Saturday, September 7, 2019

THANK YOU KRISHNA AVK

                  தேங்க் யூ   கிருஷ்ணா.... J K  SIVAN 


                                 
யாராவது மனிதர்கள், சொந்தமோ, நட்போ, மற்றவரோ, ஏதேனும் ஒரு வார்த்தை சொன்னால், ஏதாவது சிறு  உதவி செய்தால்  கூட   ஆயிரம்  தேங்க்  யூ  (thank  you ) வாய்க்கு வாய் சொல்கிறோம். 

 நம்மால் ஒரு சிறு புல்லைக்கூட  உருவாக்க முடியாது.  ஆனால் எங்கு நோக்கினும் இந்த பரந்த உலகில் இத்தனை உணவும், உடையும், தங்க இடம், குடிக்க நீர், உயிருடன் சுவாசிக்க  பிராணவாயு, குளிருக்கு நெருப்பு, கம்பளி, வெயிலுக்கு பனை விசிறி, இளநீர்,  என்னென்னவோ  வழங்கும்  இவற்றை சிருஷ்டித்த  பகவானுக்கு  ஒரு வார்த்தை நன்றி சொல்கிறோமா?  ஒரு கவளம் சாப்பிடும் முன்போ, ஒரு டம்பளர் நீர் குடிக்கும்போதோ ''பகவானே உனக்கே அர்ப்பணம்''  என்று நன்றி கூற வேண்டாமா?

கோவில் என்று ஒன்று ஏற்படுத்தி, எல்லோரும் அவனை நினைக்க, நாம் அனுபவிக்கும் அனைத்தையும், ஆடை, ஆபரணம், உணவு, நீர், பால்,  சங்கீதம் தாளம், பாவம், நடனம் அனைத்தையும் அவனுக்கே  அளித்து நைவேத்யம் பண்ணும் நன்றிக்கடனை  நம் முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள்.  நாம் ஏன் மறக்கவேண்டும்?  

ஒவ்வொரு வீட்டிலும் சிறிய பூஜை அறை , படங்கள், விகிரஹங்கள், ஸ்தோத்ரம், பண்ணுவது அவனை சதா நினைக்கவே. 
பொதுவாக இதை செய்வதற்கு தான் ஆலய வழிபாடு.
கோவிலுக்கு  செல்லும்  மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.  அடுத்த தலைமுறையையாவது கட்டாயம் இதற்கு பழக்க வேண்டாமா?

பகவானைப் பற்றிய நினைவு வரவேண்டும் என்பதற்காகவே தினமும் நிறைய எழுதுகிறேன். கதையாக எழுதி அவர்கள்  மனதில் பதிய வைக்க முயல்கிறேன். அதற்கு அந்த பகவான் கிருஷ்ணன் தான் சக்தியை அளிக்கவேண்டும். விலையில்லாமல் புத்தகங்கள் அச்சிட்டு பரிசாக அளிக்கவேண்டும் என்று தான் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் பாடு படுகிறது. நண்கொடை கிடைப்பதை வைத்து அச்சு செலவுகளை சமாளிக்கிறோம்.

மஹாபெரியவா ஒரு தடவை எழுதியதை படித்தபோது கண்களில் நீர் மேலே படிக்கமுடியாமல் மறைத்தது.

''சின்னஞ்சிறிய சூக்ஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்து விட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கத் தவறுகிறோம். இப்போது ஒரு ஊரில் யார் ரொம்ப அழுக்குத் துணி கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஸ்வாமிதான் என்று தெரிகிறது. நம் ஊர் கோயிலில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம் மனஸின் அழுக்கும் போய்விடும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. அரனை மறவேல், திருமாலுக்கு அடிமை செய் என்றெல்லாம் புண்ணிய மொழிகள் வழங்கும் இந்த நாட்டில், ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஈஸ்வரன் கோயிலையும் பெருமாள் கோயிலையும் நல்ல நிலையில் வைத்திருந்து வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இது நம் முதல் கடமை''

கோவில்களில் வியாபாரம் மலிந்து விட்டது.  கோவில்களின் வருமானம் தனி மனிதன் சுயலாபத்துக்கு, சுயநலத்துக்கு பயன்படுகிறது என்று கேள்விப்படுவது நியாயம் தான். எத்தனையோ கோவில்களின் நிலங்கள் குளங்கள், காணாமல் போய்விட்டன.  தெய்வங்களின் சிலைகள் களவாடப்பட்டு விற்கப்பட்டு வாழும் சிலர் பிடிபட்டு, வெளிநாடுகளிலிருந்து அந்த சிலைகள் மீட்கப்படுவதாகவும் படிக்கிறோம்.   எங்கோ ஒன்று இரண்டு தான் கண்டுபிடிக்கப்படுகிறது. எண்ணற்ற மற்றவை, மரகத  லிங்கங்கள், கோவிலுக்கு செலுத்தப்பட்ட  ஆபரணங்கள், விலையுயர்ந்த கற்கள்.......  யாரிடம் கணக்கு இருக்கிறது. யார் இது தணிக்கை செயது சரியாக இருக்கிறது என்று மக்களுக்கு பக்தர்களுக்கு தெரிவிக்கிறார்கள்?

ஆயிரம் வருஷ ஆலயங்கள் பல கோடி மந்திரங்களினால் சக்தி  பெற்ற  தெய்வச்சிலைகளை கொண்டவை. மஹா பெரியவா இதையும் சொல்கிறார்:

'' எங்கேயும் உள்ள மின்சாரத்தை வெளிப்படுத்த ஆங்காங்கே மின்சக்தி ஸ்தாபனம் ( Power House) இருப்பது போல், எங்கும் உள்ள ஈஸ்வர சக்தியை வெளிப்படுத்த ஆங்காங்கே மந்திர பூர்வமாக ஆகமபூர்வமாக ஆலயங்கள் எழுப்பப்பட்டு, அவற்றின் பூஜாக்கிரமங்கள் உருவாகி உள்ளன. மின்சக்தி இயந்திரத்தில் நாம் தாறுமாறாகக் குறுக்கிட்டால் தேகம் போய்விடும். அதுபோலவே ஆத்ம க்ஷேமத்துக்கான ஆலய யந்திரத்தில் குறுக்கிட்டால் ஆத்மா போய்விடும்.''
குருக்கள் அநுஷ்டானம் இல்லாதவராக இருக்கிறாரே அதனால் சாந்நித்தியம் போகவில்லை என்றால், நாமும் எதைச் செய்தால் என்ன என்கிறார்கள். அதாவது பாக்கி இருக்கிற ஸ்வாமியையும் வெளியே அனுப்பிவிடலாம் என்கிறார்கள்.
கோவில்களில்  சில பணக்கார கோயில்களாகவும் எத்தனையோ  விளக்கேற்ற வஸ்திரம் அணியக்கூட  வழி இல்லாதவையாக சிதிலமடைந்த ஆலயங்களாக இருந்தால் அதில் இருக்கும் அர்ச்சகர், இந்த கோவில் சம்பளத்தை, வருமானத்தை நம்பி வாழும் அவர்கள் குடும்பம் எப்படி பிழைக்கும்?  
நிறைய கோவில்களுக்கு பூஜை செய்ய  அர்ச்சகர் இல்லை.  நாள் முழுதும் கால் கடுக்க நின்று பணத்தை வாரி வீசும் பக்தர்கள் மதம் ஒருமுறையாவது மற்ற கோவில்களுக்கும் சென்றால் தான் கிராமங்கள், பட்டி தொட்டிகளில் உள்ள பழம் பெரும் ஆலயங்கள் கிரமமாக செயல்படும். அர்ச்சகர்களும் வருமானம் வரும் என்ற நம்பிக்கையோடு தங்கள் பணியை தொடர்வார்கள்.  அரசாங்கத்தை எதிர்பார்த்து எந்த பயனும் இல்லை. பக்தர்கள் தான் நன்றிக்கடனாக இறைவனுக்கு இதை செய்யவேண்டும். 

ஒரளவு அநாசாரத்துக்குத் தாக்கு பிடிக்கிற சக்தி கோயில்களில் இருக்கிறது. அதற்காக முழுக்க அநாசரமாக்குவோம் என்று கிளம்பினால் நமக்குத்தான் பயன் நஷ்டமாகும். ஸ்வாமிக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கோயிலில் இப்போதுள்ள ஆசாரக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமேயன்றி, ஆகமத்தில் இல்லாத புது விஷயங்களைப் புகுத்தக்கூடாது. நாம் கட்டுப்பாடாக இந்த ஆசாரங்களைப் பின்பற்றி அத்தனை பேரும் கோவிலுக்குப் போவது என்று ஏற்பட்டால் குருக்களும்தானே சரியாகி விடுவார்.

ராஜீய விவகாரங்களின் பொருட்டு மத விஷயங்களை மாற்றக்கூடாது. புதிது ஸ்திரமாக இராது. ஆடி மாதம் வெள்ளம் வரும்போது கரையைச் சில இடங்களில் இடிக்கும். அதுபற்றிக் கவலை வேண்டாம். புது ஆவேசத்தைப பற்றிக் கோபம் கொள்ள வேண்டாம். ஜனங்களிடம் நாம் நியாயத்தை விளக்கினால் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். புது ஆவேசம் தானாகப் போய்விடும். சீர்திருத்தக்காரர்கள் நம் சாஸ்திரங்களைப் படிக்கவில்லை. அதனால் கோபம் அடைகிறார்கள். அதற்காக நாமும் கோபம் கொள்ளலாகாது. எதிர்ப்பவர்களிடமும்  நமக்குப் பிரியம் வேண்டும். ஆகமத்தின் கருத்தை நாம் அவர்களுக்கு  நட்போடு நிதானமாக உணர்ச்சி வசப்படாமல்  எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்.

வாரம் மாதம்  சில நாட்கள் கோவில்களை அடைந்து புல் பூண்டு முள்  அகற்றி நடக்க வழி செய்வோம், விளக்குகள் ஏற்றுவோம், அர்ச்சகர்களும் உணவு உடை வழங்க ஏற்பாடு செய்வோம், அவர்கள்  பகவானுக்கு தங்கள் பணிகளை செய்ய நாம் முதலில் அவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.   காஞ்சி மட ஆதரவில் ஆலய வழிபாட்டுக் குழுக்கள் சென்னையில் பல பாகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும்  சில கோவில்களுக்கு இவ்வாறு சென்று அர்ச்சனை, அபிஷேகம், நைவேத்யம் அளித்து உள்ளூர் மக்களை கோவில்களை நன்றாக பராமரிக்க ஊக்குவிக்கிறது. நங்கநல்லூரில் ப்ரதிமாதமும் மூன்றாவது ஞாயிறு  ஒரு பஸ் இதற்கென்றே  ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
  
இந்தக் கோவில்களைக் கட்டிய காலத்திலிருந்து இன்றுவரை அவற்றில் பின்பற்றப்படும் நியதிகளை அப்படியே பின் பற்றவேண்டும்.  நாம் சரியாக இருந்து, உண்மையான பக்தியுடன் வழிபாடு செய்து, உண்மையான அன்புடன் எடுத்துச் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். இன்று கோயில்கள் விஷயம் இப்படியானதற்கு நாமே காரணம் என்று உணர்ந்து, முதலில்  அதை உணர்ந்து திருந்தி நன்றிக்கடனை  திருப்தியோடு  விடாமல் செய்வோமா?  
ஆரம்பத்தில்  சொன்ன  ஆயிரம்  தேங்க்யூ  THANK  யூ  இப்போது உங்களுக்கு  சொல்லலாமா?   இதை படித்து விட்டு வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் பழைய  யாரும் அதிகம் வராத கோவிலுக்கு அடிக்கடி செல்வோமா?






ஆரம்பத்தில் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...