Monday, February 7, 2022

PESUM DHEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஒரு சிம்பிள்  புத்தக வெளியீடு..

மஹா  பெரியவாளுக்கு  அருகே இருந்து சேவை செய்ய பாக்யம் செய்த புண்யவான்கள் சிலரே. அவர்களில் ஒருவர்  பட்டாபி.  இப்படி அவர் அருகே  இருந்தவர்களுக்கு   ஒவ்வொரு கணமும் மஹா பெரியவா நிகழ்த்திய  அதிசயங்களைக் கண்ணார  காணும்  அதிர்ஷ்டம்  எல்லோருக்கும் கிடைக்குமா?  எதோ அங்கும் இங்குமாக  அருகே இருந்தவர்கள் சொல்லி வெளி வந்த சில விஷயங்கள் மட்டும் முழுமை இல்லாமல், அவர்கள் புரிந்து கொண்ட மாதிரி தான் நமக்கு வடிகட்டி  வந்து சேரும். அவற்றை படிக்கும்போதே, கேட்கும்போதே  நமக்கு  மெய் சிலிர்க்கிறது, தேகம்   புளகாங்கிதம் எய்துகிறது  என்னும்போது  நாமே அருகே இருந்து, பகவான் நமக்கு கொடுத்த கண்ணால், காதால்  இதை அனுபவிக்க முடிந்தால்,  எவ்வளவு அற்புதமாக இருக்கும்.!

பட்டாபி நினைவு கூர்ந்து  பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார். அதில் இது  ஒன்று.

ஒருவர்  திருநெல்வேலி யிலிருந்து தனது  புத்தக வெளியீட்டை  மஹா பெரியவாலின் திருக்கரங்களால் நிகழ்த்தவேண்டும் என்று வேண்டுகோளுடன்   காஞ்சி மடத்துக்கு வந்திருந்தார். 
 
தினந்தோறும்  மஹா பெரியவா பூஜைகள் சாஸ்த்ரோக்தமாக பண்ணிவிட்டு  பிறகு தான் பிக்ஷை ஏற்றுக் கொள்வார். அப்போது பகல்  ரெண்டு , ரெண்டரை  மணி கூட  ஆகிவிடும்.  சீக்கிரமாக 
ஆனதாக சரித்திரமே இல்லை.  பிக்ஷை முடிந்து  சற்று ஒய்வு.  அது  அரை மணி நேரமோ முக்கால் மணி நேரமோ தான்.  பிறகு  தரிசனம்  கொடுக்க   தயாராகி  விடுவார்.  இதற்காகவே காலையிலிருந்தே பக்தர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.  சிலர்  தரிசனத்துக்குப் பிறகு தான் ஆகாரம் சாப்பிடுபவர்கள்.  

யார்  யார்  தரிசனத்துக்கு காத்திருக்கிறார்கள் என்று  பட்டாபி போன்றவர்கள்  அறிந்துகொண்டு பெரியவாளிடம் சொல்வார்கள். மஹா பெரியவா எப்போதும்  தரிசனத்தின் பொது அணுக்க தொண்டர்  யாராவது ஒருவரை பக்கத்தில் வைத்துக்  கொண்டு தான் அவர்கள் மூலம் தான்   வந்தவர்களிடம் பேசுவார்.  பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். அப்போது தான் அதிசயங்கள் நிகழும்.   அந்த நேரம் அருகில் இருந்த தொண்டர்கள்  அம்ருதம் சாப்பிட்ட  தேவர்கள் தான்.   அப்படி மஹா   பெரியவர்களுடன் இருந்தவர்களில் சிலர் தான்  பாபு, கண்ணன்,  பட்டாபி  போன்றவர்கள்.  

எவ்வளவு தான் மஹா பெரியவா ரொம்பவும் எளிமையாக, குழந்தை மனசு உள்ளவராக இருந்தாலும்  அவரது சாந்நித்தியத்தில்   அவரை  ரொம்ப அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் கூட   பய பக்தியோடு தான்  நிற்பார்கள்.  ஒரு வித நடுக்கம் எங்கிருந்தோ வந்துவிடும்,   எதை பெரியவாளிடம் சொல்ல நினைத்தார்களோ அதை  சரியாக  சொல்ல முடியாமல்  தொண்டை அடைக்கும், வார்த்தை வராது, வியர்க்கும்.  முன்னுக்கு பின்னாக  ஏதேதோ பிதற்றுவார்கள்.  சிலர் மௌனமாகி கண்ணீர் உகுப்பார்கள்.   தெய்வத்தின் எதிரில் இதெல்லாம் நிகழ்வது சகஜம் தானே.   சிலருக்கு  தங்கள் சொல்வதைக் கேட்டு மஹா பெரியவா என்ன பதில் சொல்கிறார் என்பதே புரியாது,  அப்போதெல்லாம்  அணுக்கத்தொண்டர்கள் தான் அதை விளக்கிச் சொல்வார்கள்.

அப்படித்தான் ஒருநாள்   தரிசனத்தின்  போது ,  திருநெல்வேலி ஜில்லா, இலஞ்சி கிராமத்துலேருந்து 65 வயசுப் மேலே  சொன்ன ஒருவர்,  முதியவர்  வந்திருந்தார்.   இரண்டு சாகுபடி பண்ற அளவுக்கு நிலபுலங்களுக்கு 
சொந்தக் காரர் ! தமிழ் மேல்  மிகவும் பிரியம்!  ஸம்ஸ்கிருதமும் அறிந்தவர்.
இலக்கண சுத்தமா ஸம்ஸ்கிருத விஷயங்களையும்  மஹா பெரியவாளிடம் பேசினார். 

பகவத் கீதை, உபநிஷத்,  ப்ரம்ம ஸூத்ரம்  இது   மூன்றையும்   ‘பிரஸ்தான த்ரயம்’ என்பார்கள்.  ஆதி சங்கர  பகவத் பாதாள் இதற்கு பாஷ்யம்  பண்ணி இருக்கார். முழுக்க முழுக்க, அத்வைத  கோட்பாடுகளை,  கருத்துக்களை விவரிக்கும்  பாஷ்யம் அது!   அதை யெல்லாம் தமிழ்ல அப்படியே கவிதையா எழுதி, புஸ்தகமா பிரிண்ட் பண்ணி எடுத்துக்கொண்டு வந்திருந்தார் அந்த  இலஞ்சி கிராமத்துக்காரர்.

மஹா பெரியவா தரிசனத்துக்கு காத்திருந்து, அவர் வந்து ஆசனத்தில் அமர்ந்ததும், ஜயஜய சங்கர, ஹர ஹர சங்கர கோஷம்.  ஒவ்வொருவராக  பெரியவாளை நமஸ்கரித்து ஆசி பெற்றார்கள்.  பெரியவர் தனது முறை வந்ததும் நமஸ்கரித்து '' ஐயா,  சாமி,  இந்தப்  புஸ்தகத்தை ஐயா கையாலே  தான் வெளியிடணுமுங்க’ என்று  சில புஸ்தக  காப்பிகளை   பெரியவா முன்னாலே தட்டில் வைக்க  பட்டாபியிடம்  கொடுத்தார்..
 
தூர இருந்த அவரைப் பார்த்ததுமே  மஹா பெரியவா   பட்டாபியிடம்   ‘அவரை  இங்கே  சத்தே   முன்னால வரச் சொல்லுடா’..  

பயபக்தியோடு சற்று  பெரியவா முன்னால் நகர்ந்து  வந்து அந்த முதியவர்  கை  கட்டி  நின்றார்.

''ஏ.சி. பண்ணின ஹால்ல, பெரிய பெரிய மினிஸ்டர்ஸ் எல்லாரையும் கூப்புட்டுன்னா, புஸ்தகத்தை வெளியிடணும்? எங்கிட்ட என்ன இருக்கு? சொல்லுடா பட்டாபி, அவர்கிட்ட!’

'அதென்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க..! ஐயா  கிட்டதான் எல்லாமே இருக்கு. எனக்கு ஐயா கையாலே   வெளியிட்டா மட்டும்  போதும்’ 

பெரியவா லேசா சிரிச்சுண்டே,   ‘இந்த புஸ்தத்தை  என்ன பண்ணப் போறீங்க?’ நேரடியாக  அவரிடமே கேட்டார்.  இது மாதிரி புஸ்தகம் யாரும் வாங்கறதில்லே, படிக்கிறதில்லே,  பாவம் இவர் நஷ்டப்படக் கூடாதே என்ற  கவலை   மஹா பெரியவாளுக்கு!

‘இங்க  ஐயாவைப் பார்க்க வர்றவங்க வட்டத்துல… தெரிஞ்சவங்க  கிட்ட கொடுக்கணும்னுதான் அச்சுப் போட்டேனுங்க ''

 ‘புஸ்தகத்துக்கு விலைன்னு ஒண்ணு வைக்க வேணாமா?  ஒண்ணுமே போடலையே.  பத்து ரூபானு விலை வச்சு  கொடுத்துங்கோ''’

இலஞ்சிக்காரருக்கு   பரம சந்தோஷம்.  அவர் சொன்னதைப் பார்த்தா,  புஸ்தகத்தை பெரியவா ஏத்துண்ட மாதிரி  தானேன்னு ஒரே பூரிப்பு.

ஒரே  ஒரு புஸ்தகத்தை தட்டிலிருந்து  கையில் எடுத்துண்ட  மஹா பெரியவா  ‘ஒரு பத்து ரூபா இருந்தா குடுடா, பட்டாபி! .   ஞானக்  குழந்தை காசு கேட்டது பட்டாபியிடம். 

இலஞ்சிக்காரர்   இதைப்  பார்த்து பதறிவிட்டார். ‘ஐயா  கிட்டேர்ந்து பணம் வாங்கறதா? அது மகா பாபம். வேணாங்க வேணாங்க  ஐயா … ''

பட்டாபி காசு இடுப்பில் தேடுவதைப் பார்த்த மஹா பெரியவா,  ‘ ஆமாம்  பட்டாபி, உங் கிட்டே ஏதுடா பணம்?  உன்னண்டை போய்க் கேட்டேனே! நான்னா உனக்கே பணம் தரவேண்டியிருக்கு!’ன்னு சிரிச்சுண்டே சொன்னார். 

அவர்  கண்ணில் அப்போது  பொள்ளாச்சி ஜெயம் மாமி  அங்கே நின்றுகொண்டிருந்தவர் பட்டார். முக்கால்வாசி நாள், அந்த மாமி, மடத்துலதான் இருப்பார். 

உடனே மாமிகிட்ட பெரியவா, ‘  இவர் கிட்டே  நான்  தானே வார்த்தை கொடுத்தேன். நானே அதைக் காப்பாத்த வேண்டாமா? ஒரு பத்து ரூபா கொடுங்கோ’ன்னார். 

மாமி, உடனே பத்து ரூபாயை   கைப்  பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள் . பெரியவா கேட்டு, தான் கொடுப்பது எத்தனை பெரிய பாக்கியம்னு பூரிச்சுப் போயிட்டா  அந்த  மாமி.  பட்டாபி அந்த ரூபாயை மாமியிடமிருந்து  வாங்கி, மஹா  பெரியவாகிட்ட கொடுக்க… பெரியவா அதை  இலஞ்சிக்காரரிடம்  தந்தார்.  அதை இரு   கையாலும் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு, நன்றிக்  கண்ணீர் பெருக  அந்த  முதியவர்   சாஷ்டாங்கமா விழுந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணி னார்.  அவர் முகம் முழுக்க சந்தோஷக் களை!

அந்த  திருநெல்வேலிக்காரர் உண்மையிலேயே  புண்ய கர்மம் பண்ணினவர்.  அவர்  எழுதியது சாதாரண விஷயமில்லை.  அது சாமான்ய காரியம் இல்லை.  மிகவும்  உன்னதமான செயல். அத்தனை கர்ம சிரத்தையா அதைப் பண்ணி முடிச்சதோட இல்லாம, அவ்வளவு தூரத்துலே இருக்கிற கிராமத்துலேருந்து, பெரியவா கிட்ட காண்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும்னு சிரமம் பாக்காம  சில பிரதிகளை  வேறு அல்லவோ   கொண்டு வந்திருக்கிறார். 

‘ஐயா  கிட்ட   தான் எல்லாம் இருக்கு’  ---   எத்தனை தெளிவா காஞ்சி மகானை நம்பி, தேடி வந்திருக்கிறார்! அவர் மட்டும் அன்னிக்கி, பெரியவாளை  தரிசிக்க முடியாமல் திரும்பி போக  வேண்டி இருந்தால்  அவர் முகம் எவ்வளவு வாடி இருக்கும்..  நெஞ்சு எவ்வளவு உடைந்து இருக்கும்.  எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்.    ஒரு க்ளான்ஸ்  GLANCE   அதை புரட்டிப் பார்த்தபோதே,  பெரிய   அத்வைத தத்துவத்தை அப்படியே பாட்டாக, தமிழ்ல எழுதி புஸ்தகமா பண்ணி எடுத்துண்டு வந்திருக்கார் என்பது  மஹா  பெரியவாளை   மனது நெகிழப் பண்ணி இருக்கு.  புஸ்தகத்தை இனாமா கொடுத்தா, வாங்கிக்கிறவா அதைப் படிக்காம, அலட்சியமா வைச்சுடுவானு பெரியவாளுக்குத் தோணியிருக்கணும். அதே நேரம்… கிராமத்துப் பெரியவருக்கு பண நஷ்டமும் ஆயிடக்கூடாதுன்னு பெரியவாளுக்கு அக்கறை… அதான்  மஹா  பெரியவா! ஒரு  ஈ எறும்புக்குக்கூட துன்பம் நேரக்கூடாது என்று கவனமாக இருப்பவர் அல்லவா.  ஜகத் குரு இல்லையா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...