Wednesday, September 15, 2021

pesum deivam


  பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN --


74     ''ஜீவன் முக்தி நிலை.''

1932ல்  மஹா பெரியவா சென்னை  சமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில் நான்கு மாதங்கள் தங்கிய போது தினமும் மாலையில் அவருடைய பிரசங்கத்தை கேட்க  ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள்.  சாயந்திரம் பூஜை முடிந்ததும்,  சிம்மாசனத்தில் அமர்வார்.  அற்புதமான  சொற்பொழிவு அப்புறம் நடைபெறும்.  ஆஹா,   அதெல்லாம் கேட்கும் பாக்யம்  பெற்ற நமது முன்னோர்களுக்கு மறுபிறப்பே இல்லை எனலாம்.  

கற்றறிந்த பெரியோர்கள், பாமரர்கள்,பண்டிதர்கள் அனைவருமே மஹா பெரியவா  உபன்  யாசத்தைக்  கேட்க காத்திருந்தார்கள்.  ஒரு சில பிரபல பெயர்கள் மட்டும் சொல்கிறேன்.   ஸ்ரீ  T.R. வெங்கட்ராம சாஸ்திரிகள், ஜட்ஜ் வெங்கட்ராமன் சாஸ்திரிகள்,  ஜட்ஜ் குமாரசுவாமி சாஸ்திரிகள்., ஸர்  P.S.  சிவஸ்வாமி ஐயர் , ஆகியோர்  வழக்கமாக தினமும்  கேட்க வருபவர்கள். எவ்வளவு கும்பலாக இருந்தாலும் ஒரு குண்டூசி கீழே விழுந்தால்  கூட  கணீர் என்று சப்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக, சப்தமின்றி  பிரசங்கத்தை கேட்பார்கள். எல்லோர் கண்களும்  காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல் மஹா பெரியவாவின் ஆன்மீக ஒளி மிகுந்த,  கருணா சாகர  முகத்தையே கூர்ந்து சிலைபோல் அசையாமல் பார்த்துக்கொண்டு  அவரது உபன்யாசத்தை கிரஹித்துக் கொண்டார்கள்.

உபன்யாசம் ஆரம்பிக்கும் முன்பு மஹா பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருப்பார். அப்புறம் தான் பேச ஆரம்பிப்பார்.  அன்று என்ன பேசப்போகிறார் என்று எவருக்கும் தெரியாதே.  மஹா பேச ஆரம்பித்த சில  நிமிஷங்களிலேயே  அனைவரையும் கட்டிப்போடும் ஆகர்ஷண சக்தி அவர் பேச்சுக்கு உண்டு.  தினமும்  ஹிந்து, ஸ்வதேசமித்ரன் பத்ரிகை நிருபர்கள் தயாராக வந்துவிடுவார்கள்.  மஹா பெரியவா பேச்சு அன்றிரவே  பிரசுரத்துக்கு சென்றுவிடும்.  முதல் நாள் ராத்திரி  மஹா பெரியவா என்ன பேசினார் என்று படிக்க அடுத்த நாள்  விடிகாலை  பேப்பருக்காக   ஆவலாக  ஆயிரமாயிரம் வாசகர்கள் காத்திருப்பார்கள். என் தந்தையாரும் அதில் ஒருவர்.

ஒரு அற்புத  செய்தி  மைலாப்பூர்  லா  ஜர்னல் என்ற ஒரு  புத்தக  பிரசுர கர்த்தா  ஸ்ரீ  R.  நாராயணஸ்வாமி அய்யர்   மஹா பெரியவா  1932ல் நிகழ்த்திய உபன்யாசங்களை தொகுத்து  650  பக்கங்களில்  ''சங்கர விஜயம் உபன்யாசம்''  என்ற தலைப்பில்  வெளியிட்டிருக்கிறாராம் . யாரிடமாவது இருந்தால் எனக்கு கடனாக கொடுத்தால்  அதை படித்து  சில  உபன்யாசங்களை தமிழில்  ஒவ்வொன்றாக  எல்லோருக்கும் சுருக்கி எழுதலாம் என்ற ஒரு ஆசை.  நிறைவேறுவது பரமாச்சார்யாள் கருணை.
 
ஒரு சிறு புத்தகம் எனக்கு  இணைய தளத்தில் கிடைத்து அதிலிருந்து இது வரை ரெண்டு உபன்யாசங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். இன்னொன்று   கீழே  தருகிறேன். அதன் தலைப்பு ''ஜீவன் முக்தி நிலை ''  30.9.1932 அன்று பேசியது: 

''ஆதி சங்கரர் எல்லோரும்  கடைத்தேற தான் அத்வைத சித்தாந்தம் போதித்தார். அதை  சங்கரர் பேரை வைத்துக்கொண்ட சன்யாசிகளாகிய நாங்கள் எல்லா இடத்திலும் கொண்டு சேர்க்கிறோம். எங்களுக்கு ஆச்சார்யாள் இட்ட கட்டளை என்ன தெரியுமா? சந்திரமௌளீஸ்வரர்  பூஜை செய்து கொண்டு, எல்லா இடமும் போய் நமது ஹிந்து சனாதன தர்மம் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.

எல்லா ஜீவன்களும் பிறப்பு இறப்பு அனுபவித்தே தீரவேண்டும். இப்படி செத்து செத்து பிறப்பவர்களுக்கிடையே, சில  ஜீவன் முக்தர்களும்  இருக்கிறார்கள். இருந்தார்கள். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அப்படிப்பட்டவர். இன்னும் சிலரும் இப்போதும் வெளியே அறியப்படாமல் இருக்கலாம்.  மரணமெனும் வியாதிக்கு மருந்தை நாம் தான் முயற்சித்து  மஹான்கள்  மூலம் பெற முடியும். இதை வாழும்போதே பெறவேண்டும். செத்த பிறகு  மருந்தால்  பிரயோஜனம் இல்லை.
ஜனனம் மரணம் என்பது  நமது புத்திக்கெட்டாத காலத்திலிருந்தே தொடர்கிறது.

நமக்கு உடம்பு என்று ஒன்றை கொடுத்திருக்கிறது. அது உள்ளவரை பசி தாகம் போன்றவை  நம்மை பல வஸ்துக்களை தேட வைக்கிறது. பல விஷயங்களில் ஆசை உண்டாகிறது. அது கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காத போது, கோபம், பொறாமை, த்வேஷம் எல்லாம் சேர்கிறது. மற்ற வியாதிகளுக்கு மருந்து உண்டு. இதற்கு மருந்தே இல்லை. உடம்பு உள்ளவரை இதுவும் உண்டு. பசியே இல்லாத  படி செய்ய மருந்தே இல்லை.  

சமீபத்தில் ஆந்திராவில் புக்கா  எனும் இடத்தில் தங்கியிருந்தேன். இயற்கையில் ரம்யமான இடம். சதாசிவ கோனை, கைலாச கோனை என்று தீர்த்தங்கள்.  ''கோனா'' என்றால்  தெலுங்கில் மலை யருவி. நீர் வீழ்ச்சி என்று அர்த்தம்.  அருகே சிவாலயம்.  அங்கேயே  இருந்து விடலாமா  என்று மனம் நினைக்கும்.  பசி தாகம் இருக்கிறதே. திரும்பி விட வைக்கிறது.  

தேக சம்பந்தம் ஏற்படுவதை  ஜென்மம் என்கிறோம்.  அந்த சம்பந்தம் நீங்கிவிடுவது தான் மரணம். உடம்பு இருக்கிற வரை பசி தாகம், தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். தேகத்தை  துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதத்தால் போக்கிக்கொள்வது .  தற்கொலையால்  சரீர சம்பந்தத்தை நீக்கிக் கொள்ள வழியில்லை. இந்த ஸ்தூல சரீரம் தவிர  வேறொரு விதமான சரீரம் இருக்கிறதே. அதோடு சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான். பிறவித் துன்பம் தொடரும்.  ஆத்ம ஹத்தி எனும்    உயிரைப்  போக்கிக் கொள்வது பெரிய  பாபம்.  வேறே  ஏதேதோ பாபங்களை செய்து தவிக்கிறோம்,  ஆத்மஹத்தி பாபம்  வேறு சேர்ந்து விட்டால்  படும்  கஷ்டத்துக்கு கேட்கவே வேண்டாம். ஜென்மம் தொடரும்.

ஒருவனைக்  கொலை செய்தால்   நீதிமன்றம்  மரண தண்டனை  தருவதால்  அவன் பாபம் தீராது. அவன் உயிரோடு இருந்தால் மற்றவர்களுக்கும்  அவனால் ஆபத்து தொடரும் என்பதற்காக தான் அந்த மரண தண்டனை.  

சாகாமலிருப்பதற்கு என்ன வழி?  எல்லா  ஆச்சார்யர்களும் சில வழிகள் சொல்லி இருந்தாலும்
 எல்லாம்  தற்காலிகமாக வியாதியை குணப்படுத்தும் மருந்துகள் போல் நிவாரணம் அளிப்பவை யாக இருக்கிறதே.   ஜுரம் வந்தால்  கொய்னா மாத்திரை விழுங்கினாள்  அப்போதைக்கு ஜுரம் நிற்பது போல.  ஜனன மரண வியாதியின் ஆதாரம்,  மூலம்,   அப்படியே  தங்கி  விடுகிறதே.     ஆதி சங்கரர் யோசித்தார்.  ஆத்ம ஸ்வரூபத்தை அடைந்தவன் இந்த ஜென்மத்திலேயே  மரணமில்லாத நிலையை அடைந்தவன் ஆகிறான். இதை தவிர  வேறு மார்க்கம் கிடையாது என்று அறிகிறார். அம்ருதம் என்றால் மோக்ஷம். ஜனனம் மரணம் இல்லாத நிலை.  

உடம்பு என்றால் வியாதி இணை பிரியாதது.  ஆகவே  தக்க மருந்து சாப்பிட்டு இந்த வியாதியிலி ருந்து குணமடைந்தவர்களை அணுகவேண்டும். அவர்கள் அனுபவத்தை  அறியவேண்டும். பயனடை யவேண்டும்.   வேதம்  அநாதியானது. ஒருவரால்  எழுதப்பட்டதல்ல. பல ரிஷிகளின் அனுபவம். உணர்வு.  எந்நாளும் நமக்கு கிடைக்கும் உபதேசம்.  

புருஷ ஸூக்தத்தில் ஒரு இடத்தில் இப்படி சொல்லி இருக்கிறது. :
வேதா॒3ஹமே॒தஂ புரு॑ஷஂ ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒3த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ:॒ பர॑ஸ்தாத் ।
தமே॒வஂ-விഁ॒த்3வான॒ம்ருத॑ இ॒ஹ ப॑4வதி । நான்ய: பன்தா॑2 வித்3ய॒தேய॑னாய ॥

''இஹ என்றால் இந்த ஜென்மத்திலேயே என்று அர்த்தம்.  ஆஹா  இந்த  ஜென்மத்திலேயே  ஆத்ம ஞானம் பெற்றவன்  ஜனன மரண பந்தத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.  மரண மற்றவனா
கிறான் என்று சொல்கிறதே.  இந்த சரீரம் இருக்கும்போதே  இனி சரீரம், ஜனனம், மரணம் இல்லாத நிலை கிடைக்கிறதே!  இந்த சரீரம் இருக்கிறவரை  வியாதியும் உண்டு என்று சொன்னேன்.  அதன் தேவைகள் நம்மை ஆட்டி படைக்கிறது.  குடும்பம், சொத்து, சுகம், ஆஸ்தி பாஸ்தி என்று பல வஸ்துக்களை தேடி அலைகிறோம், அல்லல் படுகிறோம்.   நம்முடைய   ஆத்மாவானது அழிவற்றது. துன்பமற்றது.  தேகத்தை ஆத்மா  என்று  தப்பாக  புரிந்து கொண்டு அஞ்ஞானத்தில் வாடுவதால் இந்த துன்பங்கள் நம்மை அணுகுகிறது.  இந்த உடம்பு நானல்ல, என்னுடையதல்ல என்ற ஞானம் வந்து அதை தூர தள்ளி போட்டுவிட்டால் அதோடு சகல வித பந்தம் என்கிற  வியாதிகளும் விலகுகிறதே.

அதனால்  தான் ஆதிசங்கர பகவத் பாதாள்  இந்த சரீர சம்பந்தத்தை அது இருக்கும்போதே  தள்ளி வைத்து விடு என்கிறார். ஜீவன் இருக்கும்போதே  முக்தி அடைய வழி. இதோ இவர்கள் என் உறவு, நண்பர்கள் என்று  சரீரத்தோடு சம்பந்தம் செய்துகொண்டால்  அவர்களது நல்லது பொல்லாதது நம்மையும் சேர்த்துக் கொள்கிறது.  அதோ இருக்கிறானே அவன் என் எதிரி என்றால் அவனது நல்லது பொல்லாதது நம்மை அணுகவில்லை. சம்பந்தமே இல்லை. அது போல் இருக்கலாமே என்கிறார்.

இதோ இந்த பந்தல் வாசலில் வாழை  மரத்தை கட்டி வைத்திருக்கிறார்கள். அது வாடுகிறது. அதால் நான் வாடுகிறேனா? அதைக்  காட்டிலும் நெருக்கமாக இதோ என் உடம்பு என்கிற மாம்ச மூட்டை இருக்கிறது. அது வாடினால் நான் அவஸ்தைப்  படுகிறேன்.  அதை  அந்த வாழைமரம் போல்  தள்ளி தூர வைத்துவிட்டால் எனக்கு வாட்டம்ஏது ?  நாம்  நமது என்ற அபிமானம் தான் உடம்பை நாமாக்கு கிறது. காம க்ரோத, பசி  தாகம்   சமாச்சாரங்கள்   உடம்பை சேர்ந்தவை. நம்மை ஆட்டிப்படைக் கிறது.  இது என்னுடையதல்ல, நான் அல்ல என்று அடிக்கடி  எண்ணம் வந்தால் கொஞ்சம் கொஞ்ச மாக விலகும். ஆத்மா  பசி தாகமற்ற ஆனந்த ஸ்வரூபம் நித்யம் என்று புரியும்.  அது தான் ஈஸ்வரன்.  ஆத்மா தான் நாம் என்றால் நாமே ஈஸ்வரன் என்று புரிகிறதா?

 கடோபநிஷதத்தில்  '' taṁ svāc cha̍rīrāt pra̱vṛhe̍n muñjā̍d iveṣīkāṁ dhairye̱ṇa |     தம்  ஸ்வாசரீராத் ப்ரவ் ர்ஹென்  முஞ்சாத்  இவேஷிகாம்  தைர்யேண''.    பயிரிலிருந்து  இவேஷிகா என்கிற  கதிரை பிரித்து எடுப்பது போல, உரித்து எடுப்பது போல, சரீரத்திலிருந்து  ஆத்மாவை பிரித்து எடுக்கவேண்டும்.  அப்போது தான் அது பரிசுத்தமாகிறது, புனிதமாகிறது.  ஒரு வஸ்துவை நாம் பார்க்கும்போது, பார்ப்பது, பார்க்கிறவன், பார்க்கப்படுவது என்ற வித்யாசங்கள் இருக்கிறது. ஆத்மா தானே  எல்லாமாக  இருப்பது.  

கேனோபநிஷதத்தில் ஒரு வாக்யம்  வரும்:  அவிஞ்ஞாதம்  விஜயநதாம்  விஞ்ஞாதம்  அவிஜானதாம் 
இதற்கு என்ன அர்த்தம்  தெரியுமா? தெரியும் என்பவர்களுக்கு தெரியாதது,  தெரியாது என்பவர்களுக்கு தெரிந்தது  என பொருள்.'' உடம்பு என்கிற  வியாதி ஒழிந்தால்  தான் முக்தி.  ஈஸ்வரன் அருவன்.  உடம்பு இல்லாதவன்.   ஈஸ்வரனே நான்  என்பது தான் ''ஸோஹம் ''

(உட்காரும்போது, படுக்கும்போது, எழுந்திருக்கும்போது, சாப்பிடும் முன்  சாப்பிட்ட பின்  தூங்கும் முன்  ''ஸோ ஹம்'' என்று என் தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போது தான்  இந்த  ''ஸோஹம்'' இருந்தால்  சோகம் வராது என்று எனக்கு தெரிகிறது.)

உடம்பு நாம் இல்லை என்று எண்ணுவது சுலபமில்லை.  எல்லா உடம்புகளும்  நம் உடம்பு தான் என்று எண்ண தோன்றினால் கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்பு  என்கிற தனித்வம்  மறையும்.  பிறர் கஷ்டம் நமது கஷ்டம் போல் உணர, உதவி  செய்ய மனம் தயாராகும், செய்யும்.  பிறர்  சுகம், இன்பம் நமதாக என்னும்போது சுயநலம், பொறாமை அழியும்.  எல்லா காரியமும் ஈஸ்வரார்ப்பணம் என்று செய்ய தோன்றும்.   ''நம:  பார்வதி பதயே'' என்று  நான் அடிக்கடி சொல்கிறேன்.   நீங்களும் சொல்லுங்கள். அதை சொல்லும்போது  எல்லாம் அவன் என்கிற  எண்ணம் நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.   சரீரம் இருக்கும்போதே  ஜீவனை  முக்தியடைய செய்யும். உடல் மறந்து போகும். 

ப்ரஹதாரண்யக உபநிஷத்  ''அசரீரம் வாவ சந்தம், ந  ப்ரியாப்ரியே 'ஸ்ப்ருஷாத் 'என்கிறது. அதற்கு என்ன அர்த்தம்?   சரீரம் இல்லாமல் வாழும் புருஷன் தான் சுகவாசி. ஒரு போதும் துக்கம்   அவனை அணுகாது''  என அர்த்தம். 

ஆதி சங்கரர்  ஆத்மாவை மூன்றாக பிரித்து  கௌணாத்மா, மித்யாத்மா, முக்யாத்மா  என்பார். புத்ர,மித்ரர்கள் நாம் தான்.  அவர்கள் சுகதுக்கம் நமதே என எண்ணுவது தான் கௌணாத்மா. சரீரத்தின் மேல் ஆத்மா  அபிமானம் கொண்டால் அது மித்யாத்மா.

 சரீரத்திலிருந்து  ஆத்மா பிரிந்தபோது அது பரிசுத்தமான, புனித  முக்கியாத்மா. ஆத்மாவிலிருந்து முதலில் சொல்லிய   கௌணாத்மா, மித்யாத்மா  ரெண்டையும்  விலக்கிவிட்டால், பிரித்து விட்டால்,  எஞ்சி நிற்கும் முக்யாத்மா எந்த பந்தமுமில்லாமல் ஈஸ்வராத்மாவாக மாறி, ஜீவன் இருக்கும்போதே  ஜீவன் முக்தனாக  ப்ரம்மஸ் வரூப மாகலாம்.   இது தான்  சங்கர பகவத்பாதாள் சொல்லும் ஜனனமரண வியாதிக்கு மருந்து.இதை விடாமல் பயிற்சி செய்து வந்தால், ஸ்ரீ  சந்திர மௌளீஸ்வரர் அனுகிரஹமும்  கிடைக்கும். ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...