Monday, February 21, 2022

MY ANCESTORS

 


என் தாய் வழி முன்னோர்:  நங்கநல்லூர் J.K. SIVAN

'கொள்ளு தாத்தாவின்  வித்தை''

நமக்கெல்லாம்  மந்திர, தந்திரம், மேஜிக்  எல்லாம்  பிடிக்கும்.   இதை ரசிக்கவோ, பார்த்து கைதட்டவோ,  வயசு  வித்தியாசம் எதுவும்  கிடையாது. சிறுவர் முதல் தாத்தாக்கள் வரை ஆர்வமாக  பார்த்து மகிழ்வார்கள்.  நானும் நிறைய ''மேஜிக் ஷோ''  க்கள்  பார்த்திருக்கிறேன்.  இப்போதும் கூட  அவ்வப்போது  சில ஆச்சர்ய மான  நிகழ்ச்சிகளை  யூ ட்யூபில் பார்க்கிறேன்.  அதிசயிக்கிறேன்.

என் எள்ளு தாத்தா ஒரு பிரபல  மேஜிக் ஷோ  நிபுணர்.  வைத்யநாதய்யர் என்கிற பீதாம்பரய்யர்.
எத்தனையோ உறவுகள் நூல் அறுந்து போவதற்கு காரணம் தொடர்பு இல்லாமல் போனதால் தான்.   ஒரு சில தலை முறைகள் கழித்து முற்றிலும் அவர்கள் அந்நியராகி விடுகிறார்கள். அதற்கு தான் அடிக்கடி சுற்றத்தார்களை உறவு பந்தங்களோடு  தொடர்பு கொள்ள வேண்டும்,  அவர்களை  சென்று காணவேண்டும். அவர்களை அழைத்து உபசரிக்க வேண்டும். 

இப்போதிருக்கும்  சூழ்நிலையில்  பெற்ற தாய் தந்தையரே அந்நியராகும் நாள் இன்னும்  வெகு தூரத்தில் இல்லை.

என்  கொள்ளு தாத்தா வைத்யநாதய்யர் எனும்  பீதாம்பரய்யரைப் அவரைப் பற்றி சொல்வதற்கு முன்  பீதாம்பர வித்தை என்றால் என்ன என்று   சுருக்கமாக சொல்கிறேன்.

வித்தை காட்டுவது எந்த காலத்திலும் இருந்தது தான்.   பீதாம்பர வித்தையின் முக்ய அம்சம் என்னவென்றால்,    அந்த மேஜிக் வித்தகருக்கு தமிழ், ஸமஸ்க்ரிதம் ,படிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆசு கவிகளாக இருப்பது  அத்யாவசியம். சங்கீத ஞானம் இருக்கவேண்டும், பாடக்கூடியவராகவும் பிரசங்கம் செய்யக் கூடியவராகவும் வேறு இருக்கவேண்டும். இவற்றுக்கு மூலாதாரமாக தெய்வ பக்தி, சத்யமான பேச்சு, நடவடிக்கை, குணமாக அமைய வேண்டும். வாக் சாதுர்யம் மிக இன்றியமையாதது. எனவே  அக்காலத்தில் ஒருவரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பாடினால், பேசினால் அது பலிதமாகியது. பலித்துவிடும் என்று ஜனங்கள் மனப்பூர்வமாக நம்பினார்கள். குரளி என்கிற குட்டிச்சாத்தான் ஏவல் என்ற மந்திர வித்தை பழக்கத்தில் இருந்த காலம். சிலர்  தந்திர வித்தைகளும் நிகழ்த்தினார்கள். திடீரென்று வைக்கோல் போர், கீத்து கொட்டகை, எல்லோர் கண் எதிரே பற்றி எரியும்.  இன்றும் சில வீடுகளில் கொடியில் உணர்த்தி யிருக்கும் ஈர புடவை  வேஷ்டி  திகு திகு வென்று  தீப்பற்றி எரியும்.   ஒருவர் கையில் ஒரு பொருளைக் கொடுத்து அதைக்  காணாமல் போக்குவது.   மீண்டும்  அதை திரும்பி வர செய்வது.. ஒரு பிடி மண்ணை ஒருவர் கையில் கொடுத்து அதிலிருந்து பழங்கள், புத்தகம். சர்க்கரை, வெல்லக்கட்டி, போன்ற பல வேறு வஸ்துகளை வரவழைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டை,  கண்ணாடிச் சில்லுகளை,  வாயில் கடித்து  மெல்லுதல், கிணற்றுக்குள் இறங்கி சுடச்சுட சமைத்து  உணவை  வெளியே கொணர்தல், பச்சைத் தண்ணீரில் அரிசி முடிந்து நனைத்து அதை ஆவி பொங்க சாதமாக மாற்றுதல், ஹிப்னாடிச மெஸ்மெரிஸ (தேக வசியம், மனோ வசியம்) வித்தைகளில் ஒருவனை தூங்கப்  பண்ணி அவன் பலர் கேள்விகளுக்கு பதில் சரியாகச்  சொல்வது. பாடத் தெரியாதவனை சுரம் போட்டு பாடவைத்தல் , ஆடத் தெரியாதவன் நடனம் செய்தல், இப்படி  யெல்லாம் பிறர் மனத்தையும் உடலையும் தனது ஸ்வாதீனத்தில் வசியம் செய்வது போன்ற கலையில் என்  கொள்ளு தாத்தா  வைத்யநாத பாரதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் ''பீதாம்பர'' அய்யர் என்ற பிரக்யாதி பெற்றவர். முப்பது வயதில் மதுரையில் அவர் சில காலம் வசித்தார்.

இதற்கிடையில் மீண்டும் முன்னோர்களை அறிமுகம் செய்கிறேன். நிறைய பேர்கள் திரும்ப திரும்ப வருவதால் இதைப் படிப்போர் சிலருக்கு யார் எவர் என்ற குழப்பம் வராமல் தடுக்க இது அவசியமாகிறது.  ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த முன்னோர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு .   தாத்தாக்களின் பெயரையே ரெண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு வைக்கும் வழக்கம் நமக்கு  இன்றும்   இருப்பதால் நூற்றுக்கணக்கான வருஷங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கும்
போது ஆள் மாறாட்டம் நடைபெற நிறைய வாய்ப்பு உண்டு. எனவே முக்யமானவர்களுக்கு நம்பர் கொடுத்திருக்கிறேன். அப்போது தான் தொடர்ச்சி புரியும்.

(1) ராமஸ்வாமி பாரதி (வாரிசு இல்லை) அவர் மனைவி ஞானம்மாள் கணவன் உடலோடு  உடன் கட்டை ஏறியவர்.
(2) அவர் தம்பி வைத்தியநாத பாரதி - மனைவி ஜானகி.   வைத்யநாத பாரதியின்  மகன்கள்
(3)   முதல் மகன் பரசுராம பாரதி
(4)   இரண்டாவது 
வது மகன் நாகசாமி அய்யர்

5. பரசுராம பாரதியின்  மகன் ராமஸ்வாமி பாரதி (1வது மனிதரின் பெயர் வைக்கப்பட்டவர்)
6. பரசுராம பாரதி மகள் லக்ஷ்மி ( தஞ்சாவூர் கனம் கணபதி சாஸ்திரி மனைவி) உ.வே. சாவுக்கு    தாய் வழி உறவு. 
(7) 5வது நம்பர்  ராமஸ்வாமி பாரதி மூத்த மகன் பிச்சு பாரதி என்கிற பட்டாபிராமன்
(7) 5வதாக சொன்ன ராமஸ்வாமி பாரதியின்  ரெண்டாவது மகன் பஞ்சாபகேசன் -
(8)   5வதாக சொன்ன ராமஸ்வாமி பாரதியின் மூன்றாவது மகன் நாகசாமி
(9)   5வதாக சொன்ன ராமவாமி பாரதியின் 4வது மகன் வைத்யநாதன் (பீதாம்பர அய்யர்) .  அப்பாடி,  இவர்  தான் என் கொள்ளு தாத்தா.150- 200  வருஷங்களுக்கு முன் இருந்தவர்.  என் தாத்தா வசிஷ்ட பாரதிகளின் அப்பா.
(10) 5வதாக சொன்ன ராமஸ்வாமி பாரதியின் பெண் லக்ஷ்மி (இவர் கனம் கணபதி சாஸ்திரி மனைவி)
(11) 5வதாக சொன்ன ராமஸ்வாமி பாரதியின் மகள் லக்ஷ்மி-கணபதி சாஸ்திரி மகன்        ரெட்டைப்பல்லவி தோடி சீதாராம அய்யர். என் எள்ளு தாத்தா 
(12) 5வதாக சொன்ன ராமஸ்வாமி பாரதியின் ஆறாவது மகன் ரமணன்
(13) 6வதாக சொன்ன பட்டாபிரானுக்கு முதல் மகன் சீதாராமன் -- சந்ததி இல்லை
(14) 6வதாக சொன்ன பட்டாபிரானுக்கு ரெண்டாவது மகன் கல்யாணராமன்
(15) 11வதாக சொன்ன தோடி சீதாராமய்யருக்கு அம்மணி என்று ஒரு பெண் என்  கொள்ளு பாட்டி .பீதாம்பரய்யர் எனும் வைத்யநாதய்யர்  மனைவி. என்  தாத்தா வசிஷ்ட பாரதிகளின் அம்மா.
இதற்கு மேல்  வம்சாவளி  வேண்டாம்.  

''பீதாம்பர அய்யர்'' மதுரையிலிருந்த போது அவர் தந்தை சாத்தனூர் ராமஸ்வாமி பாரதி (மேலே 5வதாக சொல்லப்பட்டவர்) காலமான சேதி கிடைத்தது. பீதாம்பரய்யருடன் பிறந்த மற்ற 4 சகோதரர்கள் ஒரு சகோதரியோடு சாத்தனூரில் தந்தையின் ஈமக்கடன்களை தன் செலவில் செய்தார். மதுரையிலிருந்து 2 குதிரைகளோடு சாமான்களுடன் வந்து சாத்தனூர் தங்கியதில் ஊரே அவரைக் கண்டு கோலாகலம் அடைந்தது. பிரபல புள்ளி அல்லவா. அதுவும் குதிரைகளோடு கிராமத்துக்கு வந்திருந்தாரே.  13 நாள்  காரியம் முடிந்து மதுரை, திண்டுக்கல், சேத்தூர்,போடிநாயக்கனூர், அம்மை நாயக்கனூர், ,மருகாபுரி, திருச்சி, புதுக்கோட்டை, கண்டிரா கோட்டை எல்லாம் சென்று வித்தை நிகழ்ச்சிகள் நடத்தி தஞ்சை அடைந்தார். தஞ்சையில் அவரது அத்தை மகன் தோடி சீதாராம அய்யர் வீட்டுக்கு சென்றபோது அவரது மரண செய்தி அறிந்தார். தனது அத்தை வீட்டில் குதிரைகளோடு ஆடம்பரமாக வந்து தங்கியதில் ஊரெல்லாம் பீதாம்பர் அய்யர் வருகை பற்றி அறிந்தது.

எல்லா உறவினர்களும் கலந்தாலோசித்து இது வரை மணமாகாமல் வசதியோடு வாழ்ந்த பீதாம்பர அய்யருக்கு அம்மணி என்ற 12 வயது ஆன தோடி சீதாராமய்யர் பெண்ணை (15) நிச்சயம் செய்து ஒரே வாரத்தில் திருமணம் நடந்து முடிந்தது.    இனிமேல் தேசாந்திரமாக பீதாம்பர வித்தை காட்ட ஊர் ஊராக் குதிரைமேல் சுற்ற முடியாது. குடியும் குடித்த்னமுமாக இரு என்று உறவினர்கள் எடுத்துச் சொல்லி பீதாம்பரய்யர் அவ்வாறே முடிவெடுத்து விட்டார். தந்து நான்கு முக்ய சிஷ்யர்களிடம் தனது வித்தை உபகரணங்கள், குதிரைகள், சன்மானம் பத்து ரூபாய், எல்லாமும் கொடுத்து ஆசிர்வதித்து இனி நீங்கள் என் வித்தையைக்
கொண்டு பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார். அன்றிலிருந்து பீதாம்பர அய்யர் பழைய ''வைத்யநாத பாரதி'' யாகி தோடி சீதாராமய்யர் குடும்ப பாரத்தை நிர்வகிக்கலானார்.
16 வதாக சொன்ன தோடி சீதாராமய்யர் மகன் வெங்கட்ராமன் அதிக காலம் வாழவில்லை. 16 வயதில் சங்கீதத்தில் மஹா நிபுணனாக '' புலிக்கு பிறந்தது பூனையாகுமா'' என்று பேர் பெற்று விளங்கினார். ரெட்டைப்  பல்லவி பிள்ளை ''குட்டிப் பல்லவி'' வெங்கடராமன் என்று அவரை அழைத்தார்கள். மைசூர் சமஸ்தானத்தில் ராஜாவின் ஆதரவுடன் வாழ்ந்த வெங்கடராமன் 20 வயதில் க்ஷயரோகத்தில் மாண்டார். 

தோடி சீதாராமய்யர் மனைவி ஜானகி (வேறு பெயர் செல்லம்மாள்) புத்ரசோகத்தில் வாடினார். 12 வருஷம் ராமநாம கோடி ஜபம் செய்து ஒரு நாள் கனவில் இறந்த வெங்கட்ராமன் தனது சகோதரி அம்மணி (பீதாம்பர அய்யர் மனைவி) வயிற்றில் 4வது குழந்தையாக ( அவர் தான் எனது அம்மாவைப் பெற்ற என் பாட்டனார் வசிஷ்ட பாரதி)   வந்து பிறப்பதாக கனவு கண்டாள் . அவ்வாறே பிறந்த மறுகணமே அவரது தாய் அம்மணி வயதான ஜானகியின் கால்களில் இட்டு குழந்தையை '' தத்து'' கொடுத்து, இனி இவன் உங்கள் பிள்ளை வெங்கட ராமனே - கனவு பலித்து விட்டது என்றாள்.
பீதாம்பரய்யர் என்ற புகழ் பெற்ற வைத்யநாத பாரதி தஞ்சை மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று கம்ப ராமாயணம், பாரதம், தனிப்பாடல்கள், எல்லாம் பிரசங்கித்து தனவான்கள் பிரபுக்கள் ஆதரவில் வாழ்ந்து வந்தார். ஜால வித்தைகள் அறவே நின்று விட்டனவே. வாக் ஜாலத்தில் ராமன் பெருமை சொல்லியதில் குடும்பம் நடந்தது. (

என்  தாய் வழி எள்ளு தாத்தா  பெயர் ரெட்டை பல்லவி  தோடி சீதாராமய்யர்.   தனது  பிரத்யேக சிறப்பு மிக்க தோடி ராகத்தை அடகு வைத்து   தஞ்சாவூர்  ராஜா, மராத்தியர், சரபோஜி மஹாராஜா
வின்  உதவியால்  மீட்டு பாடிய  அற்புதமான  சங்கீத வித்வான். நாற்பது வருஷ காலமே வாழ்ந்தவர். அவர் மரணம் அடையும் சமயம் அவர் மனைவி ஜானகி என்ற செல்லத்தம்மாளுக்கு வயது 28. பெண் அம்மணிக்கு 10 வயது. பிள்ளை வெங்கட்ரா மனுக்கு 7 வயது. வயதான தாய் லட்சுமி அம்மாள் 80 வயதினள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கா தவர்கள். இறைவன் மீது நம்பிக்கை மட்டுமே அவர்களது சொத்து.

இதற்கிடையில் தோடி சீதாராமய்யரின்   தாய்மாமன் ராமஸ்வாமி பாரதிக்கு ஐந்து பிள்ளைகள் ஒரு பெண். நான்காவது பிள்ளை தான் வைத்யநாத பாரதி.  அவரைப் பற்றிமட்டும் ஏன் சொல்கிறேன் என்றால் அவரே எனது தாய் வழி பாட்டனார் வசிஷ்ட பாரதிகளின் தந்தை. ஆகவே  என் கொள்ளு தாத்தா.

வைத்யநாத பாரதி, அந்த காலத்தில் செப்பிடு வித்தை, கண்கட்டு வித்தை ஆகிய மனோவசிய சாஸ்திரத்தில் கை தேர்ந்த ஒரு வித்தகராக இருந்தார். இந்த கலைக்கு  ''பீதாம்பர''வித்தை, இந்திர ஜால வித்தை என்று பெயர்.   இப்போது நாம் சொல்கிறோமே மாஜிக் (magicshow ) அது மாதிரி நிறைய மனோவசிய வித்தைகளை கற்று பிரபலமாக்கியவர்களில் ஒரு முக்கியமானவர் என் கொள்ளு தாத்தா வைத்யநாத பாரதி.  பீதாம்பர வித்தைகளில் சிறந்தவராக இருந்ததால்  அவரையும்  பீதாம்பர ஐயர் என்றே   அழைத்தார்கள்.  பீதாம்பர வித்தைக்கு  மனோவசியம்  தெரிந்திருக்க வேண்டும்.  ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம்  என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே அந்த கலை.  இதை தான் மனோவசியம் என்று சொன்னேன்.

இப்போதெல்லாம் மாஜிக் ஷோ செயகிறவர்கள், தலைப்பாகை, நீண்ட அங்கி, கலர் கலராக மேலே வஸ்திரங்கள், மீசை, பளபள ஜிலுஜிலு ஆபரணங்களுடன் காணப்படுகிறார்கள் அல்லவா?   P .C சர்க்கார் போன்றவர்கள் படம் பார்த்திருப்பீர்கள். அந்த காலத்தில் இப்படி மாஜிக் ஷோ செய்த எங்கள்  கொள்ளு தாத்தா   வைத்யநாத ஐயரான  பீதாம்பர ஐயர் எப்படி இருப்பார் என்று என் தாத்தா எழுதி வைத்த குறிப்பிலிருந்து விவரிக்கிறேன்.

வைத்யநாதய்யர்  ஆஜானுபாகுவாக பரங்கிப்  பழம் போல் சிவப்பு நிறம். தலையில் ஜரிகை தலைப்பாகை. கழுத்தில் விலையுர்ந்த ஜரிகை மற்றும் வண்ண வண்ண கொட்டடி போட்ட அங்கவஸ்திரம். உடலில் முழங்கால் வரை நீண்ட ஒரு அங்கி. இடுப்பில்  ஒரு பெல்ட் மாதிரி அங்கவஸ்த்ரம் அதை பிணைத்திருக்கும்.   பத்து முழம் ஜரிகை வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டி இருப்பார். அந்த அங்கியின் மேலே பீதாம்பரம் வஸ்திரம் சால்வை மாதிரி. கை விரல்கள்  எல்லாவற்றிலும்  தங்க வைர மோதிரங்கள் ஜிலு ஜிலுக்கும். காதில் தோடு. தங்க அரைஞாண் தரித்தவர்.

ஒரு ஊரில் இவரது பீதாம்பர வித்தை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் முன்பாகவே ரெண்டு மூன்று பேரை அனுப்புவார். அவர்கள் தெருவெல்லாம் இவரது பிரதாபம் பற்றி சொல்லிக்கொண்டே போவார்கள். ஜனங்களை நிறுத்தி நிகழ்ச்சி எங்கே எப்போது என்று அனைவரையும் கூப்பிடுவார்கள். பாடுவார்கள். அதுதான்  ADVERTISEMENT,  இப்போது போல்  பேப்பரில் விளம்பரம் கிடையாது. டிவி  வீடியோ  பிட் நோட்டீஸ்  எதுவும்  கிடையாது.  ஊர் ஊராக  சில ஆட்கள்  முன்னதாகப்  போய்   நிகழ்ச்சி பற்றி, அது எங்கே  எப்போது எனடக்கும் என்று பொது இடங்களில் சத்தமாக  சொல்வார்கள்.  அந்த நாளில் அந்த இடத்தில் கூட்டம் சேரும்.

நிகழ்ச்சிக்கு முதல் நாளும்  இது போல் ஞாபகத்துக்கு  பீதாம்பர  அய்யர் வரும்  விஷயத்தை முன் கூட்டி சிலர் கட்டியம் கூறுவார்கள். ''பீதாம்பர ஐயர் வருகிறார்'' கல்வி களஞ்சியம், கற்பனை பொக்கிஷம், பில்லி சூனியத்துக்கு எமன் . அனைவரும் வாருங்கள் பீதாம்பர வித்தையில் மகிழுங்கள்.'' என்று மேள தாளங்களோடு அறிவிப்பார்கள்.    

நிகழ்ச்சி  அன்று ஒருவன் குடை பிடித்துக் கொண்டு வருவான். சிலர் வாத்யம் வாசிப்பார்கள். ஐயர்  குதிரைமேல் சவாரி செய்து கொண்டு  வருவார். ரெண்டு ஆள் குதிரை சேணத்தை பிடித்துக் கண்டு பக்கத்தில் நடப்பார்கள். எல்லோருமே சிஷ்ய கோடிகள் தான்.

அந்தக்காலத்தில் மோட்டார் கார், வண்டிகள் வசதி இல்லை. மாட்டு வண்டி, பீடன் கோச் குதிரை வண்டி, பல்லக்கு தான் பிரயாணத்துக்கு உபயோகமாகியது. சிலர் தனிப்பட்ட சௌகர்யங்களுக்கு குதிரை மீது ஏறி சென்றார்கள்.

தனி மனிதர்கள் வசதியுள்ளவர்கள் குதிரைகளில் பிரயாணம் செய்த காலம். ரொம்ப வசதி கொண்ட மேல் மட்ட வகுப்பு பீடன் கோச் வண்டி, ஜட்கா, மோட்டார் சைக்கிள், ரிக்ஷா, தள்ளு வண்டி, மாட்டு வண்டி ஆகிய சாதனங்களை, வாகனங்களை, உபயோகப்படுத்தினர்.

அதிக உயரமில்லாத ''மட்ட'' (cheap, என்று அர்த்தம் இல்லை, )  குள்ளமான  குதிரைகள் அதிகம் உபயோகித்தார்கள். சேணம், கடிவாளம் பிணைத்து அந்த குதிரைகள் எஜமானன் விருப்பப்படி ஓடும். குதிரையின் இரு பக்கங்களிலும் பைகள் பெரிதாக தொங்கும். அதில் தான் தனக்கு போகும் இடத்தில் தேவையான சமையல் சாமான்கள், பண்டங்கள், புத்தகங்கள், துணி மணிஆடைகள் எல்லாம் இருக்கும். இந்த பெரிய கித்தான் பைகளுக்கு ''கண்டாளம் '' என்று பெயர். இந்த குதிரைகள் உயர்ந்த ஜாதி ரகம் அல்ல. இந்த குதிரைகள் ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய் விலையுமல்ல. வெட்டவெளியில் புல்லை மேய்ந்து கொண்டு திரியும். கிடைத்த இடத்தில் தண்ணீர் குடிக்கும். மரத்தடியில் வைக்கோல் போட்டு கட்டி போட்டிருப்பார்கள். தூங்கும். அந்த காலத்தில் இப்படிப்பட்ட நாலடி, நாலரை அடி உயர குதிரைகள் பத்து இருபது ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது போல் நெரிசல் வீடுகள் இல்லை. ஊரில் சில வீடுகள் மட்டுமே, மற்றவை அங்கங்கே  குடிசைகள்.

வைத்யநாத பாரதி என்ற பீதாம்பர அய்யர் ஊர்வலத்தில் இப்படி வரும்போது அந்தந்த ஊர் மணியக்காரர், மிராசு, பண்ணையார்கள், பட்டாமணியம், கர்ணம் , கணக்குப்பிள்ளைகள் ஊர் எல்லையிலேயே நின்று வரவேற்பார்கள்.  ஊரில்  பொருக்கடியான  பெரிய மனிதர்  ஒருவர் வீட்டில்  ஒரு பெரிய திண்ணையை  ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கே ஆயத்தமாக, ரத்ன கம்பளம் விரித்து வைத்து, மர நிழல்களில் தரையில் ஜமக்காளத்தில் எல்லோரும்  உட்காருவார்கள்.

நிகழ்ச்சிகள் பொதுவாக, கோவில் மண்டபங்கள், சத்திரங்கள், பொது அம்பல சாவடிகள், பெரிய  மனிதர் வீட்டு திண்ணைகளில்  தான்  நடக்கும். தாரை தப்பட்டை அடித்து தெருவெல்லாம் செய்திகள் சொல்வார்கள்.
வைத்யநாத  அய்யர் உட்கார திண்டு, சாய்ந்துகொள்ள தலையணை, தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு தாம்பூலம், கூஜாவில் நீர்.  தட்டு தட்டாக பழங்கள்.

வைத்யநாத பாரதிக்கு இளம் வயதிலேயே இந்த பீதாம்பர வித்தையில் மனம் பூரணமாக லயித்து விட்டது. 15வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நேராக லால்குடி சென்றார். அவரிடம் ஒரு முக வசீகரம், சாதுர்யம், அதீத ஞாபக சக்தி, புத்தி கூர்மை இருந்ததால் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். லால்குடியில் வைத்யநாத பாரதியின் உறவினர் பிச்சு அய்யர் இந்த வித்தையில் பிரபலமாக வாழ்ந்திருந்த காலம். வைத்தியநாத பாரதி அவர் வீட்டுக்கு சென்று அவருடைய சிஷ்யனானார். குருவுக்கும் சிஷ்யனை ரொம்ப பிடித்து விட்டது. வெகு விரைவில் அநேக பீதாம்பர வித்தைகளையும் பிச்சு அய்யரிடமிருந்து கற்று கொண்டார்.

வைத்யநாத பாரதி வெளியூர்களான மதுரை திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி கள் நடத்தினார். சென்ற இடமெல்லாம் பேரும் புகழும், விருதுகளும் குவிந்தன.

இப்படிப்பட்ட புகழோடு இருந்தவர் கொள்ளுத் தாத்தா. அவருடைய குரு பீதாம்பர பிச்சு அய்யரும் இப்படி தான் லால்குடியில் கொடி கட்டி பறந்தவர். ஐந்து தலைமுறையாக இந்த பீதாம்பர வித்தையில் புகழ் பெற்றவர்கள். அவர்கள் வம்சம் இன்னும் எங்கோ இருக்கும். பீதாம்பரம் முத்தண்ணா என்று திருச்சியில் ஒருவராம். பிற்பாடு வந்த வித்தைக்காரர்கள் பலர் பீதாம்பரம் பிச்சு அய்யர், வெங்கு ஐயர் என்ற பெயரைச் சொல்லியே காலம் தள்ளினார்கள் என்று தெரிகிறது. நிறைய பேரை உறவில் எனக்கு  இப்போது  தெரியவே இல்லை.   அவர்களாக  பார்த்து அறிமுகம் செய்து கொண்டால்  தான்  உறவு வலுக்கும்.

ஒரு சம்பவம்  சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.    காஞ்சிபுரம் சென்று  மஹா பெரியவா முன்னால் பீதாம்பர ஐயர் தனது வித்தையை ஒரு சமயம் காட்டி இருக்கிறார்.  பஞ்ச கச்சம் மேலே அங்கவஸ்திரம் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி.   ஒரு  இரும்பு குண்டு பந்துபோல் ஒரு கிலோ  எடை  உள்ளதை   தலைக்கு மேலே  தூக்கி வீசினார்.  அந்தரத்தில்  அது ஐந்து நிமிஷங்கள் கீழே விழாமல் நின்றது.   ''கீழே  வா''  என்று கட்டளையிட்டார் ஐயர்.  நல்லபிள்ளையாக  அது கீழே அவர் கையில் விழுந்தது.

அப்புறம்  காலாமில்லா காலத்தில் மாம்பழம், பலாப்பழம்  வரவழைப்பார்.   மண்டபத்தில் நடுவே  இது  நிகழ்ந்தது.

இன்னும்  நிறைய  விஷயம்  இருக்கிறது சொல்ல வேண்டும் போல்  இருக்கிறது.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...