Friday, August 27, 2021

SRIMAN NARAYANEEYAM

 


ஸ்ரீ மந்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
38வது தசகம் 

38. எல்லாம் மாயை தானா?

நான்  எந்த  பிளானும்  PLAN பண்ணவில்லை.  எல்லாமே தானாகவே நடக்கிறது. இதுவும் என்னை ஆட்டிவைக்கும் கிருஷ்ணனின்  லீலை தான். சந்தேகமே இல்லை.  நாராயணீயம் எழுத ஆரம்பித்து 40 நாளுக்கு மேல் ஆகி இருக்கும்.  இன்று 38 வது தசகம். இன்னும் ரெண்டு நாளில் கிருஷ்ண ஜெயந்தி. இந்த நேரத்திலா  நாராயணீயத்தில்  கிருஷ்ண ஜனனம் தசகம் எழுத நேரிடவேண்டும்?!!! நான் அப்படி ஒரு திட்டம் மனதில் வகுக்கவே இல்லையே. 38வது தசகத்தில் என்ன வரப்போகிறது என்று கூட எனக்கு தெரியாதே.  புதிதாக  அப்பப்போ படித்து விட்டு அல்லவோ ஒவ்வொரு  நாளும் எழுதுகிறேன். இதற்கு முன்  படித்ததில்லையே. 

இதோ இன்னும்  48 மணி நேரத்தில்  கிருஷ்ணன்  பிறக்கப்போகிறான். ஆவணி மாதம்  ரோகிணி  நக்ஷத்ரம்  அன்று கிருஷ்ண ஜெயந்தி என்று  அவன் கம்சன் அரண்மனையில் சிறையில் வாடும் வசுதேவர் தேவகியின்  எட்டாவது மகனாக பிறந்ததை வருஷா வருஷம்  செய்வதைப்  போல்  ஆனந்தமாக கொண்டாடப் போகிறோம்.   கருப்பனான  ஸ்ரீ கிருஷ்ணன்  சிறையில் பிறந்தாலும் வளர்ந்தது கோகுலத்தில். 

आनन्दरूप भगवन्नयि तेऽवतारे
प्राप्ते प्रदीप्तभवदङ्गनिरीयमाणै: ।
कान्तिव्रजैरिव घनाघनमण्डलैर्द्या-
मावृण्वती विरुरुचे किल वर्षवेला ॥१॥

aananda ruupa bhagavannayi te(a)vataare
praapte pradiipta bhavadanganiriiyamaaNaiH |
kaantivrajairiva ghanaaghanamaNDalairdyaamaavR^
iNvatii viruruche kila varShavelaa ||1

ஆனந்த³ரூப ப⁴க³வன்னயி தே(அ)வதாரே
ப்ராப்தே ப்ரதீ³ப்தப⁴வத³ங்க³னிரீயமாணை꞉ |
காந்திவ்ரஜைரிவ க⁴னாக⁴னமண்ட³லைர்த்³யா-
மாவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா || 38-1 ||

குருவாயூரில்  உண்ணி கிருஷ்ணன் தனியாக  நிற்கிறான். அவன் எதிரே  சற்று தூரத்தில் அவன் பார்வையில் அமர்ந்திருப்பவர் மேப்பத்தூர் நாராயண நம்பூதிரி.  வேறு யாருமே இல்லை.  இருவர் முகத்திலும் ஆனந்தம்.  ஏன்?   உண்ணி  கிருஷ்ணனுக்கு  தன்னுடைய  பிறப்பை பற்றி  நம்பூதிரி பாடுவதைக்  கேட்பதிலும்  நம்பூத்ரிக்கு  கிருஷ்ணனின் பிறப்பை பற்றி  தான் பாடுவதை அவனே ரசிப்பதிலும்  ஆனந்தம்.  

 ''கிருஷ்ணா நீ  அவதரிப்பதாக  வாக்கு கொடுத்த நேரம் வந்துவிட்டது. எங்கேயும்  வானில் இருண்ட  கரு மேகங்கள்.    எந்நேரமும் வானம் பொத்துக்கொண்டு ஜோ மழை பெய்யப்போகிறது.  விடாது எவ்வளவு நேரம் பெய்யுமோ? அந்த மேகங்கள் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்டபோது பளிச்சிட்டு  எழுந்த மின்னல்கள் உன் ஒளியா ? உன்னிடமிருந்து வெளிவந்த  சத்ய ஜோதியா?

आशासु शीतलतरासु पयोदतोयै-
राशासिताप्तिविवशेषु च सज्जनेषु ।
नैशाकरोदयविधौ निशि मध्यमायां
क्लेशापहस्त्रिजगतां त्वमिहाविरासी: ॥२॥

aashaasu shiitalataraasu payOda tOyairaashaasitaapti
vivasheShu cha sajjaneShu |
naishaakarOdayavidhau nishi madhyamaayaaM
kleshaapahasitrajagataaM tvamihaaviraasiiH ||2

ஆஶாஸு ஶீதலதராஸு பயோத³தோயை-
ராஶாஸிதாப்திவிவஶேஷு ச ஸஜ்ஜனேஷு |
நைஶாகரோத³யவிதௌ⁴ நிஶி மத்⁴யமாயாம்
க்லேஶாபஹஸ்த்ரிஜக³தாம் த்வமிஹா(அ)விராஸீ꞉ || 38-2 ||

வானம் வயிறு திறந்தது. ஹோ வென்று   அடை மழை.  எங்கும்  குளுமை.  நல்லோர்   இதயங்களும் அப்படித்தான்  குளிர்ந்திருந்தது.  அவர்கள்  ஆசை, விருப்பம் நிறைவேறப்போகிறதே.  இருள் மெதுவாக நகர்ந்து நள்ளிரவாயிற்று.  நீ உதித்தாய்.  அப்பாடா , இனி மூவுலகிலும் கஷ்டங்கள் நிவர்த்தியாகப்போகிறது. 

बाल्यस्पृशाऽपि वपुषा दधुषा विभूती-
रुद्यत्किरीटकटकाङ्गदहारभासा ।
शङ्खारिवारिजगदापरिभासितेन
मेघासितेन परिलेसिथ सूतिगेहे ॥३॥

baalyaspR^ishaa(a)pi vapuShaa dadhuShaa vibhuutii
rudyatkiriiTa kaTakaangada haarabhaasaa |
shankhaarivaarijagadaa paribhaasitena
meghaasitena parilesitha suutigehe ||3

பா³ல்யஸ்ப்ருஶாபி வபுஷா த³து⁴ஷா விபூ⁴தீ-
ருத்³யத்கிரீடகடகாங்க³த³ஹாரபா⁴ஸா |
ஶங்கா²ரிவாரிஜக³தா³பரிபா⁴ஸிதேன
மேகா⁴ஸிதேன பரிலேஸித² ஸூதிகே³ஹே || 38-3 ||

புதையல்  என்பது கருப்பாக  மண்ணோடு மண்ணாக  பூமியில் கலந்திருக்கும். எடுத்து சுத்தம் செய்தபின் தான் தங்கமா வைரமா என்று தெரியும்.  நீ கருப்பாக  இருட்டில், நடு ராத்திரியில் அதிக வெளிச்சமில்லாத சிறைச்சாலை அறையில்  மழலைச் செல்வமாகப்  பிறந்தாய்.   அஷ்ட ஐஸ்வர்ய  செல்வராணியின் கணவன்.  கருமேகம் போன்ற நிறம்.   ஆனால் உன் க்ரீடமோ,  கழுத்து, கைகளில் இருந்த ஆபரணங்களோ கண்ணைக்  கூசும்படியாக மின்னுகிறது.  உன் கரங்களில் இது தவிர்த்து பளிச்சிடும் சுதர்சன சக்ரம், வெண்ணிற  பாஞ்சஜன்யம்,  கௌமோதகி, நந்தக  வாள், செந்தாமரை,  எல்லாமே  படு ஜோராக ஒளிவீசுகின்றன. விதவிதமான கலர்கள் . 

वक्ष:स्थलीसुखनिलीनविलासिलक्ष्मी-
मन्दाक्षलक्षितकटाक्षविमोक्षभेदै: ।
तन्मन्दिरस्य खलकंसकृतामलक्ष्मी-
मुन्मार्जयन्निव विरेजिथ वासुदेव ॥४॥

vakshaHsthalii sukhaniliina vilaasi lakshmiimandaaksha
lakshita kaTaaksha vimOksha bhedaiH |
tanmandirasya khala kamsakR^itaamalakshmiimunmaarjayanniva
virejitha vaasudeva ||4

வக்ஷ꞉ஸ்த²லீஸுக²னிலீனவிலாஸிலக்ஷ்மீ-
மந்தா³க்ஷலக்ஷிதகடாக்ஷவிமோக்ஷபே⁴தை³꞉ |
தன்மந்தி³ரஸ்ய க²லகம்ஸக்ருதாமலக்ஷ்மீ-
முன்மார்ஜயன்னிவ விரேஜித² வாஸுதே³வ || 38-4 ||

அப்பா,   குருவாயூர் கிருஷ்ணா,  ப்ரபோ, நீ வசுதேவன் மகன் வாசுதேவன்.  உன் கண்கள் தயக்கத் தோடு, வெட்கத்தோடு  சிறை அறையை நோட்டம் விட்டது. உன் மார்பில் உறையும்  லட்சுமி தேவியின் வெட்கமோ,  இருண்ட  அந்த அறை  இனி இருட்டாகவா இருக்கும்?  கம்சனின் தீமைகள், கெடுதிகள், தீயவை எல்லாம்  தப்பித்தோம் பிழைத்தோம் என்று  ஒரே ஓட்டம் பிடிக்காதா?

शौरिस्तु धीरमुनिमण्डलचेतसोऽपि
दूरस्थितं वपुरुदीक्ष्य निजेक्षणाभ्याम् ॥
आनन्दवाष्पपुलकोद्गमगद्गदार्द्र-
स्तुष्टाव दृष्टिमकरन्दरसं भवन्तम् ॥५॥

shauristu dhiiramunimaNDala chetasO(a)pi
duurasthitaM vapurudiikshya nijekshaNaabhyaam |
aanandabaaShpa pulakOdgamagadgadaardrastuShTaava
dR^iShTimakarandarasaM bhavantam.5

ஶௌரிஸ்து தீ⁴ரமுனிமண்ட³லசேதஸோ(அ)பி
தூ³ரஸ்தி²தம் வபுருதீ³க்ஷ்ய நிஜேக்ஷணாப்⁴யாம் |
ஆனந்த³பா³ஷ்பபுலகோத்³க³மக³த்³க³தா³ர்த்³ர-
ஸ்துஷ்டாவ த்³ருஷ்டிமகரந்த³ரஸம் ப⁴வந்தம் || 38-5 ||

அப்பா,  கிருஷ்ணா,  உன் தரிசனம் கிடைக்காதா  என்று கல்பகோடி  காலம் தவம் இருக்கும் முனிவர்கள், ரிஷிகள் மஹான்கள் மூக்கு மேல் கை வைக்கும்படியாக, கொஞ்சமும் உன்னை எதிர்பாராத வசுதேவன் , தேவகி முன் நீ  தானாக வந்து பச்சிளங்குழந்தையாக சிரிக்கிறாய்.  கிடைக்குமா இந்த அதிர்ஷ்டம் உன்னைக்  கையிலெடுத்து கொஞ்சி முத்தமிட??  கண்களை  ஆனந்தக்  கண்ணீர்  மறைக்க,  வார்த்தை குளற , நெஞ்சம்   தடைபட, இருவரும்  புளகாங்கித மடைந்தனர். கடகடவென்று கடல் மடை திறந்தாற்போல  உன்னை  ஸ்தோத்ரங்களில்  போற்றி  வழிபட்டனர். 

देव प्रसीद परपूरुष तापवल्ली-
निर्लूनदात्रसमनेत्रकलाविलासिन् ।
खेदानपाकुरु कृपागुरुभि: कटाक्षै-
रित्यादि तेन मुदितेन चिरं नुतोऽभू: ॥६॥

deva prasiida parapuuruSha taapa valliinirluunadaatra
samanetra kalaavilaasin |
khedaanapaakuru kR^ipaagurubhiH kaTaakshairityaadi
tena muditena chiraM nutO(a)bhuuH ||6

தே³வ ப்ரஸீத³ பரபூருஷ தாபவல்லீ-
நிர்லூனதா³த்ர ஸமனேத்ர கலாவிலாஸின் |
கே²தா³னபாகுரு க்ருபாகு³ருபி⁴꞉ கடாக்ஷை-
ரித்யாதி³ தேன முதி³தேன சிரம் நுதோ(அ)பூ⁴꞉ || 38-6 ||

சந்தோஷம்  எல்லையற்றுப் போக  ஆனந்த  பரவசத்தில் வசுதேவர் கூத்தாடினார்.  ''என்  தெய்வமே, “ என்மேல்  என்ன  கருணை உனக்கு, துன்பத்தை வேரறுக்கும் கூரான கத்தியல்லவோ நீ. எனக்கு இருக்கும் சோகம், துக்கம், துன்பத்தைப் போல் வேறு யாருக்காவது உண்டா? அதை எல்லாம் நொடியில் போக்குவதற்கு அல்லவோ  நீ வந்திருக்கிறாய்?  உன்  கருணைக்  கடைவிழிப்பார்வை ஒன்றே போதுமே, அனைத்தையும் அகற்ற'' என்கிறார் வசுதேவர். 

मात्रा च नेत्रसलिलास्तृतगात्रवल्या
स्तोत्रैरभिष्टुतगुण: करुणालयस्त्वम् ।
प्राचीनजन्मयुगलं प्रतिबोध्य ताभ्यां
मातुर्गिरा दधिथ मानुषबालवेषम् ॥७॥

maatraa cha netra salilaastR^ita gaatravalyaa
stOtrairabhiShTuta guNaH karuNaalayastvam |
praachiinajanmayugalaM pratibOdhya taabhyaaM
maaturgiraa dadhitha maanuShabaalaveSham ||7

மாத்ரா ச நேத்ரஸலிலாஸ்த்ருதகா³த்ரவல்ல்யா
ஸ்தோத்ரைரபி⁴ஷ்டுதகு³ண꞉ கருணாலயஸ்த்வம் |
ப்ராசீனஜன்மயுக³லம் ப்ரதிபோ³த்⁴ய தாப்⁴யாம்
மாதுர்கி³ரா த³தி⁴த² மானுஷபா³லவேஷம் || 38-7 ||

கிருஷ்ணா,  குருவாயூரப்பா,  அப்போது உன் தாய்  தேவகியின்  முகத்தை நீ கவனித்தாயா? என்ன சந்தோஷம்!  , இருகரம் கூப்பி உன்னை எவ்வளவோ  பக்தியுடன் கண்ணீர்மல்க வேண்டுகிறாள்!  அப்போது தான் நீ வசுதேவர் தேவகி இருவரிடமும்  அவர்கள் அறியாத ஒரு ரஹஸ்யத்தைச்  சொன்னாய்.  அவர்களது இரு முன்பிறவி சம்பவங்கள் அவை.  அவர்கள் வேண்டியபடி புத்திரனாக அவதரித்ததை நினைவூட்டினாய். அப்போது அவர்கள்   ''கிருஷ்ணா  நீ  சங்கு சக்ர கதாதாரியாக ,  தெய்வமாக  காட்சியளிப்பதற்கு பதிலாக  சாதாரண யாதவ குழந்தையாக  காட்சியளிக்க வேண்டுகிறோம் ''என்று கேட்டுக்  கொண்டார்கள். ஆஹா என்று உன்னை மாற்றிக்கொண்டாய். 

त्वत्प्रेरितस्तदनु नन्दतनूजया ते
व्यत्यासमारचयितुं स हि शूरसूनु: ।
त्वां हस्तयोरधृत चित्तविधार्यमार्यै-
रम्भोरुहस्थकलहंसकिशोररम्यम् ॥८॥

tvatpreritastadanu nanda tanuujayaa te
vyatyaasamaarachayituM sa hi shuurasuunuH |
tvaaM hastayOradhR^ita chittavidhaaryamaarya
irambhOruhasthakalahamsa kishOra ramyam ||8

த்வத்ப்ரேரிதஸ்தத³னு நந்த³தனூஜயா தே
வ்யத்யாஸமாரசயிதும் ஸ ஹி ஶூரஸூனு꞉ |
த்வாம் ஹஸ்தயோரத்⁴ருத சித்தவிதா⁴ர்யமார்யை-
ரம்போ⁴ருஹஸ்த²கலஹம்ஸகிஶோரரம்யம் || 38-8 ||

நேரம்  ஓடிக்கொண்டிருக்கிறது. சிறைச்சாலையில்  அதிக நேரம் இதற்கெல்லாம் கிடையாதே.  நீ உடனே  சூரசேன மகாராஜாவின் மகனான வசுதேவரிடம் ஒரு யோசனை சொன்னாயே நினைவி ருக்கிறதா ?  ''உடனே  என்னை தூக்கிக்கொண்டு போங்கள் .  யமுனையைக் கடந்து அக்கரையில் கோகுலம் கிராமத்தில் நந்தகோபன் என்ற  யாதவ குல  தலைவன் வீட்டில்  ஒரு பெண்  குழந்தை தொட்டிலில் உங்களுக்காக காத்திருக்கும், என்னை அங்கே போட்டுவிட்டு அந்த  பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள் ''   என்கிறாய்.  உலகத்திலேயே  முதலில் பிள்ளை பிடித்தவன்  வசுதேவர் தான்.   இயந்திரம் மாதிரி செயல்பட்டார் வசுதேவன் , கண் இமைக்கும் நேரத்தில் தயாரானார். உன்னை தூக்கிக்கொண்டார்.   மனதில் உன்னை தூக்கி  இருத்தி வைத்துக்கொள்ள துடிக்கும்  ரிஷிகள், முனிவர்கள் தேவர்கள் எல்லோரும்  அதிசயிக்க உன்னைத்  தூக்கி வைத்துக் கொண்டார் வசுதேவர்.  ரோஜா மலர்களிடையே  சுருண்டு இருக்கும்  கருப்பு வாத்துக்குட்டி மாதிரி அவர் கரங்களுக்கிடையே  நீ. யோசித்துப்  பார்த்தாலே எவ்வளவு மனம் மகிழ்கிறது! 

जाता तदा पशुपसद्मनि योगनिद्रा ।
निद्राविमुद्रितमथाकृत पौरलोकम् ।
त्वत्प्रेरणात् किमिव चित्रमचेतनैर्यद्-
द्वारै: स्वयं व्यघटि सङ्घटितै: सुगाढम् ॥९॥

jaataa tadaa pashupasadmani yOganidraa
nidraavimudritamathaakR^ita pauralOkam |
tvatpreraNaatkimiva chitramachetanairyaddvaaraiH
svayaM vyaghaTi sanghaTitaissugaaDham || 9

ஜாதா ததா³ பஶுபஸத்³மனி யோக³னித்³ரா
நித்³ராவிமுத்³ரிதமதா²க்ருத பௌரலோகம் |
த்வத்ப்ரேரணாத்கிமிவ சித்ரமசேதனைர்ய-
த்³த்³வாரை꞉ ஸ்வயம் வ்யக⁴டி ஸங்க⁴டிதை꞉ ஸுகா³ட⁴ம் || 38-9 ||

கிருஷ்ணா, உன்னிலிருந்து பிறந்தது  மாயை.  நீ மாய கிருஷ்ணன். யோகமாயாவை தயாராக  கோகுலத்தில் தொட்டிலில் விட்டு வைத்தவன். அவள் வரப்போகிறாள் சிறைக்கு. அவள் சக்தியால் நீ அங்கே போகும் வரை, அவள் இங்கே வரும் வரை,  ஊர் உலகமெல்லாம்  ஆழ்ந்த நித்திரையில் மரக்கட்டைகளாக உறங்க செய்துவிட்டாள்.  கோகுலத்தில்  நீ வந்து அவளை மாற்றியதும்  எவரும் அறியாத ஆனந்த நித்திரை.  தானாக  பூட்டு திறந்து, சங்கிலிகள் விலகி  உனக்கு வழிவிட்டவை தானாகவே  யோகமாயா வந்து சிறைச்சாலையில் தேவகி மடியில் படுக்கும் வரை  நிசப்தம், தூக்க்க்க்க்க்க்கம்.

शेषेण भूरिफणवारितवारिणाऽथ
स्वैरं प्रदर्शितपथो मणिदीपितेन ।
त्वां धारयन् स खलु धन्यतम: प्रतस्थे
सोऽयं त्वमीश मम नाशय रोगवेगान् ॥१०॥

sheSheNa bhuuriphaNavaarita vaariNaa(a)tha
svairaM pradarshitapathO maNidiipitena |
tvaaM dhaarayan sa khalu dhanyatamaH pratasthe
sO(a)yaM tvamiisha mama naashaya rOgavegaan ||

ஶேஷேண பூ⁴ரிப²ணவாரிதவாரிணா(அ)த²
ஸ்வைரம் ப்ரத³ர்ஶிதபதோ² மணிதீ³பிதேன |
த்வாம் தா⁴ரயன் ஸ க²லு த⁴ன்யதம꞉ ப்ரதஸ்தே²
ஸோ(அ)யம் த்வமீஶ மம நாஶய ரோக³வேகா³ன் || 38-10 ||

வழியில் என்ன நடந்தது என்றும் சொல்கிறேன் கேள்  எண்டே குருவாயூரப்பா.  தானாகவே விலகிய சங்கிலிகளை தூர தள்ளிவிட்டு, தானாகவே திறந்துகொண்டு பூட்டுகள் விலக, 
கதவுகள் திறக்க, காவலாளிகள்  தூங்க,  உன்னை தூக்கிக்கொண்டு வசுதேவர் விடுவிடுவென்று நடந்தார்.  ஆதிசேஷன் வழி காட்டினான்.  குடையாக உன்னை  கொட்டும் மழையில் நனையாமல் பாதுகாத்தான்.  நாகங்களின் உச்சி சிரத்தில் ஒளிவீசும் மாணிக்கங்கள் உண்டு.  ஐந்து தலை,  ஆயிரம் தலை  கொண்ட  ஆதிசேஷனின் தலைகளில் எத்தனை ஒளிவீசும் மாணிக்கங்கள் பளிச்சென்று லைட் LIGHT  போட்டு ஒளிவீசி  கோகுலத்துக்கு போக  வழிகாட்டும்.  எவ்வளவு சக்தி வாய்ந்தவன் குருவாயூரப்பா நீ, என் நோய் தீர்த்து என்னை விடுவிக்கமாட்டாயா? 

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...