Friday, August 27, 2021

pesum deivam

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


68.  மஹா பெரியவாளின்  மஹாசிவராத்திரி விஜயம் 

 1931ல்  மஹா பெரியவா  எசையனுர் என்ற  ஊருக்கு  சென்றபோது ஆருத்ரா தரிசனம் விசேஷம்.  
அங்கிருந்து  ஜூலை 28தேதி  அன்று  சித்தூர் சென்றார்.  சித்தூர்  ஞாபகம் இருக்கிறதா? முருகன் வள்ளியை மணந்தானே, அந்த வள்ளியின் தகப்பனார்   வேடராஜா,  நம்பிராஜன், முருகனின் மாமனார்  வாழ்ந்த இடம்.  அங்கே ஒரு சிறு குன்று இருக்கிறது.  அதற்கு வள்ளிமலை என்று பெயர்  குகே ஒரு  சிற்றாறு. நீ வா என்று அதற்கு பெயர்.   ஒரு குட்டி சிவன் கோவில்.  அந்த சிவன் கோவிலிலிருந்து ரொம்ப தூரத்தில்  அந்த  ஆறு ஓடிக்கொண்டிருந்தது.  அர்ச்சகர் தினமும் ரொம்ப தூரம் நடந்து போய் அந்த ஆற்று நீரை கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். வழியில் ஒரு  ராக்ஷஸன் வேறு  பயங்கரமானவன் இருந்தான்.   அந்த வயோதிக  அர்ச்சகர் அவனிடமிருந்து தப்பி சென்று அபிஷேகஜலம் கொண்டுவர வேண்டும்.  சிவன் சும்மா இருப்பாரா?  ''அர்ச்சகர் உன்னிடம் வரவேண்டாம், நீ வா '' என்று ஆற்றுக்கு  கட்டளையிட்டார்.  ஆறு நகர்ந்து கோவில் கிட்டேயே வந்துவிட்டது.அதுமுதல் அந்த ஆற்றுக்கு நீவா என்று பெயர் இன்றும் உள்ளது. 

மஹா பெரியவாளின்  யாத்திரை இசையனூரிலிருந்து  ஆரணி வழியாக  காஞ்சிபுரம் விஜய யாத்திரை தொடர்ந்தது.   பெரியவா ஆரணி வருவது அறிந்த  இருநூறுக்கும் மேற்பட்ட  காங்கிரஸ் கட்சி சேவகர்கள்  அவரை தரிசனம் செய்ய  குழுமி இருந்தனர்.  அப்போது சுதந்திர வேட்கை  தீவிரமாக  இருந்த காலம்.   பிரிட்டிஷ்  அரசாங்கம்  காங்கிரஸ் காரர்களை வேட்டையாடி வந்தது.  பொதுமக்கள் காங்கிரஸ் காரர்களுக்கு  ஆதரவு கொடுத்தால்  கடுந்தண்டனை கொடுத்தார்கள்.  ஆகவே   காஞ்சி மடத்தை சேர்ந்தவர்கள் மனதில்  கிலேசம்,  கவலை. என்னசெய்வது என்று  தயக்கத்தோடு இருந்தார்கள்.   மஹா பெரியவாளிடம் விஷயத்தை மெதுவாக  போட்டு உடைத் 
''அவள் உள்ளே  அனுப்புங்கோ, வரட்டும் தாராளமா''  என்று உத்தரவிட்டுவிட்டார்  மஹா பெரியவா. எல்லோரும்  சந்தோஷமாக  மஹா பெரியவாளின்  சந்த்ரமௌளீஸ்வரர்  திரிபுரசுந்தரி அம்பாள்   பூஜையை கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்கள்.  பூஜை முடிந்ததும்  மஹா பெரியவா  ஒவ்வொரு  காங்கிரஸ் காரரையும்   விசாரித்தார். யார்,   என்ன உத்யோகம், குடும்பம்  பற்றி எல்லாம்  ஆர்வமாக கேட்டார். எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி வாழ்த்தினார் . எல்லோருக்கும்  உணவளிக்கப்பட்டது.  இந்த விஷயங்கள் எல்லாம் பிரிட்டிஷ்  அதிகாரிகளுக்கு உடனே  தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் ஒருவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.  மடத்துக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.  

1932ம் வருஷம்  மார்ச் மாதம்  5ம் தேதி  மஹா பெரியவா  ஆந்திராவில் இருக்கும் காளஹஸ்தி க்ஷேத்ரம் சென்றார்கள். மஹா சிவராத்திரி  சமயம்.    காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி  திருப்பாற் கடல், வேப்பூர், வழியாக  சித்தூருக்கு  பெப்ரவரி மாசம் கடைசியில் வந்தார்கள். அங்கிருந்து பக்கலா  என்கிற  கிராமம் வழியாக  திருப்பதி வந்தார். அங்கே ஒருநாள்  முகாம்.  பிறகு அங்கிருந்து தான் காளஹஸ்திக்கு விஜயம் செய்தார்.  

காளஹஸ்தி பஞ்ச பூத  ஸ்தலங்களுக்குள்  வாயு ஸ்தலம்.  ராகு கேது க்ஷேத்ரமும் கூட. புராதனமான சிவாலயம்.

காளஹஸ்தியை 'காளாஸ்திரி' என்றும்  தக்ஷிண கைலாசம் என்றும்  சொல்வதுண்டு. 
திருப்பதியிலிருந்து 40 கி.மீ.    சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள ஸ்தலம்.  ஆறு வடக்கு நோக்கி  ஓடுகிறது. ஆகவே  உத்தரவாஹினி -  கண்ணப்ப நாயனார் சரித்திரம் எல்லோருக்கும் தெரியும்.  ஆகவே அது பற்றி சொல்லப்போவதில்லை.  தனது கண்களை காலத்தீசனுக்கு கொடுத்து கண்ணப்பன் என்ற பெயர் பெற்று திண்ணன் எனும் அந்த வேடன்  முக்தி அடைந்த க்ஷேத்ரம்.  ''அஷ்டமாசித்திகள் அணைதரு காளத்தி'' என சிறப்பு மிக்கது.    நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி'   என்று பாடியது.   முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்ட சிவாலயம். 
சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.  காளஹஸ்தி மலைக்கு  கைலாசகிரி என்று பெயர்,   12ம் நூற்றாண்டு பிரதான கோபுரமாக  ''பிக்ஷசாலா கோபுரம்'  வீரநரசிம்ம யாதவ  ராயரால் கட்டப்பட்டது. 
பொன்முகலி ஆற்றின் படிக்கட்டுகள்  மற்றும்  கோயில்  புனருத்தாரணம் திருப்பணிகளை  தேவகோட்டை மெ.அரு.தா. இராமநாதன் செட்டியார் 1912 ல்  ஒன்பது  லட்சம் ரூபாய் செலவு செய்து மஹா கும்பாபிஷேகம் செய்வித்த புண்யவான்.   கைகூப்பி வணங்கத்தக்க இவர், கைகூப்பி வணக்கம் சொல்லும்  உருவத்தில் அவருக்கு ஒரு சிலை ஆலயத்தில் உள்ளது.   கோயில்கள் தானம் தர்மம் என்றால் நிச்சயம் யாராவது ஒரு நகரத்தார் கைங்கர்யம் நிச்சயம் உண்டு.
கோபுரம் எதிரில்   நாலு கால்  மண்டபம், அதை ஒட்டி  'அஷ்டோத்ரலிங்க' சந்நிதி உள்ளது. கோபுரத்தின் பக்கத்தில் 'பஞ்சசந்தி விநயாகர்' சந்நிதி.  அப்புறம் ஒரு  பெரிய நூற்றுக்கால்   மண்டபம். 1516ல் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.   பக்கத்தில் உள்ள  பதினாறுகால் மண்டபம் அச்சுதராயர் கைங்கர்யம்.   கோயில் வாசலில்  ரெண்டு   கொடிமரங்கள். ஒன்று கவசத்துடன், இன்னொன்று 60 அடி  உயரம். ஒரே  கல்லால் ஆனது.  பலிபீடமும் நந்தியும் உள்ளன.
பிரதான  'தட்சிண கோபுரம்' 11- ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன்  காலத்தியது. தெற்கு பார்த்த இந்த  இக்கோபுர வாயில்  வழியாக  உள்ளே வந்தால் முதலில்  தட்சிணாமூர்த்தி தரிசனம். மற்றும்  'சங்கல்ப கணபதி,  நால்வர் சந்நிதி.  வலது பக்கமாக வந்ததால் தரையில்  அடையாளம் காட்டி இருக்கும் அங்கே நின்று பார்த்தால்  கைலாசகிரி,  காலஸ்தீஸ்வரர்  விமானம்  தரிசிக்கலாம். 
இங்குள்ள  'சரஸ்வதி தீர்த்தம்'  கொடுத்தால்  பேசவராத குழந்தைகளுக்கு  பேச்சு வரும் என்று ஐதீகம். அப்பர், சுந்தரர்,  சம்பந்தர்  பாடல் பெற்ற  ஸ்தலம்.   சிவபெருமானுக்கு இங்கே   ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் என்று பெயர்  அம்பாளுக்கு  ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை என்றும் பெயர்.  மகிழமரம் ஸ்தல விருக்ஷம்.  காஸ்தீஸ்வரருக்கு   தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரியுமே அது ), இக்கவசத்தைச் சார்த்தும்போதும் எடுக்கும்போது கூட சுவாமி மீது   கை விரல்கள் கூட  படக்கூடாது. தீண்டாத்  திருமேனி.  கவசம் மேல் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.  உயரமான  சிவலிங்கம்.   அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும்,மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும்   பார்க்கலாம்.   சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் மாதிரி இருக்கும். . மேற்கு பார்த்த  சந்நிதி - சதுரமான  ஆவுடையார்.  
சந்நிதியில்  விபூதி தருவதில்லை. , பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு தீர்த்தப்  பிரசாதம் தருவார்கள்.  காளத்தீஸ்வரர் மேல்  கங்கை நீரைத் தவிர வேறெதுவும் படக் கூடாது .  அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு மட்டும்.  சுவாமி மேல்  தாரா பாத்திரம்.
இங்கே காணும்   பெரிய  ஸ்படிகலிங்கம்  ஆதி சங்கரர்  பிரதிஷ்டை செய்தது.   இந்த ஆலயத்துக்கு வந்தாலே  முக்தி என்று அர்த்தம்  உள்ள  "ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி" என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு. 
பட்டையாக  உள்ள  காலஸ்தீஸ்வரர்  நாலு பக்கமும்  முகங்கள், மேலே லிங்கம். இது ஐந்தும் சேர்த்து ஈஸ்வரனை  ''பஞ்சமுகேஸ்வரர்'' என்று  எல்லோருக்கும் உணர்த்தியவர் நமது மஹா பெரியவா. 
மஹா சிவராத்ரி  10 நாளும்  பெரிய  விழா நடக்கும்.  வயதானவர்களை  ஆதரித்து பாதுகாக்க மஹா பெரியவா 'விருத்தாசிரமம்'  என்ற  ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்நற்பணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தம்முடைய இடத்தை தந்து உதவியுள்ளது.

உந்துமா முகலியின் கரையினில் உமையடும்
மந்தமார் பொழில்வளர் மல்கு வண்காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே
வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளிதினை
கொள்ளவெழிலார் கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி
விலகு காளத்திமலையே.
(சம்பந்தர்)

"உண்ணாவரு நஞ்சம் உண்டான்கண்

ஊழித்தீ யன்னான்காண் உகப்பர்காணப்
பண்ணாரப் பல்லியும் பாடினான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பினான்காண்
அண்ணாமலை யான்காண் அடியார் ஈட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண்
கண்ணாரக்காண் பார்க்கோர் காட்சியான்காண்
காளத்தியான் அவன் என்கண்ணுளானே"
(அப்பர்)
செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே"
(சுந்தர்)

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்போல் விளங்க
செருப்புற்ற சீரடிவாய் கலசம் ஊனமுதம்
விருப்புற்ற வேடனார் சேடரிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ.
(திருவாசகம்)

 1932ல்  மஹா பெரியவா இங்கு வந்தபோது ஸ்வர்ணமுகி, ஆற்றில்  ஸ்னானம் செய்தபிறகு  ஒரு பெரிய  மாமரத்தின் அடியில்   வந்து உட்காருவார்.  ஆஹா  பார்ப்பதற்கு கல்லாலமரத்தின் அடியில் அமர்ந்த  தக்ஷிணாமூர்த்தி தான் கண்ணுக்கு  தோன்றுவார்.  அப்போது வாழ்ந்து அவரை தரிசித்த  காளஹஸ்தி பக்தர்கள்  பாக்யம் செய்தவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.  மஹா பெரியவா தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் மளமளவென்று செய்து முடித்தார்கள்.   பெரியவா காளஹஸ்தி வருகிறார் என்ற விஷயம்  திடீரென்று முடிவானது.  காளஹஸ்தி ராஜா  பெரிய  பந்தல் ஒன்றை  ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைத்தார்.  அந்த ஆற்றங்கரையில் தான் பெரியவா ஸ்னானம் செய்வார்.   ராஜா அவருடைய மந்திரிகள்,  ஆலய  தேவஸ்தான நிர்வாகிகள் அனைவரும் ஒரு சேர  எல்லா ஏற்பாடுகள்,  பெரியவாளின்  நகர்வலம்  அனைத்தும்  தீர்மானித்து ஆவன  செய்தார்கள்.  அன்று இரவு  மஹா சிவராத்திரி.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமினர்.  பெரியவா நகர்வலம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது.   அங்கே இருந்த கற்பக சத்திரத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செயதிருந்தார்கள்.  ஒரு வார காலம்  பெரியவா அங்கே  தங்கி இருந்து தரிசனம் கொடுத்தார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...