Monday, September 19, 2022

SIVA VAKYAR

 சிவவாக்கியர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


பொன்னில்  வடித்த எழுத்து 

சிவ வாக்கியர் ஒரு தனி ரக ஞானி. அவரது பாடல்கள்  ஒரு  தெளிந்த, ஆழமான,  நீரோடை போல சலசல என்று  ஒரே சீராக ஓடுபவை.  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்து, தத்துவம் எல்லாம் ரொம்ப  எளிய தமிழில்  நாலே வரியில் தருவார்.
ஒரே வரி  ரெண்டு தடவை  திரும்பவும் வந்தாலும் அர்த்தம்  பிரமாதம். ஒரு சில சாம்பிள் பாடல்கள் படித்தாலே  அவர் திறமை புரியுமே.  ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் இல்லையா?

''ஸார்  நான் நாலு வேதமும் படிச்சவன் என்று மார் தட்டிக் கொள்வோர்  உண்டு. அப்படிப்  படித்தவர்  இந்த சுப்ரமணிய  சர்மா.  பிறர் தன்னை  படித்தவன்  விஷயம் தெரிந்தவன் என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுபவர்.  சொல்ல வைப்பவர்.  தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையும்  அவருக்கு ஏராளம்.

வேதத்தின் உட்பொருளான பிரம்மத்தை, பரம்பொருளை,  அறிந்தவர் எத்தனை பேர்?  
ஞானத்தை தரும் பரமனின் திருவடிகளை அதில் உணர்ந்து வணங்குபவர் எத்தனை பேர்?
வேதம் என்ற எழுத்தும் அதை மனதில் நெட்டுரு போட்ட தும் மட்டுமே அறிந்த முட்டாள்களே, உங்கள் செயல் எது போல தெரியுமா?   பால் தெரிகிறது, அதை பார்க்கும்  போதெல்லாம் அதனுள் தான்  தயிர்  வெண்ணெய் நெய்  எல்லாம் மறைந்திருக்கிறது என்ற எண்ணம், உண்மை மனதில் தோன்றாதவர்களைப்  போல.

மறையில் மறைந்திருக்கும் மாயவனை அறிந்து போற்றி வணங்கவேண்டும்.  தனது நெஞ்சிலே நஞ்ஜை நிறுத்திக் கொண்ட  நீல கண்டன் நமது நெஞ்சிலேயும் உள்ளானே. அந்த ஹாலஹால விஷமுண்ட  காலகாலனை அறவே மறந்துவிட்டு, ஐயோ காலன் வந்துவிடுவான்,ஆயுளைப்  பறித்துக்கொண்டு போய்விடுவான் என்று  அஞ்சி நடுங்கி ஓடுகிறீர்களே,  கால சம்ஹார மூர்த்தியை நினைத்தால்  கனவிலும் காலன்  நெருங்கமாட்டானே,  வேடிக்கையாக இருக்கிறதா?
பாரதி சொன்னானே  ''காலா என்னருகில் வா உன்னை என் காலால் உதைக்கிறேன்''  என்று, அந்த  தைர்யம் வேண்டாமா நமக்கு? என்கிறார்  சிவ வாக்கியர்.                                
                                                           
''நாலுவேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே''
 
இன்னும் கொஞ்சம் உயர்ந்த யோக தத்வம்  சொல்கிறார் சிவவாக்கியர்.  பிறக்கும்போதிருந்து  உள்ளே விளங்குகின்ற நாடி, பிராணனை, தூங்குகின்ற பாம்பாக சொல்வார்களே  அந்த குண்டலினியை பிராணாயாமத்தால் மூலாதார  சக்கரத் திலிருந்து மெள்ள மேலே எழுப்பி உச்சந்தலை  கபாலத்தில் உள்ள சஹஸ்ராரம் வரை கொண்டு  தாமரை தேன் துளிகளை, அம்ருதத்தை ருசிப்பவன். அப்படிப்பட்ட யோக சக்தி கொண்ட யோகி, வயதற்றவன், விருத்தாப்பியனாகவோ, பாலகனாகவோ,  அவன்  தேகம்  எப்போதும் ஜொலிக்கும்.   காஞ்சி  மஹா பெரியவா பரமாச்சார்யரை   பார்த்திருக்கி றீர்களா?  --,அவர் தேகத்தை போல  தங்கமாக ஜொலிக்கும்.   அப்படியென்றால்  கல்ப கோடி வருஷம்  தவயோகியாக  உள்ள  பரமேஸ்வரனை ''பொன்னார் மேனியனே'' என்று  மனக்கண்ணால் கண்டு  ஏன் பாடினார்கள் என்று புரியும்.
இது கற்பனை அல்ல. சர்வ சத்தியம், சத்தியம் சத்தியம் -  அந்த சிவன் மேல், பார்வதிமேல் சத்தியம் என்கிறார்  சிவவாக்கியர்.            
                                                                                                                                                                                                               
''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம்உண்மையே.''

கடைசியாக நமது லௌகீக வாழ்க்கை  பற்றிய  ஒரு பாடலும் தருகிறேன்.  அப்போதே  தெரியும் சிவவாக்கியருக்கு நமது தினத்தந்தி, தமிழ் தினசரி பேப்பர்கள்  படிக்காமலேயே.  தான் காதலித்த, கைப்பிடித்த அழகியை மற்றொரு வன் சுற்றி சுற்றி  வந்தால்  எவ்வளவு கோபத்தோடு அவனை வெட்டி வீழ்த்தி விடுகிறான்...இது தானே  வாட்சாப், யூட்யூபில் வரும்  ''இன்றைய முக்கிய தகவல்கள், பரபரப்பான  பட, வீடியோ செய்திகள்''.
 
'' அடே  மானுடா,   ஒருநாள் நீதி தவறா  நடுவன் , யமன் வந்து  ''வா'',   என்று அந்த பெண்ணை உன்னிடமிருந்து 
கூட்டிச் செல்வானே  அப்போது எப்படி அவனைத்  தடுப்பாய்? வெட்டுவாயா? எவ்வளவு அழகானதாக இருந்தாலும் ஒருநாள்  இந்த,  நல்ல,   நாலு பேர் பார்த்து மயங்கிய உடல்,  அப்படி காலன் வந்து கைப்பற்றிக் கொண்டு போகும்போது, நாற்ற மெடுக்க தொடங்குமே , அதை உடனே இடுகாடு, சுடுகாடு  வரை தூக்கிக் கொண்டு செல்லவேண்டும்.  ''இந்தாப்பா   இது இனிமேல் உனக்கு, இதைக் கொளுத்து , புதைத்துவிடு''  என்று வெட்டியானிடம்,கெஞ்ச வேண்டும்.    இப்போது ''அதை '' பெயரிழந்ததை, ''அந்த ''வெட்டியான் ஸார்' கிட்டே  கொடுத்து .அதற்கு பணமும் கட்டவேண்டும்.  
ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே  சிவவாக்கியர் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார்.                                                                                      
''வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டி கை  கொடுப்பரே'' .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...