Wednesday, August 18, 2021

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

64     பைரவ விஜயம் 

உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.  கிட்டத்தட்ட  நூறு வருஷங்களுக்கு முன்   மஹா பெரியவா தன்னுடைய  மேனா, பல்லக்கில் யாத்திரை சென்ற போதெல்லாம்,  பல்லக்கின் பின்னாலேயே  ஒரு நாய் கூடவே ஓடி வரும். மஹா பெரியவா அதை விரட்டுவதில்லை.  அதற்கும் பூர்வ  ஜென்ம புண்ய வாசனை அவருக்கு  அருகேயே  கூடவே  செல்ல  ஒரு பாக்யம், நமக்கு எல்லாம் என்றும் கிட்டாத, ஒன்று  அதற்கு  கிடைத்திருந்தது. 

1927ல்  அந்த நாய் தானாகவே  மடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தது.  மஹா பெரியவா  அதை பார்த்து விட்டு  தனது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு  ஆகாரம் கொடுக்க சொல்வார்.   மடத்தில்  ஆகாரம் சாப்பிட  ஆரம்பித்தபின் அந்த நாய் வேறெங்கும் எந்த உணவையும்  ஏற்பதில்லை.  என்ன ஆச்சர்யம்!   தனக்கு பிக்ஷை முடிந்த பிறகு  சற்று   முன்  அதற்கு ஆகாரம்  போட்டாச்சா என்று தினமும்  மறக்காமல் கேட்பார்.

எங்கெல்லாம் முகாம் இடுகிறாரோ அங்கெல்லாம் அந்த நாய் கூடவே செல்லும்.   மற்ற நாய்கள் போல்  அது பல்லக்கு  அருகிலோ, மஹா பெரியவா  காலைத்  தூக்கியதில்லை.   எதையும்  தொட்டு முகர்ந்து பார்ப்பதில்லை.   இரவு நேரத்தில்  மடத்தில்   கோசாலை அருகே  படுத்துக்கொண்டு  காவல் காக்கும்.   மடத்து  பொருள்கள், சாமான்களை  திருடர்கள் கையாட நினைக்கவே முடியாத காவல் காரன் அது.   மடத்தில்  சிப்பந்திகள் கொடுப்பதை மட்டும் தான் உண்ணும்.   வேறு  யார்  எதை  கொடுத்தாலும்  கிட்டவே போகாது. ஏற்றுக்கொள்ளாது.  என்ன ஒரு பாக்யம்  பாருங்கள்!  மஹா பெரியவா தினமும்  ''பைரவருக்கு  ஆகாரம் கொடுத்தீர்களா?'' என்று கேட்பார் .

 பல்லக்கு செல்லும்போதெல்லாம் பல்லக்கின் அடியில்  பைரவர் நடந்து செல்வார்.  ஆங்காங்கே பல்லக்கை நிறுத்தும்போது, பெரியவா  பல்லக்கில் இருந்து இறங்கும்போது  பல்லக்கின் அடியிலிருந்து வெளியே வந்து அவரைப்பார்த்து வாலை  ஆட்டிவிட்டு  ஓடிப்போய்  கூட்டத்தை தாண்டி ஒரு மூலையில் தூரத்தில் போய் அமர்ந்து கொள்ளும்.  சில சமயம்  மடத்து யானையின்  கால்களுக்கு இடையே  நடந்து செல்லும். மடத்து காவலாளிகள் சற்று கண்ணயர்ந்தால் ,  காவல் பொறுப்பில் கவனம் செலுத்தாத நேரத்தில்  ஜாக்கிரதையாக பொறுப்பேற்று  கண்காணிக்கும். இன்னொரு முக்கியமான விஷயம்.   தினமும் அதற்கு  ஆகாரம் கொடுப்பவர் மறந்து விட்டால், கொடுக்காமல் போய்விட்டால்  கத்தி, குலைத்து  ஆர்ப்பாட்டம் பண்ணாது.  அடுத்த வேளை  ஆகாரம் கொடுக்கும் வரை  உபவாசம் தான்.   மஹா பெரியவா கவனத்தை கவர்ந்த நாய் என்றால் இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்?.

ஒருநாள்  மடத்தில் ஒரு அதிகாரி  இந்த நாய்க்கு  பைத்தியம் பிடித்துவிட்டது என்று  தீர்மானித்து  அதை எடுத்துக் கொண்டு  40 கி.மீ தூரத்தில் எங்கோ ஒரு  கிராமத்தில்  விட்டு விட்டு மடத்துக்கு திரும்பி வந்தார்.    அவர்  வந்த  சற்று நேரத்தில் அது மடத்துக்கு தானாகவே ஓடி வந்துவிட்டது. அதற்கு பிறகு அந்த நாய்  ஒரு புது வழக்கம் ஏற்படுத்திக் கொண்டு விட்டது.   மஹா பெரியவாளை  தரிசனம் செயது விட்டு தான்  ஆகாரம் சாப்பிடுவது என்று.

மஹா பெரியவா சகல உயிர்களிடத்திலும் பாசம் நேசம் மிக்கவர் அல்லவா.  1947ல்  மஹா பெரியவா சாத்தூர் மாஸ்யத்தை வசந்த கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில்  மேற்கொண்ட போது  நடந்த சம்பவத்தை பிற்பாடு சொல்லலாமென்று நினைத்தேன். ஆனால் மறந்து போவதற்கு முன் இப்போதே சொல்லிவிடுவது நல்லது.  அந்த ஊர்க்காரர்  ஸ்ரீ சத்யமூர்த்தி சமீபத்தில் என்னை நங்கநல்லூரில் வீட்டில் வந்து சந்தித்தார்.  இந்த வசந்த கிருஷ்ணா புரம்  திருக்கோவலூர்  தபோவனம் அருகே இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் அருணாச்சலேஸ்வர  சிகரம் 20 கி.மீ. தூரத்தில் இருப்பது நன்றாக தெரியும் .

மஹா பெரியவா தான் தங்கி இருந்த இடத்திலிருந்து தினமும் பூஜை செய்த்துவிட்டு  அருணாச்சல சிகர தரிசனம் செய்து வணங்குவார். 

ஒரு நாள்  மஹா பெரியவா தியானம் செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஒரு நாய் ஓடிவந்து  அவர் அருகே வைத்திருந்த கமண்டலுவில் நாக்கை நுழைத்து தண்ணீர் குடித்தது . கண்மூடி த்யானம் செய்த மஹா பெரியவா அதை கவனிக்காமல் போனாலும் அருகே இருந்த பக்தர்களில் ஒருவர்  ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரி கல்லை வீசி நாயை விரட்டினார் அது  கத்திக்கொண்டே  ஓடி   தூர சென்று  நின்றது.

மஹா பெரியவா கண் திறந்து என்ன சப்தம் இங்கு என்று கேட்டார். விஷயம் அறிந்தார்.  

''இங்கே அக்ரஹாரத்தில் வீடுகளில் என்ன உணவு கிடைக்குமோ  அதை எல்லாம்  சேர்த்துக்  கொண்டு வாருங்கள். பக்கெட்டுகளில் நீர் நிரப்பி எடுத்து வாருங்கள் '' என்கிறார். உணவும் தண்ணீரும் கொண்டு வர சென்றவர்களில்  கல்லால் அடித்த  அதிகாரியும் ஒருவர். 

ஆகாரம் தண்ணீர் எல்லாம் வந்தது.  மஹா பெரியவா அங்கே நின்றுகொண்டிருந்த நாயை சைகையால் அழைத்தார். அவர் அருகே ஓடிவந்து நின்றது.   அதை தொடர்ந்து  எங்கிருந்தோ ஒரு பெரிய   நாய்கள்  பட்டாளமே  அங்கே வந்துவிட்டது.  அமைதியாக  உட்கார்ந்தன.  அவைகளுக்கு எதிரே  ஒவ்வொன்றுக்கும் ஆகாரங்கள்  நீர் எல்லாம் வைக்கப்பட்டது.  சண்டை போடாமல், ஒழுங்காக, நாம் பந்தியில் சாப்பிடுவது போல் அவை  ஆகாரங்களை உண்டன.

யாத்திரையில்  ஒரு தடவை  மஹா பெரியவா  ஒரு ஊரில்  ஆற்றில்  குளித்து விட்டு கரையில் ஜபம் பண்ணிக்  கொண்டிருந்தார். அவரது தண்டம்  பக்கத்தில் ஒரு பலகை மேல் இருந்தது.  அதிக ஜன நடமாட்டம் இல்லாத இடம்.   மடத்து ஆசாமிகள்  எல்லோரும் ஏதோ வேலையாக இருந்த சமயம்.  எங்கிருந்தோ ஒரு நாய் வந்து  பலகை மேல் இருந்த  மஹா பெரியவா தண்டத்தை முகர்ந்து பார்த்ததை  யாரோ ஒருவர் பார்த்து விட்டார்.  நாய் முகர்ந்து பார்த்துவிட்டு தூர சென்றது.  என்ன செய்வது என்று  தொண்டர்களுக்கு தெரியவில்லை  கற்களை எடுத்து எல்லோரும் நாயை விரட்ட முற்பட்டபோது மஹா பெரியவா தியானம்  கலைந்து ''நிறுத்து ''  என்று  கட்டளை இட்டார்.
நாயை எதுக்கு அடிக்கணும். நம்ப தப்பு, அஸ்ரத்தை தானே காரணம்.  அது என்ன தப்பு பண்ணித்து?  எதையும் முதல்லே மோர்ந்து பார்க்கறது அதொடைய குணம்.  ரொம்பநாளா  தண்டத்தை மாத்தணும்னு நினைச்சிண்டிருந்தேன்  பைரவர்  அப்ரூவல் கொடுத்துட்டார்.

ஆதி சங்கரர்  எதிரே நடந்து வந்தபோது,   காசியிலே  விஸ்வேஸ்வரன் நாலு நாயோடு தானே  எதிர்பட்டார். நாயா அது எல்லாம்.  நாலு வேதங்கள் இல்லையா.   மடத்து சம்பிரதாயப்படி  தண்டத்தை அது ஒடிஞ்சுபோனா மாத்தணும்.  அது இப்போ  ஓடையலை, கங்கையிலே அதை முழுக்கி எடுத்தா  நாய்  முகர்ந்து பாத்த  தோஷம் போயிருக்கும்.  ஆனால்  ஏன்  பெரியவா  அதை மாத்தணும்னு நினைச்சார்? நான் அந்த இடத்தை விட்டு எழுந்து போயிருந்தா  நீங்க  அந்த நாயை கல்லால் அடிச்சு துன்புறுத்தி  இருப்பேள் .  நான்   அங்கேயே உட்கார்ந்திருந்த காரணம்  அது அடிபடக்கூடாது என்பதற்காக.  

''அந்த நாய்க்கு  இது  தான் கடைசி பிறவி. இனிமே அதற்கு  பிறப்பு இறப்பே  இல்லை.''  என்கிறார் மஹா  பெரியவா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...