Monday, July 8, 2019

YAATHRA VIBARAM MUGAIYUR

யாத்ரா விபரம் J K SIVAN

முகையூர் கனகபுரீஸ்வரர்

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும்போது ECR எனும் கிழக்கு கடற்கரை சாலையில் தலைதெறிக்க வாகனம் ஒட்டி செல்லும் சிலர் ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்களே, கொஞ்சம் மெதுவாக சென்று வழியில் சில பழைய கிராமங்களில் அற்புத ஆலயங்கள் இருப்பதை நினைப்பதுண்டா? நானே பல முறை சென்றிருந்தாலும் நேற்று தான் அந்தப்பக்கம் முகையூர் எனும் கிராமத்திற்குள் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் மோட்டார் வாகனத்தில் பிரயாணித்து உள்ளே நுழைந்து தரிசிக்க பகவான் அனுக்கிரஹம் கிடைத்தது.

முகை என்றால் அரும்பு என்று பெயர். மலையமான் திருமுடிக்காரி எனும் கடையெழு வள்ளல்களில் ஒருவன் நிறைய திருக்கோயிலூர் ஆலயத்தில் பூஜைக்கு இங்கே இருந்து தான் அரும்பு மலர்களை தருவிப்பானாம். இங்கே கிராமத்தார் அநேக பூந்தோட்டங்கள் வைத்து இருந்தது தான் காரணமாம்.

கொஞ்சம் கொஞ்சமாக கிருத்துவ மதம் இங்கே பரவ ஆரம்பித்த காலத்தில் 125 வருஷங்களுக்கு முன்பு செயின்ட் சேவியர் காலத்தில் இங்கே கிருத்துவ மத பிரச்சாரங்கள் அதிகமாக இருந்தது. முகையூரில் கிறித்தவர்கள் அதிகம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். முகையூர் மஹிமை மாதா கோவில் இருக்கிறது. அதற்குமுன் 2000 வருஷங்களுக்கு முன் இருந்த கனகபுரிஸ்வரர் ஆலயம் சிதைந்து பிறகு விக்ரஹங்கள் மண்மேடிட்டு மறைந்ததற்கும் காரணம் உண்டா இல்லையா என்று தேடாமல் மண்ணில் மறைந்த கனகபுரிஸ்வரரை தேடி கண்டுபிடித்தார்கள். பல்லவர்கள் காலத்தை சேர்ந்தவர் கனகபுரீஸ்வரர் என்று காதில் சேதி விழுந்தது.

முகையூர் சென்னையிலிருந்து 87 கிமீ தூரம் ECR சாலையில். புதுச்சேரியிலிருந்து 62 கி.மீ. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமம்.

ரெண்டு வருஷங்களுக்கு முன்பு தான் இந்த ஆலயத்தின் பிரதான மூல விகிரஹம் மண்ணிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு சிறு கூரை வேய்ந்த ஆலயமாக வெளிவந்தது. நேற்று நான் சென்றபோது அந்த ஊரில் நிறைய கலர்கலராக கொடிகள் கட்டப்பட்டு, ECR தேர்விலேயே நிறைய ஜனநடமாட்டம். அங்கே ஒரு அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று (8.7.19) நடைபெற்றது. இந்த ஆலயத்திலிருந்து சிவாச்சாரியார்கள் யாகசாலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். பல ஊர்களிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.
தெருவெல்லாம் ஒலிபெருக்கி சத்தத்தில் மந்திரங்களும், அம்மன் பாடல்களும் ஒலித்தது. ஊர்ஜனங்கள் எல்லோருமே அங்கே திரண்டிருந்தனர்.

ஒரு கி.மீ. தூரத்தில் தான் கனகபுரீஸ்வரர் சிவாலயம். நன்றாக கட்டி இருக்கிறார்கள். பக்தி இன்னும் இருக்கிறது. மக்களில் சிலர் இன்னும் புரவலர்களாக இத்தகைய புணருத்தாரணங்களுக்கு உதவுகிறார்கள் என்பது மனதுக்கு திருப்தியை அளித்தது. சிவன் பெரிய லிங்கம். அம்பாள் ஸ்வர்ணாம்பிகை. வெகு அழகாக நேரில் நிற்பதுபோல் இருந்தாள். தக்ஷிணா மூர்த்தி, வள்ளிதேவசேனாபதி சமேத ஷண்முகன், காலபைரவர், ஆதி கால விநாயகர் புது விநாயகர் இருவரும் உள்ள சந்நிதி. லிங்கோத்பவர் , பூர்ணா புஷ்களா சமேத சாஸ்தா, சண்டிகேஸ்வரர் கோஷ்டங்களில் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். . மராத்தி அர்ச்சகர் தமிழ் தெரியாமல் பக்திச்ரத்தையோடு மந்திரங்கள் சொல்லி ஆரத்தி காட்டினார். இன்னும் கொஞ்ச நாளில் தமிழும் கற்று இங்குள்ள பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள நிறைய வாய்ப்புண்டு.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் நான் அறிந்துகொண்டவை, பார்த்தவை :

கற்பக நந்தி ஜம்மென்று இருக்கிறார். எங்கும் இல்லாதபடி தனது முன்னங்காலை உள்ளடக்கி மடக்கி இருக்கிறார். கொம்புகளே இல்லாத நந்தி இப்போது தான் முதல் தடவை நான் பார்த்தேன். காது கழுத்தோடு மடங்கி மந்திரங்களை கேட்கிறார். கண்கள் அரை மூடி தியானத்தில் இருக்கிறார். நாக்கு மூக்கில் ஒரு துவாரத்தில் நுழைந்திருக்கிறது. இங்கு பதினைந்து நிமிஷம் நின்று அவர் அருகே தியானம் செய்தல் நமது மூக்கில் ஒரு துவாரத்தில் மட்டும் மூச்சு உள்ளே சென்று ஸ்வாசம் ஒரு மூக்கிலிருந்து மட்டுமே உள்ளும் வெளியுமாக வருவதை உணரலாமாம். நிறைய பேர் அனுபவமாம் .நான் பரிட்சித்து பார்க்க விரும்பவில்லை. கடவுள் மீது நம்பிக்கை மட்டுமே வேண்டும். பரீக்ஷித்து பார்ப்பது பக்தனுக்கு தேவையற்றது.

இந்த ஆலயத்தின் மற்றொரு அற்புத விகிரஹம் பழைய விநாயகர். மூன்று தும்பிக்கை கொண்டவர்!! வழக்கமான தும்பிக்கையோடு இரு பக்கங்களிலும் இரு தும்பிக்கைகள் வஸ்த்ரத்தால் மூடப்பட்டு கண்ணுக்கு தெரியவில்லை. அபிஷேகத்தின் போது பார்க்கலாம் என்கிறார்கள். வாசலில் ஒரு அரசமரத்தடி விநாயகர் அருகே ஒரு குழாய். ரெண்டு எவர் சில்வர் குடங்கள் அவர் அருகே மேடையில் வைத்திருக்கிறார்கள். யார் என்ன வேண்டுகிறோமோ அதை வேண்டிக்கொண்டு சிரத்தையாக அந்த குடத்தில் நீரை கொஞ்சம் அந்த விநாயகருக்கு அபிஷேகம் செயது அருகே வைக்கப்பட்டிருக்கும் சந்தன குங்குமத்தை அவருக்கு இடவேண்டுமாம். 21 நாளில் மீண்டும் வந்து அவரை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறி யிருக்குமாம். இது ஒரு புது விஷயம். இதுவரை நான் எந்த ஆலயத்திலும் கேள்விப்படாதது.

இந்த நாடு, மக்கள், நல்ல தலைவர்களால் நீண்டகாலம் ஆளப்பட்டு எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த விநாயகருக்கு கொஞ்சம் அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் இட்டேன். எல்லோரும் நன்றாக இருந்து நாடும் நன்றாக சுபிக்ஷமாக இருந்தால் எனக்கும் தானே அந்த பலன்.

தஷிணாயன காலத்தில் சூரியன் இங்கே காலை 6.00மணிக்கு ஸ்ரீ கனகபுரீஸ்வரரை வழிபடும் காட்சி அப்போது வருபவர்கள் நேரில் கண்டு அதிசயிக்கலாம். இந்த ஆலயத்தை பற்றி ஒரு சிறு வீடியோ காட்சி கிடைத்தது அதையும் இணைத்திருக்கிறேன். https://www.youtube.com/watch?v=vVRu2dqCb20



.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...