Thursday, September 5, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN 

                                                                                                           
                     சகலமும் இழந்த  தாயும்  தந்தையும்...

திருதராஷ்டிரன் வெட்கித்தலை குனிந்தான்.  அவனது  ஆத்திரம், தனது பிள்ளைகளை தனி ஒருவனாக கொன்ற  பீமனை தான் கொன்று கணக்கு தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோற்றது என்று அறிந்து வருந்தினான். அவன் மனநிலை அறிந்த கிருஷ்ணர் அவன் பலத்தை ஒரு இரும்பு பதுமை மீது காட்டி அது பொடியாக வைத்ததில் ஏமாற்றம் அவனை நாணவைத்தது. தன செயலுக்கு வருந்தினான்.

''கிருஷ்ணா நான் திருந்தினேன். இப்போதாவது அந்த மகா வீர புத்ரன் பீமனை நான் தழுவி ஆசி கூறலாமா? என்று கேட்டு அர்ஜுனன், பீமன், நகுல ஸஹதேவர்களை அணைத்து வாழ்த்தினான். எல்லோரும் காந்தாரியை பார்த்து வணங்கச்செல்கிறார்கள். வியாசர் அங்கே வருகிறார்.

''காந்தாரி, நடந்ததெல்லாம் உன் மகன் தவறினதால்  தான் விளைந்தது.  பாண்டவர்கள் தர்ம நியாயம் தவறவில்லை. சொன்ன வாக்கை மீறவில்லை. சமாதானமாக  ஒற்றுமையாக  வாழ எவ்வளவோ முயற்சித்தும் உன் மகன் யுத்தமே பதில் என்றான். யுத்தத்தில் அவர்களை வெல்ல முடியாது என்று பலர் சொல்லியும் கேட்கவில்லை. அனைத்தும் இழந்து குரு வம்சமே நாசமானது. நீயே பலமுறை அனைவர் எதிரிலும் சபையில் தர்மமே வெல்லும் என்று உன் மகனுக்கு உணர்த்தி இருக்கிறாய். எனவே பாண்டவர்களுக்கு உன் ஆசியை வழங்கு.'' என்கிறார்.

'' மகரிஷி நானும் குந்தியைபோல் அவர்களுக்கு ஒரு தாய். தவறுக்கெல்லாம் காரணம் என் சகோதரன், சகுனி, என் மகன் துச்சாதனன், கர்ணன்.  என் மகன் துரியோதனன் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.  என்ன செய்வது. . அவர்களே அழிவைத் தேடிக் கொண்டார்கள்'' என்றாள்  கண்களில் நீருடன் காந்தாரி. தாய்ப்பாசம் தனி அல்லவா?

 ''ஆனால்  மகரிஷி,  பீமன் முறை தவறி என் மகனை துடையில் கதையால் தாக்கியதை மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.''என்றாள்  காந்தாரி.

பீமன் பதில் சொன்னான் ''அம்மா, துரியோதனன் கதாயுதத்தில்  என்னைவிட சாமர்த்தியசாலி, வீரன். அவனை வெல்ல எவராலும் முடியாது. ஆனால் அவன் யுதிஷ்டிரனை தாக்கியதில், அபிமன்யுவை கொன்றதில் நீதி நியாயம் நெறி முறை எதுவும் பார்க்கவில்லை. ஆகவே என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் விதியை மீறி அவனை இடுப்புக்கு கீழே தாக்கினேன். அதுவுமின்றி அவ்வாறு செய்வதாக சபதம் வேறு செய்துவிட்டேன் என்பதால் அப்படித் தாக்க  நேர்ந்தது. ஒருவேளை  துரியோதனன் என்னை ஜெயித்திருந்தால் தோல்வியுற்று நான் மீண்டும் வனவாசம் செய்யவேண்டி வருமே என்பதற்காக அவ்வாறு எனக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. துரியோதனன் உயிரோடு இருக்கும் வரை பாண்டவர்களுக்கு நிம்மதி இந்த ஜென்மத்தில் கிடையாது என்று நீங்களே அறிவீர்கள்''.

''எங்கே அரசன் யுதிஷ்டிரன்? என்று காந்தாரி கேட்க ''தாயே உங்கள் எதிரில் நிற்கிறேன் உங்கள் மக்களை கொன்ற பாவி. என்னை சபியுங்கள், ஏற்றுக் கொள்கிறேன்'' என்றான். 

நீண்ட பெருமூச்சு விட்டாள் காந்தாரி. கட்டியிருந்த கண்களை  தளர்த்தி  கீழே நோக்கினாள் . யுதிஷ்டிரன் பாதத்தின் நகங்கள் அவள் கண்களில் தெரிந்தன. அடுத்த கணமே அவை கறுத்து சூம்பின''

 அவள் கோபம் நீங்கி சாந்தமானாள் . அவளிடம் விடை பெற்று அனைவரும் திரும்பினார்கள். திரௌபதி அழுதாள். என் மக்கள் அனைவரையும் இழந்தேன். இனி எனக்கு ராஜ்ஜியம், கௌரவம்  மதிப்பு எதுவும்  வேண்டாமே'' என்றாள் .

''திரௌபதி,  எனக்கு தெரியும் உன் கஷ்டம். நானும் உன்னைப் போல ஒரு தாய்.  என் மக்கள் அனைவரையும்  உன்னை விட அதிகமடங்கு இழந்தவள் அல்லவா'' என்றாள் காந்தாரி. அவளை அணைத்து வாழ்த்தினாள். குந்தி ,திரௌபதி, துரியோதனாதியார் மனைவிகள் அனைவருமே குருக்ஷேத்திர யுத்த பூமியை அடைந்து எண்ணற்ற சடலங்களை பார்வையிடுகிறார்கள். நாய்கள் நரிகள், ஓநாய்கள், கழுகுகள் அவற்றை சிதைத்து உண்பதை பார்த்து நடுங்குகிறார்கள். அலறி ஓலமிடுகிறார்கள். கணவன், தந்தை, மகன், சகோதரன், உறவினன் அனைவருமே இழந்தவர்கள் மனம் உடைந்து நிராதரவாக கதறுவதை கிருஷ்ணன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...