Friday, February 4, 2022

LIFE IS LIKE THAT

 


அட்வைஸ்  அனந்தராமன்  -   நங்கநல்லூர்  J K SIVAN 

''வாழ்க்கை ரஹஸ்யம்'' 

''மனைவி அமைவதெல்லாம்''   என்று  ஒரு பாடல்  ஒருகாலத்தில்  தெருவில் எல்லோரும்  பாடிக்கொண்டு திரிந்திருக்கிறோம்.  ஆஹா எவ்வளவு இனிமையான  குரல்  ஸ்ரீ  K J   யேசுதாசுக்கு.  அந்த பாடலை போலவே  இனிமையானது மட்டும் அல்ல  இன்றியமையாததும் தான்   மனைவி என்கிற அற்புதமான  ஜீவன்  ஒவ்வொருவர் வாழ்விலும். 

 மனைவியின் அருமை பெருமைகளை ஏதோ ஒரு கட்டுரையில்  நான்  பதிவிட்டிருந்ததை தொடர்ந்து ஒருவர் என்னிடம்   ''என்ன சார், அட்வைஸ் அனந்தராமன்  மனைவிகளை பற்றி ஒன்றும்   பொன் மொழிகளை சொல்லவில்லையா?  இருந்தால் சொல்லுங்கள்''   என்றார்.

எதையும்  உதாசீனப்படுத்த கூடாது, சிறு துரும்பு கூட  பல் குத்த உதவும் என்று சொன்னாலும் எதையும்  வாயில் வைத்து எச்சில் பண்ண கூடாது, எதையாவது வைத்து பல்லைக்  குத்தி, வலி எடுத்து,  கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை சுலபத்தில் வெள்ளைக்கோட்டு   பல் டாக்டரிடம் இழக்க கூடாது என்பதாலும்  அப்படியே  பல்லை எதுவும் குத்தாமல்  விட்டு விடுகிறேன்.

அட்வைஸ் அனந்தராமன் சொல்லாத விஷயமே  கிடையாது.  எங்கேயோ தேடி  எத்தனையோ   அறிவுரைகள், பொன் மொழிகள் சொல்பவன் அவன்.    மனைவி பற்றி சொல்லியிருக்கிறான்.  அதைப் படித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி  அவன் கல்யாணமாகும்  முன்பே இவ்வளவு விஷயம் மனைவி பற்றி சேமித்தான் என்று ஒரு புரியாத புதிராக இருக்கிறது.   வருமுன் காப்போனாக  இருந்தானோ என்று தோன்றுகிறது.  மனைவி  பற்றி அப்படி என்ன  விஷயம்?
++

''உன் அழகிய மனைவியை காதலி''.  --   எல்லா மனைவிகளும் அவரவர் கணவன்மார்கள்  கண்களுக்கு   நிச்சயம் உலகப் பேரழகியாக தான் தோன்றவேண்டும். இல்லாவிட்டால் அவஸ்தை  அவர்களைத் தவிர வேறு யாருக்குமே  நேராது.

''மனைவியோடு பேசும்போது குரலை உயர்த்தாதே''.  பலன் கைமேல் கிடைக்கலாம்.  இதிலிருந்து சொல்லாத உண்மை  மனைவி மட்டுமே குரலை உயர்த்த உரிமை படைத்த ஸர்வ சக்தி.

''அவள் அன்பை, பாசத்தை அட்ரஸ் மாற்றி வேறு எங்காவது  பிரதிபலிக்காதே ''    அதன் பலன்
 கொரோனாவை விட கொடுமையாக இருக்கும்.

''உலகப்பேரழகியாக இருந்தாலும்  மற்றவளோடு,  உன் மனைவியை  ஓப்பிடாதே.. முதல் பொன் மொழியை  இந்த இடத்தில் மீண்டும்  படித்து எப்போதும் நினைவில் வைத்துக் கொள் .  இதிலிருந்து  உனக்கு கிடைக்கும் ஞானம் என்ன? வேறு யாராவது ஒரு பெண்   உன் மனைவியை விட அழகாக இருந்தால் கருணை மிக்க கடவுள் அவளை உனக்கு முன்பே அளித்திருப்பாரே. 

''தியாகி என்றால் உலகிலேயே உன் மனைவி ஒருவள் தான்''   --- ஆகவே அவளிடம் மதிப்போடு மரியாதையோடு  அட்ஜஸ்ட்   பண்ணிக்கொண்டு வாழ். அவள் உனக்காக செய்த தியாகத்தை மறந்த போது அவள் மனம் என்ன பாடு படும்  என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பார்.

''மனைவியிடம் எதையும் மறைக்காதே'' . -  முடியவே முடியாது.  
அவள் வருமான வரி அதிகாரியை விட  சாமர்த்தியமுள்ளவள் என்பதை  மறக்காதே.   உன் பார்வை,  பேச்சு,  கோணங்கி நடத்தையே உன்னை காட்டிக் கொடுத்துவிடும்.  உன் புத்திசாலித்தனத்தை அதிகம் நம்பாதே.  அவளிடம் படு தோல்வி நிச்சயம்.  

''மனைவியின் அழகு, உருவம்  நாளாக ஆக, வயதேற  ஏற  மெருகும் அழகும் கூடி உன்னை  பெருமைப்பட வைக்கும்''  --    இதற்கு என்ன வியாக்யானம் தேவை?.  பொன்மொழி  உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா? 

''உன்னை ஜாக்கிரதையாக  பாதுகாப்பதற்காக,   உனக்காக  எப்போதும்  எதையும்  தியாகம் செய்வதற்காக,  கடவுள் உனக்கென்று உன் கர்ம பலனாக  அளித்த  மனைவியை  நீ நன்றி மறவாமல் கௌரவப்படுத்தி பேசு, புகழ் பாடு''  -    
நீ நிறைய விஷயங்கள் கற்றுக்  கொள்ள  வேண்டி இருந்தால் அதில் இது தான் முதலாக தெரிந்து கொள்ளவேண்டியது. நல்ல அனுபவஸ்தரை குருவாகக்  கொள் .

எல்லா  பெண்களாலும் ஒரே மாதிரி ருசியோடு  சமைக்க முடியாது. ஒரு பெண்ணாலே  அடுத்த வேளை  அதே மாதிரி சாம்பார், ரசம் வைக்க முடியாதே.    365  நாளும்  மூணு வேளையும்  சமைப்பது என்பது ரொம்பவும்  கடினமான வேலை.  அதை பல வருஷங்களாக   சம்பளம் எதிர்பாராமல் செய்பவள்  மனைவி.  ஆகவே   மனைவி எது செய்தாலும்  ''ப்ரமாதம் '' என்று சொல்வதால்  சாம்பாரின் ருசி  எப்படி மாறாதோ ,  அதே போல்   வீட்டில்  நிம்மதியம்  அதனால்  மாறாது.    ரத்நா  கேப்  இட்லி சாம்பார் மட்டும் ஏன் மாறாமல் எப்போதும் ஒரே மாதிரி அருமையாக இருக்கிறது?  கிருஷ்ணனுக்கும்   ரத்நா கேப்  சமையல்காரருக்கும் மட்டும் தான் இந்த ரஹஸ்யம் தெரியும் . ரெண்டு இட்டளிக்கு ஒரு லிட்டர்  ஒன்னரை லிட்டர்  சுட சுட  சாம்பாரில் அதை மூழ்கடித்து சாப்பிடும்  சுகத்துக்கு வேறெதுவும்  ஈடாகாது என்பது அனுபவம்.  நான் திருவல்லிக்கேணி யில் பெரிய தெரு அருகே வாழ்ந்தவன்.

வீட்டில் நிம்மதிக்கு சுலப  வழி. மனைவியின்  பெற்றோரை புகழ்ந்து பேசு  -- அடிக்கடி -   அவள்  
உடன் பிறப்புகளுக்கு மரியாதை கொடுத்து உபசரி.  உன் உலக வாழ்க்கை ஆனந்தமாக செல்லும்.

அடிக்கடி '' நீ  யில்லாமல் எனக்கு வாழ்க்கையோ உலகமோ இல்லை''  என்று  டேப் ரிகார்டர் மாதிரி சொல்லிக்  கொண்டே இரு.  அந்த மெஷினால்   மதுரை மணி, GNB   TMS  என்று பாகுபாடு செய்து ரசிக்க முடியாது.   ஒரே மாதிரி சொன்னதையே  சொல்லும், பாடியதையே பாடும். மனைவிக்கு  இந்த வார்த்தை  புத்துணர்ச்சி கொடுக்கும்,   எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.  ஒரு டம்ளர் காபி நீ கேட்காமலேயே உனக்கு வந்து சேரும்.
++


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...