Monday, September 9, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம்  வேதம்   J K  SIVAN 
                               
                                                                     
                     '' உன் கடமையைச் செய்''
                               

''யுதிஷ்டிரா, நான் எவ்வளவோ சொல்லியும், சூரியன் கனவில் அறிவுரை கூறியபோதும் கூட கர்ணன் பாண்டவர்கள் சகோதரர்கள் என்று அறிந்தும்   பாண்டவர்களோடு  இணைய மறுத்துவிட்டான். மாறாக விரோதம் கொண்டான். உங்களை அழிக்கவே முயன்றான். இதெல்லாம் அறிந்து தான் நான் உங்களிடம் கர்ணன் உங்கள் உடன் பிறந்த சகோதரன் என்று சொல்லவில்லை''. என்று குந்தியும் சொன்னாள் . யுதிஷ்டிரன் மிகவம் வருந்தினான். அப்போது தான் யுதிஷ்டிரன் ஒரு சாபமிட்டான்.

''தாயே,   உண்மையை நீ மறைத்ததால் தான் இத்தனைபேரிய நாசம் விளைந்தது. இனி உலகில் எந்த பெண்ணாலும் ரகசியத்தை மறைக்க முடியாமல் போகட்டும்''.

 (ஆனால்  ஒரு  உண்மை.  ஆண்களைக்காட்டிலும்  பெண்கள் தான் ரகசியத்தை வெளியிடாமல் அழுத்தமாக இருப்பவர்கள் என்று சிலர்  ஆராய்ச்சி செய்த்திருக்கிறார்களாம்! ஓட்டை வாய் மாரிமுத்து  என்று ஆண்களுக்கு தான் பெயர்.  மாரிமுத்தம்மா இல்லை.)

''அர்ஜுனா, என்ன காரியம் செய்து விட்டோம் நாம். திருதராஷ்டிரன் பொறுப்பில்லாதவனை அரசனாக்கி, அவனால் பெரும் யுத்தம் மூண்டு, அநேக நல்ல நண்பர்கள், உறவினர்கள், உற்றார் மக்களை இருபக்கமும் இழந்தோம். கடைசியில் எவருக்குமே சந்தோஷம் இல்லை. நான் செய்தது பெரிய பாபம். அதற்கு நான் வனத்திற்கு சென்று தவம் இருந்து தான் பரிகாரம் தேடவேண்டும்.'' என்றான் யுதிஷ்டிரன்.

' அண்ணா, வருந்துவதற்கு இதில் ஒன்றுமில்லை. அரசர்கள் யுத்தம் செய்வது ஏற்கப்பட்டது தானே. தீயவர்களை ஒழித்ததில் பெருமை பட வேண்டும். ஆரம்பத்திலிருந்தே நம் அழிவு ஒன்றையே நாடிய எதிரியை, அவனோடு சேர்ந்தவர்களோடு அழித்ததில் பெருமைப் பட வேண்டும். ஆகவே ஒரு பாபமும் சேராதபோது எதற்கு வனவாசம், தவம், பிராயச்சித்தம் எல்லாம்? என்றான் அர்ஜுனன்.

பீமன் குறுக்கிட்டு, ஆமாம் அண்ணா, உன் எண்ணம் எல்லோரையும் மன்னித்து, சாத்வீகமாக பிறர் தீங்கு செய்தாலும் ஏற்றுக்கொண்டு அமைதியாக துறவற வாழ்க்கை வாழவேண்டும் என்பதாக இருந்தால், நிச்சயம் நானே இத்தனை பேரை கொன்றிருக்க தேவையில்லையே . யுத்தமே நடந்திருக்காது. க்ஷத்ரியர்களாக நம்மை எதிர்த்தவரை எதிர்த்து வென்றோம். இனி நீ அரசனாக ஆட்சி புரியவேண்டும். அதுவே உலகு ஆமோதிக்கும் வழி. நேர்மையான வழி.

இந்த நேரத்தில் வனவாசம், தவம், என்று நீ சொல்வது. பாதி கிணறை வெட்டிவிட்டு தண்ணீர் வரும்வரை தோண்டுவதை புறக்கணித்து சேற்றில் நிற்பது போல் இருக்கிறது என்றான் பீமன். அர்ஜுனனும், மீண்டும் யுதிஷ்டிரன் அரசனாக பொறுப்பேற்று தனது கடமையை பூர்த்தி செய்வதன் அவசியத்தை எடுத்துச் சொன்னான்.

நகுலனும் முதலில் க்ஷத்ரியனாக உன் இல்லற தர்மத்தை செலுத்தாமல் வானப்ரஸ்தத்தை அடைய முயற்சிப்பது தர்ம தேவதையால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று வலியுறுத்தினான்.

சகாதேவனும், ''அண்ணா, நீ துறவறம் மேற்கொள்ள நினைப்பது உனது கடமையில் தவறிய பலனைத் தான் கொடுக்கும். சுயலாபத்திற்கு நீ புண்யம் தேடி வனவாசம் செல்வது, ஒரு அரசனாக உனக்கு, உன்னைச் சார்ந்தவர்க்கு, பித்ருக்களுக்கு, தெய்வத்துக்கு, உன்னை நம்பிய மக்களுக்கு செய்யவேண்டிய கடமையை நிராகரித்தது ஆகும். எனவே நீ ராஜ்யாதிபதியாக பொறுப்புடன் நடக்கவேண்டும்'' என்றான்.

திரௌபதியும் குறுக்கிட்டாள் . ''அரசே, நீங்கள் த்வைத வனத்தில் எல்லோரிடமும் சொன்னதை நினைவு கூறுங்கள். வனவாசம் முடியட்டும், நமது துன்பங்களிலிருந்து விடுபட்டு, வெற்றிகரமாக யுத்தத்தில் நாம் துரியோதனனை வென்று ராஜ்யத்தை மீண்டும் பெற்று நமது அரசாட்சியை நிலை நாட்டுவோம்'' என்றீர்களே  தீயவர்களை வெல்வதும், குடிமக்களை ரக்ஷிப்பதும் தான் க்ஷத்திரிய தர்மம். இந்த ராஜ்யத்தை நீங்கள் சுலபமாக பெறவில்லை, வெல்லமுடியாத, பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன் கர்ணன், கிருபர் ஆகியோரை எல்லாம் வீழ்த்தியபிறகே கிருஷ்ணன் உதவியோடு பெற்ற மாபெரும் வெற்றி. இதை புறக்கணிப்பது தவறு. 

உங்கள் தாய் குந்தி தேவி '' திரௌபதி, உன் கணவர்கள் மா பெரும் வீரர்கள், உன்னை பூரண சந்தோஷத்தில் ராணியாக மகிழ வைப்பவர்கள் என்று சொன்னதை எல்லாம் பொய்யாக்கி மீண்டும் வனவாசத்தில் நான் உங்களோடு வரவேண்டுமா?. ''தாய் சொல்லை தட்டாதே''   என்பார்களே. அது உங்களுக்கில்லையா?'' என்றாள் . கடினமான போரை வென்று ராஜ்ஜியத்தை கைப்பற்றியும் யுதிஷ்டிரன் மதியின்மையால் துறவறம் பூண்டான் என்றும், அவனால் அவன் மஹா வீர சகோதரர்களும் மனைவியும் மீண்டும் வனம் சென்றார்கள் என்று உலகம் ஏசும். இதற்காகவா என் குடும்பத்தையே, என் பிள்ளைகளையே நான் இழந்தேன்? என்றாள் திரௌபதி.

தேவஸ்தானன் என்கிற ரிஷி அங்கே யுதிஷ்டிரனை சந்திக்கிறார்.  அவரும் ''யுதிஷ்டிரா, நீ க்ஷத்திரியன், பாண்டவர்களின் அளவு கடந்த சக்தியால் அடைந்த ராஜ்யத்த்தை திரஸ்கரித்து வனவாசம் செல்வது என்பது மிக பாப காரியம். ஒருவன் தனது முயற்சியால் பெற்ற செல்வத்தை தக்கவாறு செலவழித்து பலருக்கும் அதால் நன்மை கிட்ட செய்வது ஒன்றே புண்யம். அதை துளியும் தகுதி அற்ற வேறு ஒருவனுக்கு அளித்து விடுவது பாபத்தை தான் கொடுக்கும். ஏனென்றால் செல்வம் அதன் பயனை இழந்து விடுகிறது. நீ ராஜசூய யாகம் செயது தான தர்மங்கள் யாகங்கள் செயது வீரத்தால் அடைந்த ராஜ்ஜியம் உன்னால் தான் எண்ணற்ற குடிமக்களுக்கு பாதுகாப்பையும், சந்தோஷமாக வாழ வகையும் செய்யும். அதை வேறு எவனோ ஆள விட்டு கானகம் செல்வது நீ உன்னை எதிர்பார்த்து நிற்கும் அநேகருக்கு செய்யும் துரோகமாகும். வளரவேண்டிய சிசுவை கொன்ற பாபம் என்கிறார்.

                                     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...