Thursday, February 6, 2020

SADASIVA BRAMMENDHRA




நம்மிடையே  வாழ்ந்த ஒரு  ப்ரம்ம ஞானி 
J K SIVAN

சில நூற்றாண்டுகளுக்கு  முன்பு  நம்மோடு வாழ்ந்த ஒரு  அவதூத  (முற்றும்  துறந்தவர்,  உடை  ஆடை  உட்பட) ஞானி  தான் சதாசிவ  ப்ரம்மேந்த்ரர்.  ''பிபரே ராம ரசம், ப்ருஹி முகுந்தேதி,  காயதி வனமாலி, சர்வம்  பிரம்ம  மயம்''   போன்ற அருமையான  பாடல்களைக் கேட்கும்போதும்,  பாடும்போதும்  என்னால்  மறக்கமுடியாதவர். அவற்றையும் இன்னும்  எத்தனையோ  ஸ்லோகங்களை, ஸ்தோத்திரங்களை  இயற்றியவர் இந்த ப்ரம்ம ஞானி.  பல அற்புதங்களை  நிகழ்த்தியவர்.  ஒரு அற்புத நிகழ்ச்சி மட்டும்  சொல்கிறேன்: 

அவதூதராக  திகம்பர  சாமியாராக  ஆடையின்றி  சதாசிவ ப்ரம்மேந்திரா ஒருநாளைக்கு ஒரு முறை  ஒரு இடத்தில் மட்டும் தான் பிக்ஷை  ஏற்பவர். அப்போது எது கிடைக்கிறதோ அது தான் அன்றைய உணவு. 

ஒரு முறை  பசி வேளையில்  ஒரு  முஸ்லிம்   அந்தப்புரத்திற்குள்  விடுவிடுவென்று நுழைந்தார்.  அவருக்கு  ஆண்  பெண், ஜாதி மதம்  எந்த  வித்தியாசமுமே  கிடையாதே.   முஸ்லீம் பெண்கள் ஒரு ஆசாமி துணையின்றி உள்ளே நுழைந்து ஆகாரம் கேட்டது முஸ்லீம் பெண்களுக்கு கோபம் உண்டாக்கியது.  விரட்டினார்கள்.  அவர்  ஒன்றும் நடக்காதது போல்  பேசாமல் சென்றுவிட்டார். அன்று அவருக்கு உணவு காற்றும்  காவேரி நீரும் தான்.
ஆகாரம் ஒன்றும் கொடுக்காவிட்டாலும்  அந்த  பெண்கள்  முறையிட்டதால் கோபம் கொண்ட  அந்த வீட்டு  முஸ்லீம் சதாசிவ ப்ரம்மேந்த்ராளை  துரத்த்திக்கொண்டு   தேடினான்.  அவரோ  உணவு சிந்தனையில்லாமல் காவிரிக்கரை  நோக்கி  நீராவது   பருகினால் போதுமே  என்று  நடந்து கொண்டிருந்தார். ஏதோ  ஒரு புது நாமாவளி  அவர்  வாயினின்றும்  வெளி வந்துக்கொண்டிருந்தது.    முஸ்லீம் அவரைப்  பார்த்து விட்டு  கடும்கோபத்துடன்   கொண்டுவந்த கூர்  வாளால்  அவர் தோளை  வெட்டி ஒரு கையை   துண்டாக்கி னான்.   அவரோ  தனது  ஒரு  கை  வெட்டப்பட்டதையோ   அது  துண்டாகி  கீழே  ரத்த ஆற்றில்  மிதந்ததையோ  அறியவில்லை.   
வலியோ  பசியோ  எதுவுமே  இன்றி  அவர் தானாக  சென்று கொண்டிருந்தார்.   முஸ்லீம்  ஆச்சர்யத்தில் தான் நடுங்கி விட்டான்.  ''என்ன  ஆச்சர்யம்,  இந்த  மகான்,  என்னை பார்த்தார், நான்  வெட்டினதை அறிந்தார்,  கை  துண்டானது,  கீழே  ரத்தம்  சொட்ட சொட்ட  அவர்  எதுவுமே  நடக்காதது போல்  பேசாமல்  நடந்து போகிறாரே''  மனிதனல்ல  அவர் யாரோ ஒரு பெரிய  மஹான்  என்று  புரிந்து கொண்டான்.  அவர் முன்னே  ஓடிவந்தான்.  வணங்கினான்.
 ''சுவாமி  என்னை  மன்னியுங்கள், உங்கள்  கரத்தை  வெட்டின  இந்த   பாவிக்கு தண்டனை கொடுங்கள்'' என்று  அவர்  காலில்  விழுந்தான்.    அவர்  கவனம்  இப்போது தான்  அவனிடமோ  தனது வெட்டப்பட்ட  கையைப் பற்றியோ  எண்ணியது.  கீழே விழுந்திருந்த கையை கொண்டுவந்து கொடுத்தான்.  அதைப்பார்த்தார்.  கை எங்கே  என்று பார்த்தார்,  தடவினார்   தோளில்  வைத்துக்கொண்டார்.  கை  மீண்டும்  அங்கே  தானாகவே உடலோடு ஒன்று சேர்ந்துவிட்டது. இயங்கியது.   இந்த  நிகழ்ச்சி  தான்   சுவாமி  சிவானந்தாவை  உலுக்கி   ஆத்ம  விசாரத்துக்கு  இட்டுச் சென்றது  என்று அவரே  எழுதியதை படித்து ஆச்சர்யப்பட்டேன். 
இப்படிப்பட்ட  பிரம்ம  ஞானி  சதாசிவ  ப்ரம்மேந்த்ராவின்  அவருடைய  ஒரு  சிறந்த  நூல்   ஆத்ம  வித்யா விலாசம். மொத்தம் 43  ஸ்லோகங்கள். அத்தனையும்  தன்னை உணர்ந்தவன்  பற்றியவையே.    அதில்  இருந்து உங்களுக்கு  சில  ஸ்லோகங்களின் அர்த்தத்தை சுருக்கி கொஞ்சூண்டு தரட்டுமா?:  

* ஆத்மா  கண்ணுக்கு  தெரியாதது. தேட  வைப்பது.  எளிதில்  பிடிக்க முடியாதது.  வேதம்  விசித்தரமாக   என்ன சொல்கிறதென்றால்  ஒரு பசுவின்  வாலில்  ஒரு  முடியை எடுத்து  அதை  நூறாக பிளந்து, ஒரு  துக்கிணியூண்டை எடுத்து,   அதை மறுபடியும்  ஆயிரம்  பாகங்களாக  பிரித்து, அந்த ஆயிரத்தில் ஒன்றை  மீண்டும்  ஒரு  ஆயிரமாக  துண்டாக்கி  அதேபோல்  அந்த  ஒரு  துண்டையும்  மறுபடியும்  ஆயிரம்  துண்டாக்கு.   உன்னால் முடிந்ததா அப்பனே.  அப்படி செய்துவிட்டாயா.  கடைசியில்  மிஞ்சுவது ஏதாவது  இருந்தால்  அது  தான்  ஆத்மாவின்  அளவு.  போதுமா?     இப்படி சொன்னதன்  காரணம் என்னவென்றால்   ஆத்மா என்பது  அவ்வளவு நுட்பமானது  என்று விளக்க.  இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த  ஆத்மா  எங்கும்   இருக்கும் சர்வ வியாபி.  உணர முடிவது.   சதானந்த ஸ்வரூபம்.  இது அல்ல  இது அல்ல  என்று ஒவ்வொன்றாய் விலக்கினால்  கடைசியில்  எஞ்சுவது.  மிஞ்சுவது.

*  தக்ஷிணா மூர்த்தி யார்?   கல்லால மரத்தின் கீழ்  வீற்றிருந்து, சின்  முத்ரை காட்டி  (ஜீவனும்  பிரம்மமும் ஒன்று என விளக்க)  வார்த்தையின்றி  மோன நிலையில்  பிரம்ம ஞானத்தை உபதேசிப்பவர்.  அறியாமையை போக்கி ஞானத்தை  அளிப்பவர்.
*  என்  மனதில்  நான்  வணங்குவது  சிவேந்திர குருவை.  அவரே எனக்கு அத்வைத தேஜஸ் (ஒளி அளிப்பவர்.  சம்சார சாகரத்தை கடக்க (உலக வாழ்வின்  துன்பங்களிலிருந்து  விடுதலை பெற  ஒரு  நாவாய்., படகு ஆனவர்.

*  என்  சிவேந்திர குருவே, உங்களது  தாள் பணிகிறேன்.  உங்கள் அசாதாரண சக்தியும்,  உதடுகளில் உருவாகும் குறிப்புகளும் தான்  எனக்கு   '' நான்''  யார்  என்று  உணர்த்தின.   சர்வமுமாக  விளங்கும்  பிரம்மத்தில்  நானும்  உண்டு என்று  அறிவித்தன.  என்னில்  பிரம்மத்தை  காண  உதவின. எனக்கு  இதால்  எத்தனை  சொல்லொணா இன்பம், எல்லையில்லா  அமைதி.  இதைப்போய்  நான்  எத்தனை வேதம்  படித்தாலும் அனுபவிக்க முடியுமா. அறிய முடியுமா?.

*   பிரம்மம் தான்  காரணாதி காரணம். காரணத்தின்  காரணம்.  பிரபஞ்சம்  ஏற்பட  காரணமே,  மாயை என்கிற  பிரம்மத்தின் ஒரு  பகுதி யின்  மூச்சு,  அதிலிருந்து  தான்  பஞ்ச  பூதங்களும்  எழுந்தன.  களிமண்ணை பிசைந்து  மொத்தையாக  சக்கரத்தின் மீது வைத்து அதன்  சுழற்சியில்  உருவாகும்  மண்  பாண்டம் போலவே  தான்  இது.   அந்த  மாயக் குயவனார்  தான்  சர்வேஸ்வரன்.

*  இந்த  பர  ஒளி, பிரகாசமே  ஆத்மா. அதுவே எதுவும். வேரொன்றுமில்லை. இதற்கு , இந்த  பார்  ஒளிக்கு,   ஒரு  உருவம் கொடுக்க   முடியுமா.   இருக்க முடியுமா.    எல்லைக்குட் பட்டது  தானே  உருவம்.  அகண்டத்துக்கு ஏது எல்லை , ஒலி,  குரலேது?  அது  தொட முடியாதது, பிடிபடாதது.


*  இப்படித்தான்  என்று  சொல்லமுடியாத  குணமற்றது.  புராதனமா,  புதினமா,  என்று  புரிபடாதது. இளசா பழசா  என்று  இனம் காண முடியாதது.  அழியுமா  அழியாததா என்றே வகைப்படாதது.  கண்ணில் காண முடியாதது.  அனுபவத்தில்  உணர முடிவது.  அசைவது போல தோன்றினாலும்  அசைவில்லாதது.  விவரிக்க  இயலாதது.  நமது  நிரூபணங் களுக்கு  அப்பால் பட்டது.  இன்றையது,  அன்றையது,  என்றைக்குமானது.   இப்படியிருந்து   தன்னைத்   தேடுவோருக்கு அவர்கள்  இதயத்திலேயே  கிடைப்பது தான்  அதி  ஆச்சர்யம்.  இருதயக் குகையில்  வசிப்பது.  தேடிப்பிடித்த  ஞானிக்கு  அது  ஆகாயம். பரவெளி. வார்த்தை. பிரபஞ்சத்தில்  பல  உலகிலும்  தெரிவது.  


இன்னும்  நிறைய சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...