Saturday, September 18, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது  -  நங்கநல்லூர்   J K  SIVAN  --

பகவான் ஸ்ரீ ரமணர்.

10.   ஞானமும் அஞ்ஞானமும் 

அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
அறியாமை யின்றாகு மந்த – வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை
யறியு மறிவே யறிவா – மறிப 10

நமது ஆன்மாவைச் சுற்றி பல திரைகள் இருக்கிறது. ஆவரணம் என்று பெயர் அவற்றிற்கு.  அவித்யா எனும் அஞ்ஞானம் அதிலொன்று. இப்படி இருள், கார் மேகம்,   சூரிய ஒளியை மறைக்கிறதோ,  அப்படி நமது உண்மை ஸ்வரூபத்தை இது மறைக்கிறது.  உலக விஷய ஞானம்  தேஹம்  எனும்  பந்தம்  அந்த திரையை பலப்படுத்துகிறது.   காண்பது, காணப்படுவது, காண்பவன்  இந்த மூன்றை  யார் இதெல்லாம்  என ஆராய்பவன்,  விசாரம் செய்பவன்,  அஹம்காரம்  எனும்  ''தான், நான் ''  யார் என்பதை உணர்ந்து உண்மையான அறிவு, ஒளியைப் பெறுவான். 

ஞானம் என்பது ப்ரம்மஸ்வரூபம். அறிவு என்று தமிழில் ஞானத்தை சொல்கிறோம்.   நமது  ஒவ்வொரு  காரியமும்  மூன்று பகுதிகள் கொண்டது.    செய்பவன் , செய்கை ,  செயல்.  இதைத்  தான் ஸமஸ்க்ரிதத்தில் ,  ப்ரமாதா,  ப்ரமேயம்,  ப்ரமாணம் என்கிறோம். அஞ்ஞானத்தால்  இது மூன்றும் வேறு வேறாக தெரிகிறது.  இதை அவித்யா என்கிறோம்.   மூன்றும் ஒன்றே என்ற சத்யம் தெரிந்து விட்டால் ஞானம் பிறக்கும். ஞானமும்  அஞ்ஞானமும் ரெட்டைகள். 

ஸ்கந்தாஸ்ரமத்தில் பகவான் ரமணரை சில பண்டிதர்கள் வந்து பார்த்து பேசினார்கள்.   அவர்கள் கேட்ட விஷயங்கள், பகவான் பதிலளித்த விஷயங்கள் எதுவுமே  அப்போது அங்கு  இதையெல்லாம் பார்த்துக்கொண்டு   மகரிஷிக்கு  விசிறிக்கொண்டிருந்த ஒரு  சாதாரண பக்தருக்கு  புரியவில்லை.  வித்வான்கள், பண்டிதர்கள்  எல்லோரும்  வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த விட்டு  சென்றதற்கு பிறகு  மெதுவாக  பகவானிடம்  மிகவும் கூச்சத்தோடு,  அந்த பக்தர் என்ன கேட்டார்?

''மகரிஷி உங்களை ஒன்று கேட்கவேண்டும். கேட்கட்டுமா?''
''ஆஹா  தாராளமாக கேளேன் ''
''இப்போது வந்தார்களே  அவர்கள் ரொம்ப படித்த சாஸ்திரம் தெரிந்த  ஞானிகள்.  அவர்களுக்கு பகவானிடம் என்ன கேட்கவேண்டும் என்று தெரிகிறது. பகவான் சொல்வதும் அவர்களுக்கு புரிகிறது. எனக்கு இதெல்லாம் ஒன்றுமே  புரியவுமில்லை, தெரியவுமில்லை.  நான்  அஞ்ஞானியாக படிக்காத வனாக இருக்கிறேனே. எனக்கு  முக்தி கிடைக்குமா?''
''நீ அவர்களைவிட உயர்ந்தவனோ , தாழ்ந்தவனோ இல்லையே. எல்லோரும் ஒன்றாகத்  தானே எனக்கு தெரிகிறீர்கள்.  அவர்கள் படித்த, அறிவுள்ள  அஞ்ஞானிகள். நீ  படிக்காத அறிவில்லா அஞ்ஞானி.   இதில் என்ன வித்யாசம் இருக்கிறது?  நான் அஞ்ஞானி என்று சொன்னாயே,  அந்த ''நான்''  யார் என்று  யோசி.  அது என்னவென்று,  யார் என்று அறிந்தால்   நீ தான்  முதல்தர ஞானி.  அந்த பண்டிதர்கள் அதை இன்னும் அறியாமல் என்னிடம் கேள்விகள் கேட்க மட்டுமே  தெரிந்தவர்கள்.  மனத்தை துருவி ''நான்  யார்'' என்று அறிந்திருந்தால் என்னிடம் வந்திருக்கவே மாட்டார்கள்.

தன்னை அறிவது தான் அறிவு. ஞானம். தனது ஸ்வரூபத்தை அறிந்து உணர்வதே ஆத்மஞானம்.  மற்றதெல்லாம் விஷய ஞானம்.   வெளி உலகோடு சம்பந்தப்பட்டது.  வெளி உலக விஷயஞானம் 
உள்ளவனை பண்டிதன் என்பது  மாயை. அவித்யை. ஆத்மாவை பிரகாசிக்கச் செய்வது தான் அறிவு, ஞானம். வித்யை. இதை அளிப்பவளை தான் ஸ்ரீவித்யை என்று வணங்குகிறோம்.  

 திருவாசகத்தில் மணிவாசகர்  ''யானே பொய் ,என்  நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் '' என்பது  ஆத்மஞான  மஹிமையை.     தானாக இருத்தல் தான் தன்னை அறிவது.  அந்த நிலையில்  இந்த தேகம் மறந்துவிடும். அது இருப்பதையே  உணராத நிலை தான் ஸமாதி. பூரண ஸத்யம்,  சித்தானந்தம். உண்மையில் நாம் எல்லோருமே  ஞானிகள். நாம் அதை  அறியாமல், அறிவற்று, அஞ்ஞானி களாக காட்டிக்கொள்கிறோம்.  சூரியனில் இருள் நிற்குமா, அதுபோல் ஆத்மாவில் அஞ்ஞானம் ஒட்டாது. 


  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...