Sunday, February 6, 2022

SIVA VAKYAR

 


சிவ வாக்கியர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN

எல்லாம்  உண்மையே...

நினைப்ப தொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாற தெங்கனே


சிவனே,   நான் சொல்வதைக் கேள்.  நான் எதெல்லாம் காண நினைத்தேனோ அதைக்  கண்ட தில்லை.   நான்  நிஜமென்று நம்பி இப்போது  காண்பதை எல்லாம் நான் காண வேண்டும் என்று  நினைத்ததில்லை. நீ  இல்லாமல்  வேறு ஒன்று மில்லை என்பதும்  நான்  அறியவில்லை.   நினைப்பது மறப்பது என்ற  மாயையில் சிக்கி  தப்பும் தவறுமாய்  என் காலம் கடந்தது.   நீயே அந்த மாயை என்றும்  எப்போதும்  தெரியவில்லை. ஆஹா,  உணர்ந்துவிட்டேன்,    நீயே  அனைத்துமாக இருக்கிறாய்.  நீயே  அகண்டாகாரமாக வியாபித்திருக்கிறாய்.   நீ ஆதிக்கும் ஆதி.  பிறப்பற்றவன்.  எனக்குள் நீ  உன்னுள் நான்  என்று நினைக்குமாறு  எப்படி யப்பா  எனக்கு அருள் புரிந்தாய் !

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே

பரமேசா, நீ என்னிலே ஏதோ ஒன்றாக, ஆத்மாவாக   இருக்கிறாய் என நான் பலகாலம்  அறியாமல் இருந்துவிட்டேன்.    ஆஹா  எனக்குள்ளே இருந்துகொண்டு எப்போதும்  என்னை ஆட்டிவைப்பவன் நீ ஒருவனே என்று நான் அறிந்து  கொண்டதும்  எதற்கு  வேறு எதையோ, எங்கோ, சென்று தேட வேண்டும்?உன்னை முழுமையாக  காண, அறிந்துகொள்ள வல்லவர் யாரப்பா?  இதை நான் உணர்ந்து கொண்டேன் சர்வேசா.  

''வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே.

ரொம்ப  அழகான ஒரு பெண்,  ரவி வர்மா படத்திலிருந்து இறங்கி நடந்து வந்து சிரிப்பவன் மனைவியாக ஒருவனுக்கு  கிடைத்தால் அவன் பாடு  ரொம்ப கஷ்டம். அவளால் தான் ஆபத்து அவனுக்கு.  எவனோ அவளை கொண்டு போக முனைவான். அவனோடு சண்டை  போட்டு  ''விட்டேனா பார் அவனை, கண்டதுண்டமாக வெட்டுகிறேன் '' என்று கத்தியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். அவளை மீட்க வேண்டும்.  ராமனுக்கே  அந்த வேலை வந்தது. உண்மையில் இந்த உடலுக்கு அத்தனை  மதிப்பும்  மரியாதையும்  அவசியமா ?  என்றோ ஒருநாள் எல்லோரிடமும் பாரபக்ஷம்  இல்லாமல்  ''வா  என்னோடு,  நீ இருந்தது போதும் இங்கே'' என்று நடுநிலைமையோடு ஒருவன் எருமை மாட்டின் மேல் அமர்ந்தவாறு கயிற்றால் கட்டி  இழுப்பானே, அதற்கப்புறம் இந்த உடல் எதற்குமே உதவாது.  எரித்தோ புதைத்தோ விடாவிட்டால் ஊரே  நாறும். இது தான் அழகான உடலா? 
 ''இந்தாப்பா  இதை  உடனே  எரித்துவிடு, இல்லை புதைத்துவிடு '' என்று மயானத்தில் இருப்பவனிடம் கொடுக்கப்படும் இந்த உடலுக்கு ஏன் இத்தனை  ராஜ மரியாதை, போற்றுதல், பராமரிப்பு? என்கிறார்  சிவவாக்கியர்.

''உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே.

நமது உடலில் எத்தனையோ  வாயுக்கள், காற்று வகைகள்  இருந்தாலும், பிராணவாயு என்று ஒன்று இருக்கிறதே அது தான் பேச, நடக்க,  எழுத, நினைக்க வைக்கிறது.   இந்த உடல் உருவம் பெற்றதும் அதை நடத்திச் சொல்வது அந்த வாயு தான். அதை  உள்ளிழுத்து,  மெதுவாக உச்சந்தலை, கபாலம் வரை மெதுவாக  சுழுமுனை எனும் சுழும்நா  நாடியில் அதை  குண்டலினியாக  மூலாதாரத்தி லிருந்து மேலே ஏற்ற முடியுமானால்,  அடுத்த வினாடி,  குடுகுடு  கிழவரான  நீர், ஓடி ஆடும்  பாலகனாக  மாறிவிடுவீர். மாநிறமாகவோ,கொஞ்சம்  காரியநிறமாகவோ இருந்து நீவிர்  சுடச் சுட செம்பொன் மாதிரி கலர் ஆகிவிடுவீர்.அப்படி ஒரு மாஜிக்  MAGIC  நடக்கும்.  நானாக  இதைச் சொல்லவில்லை,  அம்பாள் பரமேஸ்வரி  திருப்பாதம், அம்மையப்பன் பரமசிவன் பாதம் தொட்டு உண்மையை என  விளம்புகிறேன் என்கிறார்  சிவ வாக்கியர் .



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...