Saturday, February 15, 2020

ANCIENT DAYS




இப்படி  வாழ்ந்தார்கள்   J K SIVAN

நாம்   இப்போது வாழும் வாழ்க்கை  நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு.  காலமும் நேரமும் நமது   எண்ணத்தை, செயலை, விருப்பத்தை  எல்லாம்  அடியோடு கட்டுப்படுத்தி விட்டது.   வாழ்க்கையில்  தேவையான அனைத்தும்  கிடைக்கிறது.  வீட்டில்  ஒருவளை, ஒருவனை எதற்கும் எதிர்பார்க்க தேவை இல்லாமல்    தைரியமாக  ஆணும்  பெண்ணும்  சரி நகர் சமானமாக வாழும் வாழ்க்கை முறை இப்போது உறவை துண்டித்து விட்டது.

நமது  எள்ளுத்தாத்தா   கொள்ளுதாத்தா  காலத்தில்  பகலைக் காட்டிலும்  அவர்கள்  வாழ்ந்த  இருள் காலங்களே  அதிகம். சூரிய ஒளியை  நம்பி  வாழ்ந்தவர்கள்.   இப்போது போல்  பாதைகள்,  பயண  ஊர்திகள், வங்கிகள்,  செய்தித் தாள்,  மின்சாரம்,  கணினி   இல்லாத நிலையில்,  கைப்பொருளைக்   கள்வர்  பயமின்றி  காப்பாற்ற  பெருமுயற்சி  தேவையாக  இருந்தது.  பயம் சூழ்ந்த வாழ்வில் பக்க பலமாக இருந்தது பகவான் மேல் பக்தி ஒன்றே.  

அவர்கள் காலத்தில்  ஒவ்வொரு  வீட்டிலும்  ஒரு  ரகசிய  இடம்  இருக்கும்.  இது ஒன்று  தான்  லாக்கர், பேங்க், பணப் பெட்டி. ஒருவர் முறை  மற்றவர்க்கு  தெரியாது.  இருந்தபோதும்  அனேகமாக  எல்லோரும்  பானையையே  நம்பினர் . 
வீட்டில்  செல்வம்  பானையில்  இருக்கும்.   ரூபாய் நோட்டாக  இல்லை. அரிசியாக, பருப்பாக,  புளியாக, வெல்லமாக .  சில தங்க  வராகன் காசுகள்  ஒவ்வொரு வீட்டிலும்   இருக்கும்.  அது  பரம்பரை பரம்பரையாக  கூட ஒரு தலை முறையிலிருந்து அடுத்ததற்கு  வந்து சேர்ந்தது. வட்டியில்லாத  அசல்.   வங்கி , பேங்க்  BANK  என் எண்ணத்தில்  கூட இல்லாத காலம்.  

 மண் தெருக்களும்  ஒத்தையடிப் பாதைகளுமே  அதிகம்.   மரங்கள் செடி கொடிகள் வயல்கள் சூழ்ந்த  அவற்றில் இரு மருங்கிலும்  ஒரு சில  வீடுகளே   சிறிதும் பெரிதுமாக தனி வீடுகளாக  தோட்டமும் துரவுமாக  இருந்தது.   ஒவ்வொரு வீட்டிலும்  பெரிய  குடும்பம்.  பத்து  உருப்படிக்குக் குறையாத  தலைகள். .  காப்பி  டீ   எல்லாம்  குடிக்கும்  வழக்கம் கிடையாது.  கஞ்சி, மோர், இளநீர்,  எலுமிச்சை ரசம்  தான் எல்லோர் வீட்டிலும்.  பக்ஷணங்கள்  வீட்டில்  செய்தவை.  கடலை  எண்ணெய் , நல்லெண்ணெய்  தேங்காய்  எண்ணெய் நெய்  தான்  வழக்கத்தில் இருந்தது.  பாமோலின் , பாமாயில்  எல்லாம்  அப்பறம்  பிறந்தவை.  ஜம்மென்று  வாசனையோடு   பக்ஷணங்கள் ஒவ்வொரு வீட்டிலும்  தயாராகும்.   ஊரைக்  கூட்டும். திரும்ப  திரும்ப  ஓமப்பொடி, முறுக்கு,  மனோகரம், குஞ்சாலாடு, மைசூர்பாக், பொருள்விளங்கா உருண்டை, ரவா லாடு, ஒக்காரை, நாடா, அதிரசம்  அப்பம், அல்வா, கடலை உருண்டை, பொட்டுக்கடலை  உருண்டை  இவை போன்ற தின் பண்டங்கள் தான்  நாக்குக்கு பரிச்சயம்.  


காரட், முட்டைகோஸ், பீன்ஸ்  போன்ற  காய்கள் உபயோகத்தில் இல்லை.    நிறைய  கிழங்குகள், பச்சை காய் கறிகள்  தான் சமையலில்  இடம் பெரும்.  பூண்டுக்கோ  வெங்காயத்துக்கோ இந்த  அக்ரஹார  தெரு  வீடுகளில்  அனேகமாக  இடம் இல்லை. 

விடியற் காலை   சேவல் கத்தி காலை முழிப்பு  கொடுத்துவிடும்.   ஜாமக்கோழி இதற்கென்றே வளர்த்தார்கள்.  வயலுக்கு  நடந்து வாயில்  வேப்பங் குச்சியோடு   ஒரு  சுற்று சுற்றி வந்து  வாய்க்கால்  பக்கம்  ஒதுங்கிவிட்டு   பிறகு  ஆற்றிலே  குளித்து விட்டு  வேஷ்டியை  அலசி பிழிந்து  தோளில்  போட்டுக்கொண்டு  ஆற்றங்கரை   மரத்தடிப்  பிள்ளையாரை  ஒரு  பிரதக்ஷணம்   சுற்றிவிட்டு   தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு  தோப்புக்கரணம்  போட்டுவிட்டு  விபூதி  எடுத்து இட்டுக்கொண்டு  வீடு  திரும்புவார்கள்.  

 வீட்டில்   காலை  வழிபாட்டை முடித்துக் கொண்டு  நேராக  தெருக்கோடி  கோவிலுக்குச்  செல்வார்கள். அங்கு அபிஷேகம்  அதற்குள்  நடந்திருக்கும்.   கையில் கொண்டு சென்ற  தேங்காய்  வாழைப் பழம்  வெற்றிலை எல்லாம்  அர்ச்சகரிடம்   அளித்து  ஒரு  அர்ச்சனை.    ஊரில் அத்தனை பேர் பெயர், கோத்ரம், நக்ஷத்ரம்  எல்லாம்  அர்ச்சகருக்கு  அத்துபடி.  காலணா  உண்டியலில் போட்டுவிட்டு வீடு திரும்பினவுடன்  எல்லாருக்கும்  நீராகாரம்  காத்திருக்கும். மாங்கா,  நாரத்தங்காவைத்   தொட்டுக்கொண்டு   ரெண்டு லோட்டா  உள்ளே  போகும்.  கடியாரம்  இல்லாமலே பொழுது போனது.  சூரிய  ஒளி,  கோவில் மணி காலத்தை காட்டியது.

இளசுகளும்,  குழந்தைகளும்  வட்டமாகவோ  வரிசையாகவோ  பூவரச ,பாதம்  இலையில்  நாரத்தங்காய்,  அல்லது கருவேப்பிலை, கொத்தமல்லி,  தேங்காய்  துவையலையோ, அல்லது  மோர் மிளகாயோ  வைத்துக்கொண்டு  காத்திருக்க   புளித்த  பழையதில் ,  நல்லெண்ணெய்  உப்பு  போட்டு  பிசைந்து  தலா  ரெண்டு  கை  அல்லது  மூணு  கை  வாங்கி சாப்பிடுவதிற்குள்  பாத்திரம்  காலியாகி விடும்.  இப்போது  போல் ஒரு வாரம் முன்பு சமைத்ததை  வைத்துக்கொண்டு சாப்பிடும்  பிரிட்ஜ் FRIDGE இல்லையே.  பெரியவர்கள் தவிர மற்றவர்களே  இப்படி முதல் நாள் மீதியை  மறுநாள் காலை  காலி பண்ணுவார்கள்.   

 தோட்டத்தில்  பசுவுக்கு   வாழைப்பழம்  இலைகள் எல்லாம்  கொடுத்து விட்டு  அனைவரும்   வயலுக்கு  கிளம்பிவிடுவார்கள். மரத்தில்  ஏறி  தேங்காய் பறிப்பது,  பாத்தி கட்டுவது.  ஏற்றம்  இறைப்பது எல்லாம்  மேற்பார்வை  அல்லது  சேர்ந்து செய்வது.

பெண்கள்  எல்லாம்  விடியற்காலையே  தண்ணீர் பிடித்துக்  கொண்டுவர பித்தளைத்  தவலைக ளோடு  மண் பாண்டங்களோடு (எவர்சில்வர்   ஹிண்டாலியம்  எல்லாம்  தெரியாது)   தோளில்   பழைய துவைக்க வேண்டிய  துணிகளோடு  ஆற்றுக்கு  சென்றுவிடுவார்கள்.   வழக்கமான இடத்தில்  செங்கல்லில்  அல்லது கரையில்  ஒரு  பாராங்கல்லில்  மஞ்சள்  அரைத்து அரைத்து அதுவே  மஞ்சள்  நிறத்தில்  காத்து இருக்கும்.    

ஊர்க்கதை  பேச  அது  தான்  அவர்கள் ஒதுக்கும்  நேரம். சுட சுட  ஊர்  செயதிகள் அங்கே  பரிமாறப்படும்.     துணி , வம்பு , ஊர்க்கதை   அனைத்தையும்  அலசி  அங்கேயே  பிழிந்து தோய்த்து தோளில்   போட்டுக் கொண்டு  இடுப்பில்  பெரிய  தவலையில்  குடிநீரோடு  திரும்புவார்கள்.  போய்   சமையல்  ஆரம்பித்தால்  சூரியன்  உச்சி அடையும் நேரம்  சாப்பாடு ரெடியாகிவிடும்.   அடுப்பு  களிமண்ணால்  செய்தது.  ரெட்டை அடுப்பு, மூன்று, நாலு  அடுப்பு கூட  ஒரே வரிசையில் இருக்கும்.  விறகு  உடைத்து  காய வைத்தது  நன்றாக  எரியும்.  புகை  வராமல்  ஊதாங்குழல்  என்று  இரும்பில்  ஒரு  கனமான  பைப் PIPE  துண்டு  ஒவ்வொரு  வீட்டிலும்  இருக்கும்.  மூச்சைப்  பிடித்து  அதில்  காற்றை  ஊதி  புகையை  விரட்டுவார்கள். அடுப்பை எரிப்பார்கள்.  

 மத்தியானத்துக்குள்  ஊர்  சமாசாரம் அனைத்துமே,   வெளியூரில் இருந்து  திரும்பியவர்கள்  மூலம்  அடுத்த  ஊர்  கதைகளும் ஆலமரத்தடிக்கு  வந்துவிடும். அங்கே போய்  தான்  மத்யஸ்தம், பிரச்னைகளுக்கு  தீர்வு. கோபால  தீட்சிதர்,  வாத்யார்  நாகராஜன், ஜோசியர்  ராமன்  புரோகிதர்  ராமய்யா  போன்றோர்  அளிக்கும்  தீர்ப்பு   சுப்ரீம்  கோர்ட்  ஜட்ஜ்மெண்ட்.     தலையாரி  தண்டபாணி  தமுக்கடித்து  ஊரில்   விஷயம் சொல்வான்.  

 ''ஊர்லே  கல்யாணம்  மார்லே  சந்தனம்''  என்பது  வழக்கத்தில்  இருந்தது. யார் வீட்டுக்கல்யாணம்  என்றாலும்  அனைத்து  வீடுகளுக்கும்  அதில்  பங்கு உண்டு.     கல்யாணக்கு  சத்திரம்  தேடும்  வழக்கம்  இல்லை.  சமையல்  கான்ட்ரக்டர்  பிறக்காத  காலம்.  கோட்டை அடுப்பு  என்று  தெருவில் வீடுகளை மடக்கி பந்தல் போட்டு   ஓரமாக  சில  ஒலைத் தட்டிகளை  மடக்கி   மறைப்பு போட்டு   உள்ளே  கண  கண வென்று  பெரிய  வாய்  திறந்து கொண்டு  கல்  அடுப்புகள்  நிற்கும்.  அதில் நிறைய  விறகுகள்  எரிந்து கொண்டிருக்கும்.  சாம்பார்,  ரசம்,  தாளிப்பு  மணம்  எங்கும்  வீசும்.  பெரிய தவலை   அல்லது வாய்  அகன்ற  பாத்திரத்தில்   அரிசி  வெந்து தளதளவென்று  கொதித்துக் கொண்டிருக்கும்.    சில  சமையல்காரர்கள்  ஒரு பக்கம்  காய்கறி  நறுக்க, சிலர்  அம்மியில் பொடி செய்தோ  கல்லுரலில்  கொட  கொட  என்று  கைவிடாமல்  அரைத்துக்  கொண்டோ  இருப்பார்கள்.   தலைமை பரிசாரகர்  அவர்களை  விரட்டிக் கொண்டே  இருப்பார்.  

''சாமா,  சாதம்  ரெடியா?''  என்று  குரல்  வரும்.  

''அண்ணா இன்னும்  சத்தே பொறுக்கணும் .. ரெடி ஆயிடுத்து.  உலை ப்புறணும்.  சாதம் வடிச்சுட்டேன் . எலே  பாலு  சீக்கிறம்  இலை போடு.  எத்தனை நாழி  இல்லை நறுக்க?''    

 தெருவை  மடக்கி  பந்தல்.  வண்டி  ஒன்றும்  அடிக்கடி  போகாதே.  எதிரும் புதிருமாக  வரிசை யாக ஜமுக்காளம்  மடிச்சு,  உட்கார போட்டு, பித்தளை டம்பளர்களில்  சொம்புகளில்  நீர். நாயனம்  தவில், ஒத்து, ஜால்ரா   வகையறா  காலம்பரத்திலே இருந்தே  விடாமல் கீர்த்தனங்கள்  வாசித்து  பிளந்து கட்டும்.    விடிகாலை வேளையில் தவில்  சத்தம்  ஊரின்  அமைதியைக்  கொன்று, அனைவரும்  எங்கே மேளம்  யார் வீட்டில்  விருந்து என்று தெரிந்ததால்  குளித்து ரெடியாகி  விடுவார்கள்.  ஒன்றாகக்  கூடிவிடுவார்கள்.  சிலர்  நீர் மோர்  பானகம்  விநியோகம்  செய்வார்கள்.  

 ஜமுக்காளம்  தவிர  சின்ன   மடக்குப் பாய்  நீளமாக  விரித்து   வரிசையாக  தெருவே கூடி  எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள்.  பெண்  வீட்டுக்காரர்கள்  அத்தனை பேரும் வந்து  ''வாருங்கோ  வந்து  சாப்பிடுங்கோ''  என்று உபசாரம்.  பதில்  சொல்லி  வாய் வலிக்கும்.    பிள்ளை  வீட்டுக்காரர்கள்  ஒரு பக்கம்  இதே  உபசாரம்  பண்ணுவார்கள்.   இன்னும்  இன்னும்  என்று  மேலே  மேலே   இலையில் சாதமும்  பலகாரங்களும்  சாம்பார்  ரசம் கூட்டு  எல்லாம்  விழும்.   பெரிய  அகலமான தலை வாழை இலை முக்யஸ்தர்களுக்கு  என்று ஒரு வரிசை.  ஐஸ்க்ரீம்  ப்ரூட்சாலட்   எல்லாம்  தெரியாது.  இலையில்  பலவித   பலகாரங்கள் நிரம்பும் . நொறுக்குத் தீனி  இல்லாததால்  எல்லோருமே  ஒரு  கை  பார்ப்பார்கள். அப்பளம் பெரிசு  பெரிசா  இலையையே  மறைக் கிற மாதிரி  இருக்கும். அதற்கு  ஆனையடி  அப்ப ளம் என்று பெயர்.   இந்த  அப்பளம் எல்லாம்  கல்யாணத்துக்கு  பல  மாதங்களுக்கு  முன்பே  எல்லா  மாமிகளும் கூடி  தினம் தினமாக   பல நாள்  ஒன்றாக  ஜமா  கச்சேரி  போட்டு இட்டது.  வெயிலில்   நன்றாக  காய்ந்து   சுட்ட அப்பளம். எல்லாம்  ருசிகரமாக  இருக்கும்.  பாயசத்தில்  அப்பளம் நொறுக்கி  சாப்பிடுவார்கள்.  தொன்னையில்  நெய்  நிரப்பி பறிமாருவார்கள்.  ரசம் வாங்கி வாங்கி  குடிப்பார்கள். யாருமே  கொலஸ்ட்ரால் என்றால்  என்ன என்றே  தெரியாதவர்கள்.  டயட்டிங் என்றால் ஏதோ ஊசி  மருந்து  என்று  ஓடுபவர்கள்.

வடகம்  வத்தல்  எல்லாமே   மாமிகளின்   லோக்கல் ''மேக்''  தான்.  வெளியில்  விற்க  யாருமில்லை  ஆதலால்  கிடைக்காது. கல்யாணத்தில்  பாட்டு  தூள் பறக்கும்.  இட்டுக்கட்டி  பாடுவதற்கு  தயார் செய்து கொண்டு வருவார்கள்.  நலங்கின் போது   அவர்கள்   சாமர்த்தியங்கள்   வெளிப்பட்டு  எது படு ஜோர்  பிள்ளை வீடா, பெண்வீட்டாரா  என்று சளைக்காமல்   போட்டி போட்டு அவர்களின்  திறமை க்கு    ஆஹா ஓஹோ  என்று  ஆதரவு  அவர்களை ஊக்குவிக்கும்.   

கல்யாண  உற்சாகம்  6 நாள்  7நாள்  கூட  தொடரும்.  கட்டுச் சாத  கூடை  வைக்கிற அன்று  கண்ணீர்  பிரவாகமாக பெருகும் பெண் வீட்டாருக்கு.  ஊர்க்காரர்கள் சேர்ந்து  அழுதாலும்  பெற்றோரைத்  தேற்றுவார்கள்.

கல்யாண  பெண்ணுக்கோ பிள்ளைக்கோ இதில்  சம்பந்தமே  இல்லாமல்  அந்த  சிறுசுகள்,  வாண்டுகள்,  விளையாடிக் கொண்டு  இருக்கும். தங்களுக்குக்  கல்யாணம் என்று  ஒன்று நடந்ததாக  அறியாத வயது அல்லவா. புதுத்  துணியும் பட்சணமும்  தான்  பிரதானம். என்  தாயாருக்கு ஒன்பது வயதில் திருமணம்.  என் தந்தை கல்லூரி மாணவன்.   அதற்கும் முந்தியா தலைமுறை  சொந்தத்திலேயே பந்தம் வைத்துக்  கொண்டது. 

நாணா  மாமா  பெருமாள்  சந்தனம்  கோவிலில் இருந்து கொண்டுவந்து  எல்லோருக்கும்  இட்டு விடுவார். ''நாணா  ஸ்லோகம் சொல்லிண்டே  சந்தனம்  இட்டா  ஓடம்புக்கு  ஒரு  வியாதியும்  இல்லை''  என்று  ஊரில்  பிரசித்தம். ரயில்  பார்த்ததில்லை.  பஸ் என்ன என்றே  தெரியாது.  எதற்கும்  ரெட்டை மாட்டு  வண்டி,  வில்  வண்டி  தான்.  நடை  அத்தியாவசியம்.  கையில்  கூஜா,  ஒரு  பெரிய  மூங்கில் தடி.   ஜோல்னா  பையில் கட்டு சாதம் தலையில்  ஒரு  துணி மூட்டை   இது  தான்  நெடும்பயணம் செய  தேவைப்பட்டது.  இருட்டில் பயணம்  கிடையாது.  யார்  வீட்டுத்   திண்ணை யிலாவது  படுக்கை.   வீடுகளுக்கு  காம்பௌண்ட்  வேலி  இல்லாமல்  மனதைப்போல  திறந்ததாகவே  இருந்தது.

 கல்யாணங்களில்   தெருவில்  சாயந்திரம்  சதிர்  கச்சேரி.  நிறைய தீவட்டிகள்  எரியும். ஹார் மொனியம் அலறும்.  ஒலி பெருக்கி  இல்லாமலேயே  உரக்க பாடுவார்கள்.   காலில்  கஜ்ஜை   கட்டிக்கொண்டு  பட்டுக்கோட்டை சரசா ஆடுவதைப்  பார்க்க  பல  ஊர்களில்  இருந்தே  மத்தியானமே  வண்டி பூட்டிக்கொண்டு  வந்துவிடுவார்கள்.  அனைவருக்கும்  சாப்பாடு  உண்டு.  முன்பெல்லாம்  சரசா  பாடிக்கொண்டே  ஆடுவாள். இப்போது  முடியவில்லையாம்.  இரைக்கிறதாம். மூச்சு  வாங்குகிறது  என்கிறாள்.  சாரீரத்தைப்  போல்  சரீரமும் கட்டையாகிப்  பருத்துவிட்டதே.  கோபாலாச்சாரி  அவர் தம்பி   பிர்கா   ரங்கு,    ரெண்டு  பெரும்   சுருதி சேராமல்,   அதைப்பற்றி  துளியும் கவலைப்படாமல்  சேர்ந்து  பாடுவார்கள்.  ராத்திரி  ஒருமணி  ரெண்டுமணி  வரை  கூட   கச்சேரி  இருக்கும்.    மூன்று இளவட்ட சிஷ்யர்கள்  ஜாலரா ,சிப்ளாக்கட்டை, கஞ்சிரா வோடு  வாங்கிப்  பாடுவார்கள்.  தீவட்டி,  அவுட்  என்கிற  வாண  வேடிக்கை  இரவெல்லாம்  இ


ருக்கும்.  

 ஒவ்வொரு  அடியையும்  ரெண்டு மூணுதடவை  பாடச்சொல்லி   சரசா  ஆடுவாள். அபிநயிப்பாள்.  வாழைத் தோப்பு,  எள்ளு புண்ணாக்கு,  எண்ணெய் செக்கு  ஓனர் கிருஷ்ண செட்டியார் சரசாவின்  விசிறி.  அவள்  நிகழ்ச்சி  எந்த  ஊரில்  நடந்தாலும்  வண்டி கட்டிக்கொண்டு சென்று விடுவார்.    

எப்போதும்   ஒரு  சீட்டி  புடவை, ரவிக்கை துண்டு,  தட்டு நிறைய  மொந்தன் வாழை,  மாதுளை  (எல்லாம்  அவர்  தோட்டம் தான்) புண்ணாக்கு மூட்டை,  எண்ணெய்  தூக்கு வைத்து  கூடவே ஒரு  தங்கக்காசு  கொடுப்பார்  ஒரு வராகன் ( சவரன்  விலை  மூன்று வெள்ளிப்பணம் -  அப்போதைய  மூன்று  ரூபாய்.),

 ஊரில்  யார்  வீட்டுக்   கல்யாணமோ  என்றில்லாமல்  அவரவர்  தங்களிடம்  இருக்கும்  சிறந்த  ஆடைகளையும்  நகைகளையும்  போட்டுக்கொண்டு  பங்கேற்பார்கள்.  காரை,  புல்லாக்கு , நாக ஒத்து, பட்டு புடவை, ஜிமிக்கி,   ஒட்டியாணம், வங்கி, காசு மாலை  இதெல்லாம்  தான்  அந்த கால  ஆபரணங்களின்   பெயர்கள்..  பவுடர்  கிடையாது.  வீட்டில் கூட்டிய  சாந்துப் பொட்டும்   கும்குமமும் தான்  பெண்களை அலங்கரிக்கும்.  சாந்து  கூட்டுவது என்பது  ஒரு  கலை.   கொட்டங்கச்சியில்  சாந்து  சேமித்து  வைத்திருப்பார்கள். கண்  மையும்  வீட்டிலேயே  கூட்டுவார்கள்.  

இந்த  கல்யாண கலாட்டாவில் எங்கும்   அமங்கலிகள்  கண்ணிலேயே படமாட்டார்கள்.  பாவம்  அவர்கள்.  எத்தனையோ  இளம்   பெண்கள் அவர்களில்  அடக்கம். அவர்களது  உடை  நார்மடி  என்று சொல்லப்படும்  ஏறக்குறைய காவி கலரில்  சிவப்பு  அல்லது  கருப்பு  கரை,  அல்லது கரையே  இல்லாமலோ பதினெட்டு  முழம்.  மொட்டை தலையை  சுற்றி அது கழுத்தை  மூடி  இருக்கும்.     தலையில் சிகை இல்லாமல்  நகை இல்லாமல், கண்களில்  ஏக்கத்தோடு,   முகத்தில் மலர்ச்சி  இன்றி, வெறும்  வேலை, வேலை, வேலை  ஒன்றே  அவர்களது கடமையாக  உழைக்கும் சமூகத்தில்  ஒதுக்கிவைக்கப்பட்ட  மதிப்பு  மரியாதை  இழந்த  தெய்வங்கள்  அவர்கள்.  இந்த கல்யாண ஏற்பாடு கள் பக்ஷணங்கள், அப்பளம், வடம்,  ஊறுகாய் எல்லாம்  அவர்களால்  தான்  தயாராகும்.    அனைவருக்கும்  வேளா  வேலைக்கு  உணவு கிடைக்கும்.   இவர்களைப்பற்றி  நிறைய   எழுதவேண்டும் .  ஒருநாள் எழுதுகிறேன்.  

 பெண்கள் பாடவேண்டும்  கண்டிப்பாக   என்பதற்காக  சில  பாட்டுகளை  வாத்தியார்  வைத்து   சொல்லிக்  கொடுப்பார்கள்.  சாரீரம்  இருக்கிறதோ  இல்லையோ  பெண்கள்  பாட்டு   நாலு  ஐந்தாவது  கைவசம்  தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  படிப்பு  முக்கியமில்லை.  கடிதம்  எழுதக்கூடாது.  ஆனால்  கார்டு வந்தால்   அதை  எழுத்துக்   கூட்டி  படிக்கும்  அறிவு   இருந்தால் போதும்.  தமிழ் ஒன்று  தான் மொழி.  

ஹார்மோனியம்  எல்லார் வீட்டிலும் இருக்கும். நாட்டியம் குடும்பப்  பெண்களுக்கு   அவசியம்  என்று  அவர்கள்  நினைக்கவில்லை. தெரிந்தாலும்  அது  வெளியாட்களுக்கு  எதிரில்  இல்லை.  ஆங்கிலம்  தெரியாது எவருக்குமே.  

 கணக்கு  எல்லாம்  மனக்கணக்கு  தான்.  மாகாணி,  வீசம், வேலி ,  மா,  ஆழாக்கு  உழக்கு,  படி,  சேர்,  வீசை,   மரக்கால் என்று  தான்  பேசுவார்கள்.  பணம் நிறைய  இருந்தால்  நம்பகமான ஒருவரிடம் எல்லோருமே  கொடுத்து வைத்திருப்பார்கள்.  அவர்களும்  நியாயமாக  வேண்டும்போது, தேவைக்குத் தக்கவாறு  அந்த  பொற்காசுகளை  தந்து உதவுவார்கள்.  கொடுத்தவருக்கு  கணக்குத் தெரியாவிட்டாலும் பெற்றவர்  அதை  வட்டி போட்டு  திருப்புவார். அவர்  சொல்வது  தான்  வேத வாக்கு.  எழுத்தில்  கணக்கு  வழக்கு  கிடையாது.  பிள்ளையாருக்குப்  பொதுவாக  என்ற நம்பிக் கையில்  இந்த  பட்டுவாடா  நடைபெறும். .  

 ஒருவருக்கு  சங்கீதம்  தான் உத்யோகம்,  கவித்வம்,   புலமை  தான்  பாண்டித்தியம்  என்றால்  அவர்   ஊர்  ஊராகப்  போய்   அங்கு  இருக்கும்  தனாதி பதிகளை,  மிராசு,  ஜமிந்தார்,  குறுநில  ராஜா,  ஆகியோரைக்  கண்டு  அவர்களைப்  புகழ்ந்து பாடி அவரிடமிருந்து  பெற்ற  வரிசைகளோடு,  பொருள்களோடு, மூட்டை கட்டி தூக்கிக் கொண்டு ஊர்  திரும்புவார்.    வித்துவான்கள்   சிலரை  அந்தந்த  ஊர்   பெரிய மனிதர்கள்  உங்கள்  குடும்பத்தோடு  இங்கே வந்து விடுங்கள்  என்று  அழைத்து  ஆதரித்தார்கள்.  நடக்க  முடியாத வர்களை  குதிரை வண்டி, மாட்டுவண்டி வைத்து   அழைத்து போவார்கள்.  கோடி பணம்  வந்தாலும்  ஊரை விட்டு  நகராதவர்களும்  வாழ்ந்தார்கள். அவர்களது  பாடல்களைக்  கேட்க  பல ஊர் களிலிருந்து   படித்தவர்கள், பண்டிதர்கள், ரசிகர்கள்,  சிஷ்யபிள்ளைகள்   வந்தார்கள்.  சிலகாலம் அவரது  வீட்டிலேயே  தங்கி கற்று முடிந்தபின்  ஊர்  திரும்புவார்கள்.  

என் குடும்ப  முன்னோரில்  பலர்  புலவர்கள், சங்கீத  வித்வான்கள்.   இவ்வாறு  தான்  வாழ்ந்தார்கள்.  அவர்கள்  தங்களது சாதுர்யத்தை  அந்த  பெரிய மனிதர்களைப்  புகழ்ந்து  இயற்றிய பாடல்களால்   அவர்களை மகிழ்வித்து  பரிசு  பெற்று  அவர்கள்  ஜீவிதம்  ஓடியது.  சிலர் பொதுவாக  கடவுள்  மீது பாடல்கள்  இயற்றி  அதில்  எங்காவது  தன்னை  ஆதரித்த  அல்லது தன்னை  பராமரித்த  அந்த  பிரபு,  ராஜா, வள்ளல்  பெயரைக்  குறிப்பிடுவதும் ஒரு வழக்கம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...