Saturday, September 10, 2022

vanamutti perumal

 வானமுட்டி பெருமாள்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவன் தான் வானளாவ பெரு உருவம் ஜோதி லிங்கமாக  எடுத்தார்  என்பது இருக்கட்டும்.  மஹா விஷ்ணுவும்  மாயூரம் பக்கத்தில் 3-4 கி.மீ.தூரத்தில் கோழி குத்தி என்ற இடத்தில்  வானளாவ அதை முட்டிக்கொண்டு  நிற்பதால், அவர் பெயர் வானமுட்டி பெருமாள்.   சில வருஷங்களுக்கு முன்பு,  ரெண்டு மூன்று முறை தரிசனம் செய்ய பாக்யம் பெற்றேன்.  நேற்று 9.9.22 அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் என்று சேதி படித்தேன். பழைய நினைவு வந்தது.

கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்  என்றால்  எல்லோருக்கும் தெரியும். கோழியோ காக்காவோ யாரையும் குத்தவில்லை, கொத்தவில்லை.  ''கோடி ஹத்தி'' என்ற  கோடி பாப  நிவாரணம் கொடுக்கும்  பெருமாள் என்பது கோழிகுத்தி ஆகிவிட்டது.

நின்ற திருக்கோல பெருமாள் 15-16 அடி உயரம். அத்தி மரத்தில்  செதுக்கப்பட்ட உருவம்.  மூலிகை பூசப்பட்டு  கிழக்கு நோக்கி ஜம்மென்று நிற்கிறார். பக்தப்ரியன் என்ற பெயரும் கொண்ட இந்த  பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு  தரிசனம் தருகிறார். தயா லட்சுமி  பெருமாள் மார்பில் உள்ளார் என்பதால் சிலை இல்லை.  பூதேவிக்கு உண்டு. 
இதே போல் அத்தி மரத்தில் செய்த விக்ரஹம் தான் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர். 

1000-ம் ஆண்டு பழமையான வேருடன் கூடிய  இந்த அத்தி மர  பெருமாள்  பிப்பில  ரிஷிக்கு  வானத்தை முட்டுவதுபோல காட்சி தந்ததால் ‘வானமுட்டி பெருமாள்’ ஆகிவிட்டார். கோவிலில் மற்ற வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள சந்நிதிகள் உள்ளன. முக்கியமாக பிப்பில மகரிஷி,  ஈசான்ய திசையில் மேற்கு நோக்கிய 'சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயர்’ சந்நிதி.
ஆஞ்சநேயரின் வால், தலைவரை உயர்ந்து, நுனி கொஞ்சம் வளைந்து நுனியில் மணி,  ரொம்ப ஆச்சர்யம். 

கோடிஹத்தி வானமுட்டிப் பெருமாளை தரிசனம் செய்தால், திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும். 


விமானம்: சத்திரவிமானம் (குடை போன்ற அமைப்பு).
தீர்த்தம்: விஸ்வபுஷ்கரணி, பிப்பிலமகரிஷி தீர்த்தம்.
ஸ்தல விருட்சம்: அத்தி மரம்.

ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் உருவம் பெற்றவர் என்பதால்   தீபங்கள் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் கிடையாது.  தீராத தோல் வியாதிகள் நீங்க, சனி தோஷத்திலிருந்து விடுபட, வாழ்வில் செல்வ வளம்பெருக கோழிகுத்தி வானமுட்டி பெருமாளை பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.  மாயவரம் பக்கம் போகும்போது கட்டாயம்  வானமுட்டி பெருமாளை தரிசிக்கலாம்.  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...