Friday, February 14, 2020

VALENTINE'S DAY




          கனவு பலிதமானால் அநுராக  போகமே.  

                                      J K  SIVAN 


''கோண்டு,   நீங்கள் காதல் செய்ததுண்டா?   இந்த கேள்வியை  காகிதத்தில் எழுதி கையில் கொடுத்தேன்.  கோண்

டு என்கிற கோதண்டராமனுக்கு  84 வயது.  காது கேட்காது.   கண்ணாடியை துடைத்து போட்டுக்கொண்டு படித்துவிட்டு   மளுக்கென்று பல்லில்லாமல் சிரித்தார். பதில் சொன்னார்:  

''  இன்னிக்கு  பிப்ரவரி 14/   வருஷாவருஷம் காதலர் தினமோ கத்திரிக்காய் தினமோ என ஏதோ ஒன்று சொல்கிறார்களே.  எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. காதல் என்று வார்த்தை இருப்பதே தெரியாதவர்களாக வளர்ந்து விட்டோம்.அது தெரிவதற்குள்ளேயே கல்யாணம் செய்து வைத்து விட்டா'' 

நான் பதில் சொன்னால் காது கேட்காது. அதற்காக நான் ஊருக்கெல்லாம் கேட்கும்படி வேலன்டின் தினம் பற்றி பிரசங்கம் பண்ணமுடியுமா? ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து பரிதாபமாக தலையாட்டினேன்.

''எனக்கும் இந்த ஒரு வேலெண்டின் தினத்தில் தான் கல்யாணம். 14.2.1951. காமு அழகாக இருப்பாள் 15 வயசிலேயே. ஒன்பது கஜத்தில் மயக்கினாள். இடுப்பிலே ஒட்டியாணம். மூக்கிலே புல்லாக்கு. காதிலே மாட்டல் தலை   நிறைய அழகு சாமான்கள் சுட்டி, நெத்தி நிறைய குங்குமம். எங்கம்மா அவளை ராஜராஜேஸ்வரி மீனாக்ஷி என்று கூப்பிடுவா. என்னை குதிரை மேலே ஏத்தி ஊர்வலம் பண்ணினா. காஸ் லைட் பாதிலே எரியல்லே. ரொம்ப கஷ்டப்பட்டு எங்கிருந்தோ தீவர்த்திகள் கொண்டுவந்தா''. இப்போ ஒரு பேரன் ஆஸ்திரேலியா. ரெண்டு பேத்தி லண்டன் அமெரிக்காவிலே.''

அது சரி வேலெண்டின் தினம் என்ன என்றே தெரியாமல் அன்று கல்யாணம் பண்ணிக்கொண்டீர்களா? என்று நான் அவர் காதில் ரகசியமாக கேட்கவில்லை. உரக்க கத்தினேன்.

பல்லில்லாமல் சிரித்தார் கோண்டு மாமா.

புனித வேலெண்டின் என்று ஒரு சாமியார். அமேரிக்கா முதலாக பல தேசங்களில் அவரை இன்றும் நினைத்து கொண்டாடுகிறார்கள். முழுக்க முழுக்க இளசுகள். பூங்கொத்துகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் பண்டம் மாற்றிக்கொள்கி றார்கள். ரோமாபுரி ராணிகள் காலத்திலிருந்து விக் டோரியா ராணி காலம் வரை யிலும் கூட இந்த சமாச்சாரம் தொடர்ந்திருக்கிறது. 

யார் இந்த புனித வேலன்டின்? அவருக்கும் பெப்ரவரி 14க்கும் என்ன சம்பந்தம்? ஆனால் உலகமுழுதும் அந்த நாள் ஆரம்பத்தில் ஒரு புனித, மத சம்பந்த உலகளாவிய தொடர்பு கொள்ளும் நாளாக இருந்ததுடன் காதல் ஈர்ப்பு தினமாகவும் இருந்திருக்கிறது. நல்லவேளை இது ஒரு விடுமுறை நாளாக்கப்படவில்லை.

இந்த புனித வேலெண்டின் என்ன செய்தார்? ரோமாபுரி ராணுவ வீரர்கள் பலருக்கு திருமணம் செய்து  வைத்தவர். ராஜாவிற்கு இந்த சாமியார் தனது ராணுவ வீரர்களுக்கு அவ்வாறு திருமணம் செயதுவைத்தது பிடிக்கவில்லை. ராணுவ வீரர்கள் திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்று அவனது கொள்கை. சாமியாரைச் சிறையிலிட்டான் ரோமாபுரி ராஜா.கிறிஸ்தவர்களை பிடிக்காது அவனுக்கு. அவர்களு க்கெல்லாம் சாமியார் அறிவுரை வழங்கியது வேறு வேலெண்டின் மீது குற்றம். இதில்  ஒரு அதிசய திருப்பம் என்ன தெரியுமா? வேலெண்டினை சிறையில் அடைத்த ரோமாபுரி ராஜாவின்
பெண்ணுக்கு பார்வை கிடையாது. வேலெண்டின் தான் அவளுக்கு பார்வையை மீட்டுக்கொடுத்தது. வேலெண்டினை தண்டித்து கொல்லும் முன்பு சாமியார் அந்த பெண்ணுக்கு ''நான் விடைபெறுகிறேன் -- இப்படிக்கு உன் வேலெண்டின்'' என்று ஒரு ''டச்சிங் ''கடித  மெழுதினார்.

முதலில் வேலென்டின் வகை காதல் வெகு வேகமாக 14ம் நூற்றாண்டில் எங்கும் பரவியது. 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆண்களும் பெண்களும் சந்தித்து பூ, தின்பண்டம், வாழ்த்து மடல்கள் பரிமாறிக் கொண்டார்கள். இதை வேலண்டின் தினம் என்று கொண்டாடினார்கள்.  அம்பு குத்திய இதய உருவில் ஏராளமான சித்திர மடல்கள். இறக்கை கொண்ட தேவ தூதன் காம பாணத்தை வில்லை வளைத்து அவர்கள் மீது எய்த மாதிரி பொம்மைகள். தனது வாயில் ஒரு செய்தி மடல் தாங்கிய புறாக்கள் படங்கள் பலரை சென்று அடைந்தன. .

வேலண்டின் தின ''சாவி'' களை காதல் சின்னமாக பரிசளிப்பது ஒரு வழக்கம்.
'' உன் மனதைத் திற. என்னை உள்ளே வைத்து பூட்டிக்கொள்'' 
சேதி சாவி மூலம் சென்றது. ஐரோப்பாவில் இப்படி சாவிகள் பல இடங்களில் கை மாறின.

இப்போது வாட்ஸாப், முகநூல் வேலெண்டின் தினத்தை பெரிதும் பரப்பி எத்தனையோர் மகிழ்கிறார்கள்.
ரோமாபுரி ராஜா 2ம் கிளாடியஸ் வேலன்டின் சாமியாரை தனது மதத்துக்கு மாறச் சொல்லி கட்டளையிடப் போய், அவர் அவனை கிருத்துவராக மதம் மாற போதித்து அவனால் உயிரிழந்தார் என்று ஒரு தகவல்.
ராஜாவின் மகள் கண் பார்வையை வேலண்டின் மூலம் திரும்பப் பெற்று கிறித்துவ மதம் மாறினாள் .அவளோடு நாற்பது ஐம்பது பேரும் சேர்ந்தார்கள் என்றும் தகவல்.

காதலில் கண்ணிழந்தவர்கள் வரிசையில் மேலே சொன்ன அரசகுமாரி சேரமாட்டாள். கண் பெற்றவள் அவள். முதல் வேலண்டின் கடிதாசு ''உன் வேலண்டின் '' என்று அவர் அவளுக்கு எழுதியது உலகமெல்லாம் இன்று பல வேலன்டின்களை உருவாக்கிவிட்டது. அவர் காதல் சின்னமாகி விட்டார். அவர் கல்லறை அருகே ஒரு பாதாம் மரத்தை நட்டாள் அந்த  ராஜ குமாரி. பாதம் மரம் ஒரு வேலண்டின் அட்டைகளில் ஒரு அடையாளமாகி விட்டது. வேலண்டின் கையில் மோதிரத்தில் ஒரு இறக்கை தேவன் காம பாணம் எய்யும் வில்லோடு உருவமாக இருக்கும். பலர் வேலன்டின் தினத்தில் இது போல் மோதிரம் பரிமாறிக் கொள்கிறார் கள்.

காதலாவது கத்திரிக்காயாவது என்று சொல்பவர்களுக்கு வேலன்டின் புரியாது. கட்டுப்பாடு மனதுக்கு தானே தவிர எங்கேயோ உருவான ஒரு வழக்கத்துக்கு அடிமையாவதற்கு இல்லை. இரு உள்ளங்கள் ஒன்றை ஒன்று நேசிக்கும்போது அதன் ஆதார ஜீவ நாடி பரஸ்பர தூய அன்பு, பாசம், விட்டுக்கொடுக்கும் மனோபாவம் கொண்டதாக அமைவதற்கு எந்த வெளிநாட்டு சம்ப்ரதாயமும் வேண்டாம். அப்படித்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர். நாமும் அவர்களை பின்பற்றி நிறைய அவர்களது வாழ்க்கையின் பல நல்ல அம்சங்களை கடைபிடிக்கவேண்டும்.

எது எப்படியோ, திடீர் சாம்பார், திடீர் ரசம் மாதிரி திடீர் காதல் திருமணத்தில் கொண்டுவிட்டு விடும் போது அது ''மணம் '' வீச மறந்து போய் இப்போது நிறைய ''பணம் '' பேசுகிறது. ''மன முறிவில் '' பல திருமணங்கள் சீக்கிரமே முடிந்து வாழ்க்கையை நாசம் செய்வதை கண்கூடாக காண்கிறோம். நிதானம் தேவை. சரியான சம்பந்தம் அமைய நிறைய முன்னெச்சரிக்கை விதிகள் இருக்கின்றன. அவற்றை மீராமல் முடிவெடுக்க வேண்டும். இக்காலத்து பெண்கள் பிள்ளைகள் படித்தவர்களாகவோ, கை நிறைய காசு சம்பாதிக்கிறவர் களாகவோ மட்டும் இருந்தால் போதாது. திருமணம் ஆயிரம் காலப் பயிர், ஒரு வம்சம் உருவாகும் ஆதி காரணம் என்று புரிந்து ஜாக்கிரதையாக முடிவெடுத்து பெற்றோர்க்கும் மற்றோர்க்குமட்டுமல்லாமல், தமக்கும் வாழ்வில் பயன்தரும்படியாக செயது கொள்ளவேண்டும்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...