Friday, September 9, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM

 பிருந்தாவனமும் நந்தகுமாரனும்  12-  நங்கநல்லூர்  J K  SIVAN 


பிரிந்தவர் கூடினால்.

மாற்றம் உலகில் இன்றியமையாதது.  போன வருஷம் பார்த்த இடம் இந்த முறை சென்றால் அடையாளமே தெரியாமல்  மாறி இருக்கிறது. அப்படி இருக்க  5250 வருஷங்களுக்கு முன் இருந்த துவாபர யுக பிருந்தாவனம் இன்னும் கொஞ்சம் பழைய அடையாளங்களை வைத்துக்கொண்டு நமக்கு அளிப்பது நமது பாக்யம் தான்.

உ.பி யில்  மதுரா ஜில்லாவில்  உள்ள ஒரு கிராமம்  பர்ஸானா . ராதை வளர்ந்த இடம். அங்கே இன்று நான் பார்த்து அதிசயித்தது ராதா ராணி ஆலயம். வ்ரஜ பூமியி ஒரு புனித க்ஷேத்ரம். ஆயிரம் ஆயிரம்  பக்தர்கள் தினமும் திரண்டு வருகிறார்கள்.  அந்த ஆலயத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. ஸ்ரீஜி கோவில், லாட்லிலால் ஆலயம். பானுகர்  மலையில் 250  மீட்டர்   உயரத்தில்  அழகாக அமைந்துள்ளது.  கிருஷ்ணன் கொள்ளுப்பேரன்  வஜ்ரநாபா  கட்டிய   5000 வருஷ கோவில் சிதைந்து போனது. பின்னர்  சைதன்ய மஹா பிரபு சிஷ்யர்  நாராயண பட்டர், பின்னர்  ராஜா  வீர் சிங்,  ராஜா தோடர்மால்    கட்டிய  கோவில்  தான் இப்போது பார்க்கிறோம்..

ராதையின் வளர்ப்பு தந்தை  வ்ரிஷபானுவும்,  கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை  நந்தகோபனும்  நெருங்கிய நண்பர்கள். நந்தகோபன் கோகுலத்தில் தலைவர். வ்ரிஷபானு  ராவல் என்கிற ஊரில் தலைவர் . கம்சனின் அட்டகாசம் அக்கிரமம் தாங்கமுடியாமல் இருவரும் நந்தகிராமம்,  பர்ஸானா என்று வெவ்வேறு ஊர்களுக்கு போய் வசித்தார்கள். நந்தகோபன்  நந்தீஸ்வரர் மலையில்  மாளிகை  கட்டிக்கொண்டார். வ்ரிஷபானு மேலே  சொன்ன  பானுகர் மலையில் வீடு அமைத்துக் கொண்டார்.  நந்தகோபர் அரண்மனை தான் நந்த பவன். பர்ஸானா  கோவில் தான் ராதை வளர்ந்த இடம். மேலே சொன்ன  ராதாராணி கோவில்.  அழகிய தூண்கள்,  சித்திர வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு கல் கட்டிடம்.  செங்கோட்டையை பார்ப்பது போல் இருக்கிறது. 200  மாடிப் படிகள். கோவிலில்  ராதவைத் தவிர, வ்ரிஷபானு, ராதையின் அம்மா கீர்த்திதா, சகோதரன் ஸ்ரீதமா  ஆகியோர் உருவம் காண்கிறது. அருகே  அஷ்டஸகி கோவில்,  ராதாவின் எட்டு தோழியர்கள் கிருஷ்ணனை வழிபட்ட இடம்.  கிருஷ்ணனும் ராதையும் பர்ஸானா , பிரிந்தாவன்  கோகுலம் எல்லா இடத்திலும்  விளையாடியவர்கள். 
ஒரு சம்பவம் கற்பனையில் தோன்றுகிறது. 
பசுக்களை பிருந்தாவன மேய்ச்சல் நிலங்களில்  கிருஷ்ணன் மேய்க்க அங்கே ராதாவுடன் அவன் ஆனந்தமாக மர நிழலில் ஆடி பாட பசுக்கள் வயிறார உண்டு அவன் குழலோசையில் மயங்கி அரைத்தூக்கம் போடும். ராதாவும் அற்புதமாக புல்லாங்குழல் வாசிப்பாள். கிருஷ்ணனில் பாதி அவள்.

பிருந்தாவனத்தில் கண்ணனைப் பிரிந்த ராதை  சித்தாஸ்ரமத்தில் பிரபாச க்ஷேத்ரத்தில் இணைகிறாள். கிருஷ்ணனின் 125 வயதில், முதல் 11 வருஷங்கள் நந்தகோபனோடு கோகுலத்திலும், 14 வருஷங்கள் பிருந்தாவனத்தில் ராதையோடும், மீதி நூறு வருஷங்கள் மதுராவிலும் துவாரகையிலுமாக கழிந்தது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புராணம் ஒவ்வொரு காலத்தை குறிப்பிடுகிறது. பகவான் கிருஷ்ணனைப் பற்றி எது எப்படி சொன்னாலும் அது சரியே.

ஒரு சூரிய கிரஹணத்தின் போது குருக்ஷேத்ரத்தில் ஒரு பெரிய கும்பல் கூடியது. அங்குள்ள ச்யாமந்தபஞ்சகம் என்கிற குளத்தில் க்ரஹணம் முடிந்தவுடனே ஸ்நானம் செய்தால் பாபங்கள் விலகி ஆத்மா மோக்ஷம் அடையும் என்று நம்பிக்கையில் தான் அனைவரும் அங்கு கூடுவார்கள். பரசுராமர் அநேக க்ஷத்ரியர்களை வதம் செய்து அந்த பாப பரிகாரத்துக்காக அங்கே ஸ்நானம் செய்தார். எனவே அநேக ராஜ குடும்பங்கள் அங்கு வந்தது. பாப விமோசனத் துக்காகவும் பரிஹாரத்துக்காகவும் தான்.

துவாரகையிலிருந்து கிருஷ்ணன் பலராமன் முதலானோர் பல யாதவ அரச குடும்பங்களோடு குருக்ஷேத்ரம் வந்தனர். ஹஸ்தினா புரத்திலிருந்து திரிதராஷ்டிரன் முழு குடும்பத்தோடு வந்திருந்தான். பாண்டவர்களும் இருந்தனர். இங்கேயே பின்னர் பாண்டவர்களும் கௌரவர்களும் மோதுவோம் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லையே! சாதாரண மக்களும் திரண்டு வந்தனர். அவர்களில் பிருந்தாவன கோப கோபியர்களும் உண்டே. கிருஷ்ணனின் தாய் தந்தையர் வசுதேவரும் தேவகியும் நந்தகோபன் யசோதாவைச் சந்திக்க ஆவலாக காத்திருந்தனர். சந்தித்தபோது கிருஷ்ணனின் இரு பெற்றோர்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தை எழவில்லை. பலராமனும் கிருஷ்ணனும் பழைய பால்ய நண்பர்களை அங்கே குருக்ஷேத்ரத்தில் சந்தித்தனர்.

கிருஷ்ணனின் கண்கள் ராதையைத் தேடின. கண்டுவிட்டன. கண்கள் மட்டுமே பேசின.
கோடானுகோடி வார்த்தைகள் எண்ணங்களாக மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொண்டன. அவற்றின் பிரதிபலிப்பாக இருவரது கண்களும் குளமாயின. கிருஷ்ணனது அரச வாழ்க்கையில் ராதா குறுக்கிடவே இல்லை. ராதாவை எந்த தர்ம சங்கடத்திலும் கிருஷ்ணனும் ஆழ்த்தவில்லை. கற்சிலையாக எத்தனை யுகங்கள் அவர்கள் இருவரும் அங்கே ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கிக்கொண்டு நின்றனர் ?  எல்லா எண்ணங்களையும் சர்வமுமாக பரிமாரிக்கொண்டனர். கண்கள் நீரின்றி வறண்ட பாலைவனமானது.

கிருஷ்ணனின் மகிழ்ச்சியை அவன் பட்ட மகிஷிகளோடு இருந்தபோது அவனது சிரிப்பில் கண்டாள் ராதா. அவன் தன் மீதுள்ள அன்பின் நினைவால் வாடியதை அவன் கண்களில் கண்டாள்.   அவள் முடிவு சரியானதே. அவரவர் பாதையில் அவரவர் செல்லவேண்டும் என்ற தீர்மானம் பொருத்தமானதே.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...