Sunday, September 18, 2022

VENKATESA PERUMAL

 தூங்காத ஒருவன் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஆயிரமாயிரம் வருஷங்களாக  தூங்காமல் நிற்க ஒருவரால் மட்டுமே முடியும். அதுவும்  நிற்பது தனக்காக இல்லை, இரவும் பகலும் தனைத் தேடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிய புன்னகை முகத்தோடு.  அது திருப்பதி வேங்கடேச  பெருமாள் ஒருவர் தான்.

இப்போது விற்கும் விலையில்  தீபாவளி பக்ஷணம் ஒரு பக்கம்  இருக்கட்டும் அன்றாட  சமையலுக்கு காய்கறி, மளிகை சாமான்களுக்கு  ஆயிரம் ரூபாய் போதவில்லை,  அவ்வளவு கொடுத்தாலும் கையில் உள்ள பை  நிரம்புவதில்லை.  ஒரு ரூபாய்க்கு  ஒரு வீசை, அல்லது தூக்கு  கத்திரிக்காய் வெண்டைக்காய் பெரிய சாக்குப் பை  நிறைய  வாங்கிய காலம் மலையேறிவிட்டது.

திருப்பதி வெங்கடேசன்  திருமலை மடைப்பள்ளியில் தினமும்  கிட்டத்தட்ட ரெண்டு லக்ஷம் பரிசுத்தமான  நெய்  முந்திரி லட்டுகள் தயாராகின்றன. அதற்கு, 5 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, டைமண்ட் கல்கண்டு 400 கிலோ, எண்ணெய் 20 கிலோ, பாதாம் பருப்பு 2 பெட்டி என்கிற அளவில் பொருட்கள் தேவைப்படுகின்றனவாம். லட்டு செய்யும் மெஷின் விடாமல் சேவை செய்கிறது.

கி.பி. 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் காலத்திய கல்வெட்டுக்களில், திருப்பதி ஆலயத்தில்  பிரசாதங்கள்  வழங்கியதைப் பற்றி சில குறிப்புகள்  உள்ளது. தயிர்சாதம், எலுமிச்சை சாதம் வாரி வழங்கப்பட்டதாம் .

13-14ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் பாசிப் பருப்பு, அரிசி, உப்பு, மிளகு, நெய் இவை சேர்ந்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்பட்டது  என்கின்றன.  பரப்பி அரிசி, நெய்,  மிளகு சீரகம், எல்லாம் சேர்ந்தால் வெண்  பொங்கல் தானே!  என்  பொங்கல் என்று சொல்லவில்லை. அப்போது வெண்பொங்கல் என்கிற வார்த்தை உபயோகத்தில் இல்லையோ? பொங்கலை  என்ன பேரில் அப்போது பண்ணி சாப்பிட்டார்களோ?

ஒவ்வொரு நாளும்  வேங்கடேசன்  நித்திரைக்கு போக   விடிகாலை  ரெண்டு மணி ஆகிவிடுகிறது. இப்படி  ‘ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு திரையிட்டு விடுவார்கள்.  பாவம் அதன்பின் அவருக்கு ஒண்ணரை  மணி நேரம் தான் ரெஸ்ட். மீண்டும் சுப்ரபாதம்  திருப்பள்ளி எழுச்சி பாட வந்துவிடுவார்கள். கும்பல் அளவின்றி குமியும் வழக்கம்போல.

திருவையாறு சங்கீத  மும் மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள்  கஷ்டப்பட்டு நடந்து  மலையேறி  வெங்கடேசன்  சந்நிதி அடையும்போது நடு ராத்ரி.  சந்நிதி திறந்து இருக்கிறது. ஏகாந்தமாக  அவன் முன்னே  போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது,  பட்டாச்சார்யர்கள்  ஸ்வாமிகளை யார் என்று தெரிந்து கொள்ளாமல்   ''புறப்படுங்கோ,  ஏகாந்த  சேவை முடிஞ்சுடுத்து'' என்று சட்டென்று திரையை  இழுத்து மூடி விட்டார்கள். 

தியாகராஜரின் சீடர்கள், எங்களின் குருநாதர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றெல்லாம் ஆலய பட்டாச் சார்யர்களுடன்   வாக்குவாதத்தில் இறங்கினர்.  ஆனால்  தியாகராஜ  ஸ்வாமிகள்   அவர்களை  அமைதிப் படுத்தி விட்டு,வெளியே வந்து  ஒரு கீர்த்தனை பாடுகிறார்.   என்ன ஆச்சர்யம் ஸ்ரீவேங்கடேசனை  மறைத்திருந்த திரைச்சீலை  தீப்பற்றி எரிந்து தரையில்  அறுந்து விழுகிறது. வெங்கடேசன் கண் முன்னே நின்றான். பட்டாச்சார்யர்களுக்கு நடுக்கம். தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து ஸ்வாமிகள் காலில் விழுந்து மன்னிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள்.  அப்புறம் என்ன,  இன்னொரு தடவை  ஸ்வாமிகளுக்கு  ஜருகண்டி இல்லாமல்   ஏகாந்த சேவை. அவர் திருப்தியோடு தரிசனம் முடித்த பிறகு  திரை மீண்டும் புதிதாக போடப்பட்டது.  அப்போது ஸ்வாமிகள் பாடிய பாடல் ''தெர தீயகராதா ..''

தெர தீயக ராதா லேர்நி
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந
ஈக தகு லு ரீதி யுந்நதி
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ)
மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)
வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த் யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ)

''திருமலேசா, வேங்கடரமணா,என்  மனதில் உள்ள பொறாமை என்கிற திரையை நீ விலக்க கூடாதா? பரமபுருஷனே!அது என் மனதை மூடி, தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்கள்  என்னை  அணுக வொ ட்டாமல்  துரத்துகிறதே.     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்தது போல,  ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம்  எங்கோ ஒரு  அசுத்தமனா சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள்வது போலவும்,ஒளி வீசும் தீபத்தின்  ஒளியை பரவாமல்  மறைத்து  பாழ் செய்வது போலவும், வலை  யென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும்  என் நெஞ்சை  இந்த பொறாமை   மூடி மறைக்கிறது.  உன் திருவுள்ளத்தைப்
பின் பற்றும் இதோ இந்த  தியாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ   நீக்கி  உன் தரிசனம் பெற அருளக்கூடாதா?''

ஏகாந்த சேவை முடிந்ததும் பெருமாளின் பிரசாதமாக திராட்சை, முந்திரி தூவிய கெட்டியான பசும்பால் தியாகராஜருக்கும் அவரது சீடர்களுக்கும் தரப்பட்டது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...