Monday, August 23, 2021


''

கிருஷ்ணன் எப்போதும் என்னுடன்''-  நங்கநல்லூர் J K SIVAN 


ஆமை முயல் ஓட்டப்போட்டி கதை தெரியுமல்லவா? முயல் வேகமாக ஓடி அங்கங்கே நின்று கர்வத்தால் தோற்றது. ஆமை கருமமே கண்ணாயினார் பரம்பரை என்பதால்  மெதுவாக விடாமல் நடந்து  வந்தே வெற்றி பெற்றது. நான் ஒரு கிழ ஆமை. வெற்றி பெறுவேனோ மாட்டேனோ தெரியாது. மெதுவாக ஒவ்வொன்றாக எனக்கு கண்ணில் பட்ட, விருப்பமான அனைத்து ஆன்மீக விஷயங்களையும் தொட்டு ஒவ்வொன்றாக எழுதும் தீராத தாகம் என்னை செலுத்துகிறது. கீதாஞ்சலி நூற்றுமூன்றையும்  எழுத முடியுமா என்ற மலைப்பு  ஆரம்பத்தில் இருந்தது.  தவிர,  இந்த தாகூர்  புரியாத பாஷையில் வேறு  எழுதுகிறார். இதை எப்படி  புரியும்படியாக  நண்பர்களிடம் சேர்ப்பது.  நமது முயற்சி வெற்றிபெறுமா.  கேள்விக்குறி பெரிதாகவே  இருந்தது.  எவரெஸ்ட் சிகரம் போவதாக இருந்தாலும் ஒவ்வொரு அடியாகத்தானே  போகவேண்டும் என்ற உள்ளுணர்வு  உந்தித் தள்ள எழுத ஆரம்பித்தேன்.  தாகூர்  அப்ஸ்ட்ராக்ட் ABSTRACT  எழுத்தாளர். எதை நினைக்கிறாரோ அதை பூடகமாக சொல்பவர். அவரளவு சிந்தித்தால் தான் அவர் புரிவார்.  

நான் கிருஷ்ணனை உள்ளே புகுத்தினேன். காரியம் எளிதாகிவிட்டது.  அவன் வல்லவனுக்கு வல்லவன் ஆயிற்றே.  

தாகூர்  சிறந்த வேதாந்தி.  அவர் கவிதைகளில் நாம்  காணும்  இந்த  உலகை  வேறு ஒரு ஆனந்த  உலகமாக  உணரலாம்.  சாவைக்கண்டு  அஞ்சாத  ஆனந்த நிலை புரியும்.  இதுவரை வாழ்ந்த வாழ்க்கை  இறைவன் தந்த பரிசு, நன்றியோடு அவனை நினைத்து வாழ்ந்து விடைபெறுவது ஒன்று தான் புத்திசாலித்தனம்.  

ஒருவன்  வாழ்க்கையின்  எல்லையில் நின்று   எல்லோரிடமும்   விடைபெறுகிறான். இனி அவனுக்கு வேறு உலகத்தில் அனுமதி. அங்கும்  இந்த நண்பர்கள் கிடைப்பார்களா??இந்த  தாகூரின்  பாடலை எனக்கு அன்போடு அனுப்பியவர்  பம்பாய்  திருமதி விஜயா கிருஷ்ணமூர்த்தி.  அந்த பாடலில் அர்த்தமும் ஆங்கில பிரதியும்  கீழே :

''நண்பர்களே,  ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு.  விடைபெறுகிறேன்.ஆஹா  எப்படிப்பட்ட அழகான   வாழ்க்கை உங்களால் எனக்கு கிட்டியது. ஒவ்வொரு கணமும் இனிமையான மறக்கமுடியாத இன்பகரம்.  குறை யொன்று மில்லை கண்ணா என்று அவனிடமும் உங்களிடமும்  பாடுகிறேன்.  ஏதாவது எனக்கு  துன்பம், வலி, துயரம் இருந்திருந்தால் அதெல்லாம் இனி இங்கேயே விட்டுவிட்டு செல்கிறேன்.

எப்போதெல்லாம்  என் மனம் துவண்டதோ, எனக்கு சோர்வு தட்டியதோ, அப்போதெல்லாம் என் இதயத்துக்கு புத்துணர்வு, பூரண  அன்போடு  தந்து, என்னை அரவணைத்த என் ஆன்மாவை மகிழ்வித்த கண்ணனின் கருணைக் கரங்களுக்கு கோடானு கோடி நன்றி.

என் வாழ்வில் நான் பெற்ற  விலைமதிப்பில்லாத செல்வம் என் நண்பர்களே நீங்கள் தான். என்னை என்றும் ஊக்குவித்து, வழி நடத்திய  பெருந்தகை களை, காலத்தை வென்றவர்கள் நீங்கள். காலம் என்னை வென்றால் எனக்கென்ன கவலை?

விடைபெறுகிறேன்  என்  நட்பென்னும் தெய்வங் களே,   நான் மகிழ்ச்சியோடு, ஆனந்தமாக  சிரித்து விடைபெறுகிறேன். இங்கு சிந்த வேண்டி யது ஆனந்தக்  கண்ணீர் ஒன்று தான். அதுவும் நான்  நன்றி உணர்ச்சி மேலீட்டால். நீங்கள் அழத்தேவையே இல்லையே.  நான் விரும்புவது என்றும் உங்கள் புன்னகை மாறா முகங்களைத் தான்.  நீங்கள் விரும்பியவர் உள்ளத்தில்  என்றும் குடியிருக்கும்போது அங்கு மரணமே இல்லை. என்னை நினைக்கும்போதெல்லாம்  நான் எங்கோ மகிழ்ச்சியில் உங்களை இருகரம் கூப்பி  நன்றியோடு வணங்குவேன். 

Farewell My Friends
It was beautiful
As long as it lasted
The journey of my life.
I have no regrets
Whatsoever said
The pain I’ll leave behind.
Those dear hearts
Who love and care...
And the strings pulling
At the heart and soul...
The strong arms
That held me up
When my own strength
Let me down.
At the turning of my life
I came across
Good friends,
Friends who stood by me
Even when time raced me by.
Farewell, farewell My friends
I smile and
Bid you goodbye.
No, shed no tears
For I need them not
All I need is your smile.
If you feel sad
Do think of me
For that’s what I’ll like
When you live in the hearts
Of those you love
Remember then
You never die.

முடிக்கும் முன்பு ஒரு  அதிசய செய்தி.   நேற்று  மாலை  கீதாஞ்சலியை நிறைவு செய்தேன் .103 பாடல்கள் எல்லாவற்றிலும் என் மொழியில், கிருஷ்ணன் உண்டு.  ஆஹா  இனி உன்னை தினமும்  என் எழுத்தில் எப்படி காணப்போகிறேன்... கீதாஞ்சலி முடிகிறதே என்று மனம் பேதலித்தது. இருக்கவே இருக்கிறது, கீத கோவிந்தம், பாரதியார், சூர் தாஸ் , ஊத்துக்காடு, கிருஷ்ணா கர்ணாம்ருதம் என்று ஆறுதல் அடைய முயற்சிக்கும்போது '' தாத்தா, இந்தாங்கோ..... என் ஐந்து பேத்திகளில் ஒருவள் படித்து முடித்து வேலைக்கு போய் முதல் சம்பளம் வாங்கினாளாம். தாத்தாவுக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று கடைகளில் அலைந்தவள் கண்ணில் பட்டவன் இந்த அபூர்வ கிருஷ்ணன்.   
''வா கிருஷ்ணா வா''   
''என்னை எப்படி காண்பேன் என்று நினைத்தாய், இதோ உன் முன் நிற்பேனே . எதை வேண்டுமானாலும் என்னைப் பற்றி எழுது, ரசிக்கிறேன்'' என்று நிற்கிறான்.  

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...