைக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.''
'' அதனால் தான் எனக்கு உன்னிடம் பிரேமை உண்டானதே.''
'' நாம் பழகுவதற்கு முன்னால் என்னிடம் பேசியிருக்கிறாயா?''
'' பார்க்கும்போது எல்லாம் பேசியிருக்கிறேனே?''
'' எப்போதெல்லாம் என்னை பார்த்தாய்?''
'' இது என்ன கேள்வி கிருஷ்ணா. நீ என்னை சந்தித்த போதெல்லாம் தான். உன் பிரேமை உன்னிடம், என் பிரேமை என்னிடம், என்றா நாம் இருந்தோம் 'கிருஷ்ணா, இந்த ராதை எப்போது தன் கிருஷ்ணனை சந்திக்க வேண்டும் எப்போது பேசவேண்டும் என்று தனக்கே தெரியாதவள் , ஏனெனில் எப்போதும் அவள் நினைவிலேயே அவன் தான் குடிகொண்டிருக்கிறானே''
''ஒ, அது எனக்கு தெரியுமே ராதா ''
''ஆமாம், கிருஷ்ணா, உனக்கு தான் எல்லாமே தெரியுமே . நான் பம்பரம். நீ தானே என்னைச் சுற்றி விட்டு ஆடவைக்கிறாய்.. இந்தா, நான் ஆசை ஆசையாக உனக்காக அவசர அவசரமாக செய்த இந்த பக்ஷணத்தை சீக்கிரம் சாப்பிடு''
'' நான் கேட்டு தானே நீ கொண்டு வந்தாய்.''
'' நான் எதைச் செய்யும்போதும் சாப்பிடும்போதும் அதை எப்போதும் உன்னை நினைத்து தானே, தயாரிக்கிறேன். தனியாக எதற்கு கொண்டுவரவேண்டும்.?''
'' கொண்டுவந்ததால் தானே நீ செய்த பக்ஷணத்தின் ருசி அனுபவிக்க முடியும் '' கிருஷ்ணன் ராதை கொண்டுவந்த இனிப்பை தின்றுகொண்டே பேசினவன் சட்டென்று
' இந்தா ராதா, எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுகொண்டிருக்கிறேனே. நீயும் கொஞ்சம் இதைச் சாப்பிடு நீ சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி இல்லையா. ''
ராதா தான் செய்த தின்பண்டத்தைத் தனது வாயில் போட்டுக்கொண்டவள் உடனே வெளியே உமிழ்ந்தாள். கலகலவென்று சிரித்தாள்.
''ஏன் சிரிக்கிறாய் ராதா?''
' கிருஷ்ணா உனக்கு சீக்கிரம் கொண்டுவந்து தரவேண்டும் என்று அவசரம் அவசரமாக உன் நினைவிலேயே இதைச் செய்தேனா, சர்க்கரைக்கு பதில் நிறைய உப்பை மாற்றி போட்டுவிட்டேன் கண்ணா. என் மனம் என் வயம் இல்லை. அதுசரி நீ எப்படி இத்தனை நேரம் இதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாய் ?' பாதிக்கு மேல் சாப்பிட்டிருக்கிறாயே !'
' அது என் பழக்கம் ராதா, யார் எனக்கு எதை அளித்தாலும் கொடுத்தவர்களின் மனத்தை தான் பார்க்கிறேன். மணத்தையோ, ருசியையோ நான் பார்ப்பதில்லையே. உன் மனத்தின் இனிமை நீ போட மறந்த சர்க்கரை
யின் இனிப்பைவிட ருசித்ததே.''

''ராதா, ஒ ராதா.... சொந்தம் என நீ நினைத்தால் நான் எப்போதோ உன் சொந்தம் ஆகிவிட்டேன் என்பதை உணர்வாய். . இதில் நேரம் காலம், குலம், வயது எதற்குமே இடமில்லை. மனம் ஒன்று பட்டால் மற்றதொன்றும் இல்லை என்று நீ அடிக்கடி சொல்வாயே. நீயே மறந்து விட்டாயா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...