Monday, August 16, 2021

ORU ARPUDHA GNANI

 


ஒரு அற்புத ஞானி  --  நங்கநல்லூர்  J K  SIVAN 

காக்கும் தெய்வம் 

அதிசயங்கள்  முன் கூட்டியே  அறிவித்து விட்டு வருபவை அல்ல.  எதிர்பாராமல், எதிர் பார்க்காத நேரத்தில் நிகழ்பவை.  சிலவற்றை அவை  நிகழ்ந்த பிறகு  ஆராய்ந்து அலசும்போது தான்  அறிந்து வியக்க முடிகிறது.  இதற்குப் பின் ஒரு முக்கிய  ஆதார காரணம் இருக்கிறது. அது தான் அசையாத  பக்தியும்  நம்பிக்கையும் .

பகவான் மேல், சில  மஹான்கள் மேல் நாம் வைத்துள்ள  பக்தி  அப்படிப்பட்டவை.   மஹா  பெரியவா,  ரமணர், சாய் பாபா,  சேஷாத்ரி ஸ்வாமிகள், ராகவேந்திரர்   போன்ற  எத்தனையோ  மஹநீயர்களின்  பக்தர்கள்  தமது வாழ்வில்  அனுபவித்த  அதிசயங்களைச் சொல்லும் போது நமக்கு நம்ப முடியவில்லை.  ஏதோ கட்டுக்கதை என்று ஒரு முத்திரை குத்துபவர்களும்  உண்டு.  ஏனென்றால் தனக்குள்ளே பக்தியோ நம்பிக்கையோ  இல்லாதவர்கள், அனுபவமற்றவர்கள்.   இதோ ஒரு சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தரின் அனுபவம்: 


திருவண்ணாமலையில்   ஒரு நடுத்தர  குடும்பத்தில்  பிறந்த ராஜா லாரி  ட்ரைவர். உள்ளூரிலேயே  படித்து  மணமாகி ஒரு  ஆட்டோ வியாபார கடை நடத்தி  வருபவர். அடிக்கடி  ட்ரைவர் வேலைக்கு சென்று சரக்குகள் ஏற்றி இறக்கி சம்பாத்தியம் பெறுபவர். சேஷாத்ரி  ஸ்வாமிகள் மீது அளவு கடந்த பக்தி. எப்போதும் தனது சட்டை பாக்கெட்டில்  சேஷாத்ரி ஸ்வாமிகள் படம் வைத்திருப்பவர்.

'' இவர்  என்னோடு இருக்கும்போது எனக்கு எந்த பயமும், ஆபத்தும் இல்லை '' என்று நம்பி பலரிடம் சொல்பவர்.  வாரத்தில் நான்கு நாட்களாவது தவறாமல்  திருவண்ணாமலை சேஷாத்திரி ஸ்வாமி கள் அதிஷ்டானத்தில்,  ஆஸ்ரமத்தில் அவரை பார்க்கலாம்.  ஒரு மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை தியானம் செய்து கொண்டிருப்பவர்.

ஒருநாள்  திருவண்ணாமலையிலிருந்து ஆந்திராவில் ஓங்கோலுக்கு  சில சாமான்கள் லாரியில் ஏற்றி செல்லும் வேலை ராஜாவுக்கு கிடைத்தது. அவரது நண்பர் முனுசாமியும் ஒரு லாரியை ஓட்டி வந்தார்.

போகும் வழியில்  சித்தூரில்  லாரிகளை நிறுத்தி  இருவரும்  ஒரு  டீக்கடைக்கு சென்று  ஆகாரம் தேநீர் பருக சென்றபோது, ராஜா  பில் செட்டில் பண்ண பாக்கெட்டிலிருந்து  பணம் எடுத்தார்.  அப்போது ரூபாய் நோட்டு சில்லறைகளோடு  சேஷாத்திரி ஸ்வாமிகள் படமும்  வெளியே வந்ததை முனுசாமி பார்த்தார்.

''ராஜா,  யார்டா இந்த சாமியார்?
''இவர் தான் திருவண்ணாமலையில் வாழ்ந்த  சேஷாத்ரி ஸ்வாமிகள்''
''எதுக்கு இந்த ஆள்  படம் வச்சிருக்கிறே?''
''ஆளு  கீளுன்னு சொல்லாதே முனுசாமி,  இவரு என் தெய்வம்.  இவரு தான் என்னை எப்போதும் கூடவே இருந்து காப்பாத்தறவரு''.
''ராஜா,  உனக்கு வேறே வேலை இல்லை, யாரோ சொல்றதை எல்லாம் நம்பி கண்ட கண்ட  ஆசாமிங் களை,  சாமியாருங்களை  தெய்வம்னு சொல்லி நிறைய பேர் ஏமாந்து போறாங்க''. அவங்க போட்டோவை யெல்லாம்  சுமந்துக்கிட்டு  திரியறாங்க.  நீயுமா அப்படி? 

''இதோ பார்  முனுசாமி, நான் உன்னை,   யார் போட்டோவையாவது வச்சுக்கோ, வெச்சுக்காதே , நம்பு நம்பாதேன்னு ஏதாவது எப்பவாவது சொன்னேன்?. இது என் சுய நம்பிக்கை, ஆகவே  இவரு என்னோடு தான் இருப்பார். என்னை காப்பாத்துறவரு''   

பேச்சு அதோடு நின்றது.  

லாரிகள் மீண்டும்  ஓங்கோலை நோக்கி  கிளம்பின.  ஓங்கோலுக்கு   20 -30  கிலோ மீட்டர் 
முன்பாக எதோ ஒரு  கிராமத்தில்  செல்லும் போது முன்னால்  சென்று கொண்டிருந்த ஒரு லாரி பள்ளத்தில் இறங்கி  கவிழ்ந்தது. பாதை தடைப்பட்டதால்    ராஜா  முருகன் இருவரும்  தங்கள்  லாரிகளை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று பார்த்தனர்.  

 வெகு தூரமாக  பளுவுடன் அவர்கள் ஓட்டிவந்த லாரியின்  சக்கரங்களை பார்க்கும்போது  ராஜாவுக்கு  திடுக்கிட்டது.  முகம் வெளுத்து உடல்  வியர்த்தது.  மார்பு  படபடவென்று துடித்தது.  ராஜாவின் லாரியின் முன் பக்க வலது சக்கரம் அச்சாணிகள் கழன்று சூட்டில்  உருகிக் 
கொண்டிருந்தது. எந்நேரமும் அந்த  லாரியின் சக்கரம்  கழண்டு உருண்டு ஓடி  லாரி  கவிழ்ந்து விழுந்து, ஒரு  பெரிய விபத்துக்கு ராஜா ஆளாகி ராஜா  உயிர் இழந்து  இருக்கலாம்.  நல்லவேளை  லாரியை நிறுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது பார்த்ததால்  அந்த  விபத்து தவிர்க்கப்பட்டது.  

முனுசாமியும் ட்ரைவர் அல்லவா.  இதைப் பார்த்து திகைத்து  அதிசயித்தான்.  ராஜா கண்ணை மூடிக் கொண்டு சேஷாத்ரி ஸ்வாமிகளை வேண்டிக் கொண்டிருந்தான். 

'' நீங்கள் தான் சுவாமி என்னுடன் இருந்து, வண்டியை நிறுத்த வைத்து, முன் சக்கரத்தை எதேச்சை யாக  பார்க்க வைத்தீர்கள்.  பார்க்காமல் நான்  ஓங்கோலை  நோக்கி  லாரியை ஒட்டிக் கொண்டிருந் தேனானால் இந்நேரம்    ஓங்கோல் போகும் முன்  விண்ணுலகம் போயிருப்பேன். நீங்கள் தான் என்னுயிரைக்  காப்பாற்றினீர்கள் ''  என்று  கண்ணீர் மல்க  கதறினார்.

முனுசாமிக்கும் அன்று தான் தெய்வ சக்தி என்றால் என்ன, மஹான்கள் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் அறிவை இயக்கி  நம்மை காப்பவர்கள் என்பதும் ,  ராஜா சொன்னது எப்படி  நூற்றுக்கு  ஆயிரம் மடங்கு வாஸ்தவமான உண்மை என்பதும் புரிந்தது.

இது போல் எண்ணற்ற  அனுபவங்களை  சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர்கள் சொல்வார்கள்.  ஆனால்  அதெல்லாம் வெளியே  பரவவில்லை.  பரவ  வைக்கவேண்டும் என்பதும் அவர்கள் விருப்பமில்லை.  பக்தி தானாக மனதில் முனுசாமிக்கு ஏற்பட்டது போல்  வளரவேண்டும்.




 



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...