Monday, September 5, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM

 ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


8.  யார்  இந்த  ராதா?

ராதா யார் என்று புரியவேண்டுமா? நெருப்புக்கு சூடு எப்படியோ, பனிக்கு குளுமை எப்படியோ, தேனுக்கு இனிப்பு எப்படியோ, அப்படித்தான் கிருஷ்ணனுக்கு ராதை. அவளே அவன் குணம், தன்மை, பிரேமை,செயல் யாவும். கிருஷ்ணன் மீது ராதை கொண்ட பிரேமையே பிரேமை என்ற வார்த்தையின் உணர்வு. ப்ரேமையின் உருவம் தான் ராதா. உயர்ந்த நிலை அடைந்த ஆத்மாவின் பெயர் தான் ராதா. ராதை என்ற சக்தியே பிரபஞ்சத்தின் ஆதார ஜீவ சக்தி, உயிர்நாடி. 

இயற்கையும் இறைவனும் கூடுவது தான் ராதா- கிருஷ்ண பிரேம பாவம். இயற்கை தான் இறைவன், இறைவனின்றி இயற்கை ஏது? கண்ணால் காண முடியாத பரமனைக் காணும் யாவிலும் காண்பது தான் ராதா-கிருஷ்ண தத்வம். .
இறைவன் எளியோர்க்கும் எளியவன் என காட்டத்தான், சாதாரண, பாமர, ஆயர்பாடி கோபியர்களோடு சேர்ந்து கோலாகலமாக அந்த கண்ணன் குலாவினான், ஆடினான், பாடினான், விளையாடினான். தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து,வையகத்தையும் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தினான். உருவம் இல்லாவிட்டால் புரியாதே என்பதற்காக தானே ராதையும் ஆனானோ? இரவும் பகலும் அந்த இறைவன் தன்னைப் பலராக்கிக்கொண்டு அந்த கோபியரோடு விளையாடியது தான் ராசக்ரீடை. வட்டமான அவர்கள் கூட்டத்தில் மைய நாயகன் அந்த மோகன கிருஷ்ணன். அவனது குழல் நாதம் அவர்களை ஆட வைத்தது. அந்த கோபியரில் ஒருவளாக பிறப்பதற்கு எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும் ஒவ்வொரு ஆத்மாவும். இது நடந்தது புண்ய க்ஷேத்ரமான பிருந்தாவனத்தில் மட்டுமே. துளசி வனங்களின் சூழலில்.

ராதா கல்யாணம் என்ற வார்த்தை   சீதா  கால்யாணம்  என்பதை விட அதிகம் அறியப்பட்டு  எங்கும் கொண்டாடப்படுவது.  ராதா கல்யாணம் முழுதும் கேட்காதவன், பார்க்காதவன் இருக்கலாம். ராதா என்ற பேரே தெரியாது என்று  எந்த  ஹிந்துவாலும் சொல்ல முடியாது.  ஆனால்  ராதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் கல்யாணம் நடக்கவில்லை. ஆண்டாளுக்கும் ரங்கனுக்கு கல்யாணம் ஆகவில்லை. ஆண்டாள் ரங்கனோடு ஐக்யமாகிவிட்டாள் என்று தான் அறிவோம். இருந்தாலும் ஆண்டாள் கல்யாணம் வருஷா வருஷம் ஆனந்தமாக பக்தர்களால் நடத்தப்பட்டு ஆலயங்களில் கூட ஒரு கோலாகல விழாவாக தரிசிக்கப்படுகிறது.  அது போல்  ராதா கல்யாணம் பக்தர்களிடையே விமரிசையாக வருஷா வருஷம் எங்கும் நடக்கிறது. சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் எல்லாம் அந்த அளவு பிரபலம் இல்லை. ராதா கல்யாணத்தில் ஜெயதேவரின் அஷ்டபதி 
 மனத்தை கொள்ளை கொள்ளும் அபூர்வ ராகங்களை அமைத்து கோஷ்டியாக  பஜனை செய்யப்படுகிறது.   அதைக் கேட்கும்போது நாம்  நமது வீட்டிலோ, ஒரு பொது இடத்திலோ நிச்சயம் இல்லை. அது  நம்மை ம் பிருந்தாவனம்  அழைத்துச் செல்கிறது.  வயதான பெண்கள் ஆண்கள்  என்று  அநேகர்  ராதாகல்யாணம் கேட்கும்போது தாமும்  பாடல்களுக்கு ஏற்றவாறு சபையில் எழுந்து ஆடுவதை  காண்கிறோம்.  பக்தி பரவசம் ஒன்றே காரணம்.

நாம் அனைவரும் ராதாக்கள். நம் எல்லோருக்கும் அவன் ஒரே கிருஷ்ணன். பிரபஞ்சமே, இயற்கையே ராதை என்றால் கிருஷ்ணனின் அன்பும் நேசமும், பாசமும் பிரேமையும் பூராவுமே நமக்குத்தான் அல்லவா? அவனன்றி ஓர் அணுவும் அசையாதே .

சுகந்தமான தென்றல் வீச, மேலே பால் போல் நிலவு குளுமையால் பூமியைக் குளிப்பாட்ட, நிசப்தம் எங்கும் நிலவ, அந்த வசந்த கால முன் இரவில், நிலவொளியில், கோபியர்கள், கிருஷ்ணனின் குழல் நாதத்தில் , தம்மை இழந்து வீடு வாசல் எல்லாம் துறந்து ஓடி பிருந்தாவனத்தில் மதுவனத்தில் ஒன்று சேர்கிறார்கள். கண்ணிலே கிறக்கம், ஒருவித இன்ப மயக்கம். எதற்கு எல்லோரும் இங்கு வந்து கூடுகிறீர்கள் என்று அவன் அவர்களை திரும்ப போக சொல்கிறான். காது கேட்குமா அவர்களுக்கு? யமுனையும் ஆடி அசைந்து அந்த இன்ப லோகத்தில் ஆணவமாக நகர்கிறாள். ராச லீலை தொடர்கிறது. அவனைச்சுற்றி அவர்கள். கண்ணும் கருத்தும் யாவும் அவர்களுக்கு அங்கே அந்த நேரத்தில் கிருஷ்ணன் ஒருவனே.
என்ன மாயம் இது? திடீரென்று கிருஷ்ணனைக் காணோமே! கண நேரத்திற்கு முன் இங்கிருந்தானே .சகல இன்பமும் துன்பமாக மாறிவிட்டதே. ''கிருஷ்ணா, கிருஷ்ணா'' என்று ஆதங்கத்தோடு, மனதில் ஆசையோடு அவனை அங்கும் இங்கும் எங்குமே தேடுகிறார்கள், ஓடுகிறார்கள், செடி பின்னாலும், மரத்தின் பின்னாலும், மேலே கிளைகளிலும் சிலர் யமுனை நதியிலும் தேடி அலைகிறார்கள். களைத்துப் போய் சக்தியின்றி துவண்டு சரிந்து விழும் நிலையில் இதோ அவர்கள் முன்னே அவன் தோன்றுகிறான். புத்துணர்ச்சி, ஒரு சக்தி, புதிதாக அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? பிறகென்ன? ஆடல் பாடல் தான். எல்லோரும் அவனை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்கள், , அவனோடு ஓடுகிறார்கள், விளையாடு கிறார்கள், நதியில் தாவி நீந்தி ஒரே கோலாகலம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...