Thursday, February 10, 2022

nostalgia

 ''ஒரு ஊரிலே ஒரு ராஜா....நங்கநல்லூர்  J.K. SIVAN


ஒவ்வொரு வீட்டிலும் அப்பா  அம்மாவைக்  காட்டிலும்  அதிகமாக  குழந்தைகள் தேடுவது தாத்தா பாட்டியைத் தான்.  சகல சலுகைகளும்  அங்கே உண்டு.  அடிக்க திட்ட மாட்டார்கள்.  என்ன விஷமம் பண்ணினாலும்  அதற்கு உள் கை  அவர்கள். வெளியே காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.

''குழந்தையை கெடுக்கறதே நீங்க  தான்'' என்று  மகன், மகள், மருமகள் மருமகனிடம்  திட்டு, 
கோபமாக வார்த்தை வாங்குவது அவர்கள் தான்.  பக்கத்தில் படுத்துக்கொண்டு கதை கேட்பது, மேலே ஏறி விளையாடுவது எல்லாம் தாத்தா பாட்டியிடம் தான். அவர்களிடம் அடி வாங்குவதும் இந்த கிழங்கள் தான். 83 வயசிலும்   பேரன் பேத்தியை  முதுகில் உப்பு மூட்டை தூக்குவதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.  எனக்கென்னவோ  ஒரு ராசி.  சின்னவயதிலிருந்தே  நிறைய  கதைகள் கேட்டு வளர்ந்த நான், மற்ற குழந்தைகளுக்கும்  நிறைய கதை சொல்லி இருக்கிறேன்.  எனது ஒய்வு நேரங்களில், சனி ஞாயிறு ஆபிஸ் போகாத நாட்களில்   காலை  பகல், சாயந்திரம்  இரவு என்று நேரம் கெட்ட  நேரத்தில் எல்லாம்  என்னை சுற்றி நிறைய  குழந்தைகள், எங்கள் குடும்ப குழந்தைகள் தவிர  காலனியில் அண்டை அசல் வீடுகளில் உள்ள குழந்தைகளும்  ஒன்று சேர்ந்து கேரோ  gherao  பண்ணிவிடும்.   நாங்கள் கூடுமிடம்  எங்கள் வீட்டு வாசலில்  வேப்ப மரத்தடியில், மாடிப்படியில், கொல்லைப்பக்கம்  தோய்க்கும் கல் தான் என் சிம்மாசனம், கிணற்றை சுற்றி  சிமெண்ட் தரையில்  இந்த மகாஜனங்கள் .

 ''ஒரு ஊரிலே ஒரு ராஜா.. என்று நான்  ஆரம்பிக்கும் போது, எனக்கே  எந்த ஊர்,  எந்த ராஜா, அவன் என்ன செய்தான், செய்யப்போகிறான் என்று ஒன்றுமே  தெரியாது.  மனம்போல போக்கில் கதை உருவாகும்...

''ஒரு ஊரிலே ஒரு ராஜா...''  என்ற  வார்த்தையைக் கேட்டதும் எங்கிருந்தாலும் ஓடி வந்து அருகில் உட்கார்ந்து கொள்ளும் . டிவி,  வீடியோ, வாட்சாப்,  குழந்தை கதைப் புத்தகங்கள் வீட்டில்  இல்லாத காலத்தில்  இந்த  கதைகள் வரப்பிரசாதம் அவர்களுக்கு.
அப்போது   தெருவில் விளக்குகள் அதிகம் கிடையாது, வீடுகளிலும்  முணுக் முணுக்  20- 25, அதிக பட்க்ஷம்  40 வாட்டு  பிலிப்ஸ், osram  பல்புகள்.  திடீர்  திடீர் என்று  கரண்ட்  fluctuationல்   low  voltage ல்  பியூஸ்  fuse  ஆகிவிடும் .  

என் குழந்தைப் பருவத்தில் நான்  நிலா ஒளியிலே, வாசலில் தெரு விளக்கு வெளிச்சத்தில், முற்றத்தில் ஹரிக்கன் லைட் ஒளியில் நிறைய கதையைக் கேட்டு நானும் பெரியவனாகி  அந்த அனுபவத்தால்,  கற்பனைக் குதிரையை தட்டி விட்டு குழந்தைகளுக்கு அமோகமாக கதைகள் சொல்லி இருக்கிறேன். என்னை சுற்றி நிறைய வாண்டுகள்  முதல் 15 வயது வரை ரேஞ்சில் (RANGE ) ஆண் பெண் குழந்தைகள் பல காதைத் தீட்டிக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்ததை நினைக்கும்போது  மனது இனிக்கிறது. 

நான் கேட்ட கதைகளுக்கும் சொன்ன கதைகளுக்கும் வித்யாசம் உண்டு.   நான் கேட்ட கதைகளை விட, சொன்ன   கதைகளில் கொஞ்சம் இதிகாசம், கொஞ்சம் ஆங்கில, இந்திய கதைகள், மீதி
 சொந்த சரக்கு. இப்படியே கலந்து கட்டியாக ஒரு உருவம் கொடுத்து கதை நீளும்.  

சில கதைகள் நாட் கணக்கில் நீளும். எனக்கே என்ன சொன்னோம் என்பது மறந்து விடும். அவர்கள் எடுத்துக் கொடுப்பார்கள். அப்பறம் அப்பாதுரை எப்படி அந்த திருடர்களைப்  பிடித்தான்? ஓடும் ரயிலில் இருந்து எப்படி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தான். முதலை துரத்தியதா?  இதெல்லாம் எனக்கே மறந்து போயிருக்கும்,  அவ்வப்போது  மனதில் ஜனித்த  ஜந்துக்கள் தானே இவை, இவர்கள்.!   ஆனால்   குழந்தைகள் ரொம்ப நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கும். அப்புறம் என்ன நடந்தது  என்று தொடர்ச்சியைக்  கேட்கும்.  ஒரு நுனி  கிடைத்தால் போதும் எனக்கு. மேலே கற்பனை தொடரும். விறுவிறுப்பு அதிகரிக்கும்.

அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. அப்போது டிவி ,ரேடியோ  எல்லோர் வீட்டிலும்  இல்லாமல்  ஒரு சிலர்  வீட்டில் இருந்தாலும் அதில் கதை கிடையாது. கதை  இருந்தாலும் ம் அதைக் கேட்க முடியாது. ரேடியோவில்  கொர  கொர சப்தம், கருப்பு வெளுப்பு  டிவியில்,  கருப்பு வெளுப்பு கோடுகள் அலைகள், ஏதோ ஒரு மாவு மிஷின் சத்தம்  மட்டுமே அதிகம்  கேட்கும். எனக்கும் என் கதைகளுக்கும் அதிகம் டிமாண்ட் இருந்தது  ஏன்  என்று இப்போது புரிகிறது.  கிடைத்ததை விடுவானேன் என்ற  ஆர்வமே தவிர என்  கதை சொல்லும் திறமை  காரணம் இல்லை  என புரிகிறது.

கதா நாயகன் ஒரு ஆபத்தில் சிக்கி இருக்கிறான். எந்த நேரமும் அவன் உயிருக்கு ஆபத்து. அவனுக்கு அவசர உதவி தேவை. எப்படி சமயோசிதமாக அங்கே காற்றில் மேலே இருந்து ஒடிந்து விழுந்த ஒரு மரக்கிளையை 'சரக்'கென்று பிடித்து எதிரிகளை சமாளித்தான் என்று சொல்லும்போது, கவலையோடு என்னை பார்த்துக் கொண்டிருந்த கண்களில் திடீரென்று ஒரு ஒளி தோன்றும். ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். சந்தோஷம் கரை புரண்டு ஓடும். சுரேஷ் எழுந்து கை தட்டுவான். கதாநாயகனாகவே மாறிவிடுவான். கண்ணுக்கு தென்படாத எதிரிகளை கைகளை வீசி தாக்குவான். தாவிக் குதிப்பான்.

இதெல்லாம் இந்த காலக் குழந்தைகள் ரசிக்க முடியாது. அவர்கள் திசையே வேறு. எதிர்பார்ப்பே வேறு.

காரணம் விஞ்ஞான வளர்ச்சி. அது அவர்களை, அவர்கள் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மாற்றி அமைத்துவிட்டது. பெரியவர்களும் கதை சொல்லும் மனோ நிலையில் இப்போதெல்லாம் இல்லை. கதைகளும் சொல்லத் தெரியாது. பொறுமையே கிடையாதே. எந்த வித இயற்கை சக்தியையும், முறையையும் மீறிய கதைகள் சொன்னாலும் அதை அப்படியே நம்பி கேட்கக் கூடிய குழந்தைகளும் இல்லையே. இப்போதைய சிறுவர்கள் ஆயிரம் கேள்விகள் குறுக்கே கேட்டு மடக்குவார்கள். சமாளிக்க ஞானம் வேண்டும். சமயோசிதம் வேண்டும். இரண்டுக்கும் இப்போது பஞ்சம்.

இது பழைய புராண கதைகளை குழந்தைகள் கேட்க விருப்பமில்லாத காலம். ''பார்பி டால், ஹார்ரி பாட்டர், பேட் மேன், சூப்பர் மேன்'' தினங்கள்..

(பழைய  கதைகளில் புராணங்களில், இதிகாசங்களில் தெய்வ அவதாரங்களில் அந்த அளவு ஈர்ப்பு வர வேண்டும் என்று பிரயாசைப் பட்டு தான் என் கதைகள் வண்ணப் படங்களோடு புத்தகங்களாக வெளியிடப்பட்டு இலவசமாகவே பள்ளிச் சிறார்களுக்கு  சென்றடைகிறது. வெளிநாடுகளிலும் கூட நிறைய பெற்றோர் அந்த கதைகளை படித்து குழந்தைகளுக்கு சொல்கிறார்கள் என்று அறியும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? கிருஷ்ணன் அனுக்ரஹத்தில் இதுவரை  என்னுடைய  இந்த கைங்கர்யம்  எனக்கு  திருப்திகரமாகவே வாட்சாப்,  facebook , blog  மூலம்  தொடர்ந்து  நடந்து வருகிறது) ஒரே  வித்யாசம், முன்பு,  ஆதாரமில்லாத  அதிரடி  கற்பனை. இப்போது  புராண, இதிகாச, வேத உபநிஷதுகள் சாஸ்திரங்கள் ஸ்தோத்திரங்கள்  சொல்லும்  விஷயம்  தெரிந்துகொண்டு புரிந்துகொண்டு, இட்டுக்கட்டு  இல்லாமல்  சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்.  அப்போது சொன்னது  15வயதுக்குட்பட்ட பிரஜைகளுக்கு.  இப்போது  நூறு வயது வரை உள்ள அனைத்து பிரஜைகளுக்கு என்று உணரும்போது பொறுப்புணர்ச்சி விஸ்வரூபம் எடுத்துவிட்டது 
எங்கள் காலத்தில் விஞ்ஞான விதிகள், இயற்கை நியதிகள் எல்லாம் எங்களுக்கு லட்சியம் இல்லை. அதில் அக்கறையுமில்லை.

ஏன் தமிழ் படங்களில் கூட MGR மேலே ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டே 20 பேரை வீழ்த்தியதை நம்பினோமே. குட்டிக்கரணம் அடித்துக்கொண்டே சண்டை போட்டு ஜெயிப்பதை ரசித்தோமே. ஒரு யானை போன்ற மனிதனை மேலே தூக்கி சக்கரமாகச் சுற்றி பத்தடி தூரம் வீசியதை ரசித்தோமே. ஒரு ஆசாமி பல பேரை ஆயுதம் இல்லாமலேயே தாக்கி இடுப்பை ஓடித்ததை ரசித்து விசில் அடித்தோம்,எழுந்து கை தட்டினோம். இன்றும் எத்தனையோ தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி படங்களில் கதாநாயகனின் குதிரை மட்டும் அவன் மேலே எங்கிருந்தோ குதிக்கும் போது தயாராக நின்று அவனை ஏற்றிக்கொண்டு மற்ற குதிரைகளுக்கு ''தண்ணி'' காட்டி விட்டு வேகமாக பறக்கிறது. மற்றவர்களை விட ஹீரோ பலசாலி, அழகன், விஷயம் தெரிந்தவன். வீரன், பாடுவான், நடிப்பான், ஆடுவான்.அடிப்பான்.  எங்கள் கதாநாயகன் கடவுளுக்கு சமானமாக இருந்தவன். சகல கலா வல்லவன்.

என் மழலைப் பட்டாளம் நான் கதை சொல்வதற்காக எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருந்தது. ஒருவன் ஓடிப்போய் ஒரு பலகை கொண்டு வருவான் உட்கார, ஒருவன் விசிருவான். ஒருத்தி குடிக்க நீர் கொண்டு வந்து தருவாள். என் அருகே யார் உட்காருவது என்று அவர்களுக்குள் சண்டையே மூளும்.

ராஜா கதைகளில் '' ஒரு ஊரிலே ஒரு ராஜா'' வைத் தொடர்ந்து அடுத்த வாக்யம் ''அவனுக்கு ஒரு ராணி....''

அந்த ஊரிலே திடீர்னு ஒரு பெரிய காட்டு யானை மதம் பிடித்து ஓடி வந்து விட்டது. ராணி வெளியே கோவிலுக்கு போய்விட்டு வந்து கொண்டிருந்தவளை யானை பார்த்து விட்டது. யானை ஓடி வந்தது. அவளால் ஓட முடியவில்லை. அருகே ஒரு பெரிய குளம் அதில் விழுந்து விட்டாள். ஆனால் அவளுக்கு நீந்த தெரியாதே. அந்த குளத்தில் வெகுகாலமாக ஒரு ஆமையும் முதலையும் குடும்பத்தோடு வசித்தது.  அப்புறம்......  இதோடு கதையை விட்டால்..ரசிக குழந்தைகள் யோசிக்கும். என்னன்ன நடக்க ஹேது?   ஒன்று யானை தண்ணீரில் இறங்கி அவளை காப்பாற்றியிருக்கும். அல்லது அவளை அங்கேயிருந்து தூக்கி வெளியே போட்டு மிதித்திருக்கும். ராணி நீரில் மூழ்கி இருக்கலாம். அல்லது அவள் புடவை அருகே ஒரு மரக் கிளையில் மாட்டி அதை பிடித்து கொண்டு வெளியே வந்திருக்கலாம். முதலை பசியோடு அவளை உண்ண வரலாம். ஆமை அவளை தனது முதுகில் ஏற்றி அக்கரையில் கொண்டு சேர்க்கலாம். ராஜா அந்த பக்கமாக வந்து அவளைக் காப்பாற்றி யிருக்கலாம். கோவில் யானைப் பாகன் வீடு குளத்தின் பக்கம் என்பதால் அவன் யானையை விரட்டி அவளை காப்பாற்றி யிருக்கலாம்.

எப்படி யெல்லாம் மனதில் தோன்றுகிறதோ அப்படி யெல்லாம் கதையை ஒடித்து, மடித்து, முறுக்கி, சுருக்கி, நீட்டி கொண்டு போகலாம்.    அவர்கள் ஆவலாக காத்திருப்பார்கள். மறுபடியும் அவர்களைச் சந்திக்கும் போது எனக்கு என்ன தோன்றியதோ அதுவே கதையின் முடிவு. 

இனி அந்த காலம் வருமா சொல்லுங்கள் ?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...