Saturday, July 6, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்
ஏழாம் நாள் யுத்தம்     ஜே  கே   சிவன்  

                      எண்ணிக்கை குறைகிறது....

உலகம் இதுவரை காணாத மஹா பெரிய தெய்வ சக்தி கொண்ட வீரர்கள் போரில் பங்கேற்ற மஹா பாரத யுத்தம் 7ம் நாள் நோக்கி தொடர்ந்தது. உயிர்ச்சேதங்கள் அதிகமாக இருந்தும் போரின் முடிவு காண முடியவில்லை.

 ''என்ன  சஞ்சயா,  நான் கேட்கும்  சேதிகள் ஒன்றும்  சந்தோஷம் தரும்படியாக இல்லையே.   இன்று ஏழாம்   நாள் என்ன நடக்கிறது. என்  நெஞ்சில் அமைதி இல்லையே''   என்றான் திருதராஷ்டிரன்.

''அரசே, இதோ இன்றைய  யுத்தம் ஆரம்பமாகி விட்டதே.  சேனைகள் கடல் போல் இரு  பக்கமும் நிற்கின்றன. யானைகளும்  குதிரைப் படைகளும் அந்த யுத்தக்  கடலில்   காணும்  பெரிய  சிறிய அலைகளாக  தோன்று கின்றன.
 எதிரே  கௌரவப்படை துரோணராலும் பீஷ்மராலும் இரு தூண்களாக நிறுத்தப் பட்டு நிற்கிறது. துணையாக  கிருபர்,  துச்சாதனன்,  ஜயத்ரதன் ஆகியோர்,  அருகே  பகதத்தன், விகர்ணன்,  அஸ்வத்தாமன்  இன்னும்  துரியோதனன் மற்ற சகோதரர்கள், சகுனி இன்னும் எத்தனையோ பேர்  தென்படுகிறார்கள்.  அனைவருமே  உயிரைத் திரணமாக  மதித்து  பாண்டவர்களை கொன்று வெற்றி பெற  முற்படுகிறார்கள்.''

''சஞ்சயா,  இது என் விதி.  விதுரன் அடிக்கடி சொன்னான். என் மதி கெட்ட  மகன் துரியோதனன் செவி மடுத்துக் கேட்கவில்லையே''.

''அரசே, எல்லாமே  அந்த  சூதாட்டத்தின் விளைவு தான்.  அதை மட்டும்  நீங்கள் அனுமதிக்காமல் இருந்திருந்தால் இந்த பெரிய சேதம், உற்பாதமாக  நமக்கு ஏற்பட்டு இருக்காதே. பலனை அனுபவிக்க வேண்டியது தான். வேறு வழி இல்லையே''  என்றான் சஞ்சயன்.

''இதோ  பீமன் தெரிகிறான்.  கௌரவ சேனையை த்வம்சம் செய்கிறான். அவன் கவனம் உன் பிள்ளைகள் மேல் தான் இருக்கிறது.  துச்சாதனன், துர்விசஹன், துச்சஹன், துர்மதன்,  ஜெயன், ஜெய சேனன், விகர்ணன் சித்ர சேனன் ஆகிய  உன் மக்கள் சேர்ந்த ஒரு பெருங்கூட்டம்  அவனை சூழ்ந்து விட்டது.  பீஷ்மரின்  அணி வகுப்பை பிளந்து பீமன் உள்ளே  வந்துள்ளான். இதோ சுவர்மன், சாருசித்ரன், துஷ்கர்ணன்  ஆகியோரும்  அவனை எதிர்க்கிறார்கள். அவன் சக்தியை  அறியாத மற்ற  அரசர்களின் சேனைகள் நெருங்கிவிட்டதால், அவற்றை  முற்றிலுமாக பீமன்  அழித்துக் கொண்டிருக்கிறான்.   யானைகளை எறும்பாக அல்லவோ அவன் கையாள்கிறான்.

தேரை விட்டு இறங்கி  கதாயுதத்தோடு  அவன் அவர்கள் கூட்டத்தில் நுழைந்துவிட்டான். அவனது தேர்ப்பாகன் விசோகன்  தனியாக  தேரில் இருப்பதை கவனித்ததும்,திருஷ்டத்யும்னன்  கவலையுற்று.  ''பீமன் எங்கே, என்ன ஆயிற்று அவனுக்கு''  என்று கேட்டான். இளவரசே,  '' நீ  இங்கேயே  இரு என்று என்னிடம் சொல்லிவிட்டு  பீமசேனன் தனியே  கௌரவ சேனையில் அதோ போகிறார்  பாருங்கள் '' என்றான்  விசோகன்.  திருஷ்ட த்யும்னன் விரைந்து  தனியே போர் புரியும் பீமனை பின் தொடர்கிறான்.

யானைகளை கொன்று மலையாக்கி  அவற்றின் நடுவே  பீமன்  யமனாக காட்சி அளித்தான்.  அவன் உடம்பு பூரா  அம்புகள் செடி கொடிகளாக  முளைத்து ரத்தம் வழிந்தது. அவனோ துளியும் லட்சியம் செய்யாமல் கௌரவர்களைக்  கொல்வதிலேயே  ஈடுபட்டிருந்தான்.

''பீமனை விடுங்கள், அதோ  திருஷ்டத்யும்னன்  தனியே வந்திருக்கிறான் பீமனைத் தேடிக்கொண்டு. அவனைத் தாக்கி கொல்லுங்கள். சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்''  என்று துரியோதனன் படைக்கு உத்தரவிட்டான்.

திருஷ்டத்யும்னன் பிரமோஹனா  என்கிற  மயக்க  அஸ்திரத்தை  கௌரவ சேனை மீது பிரயோகித்ததில் அவர்கள் மயங்கி சிதறினார்கள்.  த்ரிஷ்டத்யும்னனை  காக்க  அங்கே  வந்த துருபதனை  துரோணர் அம்புகளால் துளைத்து அவன்  மேலே  செல்லாதவாறு தடுத்தார்.  கௌரவ சேனை  ப்ரமோஹனா அஸ்த்ரத்தால்  பாதிக்கப் பட்டதை அறிந்த துரோணர் உடனே அதன்  விளைவை போக்க  ப்ரஞா என்ற  மந்த்ராஸ்த்ரம்  செலுத்தினார்.  தெளிவு பெற்ற  கௌரவ சேனை  பீமனையும்  த்ரிஷ்டத்யும்னனையும்  மீண்டும் தாக்க தொடங்கியது.

''அபிமன்யு  நீ உடனே  பீமனுக்கு  துணையாக செல்.  கௌரவர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள். என்கிறார் யுதிஷ்டிரர்.  அபிமன்யு தலைமையில்  திருஷ்டகேது, கேகயர்கள் சேனை விரைந்தது .
அபிமன்யுவின் சேனையின் தாக்குதல்  பலமாகவும்   எதிர்பாராமலும்  வந்ததால்,  கௌரவ சேனை பின் வாங்கியது. திரும்ப வழி கிடைத்ததும், பீமனும் த்ரிஷ்டத்யும்னனும்  அபிமன்யுவோடு கலந்து கொண்டனர்.மிகுந்த கோபத்தோடு துரோணர்  அங்கே  வந்து கௌரவ சேனைக்கு பலம் சேர்த்தார்.  பீமனைத்  தாக்கினார்.
திருஷ்டத்யும்னன் அவரை அம்புகளால் காயப் படுத்தினான். பீமனை தாக்குவதில் துர்யோதனனும்  துரோணரோடு சேர்ந்து கொண்டான்.  பீமன் புது உற்சாகத்தோடு துரியோதனனைத்   தாக்கினான். பீமனுக்கும் துரியோதனன் அவன் சகோதரர்களுக்கும் ஒரு  கடும் போர்  நிகழ்ந்தது. அபிமன்யுவின்  வீர  சாகசம் அர்ஜுனனை நினைவூட்டியது கௌரவ சேனைக்கு.   குருக்ஷேத்திர யுத்த பூமியில்  ரத்த  ஆறு பெருக்கெடுத்து ஓடியது.  இறந்த உடல்கள்  அதில் மிதந்து நகர்ந்தன. மேற்கே  சூரியன் வேறு ரத்தச் சிவப்பாக  மெதுவாக  கீழே இறங்க ஆரம்பித்தான்.

''பீமா  உன்னைகொல்ல நான் காத்திருந்த தருணம் இதோ வந்துவிட்டது'' என்று  கத்தினான்  துரியோதனன்.  ஆயுதங்கள்  பீமனை தாக்கின.

'' வாடா வா துரியோதனா , எனக்கும் துரோபதி,  குந்தி ஆகியோரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடு. நீ செய்த செயல்களுக்கு தக்க வெகுமதி நான் தரவேண்டாமா?'' என்றான் பீமன். துரியோதனன் தேரை இழந்து,  கொடி , குடை எல்லாம் நொறுங்கி தவிப்பதை பார்த்துவிட்டு கிருபர் ஓடோடி வந்து அவனை தனது தேரில் அமர்த்திக் கொள்கிறார்.

ஜெயத்ரதன், விகர்ணன் மற்றும் த்ரிகர்த்தர்கள் சேர்ந்து அபிமன்யுவை ஆயுதங்களால்  ஜெயிக்க முயல்கி றார்கள் அரசே. அபிமன்யு, விகர்ணன் தேரோட்டியைக்  கொன்று அவனையும் தாக்குகிறான். அவன் வில் ஒடிந்தது.

பீமனின் எதிர்ப்பையும்   தடுத்து பீஷ்மரும்  துரோணரும்  பாண்டவ  சேனையை  அழித்துக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் இருவரின் ஆக்ரமிப்பை அர்ஜுனன் தடுத்து நிறுத்தினான்.

விகர்ணன் அபிமன்யுவின் அம்புகளால் படு காயமுற்றான். விகர்ணனின் சகோதரர்கள்  துர்முகன், ஸ்ருதகர்மன் ஆகியோர்  விகர்ணனுக்கு உதவ வந்தனர். பாண்டவ வீரன் சுருதகீர்த்தி ஜெயத் சேனன் ஆகியோர் கௌரவர்களை அல்லல் படுத்தினதை கண்டு   சதனிகன் ஜெயத் சேனனை தடுத்து போரிட்டான். ஜயத் சேனனின் சரங்கள் சதனிகன் மார்பில் தைத்து அவன் கவசங்களை நொறுக்கின. அவனுக்கு உதவியாக துஷ்கர்ணன் அங்கு வந்தான்.  துஷ்கர்ணனை கோபாவேசமாக  சதனீகன் எதிர்த்து அவனைக் கொன்றான்.

''அரசே, உன் மக்கள், சதனீகனை  பழிவாங்க  தாக்கினார்கள். அவன் மீது அம்பு மழை.  துர்முஹன் , துர்ஜயன், துர்மர்ஷணன், சத்ரஞ்சயன்  ஆகியோர்  ஒன்றாக சேர்ந்து சதநீகனை தாக்கினார்கள்.  கேகயர்கள்  சதநீகனுக்கு உதவ  அங்கே வந்தார்கள்.  சாத்யகி  பாண்டவர்களுக்கு உதவ  வந்ததும்  பீஷ்மரின் கவனம் இவர்கள் மேல் செல்ல அவரது எதிர்ப்பை பாண்டவ சைன்ய வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதை அர்ஜுனன் உணர்ந்து அவனும் அங்கே  பீஷ்மரை எதிர்க்க வந்துவிட்டான். யுத்தம் திசை திரும்பியது.

யுதிஷ்டிரன், பீமன், திருஷ்டத்யும்னன்  சிகண்டி ஆகியோர் பாண்டவர்களுக்காக மும்முரமாக  போரில் ஈடுபட சூரியன் அஸ்தமித்தான். பீஷ்மர்  நிலை உணர்ந்து சங்கை எடுத்து ஊதினார்.  பாண்டவ சைன்யமும் சங்கை பதிலுக்கு ஊதியது. அன்றைய போர் முடிக்கப் பட்டது.

ஏழாவது நாள் வெற்றி தோல்வியின்றி இரு சேனைகளுக்கும் முடிந்தாலும் வெற்றி பெற்றது அன்றைக்கும் மரண தேவதை தான்.  எண்ணற்ற உயிர்கள்  மாண்டன.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...