Thursday, September 16, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

77.    இது தான் அத்வைதம்...

1932ம் வருஷம்  அக்டோபர்  மாதம்  13ம் தேதி  மஹா பெரியவா மெட்ராஸ்  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் ஆற்றிய  ஒரு அற்புத சொற்பொழிவு,  உபன்யாசத்தை இன்று அறிவோம்.  அதன் தலைப்பு  ஆதிசங்கரரின்  ''அத்வைதம்''.  அதன்  ஆதாரம்  பிரஸ்தான த்ரயம் எனும்  கீதா பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், ப்ரம்ம சூத்ர  பாஷ்யம்.   இதைத் தவிர  ஆதி சங்கரர்  எண்ணற்ற ஸ்தோத் ரங்கள், விவேகசூடாமணி போன்ற வேதாந்த நூல்கள் வேறு நமக்கு அளித்திருக்கிறார்.

ப்ரம்ம ஸூத்ர பாஷ்யம்,  வேத வியாசர் எழுதிய ஸூத்ரங்களுக்கு  ஆதி சங்கரரின் வியாக்யானம்.   அதில் பத்து உபநிஷதங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள்  அடக்கம்.   ஆதிசங்கரரின் சிஷ்யர் பத்மபாதர்  ஒரு வியாக்யானம் எழுதி, அதற்கு ஒரு வியாக்கியானம் விவரணாச்சார்யார் என்பவர் எழுதியிருக்கிறார்.  உத்தரதேசத்தில் வாசஸ்பதி மிஸ்ரர்   பாமதி என்ற  ஒரு வியாக்கியானம் தந்தார்.  அதற்கு கல்பதரு என்று ஒரு வியாக்கியானம் அமலானந்தர் எழுதினார் . அந்த கல்பதருவுக்கு தான் அப்பைய தீக்ஷிதர்  பரிமளம் என்று   ஒரு வியாக்கியானம் எழுதினார் .
ஸூத்ர பாஷ்யத்துக்கு ராமானந்தர் என்பவர் ரத்னப்ரபை என்ற வியாக்யானமும், ஆதி சங்கரர் சிஷ்யர் ஆனந்தகிரி,  ஆனந்தகிரியம் என்ற வியாக்யானமும் அளித்தார்.  200 வருஷங்களுக்கு முன் த்ர்யம்பக பட்டாச்சாரியார்  பாஷ்யாணுபிரபை என்ற வியாக்யானமும் எழுதினார் .
ஆதிசங்கரர் எழுதிய ''ப்ரம்ம ஸூத்ர பாஷ்யம் '' என்ற ஒரு கிரந்தத்துக்கு எத்தனை எண்ணற்ற வியாக்கியானங்கள்.

பத்து உபநிஷதுகளில்  ப்ரஹதாரண்யக உபநிஷத்துக்கும் தைத்ரீய உபநிஷதுக்கும்    ஆதிசங்கரர் சிஷ்யர்  சுரேஸ்வராச்சார்யர் வார்த்திகம் எனும் பாஷ்யம் எழுதி அவரை வார்த்திக காரர்  என்று அழைத்தார்கள்.

பகவத் கீதைக்கு  ஆதிசங்கரர் எழுதிய வ்யாக்யானத்துக்கு 10க்கு மேல் வியாக்கியானங்கள் உண்டு.  இதெல்லாம் அத்வைத சித்தாந்தம்  சம்பந்தமானவை.  

பிரம்மசூத்ரத்துக்கு ஸ்ரீ மத்வாச்சார்யர்  த்வைத சித்தாந்தமாக  ஒரு பாஷ்யம் எழுதியிருக்கிறார். அதில் அத்வைத சித்தாந்தங்களுக்கு மறுப்பு  தெரிவித்திருக்கிறார்.  இதை ஆதரித்து பத்துக்கு மேல் வியாக்கியானங்கள் உண்டு.  
ஐநூறு வருஷங்களுக்கு முன்பு சைவசித்தாந்தத்தை  மறுத்து  நியாயாம்ருதம் என்று  ஒரு வியாக்கியானம்.  அதை மறுத்து  தரங்கிணி என்ற  அத்வைத சித்தாந்தத்தை மதுசூதன் ஸரஸ்வதி  எழுதினார். அதற்கு மறுப்பாக ப்ரம்மானந்தர் என்பவர் சந்திரிகை என்ற வியாக்கியானம் எழுதினார். அதற்கு  இன்னொருபெயர் கௌடப்ரம்மாநந்தீயம். மறுபடியும் அதை எதிர்த்து த்வைத சித்தாந்தமாக வனமாலாமிஸ்ரீயம் .எழுதப்பட்டது.  அதை எதிர்த்து அத்வைதபரமாக  சித்தாந்த வைஜயந்தி எனும் வியாக்கியானம்.  

ஸ்ரீ  வைஷ்ணவம்  விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை பிரபலப்படுத்த அனந்தாழ்வார் என்பவர்  கௌட ப்ரம்மாநந்தீயத்தை மறுத்து விசிஷ்டாத்வைத தத்வ ரீதியில்   நியாய பாஸ்கரம் என வியாக்கி யானம் எழுதினார்.   இதை  மறுத்து மன்னார்குடி பெரியவா  ராஜு சாஸ்திரிகள்   நியாயேந்து சேகரம் என  ஒரு வியாக்கியானம் எழுதினர்.   இதுபோல் எத்தனையோ வியாக்யானங்கள் எழுந்தன.  எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும்.  இப்படி அபிப்ராய பேதங்கள் ஏற்படுவதை எல்லாம் படித்தால் தான் தெளிவு  ஏற்படும்.  இவ்வளவு புஸ்தகங்கள் இருப்பது யாருக்காவது தெரிகிறதா? வாசிக்கிறோமா?  சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் பேசினாலாவது கேட்கிறோமா?  நமக்கு சம்பந்த மில்லாதவைகள் கட்டு கட்டாக  என்னென்னவோ படிக்கிறோம்.  நமது தேசத்தில் உள்ள  ஆத்ம வித்யையை வெளிநாட்டவர்கள் புகழ்ந்து  வியக்கிறார்கள்.  நாம் அவர்களைப்   புகழ்கிறோம். போற்றுகிறோம்.   நமது நாட்டு கௌரவத்தை நாம் முதலில் அறிந்து வ்ருத்தி பண்ணவேண்டும்.  அது தான் நமது முதல் கடமை.

இவ்வளவு  சொல்கிறேனே அந்த ''அத்வைதம்''  என்னது?அதால் என்ன பிரயோஜனம்?  
அத்வைதம் என்றால் ஒன்றே ஒன்று, ரெண்டாவது எதுவும் இல்லை என்று அர்த்தம்.   ஆயிரக் கணக்கான வஸ்துக்கள் இருக்கிறதே,  ரெண்டாவது எதுவும் இல்லை என்று அறிந்தால் நமது பிரயத்தனம் கைகூடும். நமக்கு வரும் கஷ்டம் நிவர்த்தியாகும்.  எங்கும்  பசி, வியாதி, அவமானம், கோபம்,  தரித்திரம் , மனஸ்தாபம் எல்லாம் இருக்கிறதே. அதிலிருந்து அத்வைதம் நம்மை விடுவிக்கும்.   தற்காலிக நிவாரண  மருந்து போல் இல்லாமல்,   நிரந்தர நிவாரணம் அளிக்கும். 

மேலே சொன்னதெல்லாம் உடம்பு இருக்கிற வரையில் தான். இந்த உடம்பு போனால் இன்னொன்று வருகிறது. மறுபடியும் அதே  அவஸ்தை.  உடம்பே இனி இல்லாமல், பிறப்பே இல்லாமல் செய்துவிட்டால்? நமது பாப  புண்ய பலனாக தான் உடம்பு பிறக்கிறது.'' நான்'' என்று  தேகத்தை தப்பாக நினைக்கச் செயகிறது.  நாம் இனிமேல் பாபம் எதுவும் பண்ணக்கூடாது. பாபத்தால் தான் சரீரம் மறுபடியும் கிடைக்கிறது. பிறந்து அவஸ்தைப்பட்டு தவிக்கிறது  என்று தினமும் நினைத்துக் கொள்ள வேண்டும்.  மரம் பெரிதாக வளர்ந்து இடையூறாக இருந்தால் கிளையை வெட்டி ப்ரயோஜனம் இல்லையென்று அடியோடு வெட்டுவது போல் பாபத்துக்கு காரணமானதை அடியோடு விலக்க வேண்டும். பாபம், கெட்டகாரியம் செய்ய உடம்பு தேவை. பாபம் எதனால்?  ஆசைப் படுவதால்? ப்ரயத்தனத்தால் இச்சையை உண்டாக்கலாம்.  மாற்றலாம்.  ஞானத்தை  உண்டாக்க முடியாது. பாபத்திற்கு காரணமான ஆசையை நிவர்த்தி பண்ணினால்  துக்க நிவர்த்தி.  
 இதற்கு வழி நமது வேதாந்தம் மட்டுமே சொல்கிறது.  நமக்கு அந்நியமான  வஸ்துக்களில் தான் நமக்கு  துவேஷமும் ஆசையும் உண்டாகிறது.  நம் மேல் நமக்கு ஆசையும் துவேஷமும் இல்லை.  ஆகவே  வெளியே உள்ள வேறே வஸ்துக்களை நாமாக பண்ணிவிட்டால்?  ஆசை எங்கிருந்து வரும்? ஆசை இல்லாவிட்டால்  அதை திருப்திப்படுத்த பிரயத்தனம் இல்லை, பிரயத்தனம் இல்லை என்றால்  பாபம் இல்லை. பாபம் இல்லாவிட்டால் தேகம் இல்லை.  தேகம் இல்லையென்றால் துக்கம் இல்லை, துக்கம் இல்லையென்றால் ஆனந்தம் ஒன்று தானே மிச்சம்.

நம்மைவிட வேறு ஒன்று அழகாக இருந்தால் ஆசை.  அது சக்தி உள்ளதாக இருந்தால் அதனிடம் பயம். ரெண்டாவதாக வேறு ஒன்றும் இல்லையென்றால் ஆசையோ,பயமோ, துக்கமோ எதுவுமில்லையே! தேள், பாம்பு, புலி  என்றால் பயம், நாமே அதெல்லாமாக இருந்தால் என்ன பயம். ரெண்டாவது என்று ஏதாவது இருந்தால் தானே  சகல தொந்தரவுகளும்.  இந்த ரெண்டாவதை இல்லாமல் பண்ணுவது தான் அத்வைதம்.

வேதாந்தம்  இந்த உலகத்தில் காண்பவைகள்  நிஜமில்லை, பொய்  என்கிறது. எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம், வேறே நாமம் ரூபம் பேதம் இல்லை என்கிறது.  எல்லாமே  ஈஸ்வரன் என்று இருந்தால், நாம் காணும் வேறே வேறே வஸ்துக்கள் எல்லாம் பொய் என்று ஆகிவிடுகிறது அல்லவா? வேறே வேறேயாக காண்பதால் தானே அத்தனை ராக த்வேஷங்கள் உண்டாகிறது,   எல்லாமே ஈஸ்வர ஸ்வரூபம் என்றால் நாமும்  தான் அதில் சேர்க்கை. எல்லாம் ஒன்றே  என்றால்,  மனஸ் வித்யாசப் படாது. சண்டையில்லை , ஆசையில்லை, த்வேஷம் இல்லை. எங்குமே ஆனந்தம்.

அத்வைதத்துக்கு ஆக்ஷேபணை உண்டு, குயுக்தியான வாதம் இருக்கிறது. இருக்கட்டும். 
 ஸாஸ்த்ரங்கள்  அதற்கு சமாதானம் சொல்கிறது.   நாம்  விழிக்கிறோம் தூங்குகிறோம். அது போதுமே. வேலை செய்ய விழிப்பு, வேலை செய்த களைப்பு போக தூக்கம். நடுவில் கனவு எதற்கு?  பகவான்  ஆத்ம ஸ்வரூபம் அத்வைத ப்ரம்மம்.  அவர் இருப்பதை காட்டுவதற்கு தான் ஸ்வப்னம் என்று எனக்கு தோன்றுகிறது.  

பிரபஞ்ச ஸ்வப்னத்திலிருந்து  நாம் விழித்துக்கொண்டால்   கனவில் வந்தது , அதில் இருந்தது எல்லாமே மறைந்து போகிறது. எஞ்சியது இருப்பது கனவு கண்டவன் மட்டும் என்பது  அறிவு, புத்தி மட்டும். அது தான் சத்யம். அத்வைதம்.  வேதாந்தத்தால் அறியப்படுவது. த்வைதம் கண்ணினால் புலன்களால் அறியப்படுவது. சூரியன் எவ்வளவோ யோஜனை தூரத்தில்  அகண்டமாக இருப்பதை சாஸ்திரம் கூறுகிறது.  நமது சிறிய கைகளால் மறைந்து போகிறது. எது நிஜம்.? நம் கை மறைக்கும் சூரியனா?சாஸ்திரம் சொல்கிற  அகண்டஸ்வரூபமா?

மாண்டூக்யோபநிஷத்  ப்ரணவஸ்வரூபத்தை பற்றி சொல்லும்போது அத்வைத ஸ்வரூபம் என்கிறது.
ப்ரஹதாரண்யகஉபநிஷத்:  ''எப்போது எல்லாம் ஆத்மாவாக போய்விட்டதோ அப்போது அத்வைதம், வேறெவேறேயாக காணப்பட்டால் அது த்வைதம்  போல''   நான் அவனைப்  ''போல''  என்று சொன்னால்  நான் அவன் இல்லை என்று தானே அர்த்தம்.   ''ஸர்வம்  ஆத்மைவ'' . எல்லாம் ஒன்றே, ஒரே ஆத்மா தான்.   
 ஏன் ஆத்மா என சொல்வது?  பரமாத்மா என்று சொல்லவேண்டியது தானே ? பரமாத்மா என்றால் வேறே ஏதோ ஒரு அல்பாத்மா  இருக்கிறது என்று உணர்த்தும். ஆத்மா என்றால் ஒன்றே.  த்வைதத்தில் தான் பரமாத்மா, ஜீவாத்மா உண்டு.

நமக்கு பிரியமானவர்கள் இறந்தால், துக்கப்பட்டால், கஷ்டப்பட்டால் நமக்கு துக்கம்.   அவரகள்  நாமாகவே ஆகிவிட்டால் நமக்கு எங்கே எப்படி துக்கம்?  பிரியம், கோபம், ஆத்திரம், பயம் எல்லாம் நம் மீது நாம் கொள்பவை அல்ல. அதற்கு வேறொரு ஆசாமி  வேண்டும், வேறொரு வஸ்து இருக்கவேண்டும்.  ரெண்டாவது அந்நிய வஸ்துவே இல்லையென்றால் எப்படி  துக்கம்,  கோபம், மனஸ்தாபம் கஷ்டம் எல்லாம் வரும்?

நாம் இப்போது ஸ்வப்னாவஸ்தையில் இருக்கிறோம். விழித்துக் கொள்வோம்.
கேனோபநிஷத்:  यन्मनसा न मनुतॆ यॆनाहुर् मनॊ मतम् । yanmanasA na manutE yEnAhur manO matam | 6 |. 
''எனக்கு தெரியும் என்பவனுக்கு தெரியவில்லை என்று அர்த்தம். தெரியாது என்பவனுக்கு தெரிந்தது'' என்று அர்த்தம். எப்படி?   விளக்கு இருப்பதைக்  காட்ட இன்னொரு விளக்கு வேண்டாம். 

சத்யம் நிஜம் என்று ஒன்று இருக்கிறது. அது சர்வமும் ஈஸ்வரனாக இருக்கும்  சர்வேஸ்வரன். வாஸனையால்  வேறுவேறாக காணப்படுகிறது. எல்லாம் ஒன்றாக்கப்படவேண்டும். அது தான் அத்வைதம். அதற்கு உதவுவது ஈஸ்வர  உபாஸனை ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...