Thursday, July 4, 2019

SWAMI VIVEKANANDA LAST MOMENTS



சுவாமி விவேகானந்தர் J K SIVAN
அறிவுக்கனல் ஒன்று
இன்று மறக்கமுடியாத ஒரு நாள்.  117 வருஷங்கள்  முன்பு ஒரு   ராத்திரி ஒன்பது மணிக்கு  நடக்ககூடாத ஒன்று  நடந்தது.   தலைவலி,கால்வலி மார்பு  வலி, என்று உடம்பு பூரா  குழாயை  செருகிக்கொண்டு எல்லாம் இல்லை.  நான்  தியானம் பண்ணப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டது தான் அவர்  கடைசியாக செய்த காரியம்.....
.............. வழக்கம் போல் தான் அன்றும் பொழுது விடிந்தது. காளி ஆலயத்துக்கு தியானம் செய்ய போனார்.  கொஞ்சம் அதிகமான நேரம் தியானத்தில் அன்று செலவிட்டார்.ராமகிருஷ்ண  மடம் கட்டப்பட்ட  நேரம்.வேலைகள் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறது என்று மேற்பார்வை யிட்டார்.
காலை 11 மணிக்கு காளிக்கு பூஜைக்கு  ஏற்பாடு பண்ணச்சொன்னார்.  மத்யானம் எல்லோருடனும் அமர்ந்து நன்றாக  சாப்பிட்டார்.  பிறகு மூன்றுமணி நேரம்  சமஸ்க்ரித வியாகரணம் சன்யாசிகளுக்கு கற்பித்தார்.
சீடர்களோடு அன்று தான் கடைசிநாள் என்று யாருக்கு தெரியும்? ஒருவேளை நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்கலாம். தனக்கு தெரிந்த ''எல்லாவற்றையும்''  அன்று ஒரே நாளில்  அவர்களுக்கு  அளித்துவிட்டாரோ.  இனி அவரிடம் ஒன்றுமே .இல்லை.....
மாலையில் சற்று நடை. '' மடத்தில் ஒரு வேத கல்லூரி உருவாகவேண்டும் என்று ஒரு  ஆவல் இருக்கிறது..'' என்று கூடவே நடந்து வந்த ப்ரம்மச்சாரியிடம் சொன்னாராம்.   அடிக்கடி  '' நான் நாற்பது வயதெல்லாம் நரை திரையோடு இருப்பவன் இல்லை '' என்று சிரித்துக்கொண்டே சொல்பவர்...''ஒரு நாள்  இந்த உடம்பை பழைய சட்டையை கழட்டி எறிவது போல் விட்டுவிடவேண்டுமடா. அதற்குள் சகலமும் செய்து முடிக்கவேண்டும். இந்த பாரத தாயின் பெருமையை உலகம் உணரவைப்பது தான் முதல் வேலை. இது கடவுள் வாழும் தேசம் என்று எல்லோரும் அறியவேண்டும்'' என்று சதா நினைத்து விடாப்பிடியாக அதை நிறைவேற்றியவர். ..
சாயந்திரம் சூரியன் மெதுவாக மேற்குப்பக்கம் சாய்ந்தான்.  எந்த விபரீதத்தையும் அவன் பார்க்க விரும்பவில்லை. அவசரம் அவசரமாக இருளில் மறைந்தான்.   7.30 மணி வாக்கில்  ஸ்வாமிஜி தனது அறையில் களைத்து இருந்தார். மனது இலேசாக இருந்தது. ஒரு மணி நேரம் தியானம் செய்தனர்.  ஏதோ நெஞ்சில் அடைக்கிறது போல் தோன்றியது.  ''பையா, வியர்த்து புழுக்கமாக இருக்கிறது, கதவு  அந்த ஜன்னல் எல்லாம் திறந்து வை . நெஞ்சு ரொம்ப பாரமாக  அழுத்தமாக இருக்கிறது. நான் சற்று படுத்துக் கொண்டே தியானம் பண்ணுகிறேன்''
மனது நிறைய இதயம் நிரம்ப பகவான் ராமகிருஷ்ணர் வியாபித்து இருந்ததால் அவரை  தியானம் பண்ணிக்கொண்டு   கையில் ஜபமாலை உருண்டது. சீடன் காலை அமுக்கி விட்டுக்கொண்டிருந்தான்.
தூக்கம் அவரை ஆட்கொண்டபோது மணி இரவு 9.10.....  மெதுவாக மூக்கில் ரத்தம் வழிந்தது. கண்ணிலிருந்து,  பிறகு  வாயிலிருந்து வந்த ரத்தத்தோடு திரிவேணி சங்கமமாயிற்று. உடல் விறைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் குளிர்ந்தது. மண்ணுலகில் தூங்கி தூக்கத்திலிருந்து விழித்தபோது விண்ணுலகில் இருந்தார்.  பரமயோகிகளுக்கு, ப்ரம்ம ஞானிகளுக்கு கடைசி நேரம் கபாலம் வெடித்து ரத்தம் மூக்கில், கண்ணில் காதில் வெளியேறும் என்று சன்யாசிகளுக்கு திருஷ்டாந்தமாக புரிந்தது. அதிர்ச்சி தந்தது.  விரைவில் செய்தி வெளியுலகுக்கு விரைந்து பறந்து சென்றது.
அவரது சிஷ்யர்கள், மடத்து சந்யாசிகள்  பிரம்மச்சாரிகள் அனைவரும் அவரை வணங்கி அவர் காலடியில் மலர்கள் தூவினார்.
32 வயதில் மூவுலகிலும் புகழ் வாய்ந்த சங்கரர் போலவே    39வயது  சுவாமி விவேகானந்தரும்  தனது அவதாரம் திருப்தியாக முடிந்ததை உணர்ந்து  மஹா சமாதி அடைந்தவர்  அல்லவா?
+++++
பேலூர் மடத்தில் மாடிப்படியேறி  அந்த அறையின் உள்ளே சென்று பார்த்தபோது.  கம்பளத்தில் படுத்திருந்த கோலம். வலது கை  தரையில். அதன் கட்டைவிரல் ஜெபமாலையை கடைசியாக உருட்டிய நிலையில்.உங்கள் உள்நோக்கி ஆழ்ந்த தியானத்திலிருந்தபோது. உடலை காவி வஸ்த்ரத்தால் மூடி வைத்திருந்தது. நெற்றியில் விபூதி பூசி இருந்தது. அறை பூரா சாம்பிராணி புகை மணந்தது.  நிவேதிதா  பனை விசிறியால் மெதுவாக  விசிறிக்கொண்டு கண்களில் கங்கையை உகுத்தாள் . காலடியில் பிரம்மச்சாரி நந்தலால்  சிலையாக.நந்தலால்  மற்றும் மூவர் மெதுவாக மாடியிலிருந்து அந்த மகானின் உடலை மெதுவாக கீழே இறக்கினார்கள்.   எல்லோரும் அவர் பாதங்களுக்கு  மலர்களை தூவினார்கள்.  யாருடைய ஐடியா?  அவர் பாதங்களுக்கு  சிகப்பு சாயம் பூசி  வெள்ளை  துண்டுகளில் அவரது பாதத்தை ஒற்றி எடுத்து வைத்துக் கொண்டார்கள்.  நிவேதிதா  தனது கைக்குட்டையில் அந்த பாதங்களின் உருவத்தை ஒற்றி எடுத்துக்கொண்டாள் .
ஒரு கட்டிலை  நிறைய மலர்ககளால் அலங்கரித்து அவரது உடல் அந்த கட்டில் மேல் வைக்கப்பட்டு நான்கு பேர் தூக்கிக் கொண்டு  சாரதானந்தா முன் செல்ல மற்ற சந்யாசிகள் பின் தொடர தகனம் நடக்கவேண்டிய கங்கைக்  கரையின் ஒரு கட்டத்துக்கு  நடந்தார்கள்.  பாரதத்தின் பெருமை பாரெல்லாம் கொண்டு சென்று பரப்பிய ப்ரம்மஞானியின் கடைசி யாத்திரை. முதல் நாள் பெய்த மழையால் மடத்தை  சுற்றி தரையெல்லாம் புற்கள் சில்லென்று இருந்தது. நிறைய சந்தன கட்டைகள் சேர்ந்து விட்டன. அவற்றின் மேல் கட்டில் வைக்கப்பட்டது. ஒன்றிரண்டு சொந்தக்காரர்கள் அதற்குள் வந்துவிட்டார்கள்.  காய்ந்த சணல் தண்டுகளில் தீப்பந்தம். ''ஆளுக்கொன்று எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சாரதானந்தா சொன்னதும் அவற்றை எடுத்துக்கொண்டு எல்லோரும் ஏழுமுறை அந்த மகானின் உடலை வணங்கி  வலம் வந்தனர். சுவாமிஜியின் கால் மாட்டில் கட்டிலுக்கு கீழே தீப்பந்தங்கள் ஜ்வாலை விட்டன. சற்று நேரத்திலேயே சந்தனக்கட்டைகளும் தீப்பிடித்து அவர் உடலை அக்னியில் மறைத்தன. ''அறிவுக்கனலே, உன் ஜ்வாலை முன் என் ஜ்வாலை எம்மாத்திரம்'' என்று  அக்னி தேவன் முழுதாக அவரை அணைத்துக்
கொண்டான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...