Sunday, September 1, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J K SIVAN 
    
        ''கிருஷ்ணா,  உன்னைக்  கொல்லவே  என் விருப்பம் ''

முனிவரே,   அஸ்வத்தாமன்   எதற்கு கிருஷ்ணனை  சந்திக்க துவாரகை சென்றான். சந்தித்து என்ன கேட்டான், செய்தான்.  பாண்டவர்களை வெறுத்த அவனுக்கு அவர்கள் நண்பனான உன்னை கட்டோடு பிடிக்காதே''  என்று  ஜனமேஜயன் கேட்டதற்கு வைசம்பாயனர்  துவாரகையில்  விளக்குகிறார்.

யுதிஷ்டிரனின் இதே கேள்விக்கு கிருஷ்ணன் பதில் சொல்கிறார்:

 ''யுதிஷ்டிரா,   அஸ்வத்தாமன் எங்கெங்கோ அலைந்து ஒரு முறை என்னை துவாரகை கடற்கரையில் சந்தித்தான்.
 அவனிடம் இருந்த ப்ரம்மாஸ்திரத்தால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்று  அறிந்ததால் என்னிடம் பேரம் பேசினான். துரோணர்  கொடுத்த வரத்தின் படி அவனை எதிர்த்தவர்கள் மேல், ராக்ஷஸர்கள் மேல்  அசுரர்கள் மேல்  மட்டுமே  பிரம்மாஸ்திரத்தை பிரயோகம்  பண்ணமுடியும். அவனுக்கோ எந்த  ராக்ஷஸனுடனும், அசுரனுடனுடனும் சம்பந்தமே இல்லை. அவர்கள் மேல் பிரயோகிக்க வழியில்லை.  மனிதர்கள்  எவரும் அவனை  எதிர்க்கவில்லை.  ஆகவே ப்ரம்மாஸ்திரத்தால்  அவனுக்கு  ஒரு பயனுமில்லை.

' கிருஷ்ணா,   உன்னை சந்திக்க ஒரு காரணத்தோடு வந்திருக்கிறேன்''

''அஸ்வத்தாமா, அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணி சும்மா வருவாயா. ஏதோ ஒரு  இருக்கவேண்டுமே. விஷயம் என்ன வென்று சொல்லேன்.''

''ஆமாம், கிருஷ்ணா, உன்னிடம் ஒரு வேண்டுகோள்.  என்னிடம் இருக்கும்  பிரம்மாஸ்திரத்தை உனக்கு தருகிறேன், உன்னுடைய  சுதர்சன சக்ரத்தை எனக்கு தரவேண்டும்'' என்றான். நான் கேட்டால் இல்லை என்று சொல்லாமாட்டாய் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்.''

'நான்  அவனை சோதிக்க விரும்பி,  இதோ பாரப்பா  அஸ்வத்தாமா, எனக்கு  உன்னிடமிருந்து  எந்த ஆயுதமும் தேவையில்லை. ஆகவே உன்னுடைய பிரம்மாஸ்திரம் எனக்கு எதற்கு? என்னிடம் இருக்கும் சுதர்சன சக்ரத்தை மட்டும் நீ  ஏன், விரும்புகிறாய். ஏன் மற்றவற்றை விட்டுவிட்டாய் ? என்னுடைய நந்தகம் எனும்  வாள் ,  கௌமோதகம்  எனும்  கதை, சாரங்கம்  எனும் வில் எல்லாவற்றையுமே எடுத்துக் கொள்ளேன். இந்தா  பெற்றுக்கொள்''   என்று சொல்லி அஸ்வத்தாமனிடம்  என்னுடைய சுதர்சன சக்ரத்தை நீட்டினேன். அவனால் அதை நகர்த்தக் கூட முடியவில்லை.'' அஸ்வத்தாமன்  எவ்வளவோ முயன்றான். சுதர்சன சக்ரத்தை இம்மியளவும் என்னிடமிருந்து அவனால்  பிரிக்க முடியவில்லை.

ரொம்ப  பிரயாசைப்பட்டு  சுதர்சன சக்ரத்தை என்னிடமிருந்து பிரித்து எடுப்பதற்கு முயன்று தோற்று, பிறகு அந்த விருப்பத்தை  கை  விட்டான்.  அப்போது நான் சொன்னேன்:

'' அஸ்வத்தாமா,  உனக்கு என்ன ஆசை, அதுவும் இவ்வளவு பெரிய  பேராசை,  என்னோடு உயிருக்கு உயிராக பழகும்  அர்ஜுனன் கூட நீ பேசிய வார்த்தைகளை என்னிடம் கூறியதில்லை .  அவனுக்காக நான் எதையும் செய்வேன் என்று தெரிந்தும் கூட.    அதே போல்  என் மகன்  ப்ரத்யும்னனோ , சாம்பனோ, மற்றவரோ,    எவருமே  இன்று வரை என் சுதர்சன சக்ரத்தையோ, மற்ற ஆயுதங்களையோ  கேட்டதில்லை. ஆகவே  ஏதோ ஒரு திட்டத்துடன் தான் நீ என்னை அணுகினாய் என தெரிந்துகொண்டேன்.  

''உன்னை ஒன்று கேட்கிறேன். அஸ்வத்தாமா, எதற்காக என் சுதர்சன சக்ரத்தை  நீ விரும்பினாய் . உண்மையைச் சொல், யாரை எதிர்த்து கொல்ல?'' என்று  கேட்டான் கிருஷ்ணன்.

''உண்மையைச் சொல்லட்டுமா  கிருஷ்ணா,  எனக்கு  உலகில் வெல்லவேண்டிய  ஒருவன் நீ மட்டுமே.. உன்னை எதிர்த்து கொல்லக்கூடிய ஒரே ஆயுதம் உனது சுதர்சன சக்ரம் தான். உன்னை அழித்தால் பிறகு என்னை வெல்லக் கூடியவன் எவனும் இல்லை இந்த உலகில்.. போகட்டும்....நான்  தோற்று  விட்டேன். உண்மையை சொன்னேன். என் மீது கோபம் கொள்ளாதே. ''என்று சொல்லி அவமானத்தோடு போய்விட்டான்.

யுதிஷ்டிரா  நான் சொன்னது பழங்கதை.   இப்போது  அவனைத் தேடிச் செல்லும் பீமன் மீது பிரம்மாஸ்திரம் பிரயோகித் தானானால்  பீமன் உயிர் போய்விடும். ஆகவே  நானே அஸ்வத்தாமனை தேடித் செல்கிறேன்.

கிருஷ்ணனின் தேரில் எப்போதும் வெகு வேகமாக பறக்கும் இரு குதிரைகள் சைவ்யன், சுக்ரீவன் இரண்டும் அதோடு  மேகபுஷ்பம், வலஹகன் ஆகிய ரெண்டும் கூட சேர்த்து பூட்டப்பட்டு, ஓடின. அவன் பின் அர்ஜுனன், யுதிஷ்டிரன் மற்றோரும் சென்றனர். வெகு தொலைவில்  காட்டில்   எங்கோ ஒரு நதிக்கரையில்  சில ரிஷிகளோடு அஸ்வத்தாமன்  இருந்தான். அங்கே வியாசரும் இருந்தார்.  பீமன் தனது அஸ்திரங்களை அவன் மீது பிரயோகிக்க தயாராக இருந்த சமயம்.  அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திர மந்திரத்தை ஜெபித்தான். ''பாண்டவர்களை இது அழிக்கட்டும்'' என்று வேண்டி அஸ்திரத்தை செலுத்தினான்.

''அர்ஜுனா, உன் ப்ரம்மாஸ்திரத்தால் அதை தடு'' என்று கிருஷ்ணன் சொல்ல, அர்ஜுனன் கண் இமைக்கும் நேரத்தில் அம்பை செலுத்தினான்.  அஸ்வத்தாமனது பிரம்மாஸ்திரம் செயலற்று போனது. 

நாரதரும் வியாசரும் இருவரையும் சமாதானப் படுத்தினார்கள். மனிதர்கள் மீது எய்வது கூடாது என்பதால் அர்ஜுனன் தனது அஸ்திரத்தை திரும்ப பெற்றுக்கொண்டான்.

‘’அஸ்வத்தாமா உன் அஸ்திரத்தை  நீயும் திரும்பப்  பெறு'' என்றனர் ரிஷிகள்.

''ரிஷிகளே, பாண்டவர்களை அழிக்கவே  தான் இந்த அஸ்திரத்தை எய்தேன். எனவே திரும்பப் பெறவில்லை'' என்றான் அஸ்வத்தாமன்.

'அஸ்வத்தாமா, அர்ஜுனன் சகல அஸ்திரவித்தையும் தெரிந்தவன். அவனது அஸ்திரம் உன்னை நோக்கி விடப்படவில்லை, உனது அம்பை தடை செய்யவே வந்து வென்றது. அவன் தவறு செய்யவில்லை. எனவே நீ செய்த தவறுக்காக  உன் தலை மேல் உள்ள மணியை அவனிடம் கொடு'' (அந்த மணி அணிந்தவனை, எந்த ஆயுதமும் கொல்லாது. பயம் அறியமாட்டான். பசியோ தாகமோவியாதியோ, களைப்போ நெருங்காது.)

'என்னால் செலுத்தப் பட்ட  அஸ்திரம் என்னிடம் திரும்பாது. அது ஒரு பாண்டவ பெண்ணின் வயிற்றில் இருக்கும்  சிசுவை அழிக்கச் செல்கிறது. அதை என்னால் தடுக்க முடியாது.   இருந்தாலும்   உங்களது மற்ற கட்டளையை நிறைவேற்றுகிறேன். இதோ என் சிரசில் உள்ள மணி''  என்றான் அஸ்வத்தாமன்.

''உடனே  அஸ்திரத்தை நிறுத்தி திரும்பப் பெற முடியாவிட்டால் அந்த கர்ப்பிணியின் வயிற்றை தாக்குவதோடு அது முடியட்டும். வேறு வழியில்லை'' என்கிறார் வியாசர்.

கிருஷ்ணன்  உடனே  அர்ஜுனா, அஸ்வத்தாமனின் அஸ்திரம் உன்னுடைய மருமகள் உத்தரையின் கர்ப்பத்தை நோக்கி செல்கிறது. அதையும் மீறி உன் வம்சம் அவள் மகன் பரீக்ஷித் மூலம் தொடரும். அர்ஜுனன்  திடுக்கிட்டான்.   
''அர்ஜுனா  கவலைப்படாதே'' என்கிறார் கிருஷ்ணன்.

"கிருஷ்ணா, அப்படி இல்லை, என் அஸ்திரம் உத்தரையின் கர்ப்பத்தில் உள்ள சிசுவை அழித்தே தீரும்'' என்றான் அஸ்வத்தாமன்.

''அஸ்வத்தாமா. நீ சொல்வது வாஸ்தவம் தான்.  ஆனால்  உன் பிரம்மாஸ்த்ரத்திற்கும் மேலான ஒரு ஆயுதம் அதை  பயனற்று போக செய்யும்.  நீ செய்த  பாவங்களுக்கு,  தூங்கிக்கொண்டிருந்த  குழந்தைகளைக்  கொன்ற தீய காரியத் துக்கு பலனாக  இன்னும் மூவாயிரம் ஆண்டுகள் ஓரிடம் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பாய். வியாதிகள் உன்னை சேரும்.'' என்றார்  கிருஷ்ணன்.

''அஸ்வத்தாமா, பரீக்ஷித் வளர்ந்து பலம் வாய்ந்த குரு  வம்ச அரசனாவான். எனவே  உன் அஸ்திரத்தை என்னுடைய  சுதர்சன சக்ர சக்தியால் முறித்து உத்தரையின் கர்ப்பம் காப்பாற்றப்படும். தெரிந்து கொள்'' என்று கிருஷ்ணன் சொல்ல, தலைகுனிந்து  தண்டனையை பெற்றவனாக,   தன்னோடு பிறந்த சக்தி மணியை இழந்து,   அஸ்திர ஆயுதங்கள் பலனளிக்காத அஸ்வத்தாமன் சர்வ  வியாதியஸ்தனாக  சகலமும் இழந்தவனாக  ஒரு காட்டை நோக்கி நடந்தான்.

திரௌபதியிடம்  பீமன்  நடந்ததை சொல்லி    '' திரௌபதி அவன் செய்த அவச்செயலுக்காக  அஸ்வத்தாமன்  தண்டனை பெற்றான்.  அவனோடு பிறந்த சக்தி வாய்ந்த மணி பறிக்கப் பட்டது. இந்தா''  என்று  கொடுத்தான்.

''திரௌபதி,  உபப்லாவ்ய வனத்தில் இருக்கும்போது, ஓர் நாள்  நீ கோபத்தில் கிருஷ்ணனிடம் சொன்னது நினைவிருக்கிறதா?

''கிருஷ்ணா,  எனக்கு  கணவர்கள் இல்லை, குழந்தைகள் இல்லை, தந்தை இல்லை, உடன் பிறந்தார் இல்லை, நீயும் இல்லை. இந்த யுதிஷ்டிரன் துரியோதனனுடன் அமைதி, சமாதானம் வேண்டும் என்கிறாரே'' என்றாய்.  உன் சபதத்தை நிறைவேற்றி  யாகி விட்டது. ஒரு பிராமணன் என்பதால்  அஸ்வத்தாமனை கொல்லாமல் தண்டனை கொடுத்து அனுப்பியாகிவிட்டது. இனி அவன் சக்தியற்ற வெறும்  உடல்.  நடை பிணம். அஸ்வத்தாமனின்  சிரோமணி  யுதிஷ்டிரன் சிரத்தில் அணிவிக்கப் பட்டது.

‘’யுதிஷ்டிரா, த்ரோணரால் கூட செய்ய முடியாத செயல்களை அஸ்வத்தாமன் செய்ய காரணம் அவன் பரமசிவனை வேண்டி பெற்ற வரம்’’ என்றான் கிருஷ்ணன்.

அஸ்வத்தாமனின் யாத்திரையோடு  மஹாபாரதத்தில் சௌப்திக பர்வம் முடிந்து இனி நாம் மஹா பாரதப் பயணத்தில்  ஸ்த்ரீ பர்வத்தில் நுழைவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...