Saturday, July 13, 2019

NOSTALGIA

                               மணி மாமா   J K  SIVAN      


                   
நூறு வயது வாழமுடியுமா?  ஏன் முடியாது? ராமனை மனதில்  கெட்டியாக நிலையாக பிடித்து நிறுத்தினால் அவன் நம்மை வழி நடத்துவான். இதை நடைமுறையில் சப்தமில்லாமல்  நிரூபிப்பவர்  என் தாய் மாமா ஸ்ரீ சுப்ரமணிய வசிஷ்ட பாரதி. அவர் வாழும் வீட்டுக்கும்  நூற்றுக்கு மேல் வயதாகி விட்டது. 

''1918ல் எங்கப்பா வசிஷ்ட பாரதி வாங்கியது என்கிறார். அதே வீட்டில்  தான் இந்த நூறு வயதுக்காரரும் பிறந்தவர். இப்போது பல வருஷங்களாக இரு கண்களிலும் பார்வை இல்லை.  நினைவு    ஞாபகசக்தி எல்லாம்   பச்சை பசேலென்று இளமையாக இருக்கிறது.

''இந்த வீடு எங்கப்பா வசிஷ்ட பாரதிகள் வாங்க உதவியவர்  ஸ்ரீ கே. ராமரத்னய்யர் M.A.B.L என்ற  கம்பர் ரசிகர். அவர் வீட்டின் பெயரே  ''கம்பராலயம் '' என்றிருந்ததை  பார்த்திருக்கிறேன்''  என்று மணிமாமா சொல்கிறார். கம்பராமாயண ஆர்வத்தாலும், வசிஷ்டபாரதிகளின்  கவித்வத்திலும் அவரைத் தான் வாழ்ந்த புரசவக்கத்திற்கு குடியேறச் செய்ய  வக்கீல் மனதில் எண்ணம் தோன்றி தனது இல்லத்துக்கு அருகாமையில் எதிர் சாரியில் ஒரு முட்டு சந்தில் (சந்து மட்டும் அப்படியே மாறாமல் நேற்று சாயந்திரம் இருந்தது) கடைசி வீடு. அதில் 4 அறைகள்,  மூன்று படிகள் கீழே இறங்கினால் தரை மட்டம். அதை ஒட்டி இன்னொரு வீடு.அதில் 6 அறைகள், தோட்டம், தெற்கு பார்த்த வாசல்,தோட்டம் பெரிசு. தென்னை, மா, வாழை, பலா.  எல்லாமே  ரூபாய் நாலாயிரத்துக்கு  வாங்கிக்கொடுத்தார் வக்கீல். அப்போது அதன் விலாசம் 5/35   அங்கப்ப ஆசாரி தெரு '' என்கிறார் மணி மாமா.                                                                                              

நூறு வருஷங்கள் ஒரே இடத்தில் பழகுவதால் கண் பார்வை இழந்தாலும் அவரால் வீட்டுக்குளேயே சற்று நடமாட முடிந்தது. நேற்று என் தமையனார் ரத்தினசாமி அய்யர் ''வரியாடா,நாம போய் மணிமாமா வை பார்த்து 100 வயது பிறந்தநாள் நமஸ்காரம் பண்ணி விட்டு வருவோம்''என்கிறார். கரும்பு தின்ன கூலியா?  வெடித்து  விம்மும் சென்னை நகர போக்கு வரத்து நெரிசல் எங்களை  கிட்டத்தட்ட இரவு ஏழு மணி அளவில் புரசைவாக்கம் வெள்ளாள தெரு போய் சேர அனுமதித்தது. வழக்கமான தனது கட்டிலில் அமர்ந்திருந்த மாமாவுடன் எங்களை அறிமுகம் செய்து கொண்டபோது முகத்தில் ஆயிரம் வாட் ஒளி.  எங்களை பற்றி விசாரித்தார். ஐந்து ஆறு வருடங்களுக்கு எங்கள் தாத்தா பற்றிய அவர் தந்த குறிப்புகளை  கொண்டு ''எங்கள் பாரதி வம்சம்'' என்ற நூலை  நான்  எழுதி வெளியிட்டதையும் அதில் முதல் பிரதி பெருநராக அவர் பங்கேற்றதும் பசுமையாக நினைவிருக்கிறது என்கிறார்.   என்னை பற்றி விசாரித்து மகிழ்ந்தார். 

பழைய விஷயங்கள் பல பேசினோம்.   மணி மாமாவை வெள்ளை பேண்ட் அரைக் கை ஷர்ட், அலை அலையாக கருப்பு முடியோடு, நடுவில் வகிடு எடுத்த கிராப், நெற்றியில் குடும்ப அடையாளமான பிறைச் சந்திர சந்தனத்தோடு, அவருக்கே உரித்தான வசீகர புன் சிரிப்போடு பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்போது எனக்கு 18-19 வயது. அவர் நான் ஆரம்ப கால பணி புரிந்த மின்சார வாரியம் கட்டிடத்துக்கு அடுத்த அட்டிசன் குரூப் கம்பெனியில் உத்யோகமாக இருந்தார். 1957 வாக்கில் பகல் உணவு  நேரம் எங்கள் மின்சார வாரிய கேன்டீனில் சந்திப்போம். ஆண்டி என்ற சிவந்த ஒரு பிராமணர்   பொங்கல் உப்புமா அடை வடை போண்டா தோசை என்று வெகுருசியாக  தயாரித்து  காண்டீன் கான்டராக்ட் எடுத்து நடத்தினார். சட்னி சாம்பார் கொஞ்சமாக தான் போடுவார். அதிகம் கேட்டவர்கள்  காட்டும்  தட்டில்  கொஞ்சூண்டு கரண்டியால்  அடித்து தருவார். அவ்வளவு கோபம் வரும்.   நானும் மணி மாமாவும் அடிக்கடி அங்கே விதவித பலகாரங்கள் சாப்பிட்டு அருமையான காப்பி குடித்திருக்கிறோம் .  கூட்டம் அலைமோதும். எங்கிருந்தோ எல்லாம் சாப்பிட வருவார்கள்.

காலச்சக்கரம் சுழலும்போது அவரவர் பிழைக்கும் வழி தேடி எங்கெங்கோ வெளிநாடுகள் உட்பட , சென்று விடுகிறோம். வருஷங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. உறவுகள் சில இந்த காலச்சுழற்சியில் தொடர்பு அறுந்து  பல  உறவுகள் அடையாளம் தெரியவில்லை.  மீண்டும் அவர்களைத் தேடி அலைய விருப்பம் இருந்தாலும் விட்டுப்போன தொடர்புகள் எளிதில் இணைய வழியில்லை. பழைய தலைகள் மறைந்துவிடுவது காலத்தின் நியதி

மாமாவை நமஸ்காரம் செய்தபோது  அவர் ஷன்முகப்ரியா வில் முருகன் பாட்டு ஒன்று பாடு என்கிறார். என் அண்ணா உள்ளகரம் ரத்தினமய்யர் 86லும்  கணீரென்று  பாடுபவர். நானும் பாடினேன். அக்ஷதை போட்டு வாழ்த்தினார்.அவர்கையால் விபூதி இட்டார். ஐந்து நிமிஷம்  ராமாயண பிரசங்கம் செய்தார் கேட்டு விட்டு வீடு திரும்பினோம். உனது 80வது (சதாபிஷேகம்) பிறந்தநாள்  நான் நேரில் வந்து ஆசிர்வதிப்பேன் என்றார். ஆஹா அப்படி ஒரு பாக்யம் பகவான் கிருஷ்ணன் நிச்சயம் அளிப்பான் என்று தோன்றியது. 
                             
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...