Tuesday, August 17, 2021

PESUM DEIVAM


 பேசும்  தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


63.  ஆத்ம ஞான உபதேசம் 

பால் ப்ரண்டன் என்ற வெள்ளைக்காரர் புண்யம் பண்ணிய  ஒரு ஆன்மீக வாதி. உண்மையான ஒரு யோகியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இந்திய கண்டம் முழுதும் அலைந்து திரிந்து, தேடி, தான் கண்டவர்கள் எவருமே உண்மையான யோகி அல்ல என்று அறிந்து,  வெறுத்து, சென்னையிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்பும் சமயம்  நண்பர்  ஸ்ரீ  K S  வேங்கடரமணி  எனும் வக்கீல்,  அவரை காஞ்சிக்கு மஹா பெரியவரை தரிசிக்க அழைத்து சென்றார். பெரியவா பால் ப்ரண்டனிடம் சம்பாஷித்து ''உனக்கு உண்மையான ஒரு யோகியை பார்க்கும் ஆவல் இருந்தால் நேரே திருவண்ணாமலைக்கு போ'' என்று அறிவுரை தந்து, அவர் கஷ்டப்பட்டு குதிரை வண்டி, மோட்டார் வண்டி என்று புழுதியில் மண் பாதைகளில் பிரயாணம் செய்து பல மணி நேரங்களுக்குப் பிறகு பகவான் ரமணரை சந்திக்கிறார்.

ரமணர் உண்மையிலேயே ஒரு யோகியா என்று சோதிக்க, நிறைய கேள்விகளை கேட்கவேண்டும் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

ஆஸ்ரமத்தில்  நுழைந்ததும்  ஒரு பெரிய  ஹால். நிறைய பேர் தரையில்  உட்கார்ந்திருக்கிறார்கள்.  ஒரு ஓரமாக  மகரிஷி உட்கார்ந்திருக்கிறார். கையில் மடித்த காகிதம் ஏதோ ஒன்று. மெதுவாக அதில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். சில நிமிஷங்கள் ஓடுகிறது. நான் அருகில் வந்த சமயம்  அந்த காகிதத்தை ஒரு புத்தகத்தில் வைத்து விட்டு  ஒரு  தொண்டரைக்  கூப்பிடுகிறார். ஏதோ தமிழில் சொல்கிறார்.  அவன்  ஆங்கிலத்தில் 

 ''உங்களால்  நாங்கள் தயாரித்திருக்கும்  உணவை  சாப்பிட  இயலாதே என்று  ஸ்வாமிகள் வருந்துகிறார். இது ஒரு எளிமையான  சாத்வீகர்கள் வாழும் இடம்.  ஐரோப்பியர்கள் வசதிகளுக்கு ஈடு கொடுக்கவோ, அவர்களது வழக்கமான, விருப்பமான உணவு  எது என்றோ  அறியாத ஒரு  இடம்'' என்கிறார்.

''பரவாயில்லை, உணவு முக்கியமில்லை. இந்த  யோகியின் ஆஸ்ரமத்திற்கு வரவேண்டும் என்ற தாகம் ஒன்று தான் எனக்கு  '' என்று பால் ப்ரண்டன் பதிலளிக்கிறார்.

மகரிஷி இதை கேட்டதும் முகம் மலர்கிறார். அமைதி, எந்த  சலனமும் இல்லாத எதிலும் பட்டுக் கொள்ளாத ஒரு  தன்மையை காட்டும் முகம்.

''ரொம்ப நல்ல நோக்கம் உங்களுடையது' -  மஹரிஷியின்  பதில்.
.
"குருஜி,  நான்  மேலை நாட்டு தத்துவங்கள், விஞ்ஞானம் படித்தவன், நெருக்கமாக ஜனங்கள் வாழும் பெரிய  நகரத்தில் வசிப்பவன். அங்குள்ள மக்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள்,  விருப்பங்களை அறிந்து  
அதில் கலந்தவன்.  அதே நேரம்,  தனிமையை விரும்பி,  அமைதியை தேடி, ஆழ்ந்த சிந்தனையோடு,  எங்கெல்லாமோ  அலைந்தவன், மேலை நாட்டு  ஞானிகளோடு பழகியவன்.  விடை காணாமல் இப்போது  கீழை நாட்டை நோக்கி வந்தவன். ஞான ஒளி தேடுபவன்''

''புரிகிறது''.  ஒரு  சின்ன தலை அசைப்பு .

''பலரின்  கருத்துக்கள், கோட்பாடுகள்,  அறிவு பூர்வமான  சான்றுகள்  எல்லாம் கேட்டு, கண்டு படித்தவன்,  பல வித எண்ணங்கள் நம்பிக்கைகள்  என்னை  வந்தடைந்தன.  எனக்கு  த்ருப்தி யளிக்காமல் அவை என்னை ஆயாசப்படுத்தினது தான் மிச்சம்.  களைத்துப் போய்விட்டேன் குருநாதா,  சுய அனுபவத்தில் அவை என்னை  கவரவில்லை.  என்னை மன்னியுங்கள், நான்  ஆன்மீக வாதியோ ஆஸ்திகனோ அவ்வளவு இல்லை.  ஒரு  சாதாரண மனிதனின் உலக வாழ்க்கையை த்  தாண்டி  ஏதாவது இருக்கிறதா? இருந்தால் அதை அடைய  இயலுமா? அது என்னால்  முடியுமா?

பதில் இல்லை. உள்ளே  எண்ணங்கள் ஓடுகிறதோ?  வேறெதுவும்  பண்ண முடியாமல் என் நாக்கு எனக்குள்ளே  கொதிப்பதை  வாரித் தெளிக்கிறதோ?  மேலே பேசுகிறார் பால் ப்ரண்டன்.

''மேனாட்டு  அறிஞர்கள்,  விஞ்ஞானிகள், கெட்டிக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இருந்தும் உலக  வாழ்க்கையைக்  கடந்த  ஒரு சத்தியத்தின்   ஞான ஒளி பற்றி கூறமுடியாதவர்கள்.   நான் அறிந்தவரை  மேலை  நாட்டைவிட  இங்கே  ஞானிகள்  யோகிகள்  அதை  உணர்ந்தவர்கள் பலர்  உண்டு என்று புரிந்தது.  எனக்கு நீங்கள் வழிகாட்ட முடியுமா? அல்லது நான் தேடுவது ஏதோ ஒரு  கானல் நீரா? ஏதோ ஒரு உருவமற்ற,  ஆதாரமற்ற நிழலா?''

வார்த்தைகளை வீசி விட்டார் பால் ப்ரண்டன்.  பாவம்,  எவ்வளவு நாளாக  இந்த தேடல் அவருக்கு. மஹரிஷியின் பதிலுக்கு ஆவலாக காத்திருக்கிறார்.

மகரிஷியின்  பார்வை  ப்ரண்டனை  ஊடுருவியது. பத்து நிமிஷத்துக்கு மேல் அமைதி, பேச்சு இல்லை.  பிறகு மெதுவாக  ஒரு வார்த்தை வெளி வருகிறது.
  
"நான்  தேடுகிறேன், அலைகிறேன், நான்  அறிய  விரும்புகிறேன்  என்கிறாயே. அந்த  ''நான்'' யார்?
ஆங்கிலத்தில்  தெளிவாக  மகரிஷி இப்படி பேசியது  பாலப்ரண்டனுக்கு ஆச்சர்யம்.  திடுக்கிட்டார்.
''ஐயா, உங்கள் கேள்வி புரியவில்லை ''
"புரியவில்லையா,  மறுபடியும்  யோசி ''
''நான் திரும்ப திரும்ப  அவர்  கேட்டதை பற்றி சிந்திக்கிறேன். ஒரு எண்ணம் மனதில் பளிச்சிட்டது தன்னை   ஒரு விரலால் சுட்டிக் காட்டிக்கொண்டே  ''நான்  பால்  ப்ரண்டன் ''  என்கிறார்.
''உனக்கு  அவரைத் தெரியுமா?''
"இந்த நிமிஷம் வரை  என் வாழ்க்கை முழுதும் நான் அவரை அறிவேன்''  என்று சொல்லி சிரித்தார் பால் ப்ரண்டன்.
"நீங்கள் சொல்வது உங்கள் உடலை.  நான் கேட்பது அதைக் கடந்த   நீங்கள் யார் என்று?''
ப்ரண்டனுக்கு விடை தெரியவில்லை. இது என்ன? இதுவரை கேள்விப்படாத கேள்வி?''
மகரிஷியே பேசினார்:
"முதலில் உங்களுடைய உடலல்லாத அந்த ''நான்''  யார் என்று சிந்தித்தால் உண்மை தெரியும்., நீங்கள் தேடும் வினாவுக்கு விடை புலப்படும்''.
''தலை சுற்றுகிறதே . புதிராக இருக்கிறதே. அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. ஒருவேளை தான் சொன்னது சரியில்லையோ  என்று  மொழி பெயர்ப்பாளரிடம் சொல்லி  ஆங்கிலத்தில்  மறுபடியும்  விளக்கச் சொல்கிறார்.

"ஒரே ஒரு விஷயம் தான் பாக்கி  இருக்கிறது.  உன்னையே  நன்றாக  சரியான வழியில்  உற்றுப் பார்.உன் மன சஞ்சலத்துக்கு விடை அங்கே கிடைக்கும். "-  மகரிஷி.

''நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள். அதற்கு முறை, வழி எது  '' -  பால் ப்ரண்டன்.
"விடாமல்  உனக்குள்ளே  தேடவேண்டும். உள்நோக்கி அலசவேண்டும். தியானமாக அது மாற வேண்டும். இருட்டிலிருந்து வெளிச்சம் கிட்டும்.''
"குருநாதா,  உண்மை, சத்யம் என்றால் என்ன என்று பலமுறை என்னையே நான் கேட்டுக் கொண்டி ருக்கிறேன்.  ஆனால் முன்னேற்றம் எதுவும் காணோம் ''
"முன்னேறவில்லை என்று உனக்கு எப்படி தெரியும்?  ஆன்மீக  தேடலில்  முன்னேற்றத்தை, வளர்ச்சியை  எளிதாக அறியமுடியாது.''
"இதற்கு ஒரு குரு வேண்டுமா ?''
"தேவைப்படலாம்''
"அந்த குரு, ஆசார்யன், நீங்கள் சொல்கிறபடியே ,  ஒருவனை தனக்குள்ளே  தன்னைத் தேடுவதற்கு  உதவ முடியுமா?
"அந்த குரு,  ஆசார்யன், அவன்  தேடலுக்கான வழிமுறைகள்  சொல்லித் தருவார். சாதகன் தானாகவே தான்  சுய அனுபவத்தில் அதை உணரமுடியும் . சைக்கிளில் உட்காரவைத்து தள்ளி விடுவார். கெட்டியாக  ஆடாமல் அசையாமல் முன்னாள் பார்த்து மிதி என்பார். நீ தான்  மிதித்து ஓட்டவேண்டும். விழவேண்டும். எழுந்திருக்கவேண்டும். மிதிக்கவேண்டும்.'' 
"ஒரு குருவின்  உதவியோடு இந்த  ஞான ஒளி பெற  எத்தனை காலம்  பிடிக்கும்?''
"அது  சாதகனின்  மன முதிர்ச்சி, இடை விடாத  முயற்சியை பொறுத்தது.  பீரங்கியை  திணிக்கும்  வெடிப் பொடி  உடனே  தீயை உண்டாக்கி  வெடிக்கிறது.  அடுப்பு  எரிய  கரித்துண்டு  நெருப்பு பிடிக்க நேரம் ஆகிறது அல்லவா?"
"மகரிஷி  நாம் வாழும்  காலம்  சோதனைகள்  நிரம்பி இருக்கிறதே.  உலகத்தின் எதிர்காலம் பற்றி  நீங்கள்  என்ன அபிப்ராயம் சொல்கிறீர்கள்?''
"எதிர்காலத்தைப் பற்றி என்ன யோசனை, எதற்கு  அதை தொந்தரவு செய்யவேண்டும்? நிகழும் காலத்தைப் பற்றியே  சரியாக உணரமுடியாமல், தெளிவில்லாமல் இருக்கும்போது  அதைப்பற்றி என்ன கவலை?  நடப்பதை எண்ணு.  எதிர்காலம் தானே  தன்னைப் பற்றி உணரும். தெளிவுறும் ."

மீண்டும் சிறு  அமைதி இடைவெளி.
ஒரு தொண்டன் வந்து  சாம்பிராணி, ஊதுவத்தி மறுபடி   ஏற்றி வைக்கிறான்.  அதன் நீல புகை  சுருள் சுருளாக  பரவுவதை கவனிக்கிறார்.  மீண்டும் புத்தகத்தில் வைத்த  காகிதத்தை கையில் எடுக்கிறார் நான் எதிரில் இருப்பதை முற்றிலும்  மறந்துவிட்டார்.  தனது சிந்தனையில் எழுதுவதில்  கவனம் சென்றுவிட்டது.  பால் ப்ரண்டனின் சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்டதா?

பால் ப்ரண்டன் மெதுவாக தரையிலிருந்து எழுந்திருந்து,  கரம் குவித்து  வணங்கி அங்கிருந்து  செல்கிறார்.   இந்தியாவை விட்டு செல்வதை மேலும் ஒரு வாரம் தள்ளி போடுகிறார்
மஹரிஷியின்  தனிமை சூழல், அமைதி, மௌனம் ப்ரண்டனை கவர்ந்து விட்டது.  
ஒருவாரம் ஓடியும்  இன்னும்  மகரிஷியை  நெருங்க  முடியவில்லையே.  ஏதோ  இதுவரை இல்லாத  உயர்ந்த சிந்தனைகள் கைகூடின.  ஏமாற்றங்கள் கூடவே  புரிந்தது.  ,மகரிஷியை ஏன் நெருங்கி புரிந்து கொள்ள முடியவில்லை.  ஒரு சிஷ்யனை  அணுகினார்.  

''நான்  குருஜியோடு  ஒரே ஒரு முறை மீண்டும்  சில நிமிஷங்கள் பேச முடியுமா?'' என கேட்கிறார்.
தொண்டன் உள்ளே சென்று  மகரிஷியின் பதிலை  தெரிவித்தான்.  
''சந்தோஷமாக உங்களை சந்திப்பார்''
ப்ரண்டன்  ஹாலுக்கு சென்றார்.   தரையில் உட்கார்வது கஷ்டமாக இருந்ததால் சற்று உயரமான ஒரு திண்டு போட்டிருந்தது.  மகரிஷி மெளனமாக  ஒரு புன்முறுவலுடன் வரவேற்றார்.  கொஞ்சம் மனது திடமாகியது.  கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.
''குருஜி,  ஞானம் பெற  ஒருவன்  தனித்து,  காடு, மலை தேடிப்  போகவேண்டும் என்று  யோகிகள் சொல்வதாக  அறிகிறேன்.  எங்கள்  வாழ்க்கை முறையில்   மேலை நாடுகளில் அது சாத்தியம் இல்லையே?''
''செய்யும்  தொழிலை, வேலையை, காரியத்தை விட்டு விட்டு  தனித்து எங்கோ போய் அலைய வேண்டாம். ஒவ்வொரு  நாளும்  ஒரு மணி, ரெண்டுமணி நேரம் தொடர்ந்து  ஆத்ம  விசாரம் பண்ணிக்கொண்டே வந்தால் போதும். சரியான முறையில்  தேடல்  அமைந்தால்  மனது சக்தி பெறும் , கட்டுக்குள் வரும்.  மனதும் செயலும் வேறல்ல.  மனம் தெளிவடைந்தால்  அதன் வழியில் செல்லும் செயலும்  சீராகும்.
"அதன் விளைவு  என்னஆகும், என்ன பயன்  ?''
"இப்படி  தியானம், சிந்தனையின் பயனாக  மற்றவர்களோடு  பழகுவதில் வித்யாசம் தெரியும். செயல்கள், நோக்கம்  எல்லாம் புதிதாக மாறி விட்டதை உணரமுடியும்.  தியானத்தின் விளைவை செயலில் காணலாம். "
"அப்படியென்றால்  சில  யோகிகள் சொல்வது போல்  தனிமையை தேடி எங்கோ செல்ல வேண் டாமா?
நேரடி பதில் இல்லை. மௌனம். தொடர்ந்து உபதேசம்: 

''ஒருவன்  எப்போது  சுயநல எண்ணத்தை  துறக்கிறானோ , அவனுக்கு  உலக  ஈர்ப்பு விடுபடும்.  சுயநல எண்ணம்  உண்மையை அறியாமல் தடுப்பது.  மாயை. அவனே உண்மை  எனும்  ஆத்மாவை  உணரமுடியும். ''
"உலக வாழ்வில் எப்படி ஐயா  சுயநலம் இன்றி  வாழ முடியும்?''
"உலகத்தில்  வாழ்ந்துகொண்டு  தனது கடமைகளை செய்வதற்கும்  ஞானத்திற்கும் சம்பந்தமே இல்லை.    அவை வெவ்வேறானவை.  இரண்டையும் ஒரே சமயத்தில் சேர்த்து அனுபவிக்க முடியும் "
"ஓஹோ.  உலகத்தில்  காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டே  ஞானம்  பெறமுடியுமா?''
"ஏன் முடியாது?    உலக வாழ்வில் ஈடுபடுவது இந்த உடலாகிய  ''தான் '' என்ற எண்ணம் மறைந்தால்  அதுவே படிப்படியாக அவனை  ஆத்மாவை உணரச் செய்யும் ''
"நீங்கள் சொல்வது போல் பார்த்தால்  உலக வாழ்வில்  ஈடுபட்டு காரியங்களை செய்பவனுக்கு தியானம் செய்யவே  அதிக நேரம்  கிடைக்காது போல் தோன்றுகிறதே''
இந்த கேள்வியை  மஹரிஷி லக்ஷியம் செய்யவில்லை.

'தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குவது ஆரம்ப காலத்தில்  ஆன்ம நாட்டம் கொண்டவர்களுக்கு தான் தேவை.  பழகப் பழக, நாளாவட்டத்தில் தியானம் செய்வது அவனது காரியத்தோடு  கலந்துவிடும்.  சமூகத்தில் இருந்து கொண்டு  தனது கர்மாவைச்  செய்பவனின்  மனது தனிமையில் தான் இயங்கும்''
"அப்போது யோகிகள் வழியில்  நீங்கள்  அதை கற்றுத் தருவதில்லையா?
"மாடு  மேய்ப்பவன்  கையில் கம்புடன் அதை  வழி நடத்துபவது போல் தான் யோகி  மனதை செலுத்துகிறான்.  வழியில் கை  நிறைய  புல்லை வைத்துக்  காட்டிக்கொண்டே   மாட்டை  செலுத்துவதில்லையா?''
 ''அது எப்படி ஐயா சாத்தியம்?''
"அதற்கு தான்  அடிக்கடி  '' நான்  யார் ?'' என்று  வினவுவது.   இந்த  வினாவுக்கான  விடை  தான் ஆத்மாவை காட்டும். அந்த  பெரிய  சோதனையில் ஜெயித்தவனுக்கு மற்ற சோதனைகள் தூசியாக  மறையும் . "
பால் ப்ரண்டன் மகரிஷி சொன்னதை உள் வாங்கிக்கொண்டு மெளனமாக இருந்தார்.  
பகவான்  ரமண மகரிஷி மேலே தொடர்ந்தார்:
''இப்படி சொன்னால் விளங்குமா பார்?    எல்லோருக்கும்  துக்கமே இல்லாத சுகம் வேண்டும். முடிவில்லாத சுகம் தேவை.  இந்த  எண்ணம் ஞாயம்.  ஆனால்  தன்னை(இந்த உடலை)  விரும்பு கிறவர்கள்  தானே அதிகம்.''
"ஆமாம் ஐயா "
"இப்போது யோசி.  மனிதன் தன்னை, அதாவது தனது உடலை, அதன் பெயரை அதிகம்  விரும்பு பவன், சுகத்தை அடைய  குடி, ருசியான உணவு, கேளிக்கை,  மதம், இவற்றை பயன்படுத்துகிறான்.  அது தான் அவன் சுய ரூபம் என்று  நினைப்பவன். ஆனால்  இந்த இன்பம் வேறு, ஆத்மானந்தம் வேறு. அவன் இயற்கை ஸ்வரூபம் வேறு''
''ஐயா  நீங்கள் சொல்வது.......''
"மனிதன்  இயற்கையாகவே  ஆனந்தத்தின்  ஸ்வரூபம்.  அதை உணர்ந்தால்  தான் அனுபவிக்க இயலும்.   ஆத்ம  சுகானுபவம் தேடுவது அவன் தனக்குள் புதைந்து கிடைக்கும் புதையலைத் தேடுவது.  அது என்றும் நிலையானது. அழிவற்றது.  அதை அடைந்தவன்  ஆனந்தன். என்றும்  சுகவாசி.''
"உலகம்  என்பது  துன்பம் நிறைந்ததா ?
"ஆமாம் என்று  தானே  நீங்கள் சொன்னதிலிருந்து விளங்குகிறது. உண்மையை அறியாமை  
துன்பத்தை தான் தரும். தெரிந்தோ தெரியாமலோ  அநேகமாக எல்லோரும் இந்த  பொய்யான இன்பத்தை, சுகத்தை தேடுபவர்களாகத் தான் உலகமுழுதும் இருக்கிறார்கள்.''

மகரிஷி மௌனமாகிவிட்டார்.  ஹாலில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக அவரை  வணங்கிவிட்டு சென்றார்கள்.  அவரது ஆழ்ந்த கூரிய பார்வையிலிருந்து தனது கண்களை விலக்கிக் கொண்டு  பால் ப்ரண்டன்  மகரிஷியை  வணங்கிவிட்டு  செல்கிறார்.

ரெண்டு வாரங்களில்  பம்பாயிலிருந்து  ஐரோப்பா செல்வதற்கு வாங்கிய  பயணச்சீட்டை  ரத்து செய்துவிட்டு பால் ப்ரண்டன் திருவண்ணாமலையிலேயே  அடைக்கலம் ஆகிவிட்டார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...