Sunday, September 29, 2019

SIVAN SAR

          இன்று  சிவன் ஸார்  ஆராதனை   28/9/19 
                                              J K SIVAN

ஒரு ரகசிய செயதி 


என்னை ''சிவன் சார்'' என்று நிறைய பேர் நட்போடு கூப்பிடும்போது ' வேண்டாம் தாத்தா சார்'' என்றே கூப்பிடுங்கள் என்கிறேன். நான் ஏன் சங்கடத்தோடு நெளிய வேண்டும் என்பதற்கு ஒரு முக்ய காரணம் என்ன என்பதை நான் விளக்க வேண்டாமா?. நான் ஏதோ அகம்பாவம் இல்லாத ஜீவன் என்று காட்டிக் கொள்வதற் காக அப்படி சொல்வதாக எண்ணவேண்டாம்.

''சிவன் சார்'' என்பது ஒரு கனமான உயர்ந்த பெயர். அதற்கு என்று ஒரு தனி மரியாதை, மதிப்பு, கவுரவம் என்றும் உண்டு. எனக்கு நிச்சயம் அந்த தகுதி கிடையாது.அதை நான் சுவீகரிக்க கூடாதே. ஏன் தெரியுமா?' இதோ காரணம் சொல்கிறேன்.

வேறொன்றும் இல்லை, ஒருவரை நீங்கள் 'இதோ இருக்கிறாரே இவர் ஒரு குபேரன், நாராயணன், அந்த சாக்ஷாத் ஹரிச்சந்திரன்'' என்றால் அவர் அதை ''ஆமாம் வாஸ்தவம்'' என்றா ஒப்புக்கொள்வார்? சங்கோஜம் வந்து ஒட்டிக் கொள்ளாதா? மற்றவர் புகழ்வதற்கு தான் அருகதை அற்றவர் என்று அவருக்கே புரியாதா? இதே ப்ராப்ளம் தான் எனக்கு.

''சிவன் சார்'' என்ற பெயருக்கு உரியவர் ஒரு உன்னத கலி புருஷர். உங்களில் நிறைய பேருக்கு அவரைத் தெரியும், தெரிந்திருக்கும். அவரைப்பற்றி அறியாதவர்களுக்கு கீழ்க்கண்ட சில பாராக்கள் அவரை அறிமுகம் செய்விக்கும்.

அவரை ''சிவன் சார்'' என்றால் தான் தெரியும்.. உண்மைப் பெயர் எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை. . அவரது இயற்கைப் பெயர் பிரம்ம ஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள். அது அவருக்கே கூட மறந்து போய்விட்டிருக்கும். . ரொம்ப நெருக்கமானவர்களுக்கு அவர் 'சாச்சு' . மஹா பெரியவாளே அவரை அப்படித்தான் கூப்பிடுவார்.

அப்படியென்ன அவரிடம் ஏதோ சக்தி? எதற்காக அவரை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவர் ஒரு வேதாந்தி, ஞானி, அருமையான ஓவியர், போடோக்ராபர். இணைத்திருப்பது போட்டோவா ஓவியமா என்று வியக்க வைக்கிறதே. இது தான் காரணமா ? இல்லை சார்.

சாச்சு, என்கிற சிவன் சார் மஹா பெரியவாளின் உடன் பிறப்பு. ஒரு யோகி. அமைதியாக த்யானத்தில் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வாழ்ந்தவர். இப்படி தனது சகோதரரின் பிரபலத்தின் நிழலில் தான் கொடி கட்டி பறக்காதவரை பார்க்க முடியுமா?. அப்படி யாரும் பண்ண பெரியவா அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விஷயம். சமீப காலத்தில் சித்தி அடைந்தவர் சாச்சு என்கிற சிவன் சார். இத்துடன் இணைத்துள்ளது சிவன் சார் தனது தெய்வ சகோதரர் மஹா பெரியவாளை வரைந்த ஓவியம். யாரோ ஒருவர் வீட்டில் இருந்து இந்த உயிரோவியம் வெளியே வந்து நம்மை பிரமிக்க வைக்கிறதே.

திருச்சியில் இருந்து  என் அன்பு நண்பர் பிரசன்னம் அந்த படத்தை எனக்கு அனுப்பியதற்கு என்னோடு இந்த ப்ரசாதத்தை அனுபவிக்கும் உங்களோடு சேர்ந்து அவருக்கு நன்றி சொல்கிறேன்.

சிவன் ஸார்  எழுதிய  அருமையான  ஒரு புத்தகம் ''ஏணிப்படிகளில் மாந்தர்கள்''    அதில் தன்னை ''சிவா'' என்று தான்  சொல்லிக்கொள்வார்.  ஆன்மீக தேடல் உள்ளவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல். அதில் நான் ருசித்த ரசித்த சில விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்கிறேன் 

சாச்சு, பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள், சிவன் ஸார்  என்று எல்லாம்  பெயர் கொண்ட அவர் ஆசார அனுஷ்டானம் தவறாதவர். கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் 11 வது வரை படிப்பு. அய்யன் தெரு ARTS & CRAFTS ல் சேர்ந்து சித்திரம் பயின்றார். சிறந்த புகைப்பட கலைஞர். கும்பகோணம் ‘சிவன் ஆர்ட்ஸ் & போட்டோ ஸ்டூடியோ நிறுவினார். சாச்சு மணவாழ்வில் விருப்பமற்று குடும்பத்தை துறந்து தனிமை நாடினார். காஞ்சி மகா  பெரிய வாளின் அபூர்வமான பல படங்களை எடுத்தார். டபீர் படித் துறையில், மகாபெரியவா காவிரியில் குளித்துவிட்டு, படியில் காவிரியை வடக்கு பார்த்தபடி அமர்ந்திருக்க, பின்னே சுமார் நூறு பேர் படிகளில் சுற்றி நிற்க, '' சாச்சு இந்த படத்தை எடு''  என பெரியவா உத்தரவு. உடனே காவிரியில் இறங்கி நின்றுகொண்டு எடு த்த படம் இணைத்திருக்கிறேன். இதைப் பற்றி சொல்லும்போது ”பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட் இது’‘ என்பார் சிவன் சார்! பின்னர் போட்டோ ஸ்டூடியோவை, தனது பக்தர் வெங்டேஸ்வரா ஸ்டூடியோ பெரியசாமியிடம் ஒப்படைத்தார். ‘கேன்வாஸ் போர்ட்ரைட்’ வரைவதில் தேர்ந்தவர் சிவன் சார். இவர் வரைந்த மகாபெரியவாளின் படம், முடிகொண்டான் வாஞ்சிநாதன் என்பவரது வீட்டில் உள்ள படமும் இணைத்திருக்கிறேன்.


மெலிந்த தேகம். சதா தெய்வ சிந்தனை. தனது தேஹத்தை காட்டி ‘இது, நெருப்பும் சூடும் கொண்ட திருவண்ணாமலை அக்னி ’ என்பார். அவர் ஒரு முறை பஸ்ஸில் சென்று இருக்கையை விட்டு எழுந்திருக்க இன்னொருவர் அந்த இடத்தில் அமர்ந்த அடுத்த கணம் ''ஹா என்று கத்தினார். ''என்னய்யா ஆச்சு என்று கேட்டதற்கு அந்த மனிதர் சாச்சு உட்கார்ந்திருந்த இடத்தை காட்டி '' நெருப்பு சார், சுடுது'' உட்கார முடியல'' என்கிறார்.

நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். , ’நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமா ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன்’ என்ற போது வேண்டாம் என்று நிராகரித்தவர் சிவன் ஸார் சிவ விஷ்ணு ஆலயம் அருகே அக்காலத்தில் நாதன்ஸ் கஃபே .அருமையான ஹோட்டல். அதன் உரிமையாளர் நாதன், அமெரிக்க நண்பர் ஒருவருடன் சிவன் சாரை சந்தித்து ஒரு பெரிய தொகைக்கு செக் சமர்ப்பித்தார். சிவன் சார் வாங்குவாரா? இருப்பு துண்டை காட்டி ”இதுவே எனக்குப் பாரமாக இருக்கு. எதற்கு வேறு பாரம் ?” என்று ஏற்க வில்லை.

காமாட்சி பாட்டி புண்யசாலி. தினமும் குளித்து மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு உலர்த்தி, சாயந்திரம் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி சிவன் ஸாருக்கு தருவாள். அதில் பாதியோ, கால் அப்பளமோ சாப்பிட்டவுடன் சிவன் ஸார் வயிறு நிரம்பும். 15 வருஷ காலம் பாட்டி அப்பளம்.

ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் ''அவ்வளவு தான் '' என்று கை விரித்தபோது சிவன் சார் கவலைப்படாமல் பாட்டிக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்ததார். அப்புறம் என்ன. பாட்டியும் அப்பளமும் இன்னும் 20 வருஷம்!!

ஒருவருக்கு மனக் கஷ்டம். சிவன் ஸாரிடம் சென்று கஷ்டத்தை சொல்லி ஆறுதல் பெறச் சென்றார். சிவன் ஸார் வீடு கதவு சாத்தி இருந்தது. உள்ளேஅவர் குரல் கேட்டது: ''‘எல்லாத்தையும் எல்லார் கிட்டேயும் சொல்லணும்கிற அவசியம் இல்லே. என்கிட்டேகூட சொல்ல வேண்டாம். எல்லாம் தானே சரியாகிவிடும்.’

யாரோடு பேசுகிறார் சிவன் ஸார்? கதவைத்தட்டி உள்ளேசென்றால் உள்ளே சிவன் ஸார் மட்டும் தான் இருந்தார். ஓஹோ, நாம் உள்ளே செல்வதற்கு முன்பே நாம் எதற்கு வந்தோம் என்பதை உணர்ந்து, தனக்காகவே சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று புரிந்தது.

இன்னொரு ஆச்சர்யம்: ஒருவருக்கு வேலை போய் விட்டது. சிவன் ஸாரிடம் சென்று வணங்கினார்: அவர் எதுவும் சொல்வதற்கு முன்பே: ’ஸ்ரீமடத்துக்குப் போய் சந்திர மௌலீசுவரரை தரிசித்து வேண்டிக்கொள்!’ என்றார் சிவன் ஸார். அந்த மனிதர் அவ்வாறே செய்து, மீண்டும் அதே வேலையில் சேர்ந்தார்.

‘ஆங்கரை பெரியவா எனும் ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள்’ என்ற சந்நியாசிக்கு சிவன் ஸார் மீது ரொம்ப பக்தி. அவருக்கு ஒரு முறை இதய அறுவைச் சிகிச்சை ஆகி கை-கால் செயலற்று பேசவும் முடியவில்லை. நண்பர்கள் நேராக சிவன் ஸாரிடம் அழைத்து வந்தார்கள். அவர் பக்கத்தில் நாற்காலியில் உட்கார வைத்தார்கள். சிவன்ஸாரின் கால் கட்டை விரல், சுவாமிகள் மீது பட்டபடி இருந்தது. சுவாமிகள் தும்பைப்பூவை எடுத்து சிவன் ஸாரின் பாதங்களில் சமர்ப்பித்தார். அடுத்து சில நாளில் எழுந்து நன்கு நடந்து, பழையபடி உபந்யாசமும் செய்தார் ஆங்கரை சுவாமிகள்!

ஒருமுறை பெரியவா ‘ நீ திருவெண்காடு போ’ என்று சிவன் ஸாருக்கு உத்தரவிட விடாமல் தொடர்ந்து திருவெண்காடு சென்றார் சிவன் ஸார் . காசியைப் போல் புனிதமானது. மணிகர்ணிகா என்றும் பெயர். அங்கே சுவாமி ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்; வெண்காடர். அம்பாள்- ஸ்ரீபிரம்ம வித்யாம் பிகை. புதன்ஸ்தலம். சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி வெண்காட்டு நங்கை அவதரித்த ஊர். 21 தலைமுறை மூதாதையருக்கு சிராத்தம் செய்து, ருத்ர பாதத்தில் பிண்டம் .தருவது இங்கே விசேஷம்.

சிவன் ஸார் ஜோதிட ம், வானியல் சாஸ்திரம், கணிதப் புலமையிலும் நிபுணர். வேத வித்தான ஸ்ரீவிஜயபானு கன பாடிகள் தான் அனுபவித்த ஒரு காட்சியை சொல்கிறார்:

''... சிவன் ஸார் கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு எதோ ஒரு சப்தமிடுகிறார். அடுத்த நிமிஷம் எங்கிருந்தோ சில குருவிகள் வந்து, அவரது உள்ளங்கையில் கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிட்டன '' இதை மஹா பெரியவா கிட்டே கனபாடிகள் சொன்னபோது பெரியவா சொன்னது: ”சாச்சுவுக்கு மூணு பாஷைகள் (மனித, முருக, பக்ஷி பாஷைகள்) தெரியும்ங்கறது உனக்குத் தெரியாதோ ?”

8.1.1994 அதிகாலை. நிஷ்டையில் இருந்த சிவன் ஸார் யாரிடமோ ‘ இன்று ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது’ என்றார். பிற்பகல், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்வீட்டுக்கு வந்தவர், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். மூன்று மணி அடிக்க ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, சகஜ நிலைக்குத் திரும்பி, ‘எல்லாம் ஆயிடுத்து கிளம்பலாம்’ என்றார்! ' சரியாக 2:58க்கு, மகா பெரியவா ஸித்தி அடைந்தார் --- உலகம் இந்த சோக செய்தியை பெற்றது..! சிவன் ஸார் சகல கlaa வல்லுநர், ஞானி மட்டுமல்ல, தீர்க்கதரிசியும் கூட .

++

சிவன் ஸார் ''சிவா'' என்று எழுதிய ''ஏணிப்படிகளில் மாந்தர்கள் ''புத்தகத்தை ஸ்ரீ ராமமூர்த்தி என்ற சட்டம் படித்த நண்பர் எனக்கு பரிசளித்தார். 634 பக்கம். மாந்தர்கள் நாம் யாவரும் ஏணிப்படிகளில் நிற்பவர்கள். அடியில் இருந்து மேல் வரை பல தட்டு உயரம் படிக்கு படி அதிகம். உயரம் தாழ்ச்சி என்று ரகவாரியாக மக்கள் வித்யாசப்படுபவர்கள். மேல் படி, அடிப்படை, மனிதர்களை அவர்கள் சொல் செயல் ஞானம் மூலம் பாகுபடுத்தி, பாபி, பாமரன், விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகி, தெய்வ விவேகி, தெய்வ சாது, மஹான், துறவி, ஞானி என்று ஆன்மீக லக்ஷணங்களை அற்புதமான விவரிக்கிறார். உலகத்தின் பல பாகங்களில் இருந்து மேற்கோள்கள். காலப்போக்கில் உலக மாறுதல்கள், நாகரிக மோகம், பண்பாடு கலாச்சார மாற்றம் எல்லாம் அவர் கவனத்தில் சென்றிருக்கிறது. '' ஏ.ப .மா.'' அவசரப்படாமல் பொறுமையாக படிக்கவேண்டிய ஒரு முக்கிய புத்தகம்.

அதில் சில கருத்துக்கள்:

''ஒரு அவதார புருஷர்: ‘சர்வ சக்திகளையும் கொண்ட ஒருவர் அல்லது கடவுள், இந்த உலகில் அவதரித்தாலும், அவர் மக்கள் அனைவருக்கும் நிவர்த்தி அளிக்கும் தொண்டில் ஈடுபடுவது இல்லை. இது ஒரு நியதி! ஆனாலும், அத்தகைய ஆத்மிக சக்தி என்றொரு மகத்துவம் உண்டு என்பதை உலகம் அறியும் பொருட்டு, ஏதோ தனக்குத் தோன்றும் ஒரு சில சந்தர்ப்பங் களில், அற்புதங்கள் செய்துவிட்டு தன்பாட்டில் மறைந்துபோய் விடுவதும் உண்டு.

ஆன்மிகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், கீர்த்தியைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நியாயம் கிடையாது. எவனொருவன் பதவி, ஸ்தாபனம், காணிக்கை போன்ற அனைத்தையும் துறந்து தனித்து இயங்குகிறானோ, அவனே வைராக்கியம் உள்ளவன்.’

மகான்களிடம் தனது குறைகளைச் சொல்லித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்பதில்லை…அவர்களின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாலே, ஊழ்வினைகள் அலறி ஓடிவிடும்''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...