Friday, June 14, 2019

HOT TEA

                         கிருஷ்ணன் இருக்கிறான். J K SIVAN 

கடுங்குளிர்.   நமக்கெல்லாம் பதினைந்து நிமிஷம் போதும்.  உடல் விறைத்து பனிக்கட்டியாகிவிடும் பிரதேசம். நமக்கு அங்கே என்ன வேலை?  நாம் சுகமாக  பயமின்றி படுத்து, பேசி, உண்டு உறங்கி வாழ்கிறோம். நம்மை எல்லாம்  ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து,   நம்மை துன்புறுத்திடுவதே கடமை என்று செயலாற்றிக்கொண்டிருக்கும் விரோதிகளிடமிருந்து நம்மை காக்க  நம் நாட்டு  எல்லைப்பிரதேசத்தில் நமக்காக தாங்கள் கஷ்டப்படும் சில அற்புத மனிதர்கள்  தான் அங்கு இருந்து ஆக வேண்டும்.  எத்தனை கைகள் நமக்கு இறைவன் கொடுத்தாலும்  அவற்றை  கூப்பி  அவர்களை வணங்கினாலும் போதாது.  நன்றி நமது நெஞ்சத்திலே இருக்கவேண்டும்.  அவர்களை நினைக்கவேண்டும். அவர்களை பெருமையாக பேசவேண்டும். உரக்க மற்றவர்கள்  காதில், கருத்தில்  விழும்படி. 

இந்த பனிப்பிரதேசத்தில், பாகிஸ்தான் இந்திய எல்லையில்,  குப்வாரா பகுதியில்  நடந்த ஒரு சம்பவம். படித்தேன். சுருக்கமாக சொல்கிறேன்.

எல்லை காக்கும்  பணிபுரியும்  ராணுவ வீரர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படுவார்கள். ஒரு குழு மற்றொரு குழுவை மூன்றுமாதத்திற்கொருமுறை விடுவித்து பொறுப்பேற்றுக்கொள்ளும்.  ஒரு குழுவில் 15 வீரர்கள். ஒரு தலைவன் மேஜர். மற்றவர்கள் அதனால் பொறுப்பற்ற மைனர்கள் என்று அர்த்தம் இல்லை. பொறுப்பான உயிரை திரணமாக மதிக்கும் சுத்த வீரர்கள். இந்தியாவின் பல பாகங்களிருந்து ஒன்று சேர்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட பொறுப்பேற்க ஒரு குழு குப்வாரா சென்றது.  பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு
விடுமுறையில் செல்ல   அங்கே ஒரு குழு காத்திருந்தது.   பொறுப்பேற்க செல்லும் 15பேர்  குழுவின் தலைவன் மேஜர் சுப்பிரமணி.  வழியெல்லாம் அவனது  குழுவினர்  மேடும் பள்ளமும் அந்த பனிமலைகளில் நடந்து
கொண்டே  பேசினார்கள்.   மோடிஜி பற்றியும்  ஒரு பேச்சு.   ''நமது முதல்வர்  எளிமையானவர். ஏழைக் குடும்பத் திலிருந்து வந்தவர்.  சாய்வாலா  ( டீக்காரன்)   என்பார்களே, இப்போது  இங்கிருந்தால்  இந்த பனி இரவில்  நமக்கு களைப்பாற, உடலில் தெம்பூட்ட சூடாக ஒரு கப்  டீ தரமாட்டாரா?   என்று ராணுவ வீரன் ஒருவன் சொன்னான்.

மேஜர்  சுப்பிரமணி   ''நண்பர்களே  இந்த கடுங்குளிரில்  நாம் இன்னும் மூன்று மாதம் வேலை செய்ய வேண்டும்.
. எல்லோருக்கும்  சூடாக  ஒரு கப்  தேநீர்  குடிக்க ஆசைதான்.  இந்த  பனி பிரதேசத்தில் எங்கே கிடைக்கும்?  தமிழ்நாட்டில்  மூலைக்கு மூலை  டீ கடை பார்க்கும்போது அதன் மதிப்பு தெரியவில்லை. இங்கே  ஒரு டீ கடை  கிடைத்தால்.... அது தான் தேவாம்ருதம்.    கடவுள் கிருபை இருந்தால் கிடைக்கும்''   என்றான். 

பனியில்  மேடும் பள்ளமும் நடந்தார்கள். திடீரென்று  ஒரு பழைய தொத்தல் டீ கடை  வழியில் ஒரு  கிராமத்தில் தென்பட்டது.  கதவு மூடி இருந்தது. அலுமினியம் பூட்டு. ஒரு தட்டு தட்டினால் பூட்டு கடை ரெண்டுமே விழுந்துவிடும்.  ராம்ஜி தேநீர் விடுதி'' என்று இந்தியில் பேர் ஒரு பழைய தகரத்தில் தொங்கியது.  சிரிப்பு வந்தது சுப்பிரமணிக்கு.   '' அட  இப்போது தானே நினைத்தோம். ஆனால்  அதிர்ஷ்டம் இல்லையே. கடை மூடி இருக்கிறதே.''

''உள்ளே  டீ பொடி , பால்  தண்ணீர் எல்லாம் இருக்கலாம். என்ன செய்வது.  ஒரு மணி நேரம் காத்திருந்தும் எவரும் வரவில்லை.   இரவு மணி  எட்டுக்கு மேல் ஆகிவிட்டதே. 

'' மூன்று மணிநேரம் காத்திருந்தோம்.  நமக்கு டீ குடிக்க பாக்யமில்லை.  .மேற்கொண்டு  நடப்போம்.
"ஒரு வேளை கதவை திறந்தால்  உள்ளே  நாமே  டீ போட்டு சூடாக குடிக்கலாம்''

சுப்பிரமணிக்கு  மனதில் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. ''சரி  பூட்டை உடையுங்கள்'' என்றான்.  கண்மூடி திறக்கும் நேரம் பூட்டு கழன்று உள்ளே  இருந்த டீப் பொடி  தண்ணீர்  சர்க்கரை, பால்  எல்லாமே  அவர்களுக்கு தேநீராக  மாறியது. சுவைத்து குடித்தார்கள்.  ஒரு கண்ணாடி மூடி போட்ட ஜாடியில்  சில  நாட்டு பிஸ்கட்கள் காலியாயிற்று. பசி தாகம் தீர்ந்த புத்துணர்ச்சியில்  எல்லோரும் கிளம்பினார்கள்.

' நீங்கள் செல்லுங்கள் இதோ வருகிறேன்'என்ற  சுப்பிரமணி  டீக்கடையில் சுவற்றில் தொங்கிய   ராம்ஜியோ  யாரோ  இருந்த ஒரு படத்தை வணங்கினான். பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு  நோட்டுகள்  எடுத்து அந்த பிஸ்கட் இருந்த கண்ணாடி ஜாடியில் போட்டான்.  கிளம்பினான்.  பூட்டிழந்த  கதவை சாத்திவிட்டு போய்விட்டான். 

வேலையில் சேர்ந்து  மூன்று மாதம் பனிமலையில் பணி முடிந்து இன்னொரு குழு வந்து விடுவித்தது. அதே வழியில் திரும்பினார்கள். போனதடவை  இங்கே தானே எங்கோ  ''ராம்ஜி டீ ''  கடை  விஜயம் செய்தோம்? .  டீக்கடை  தென்பட்டது.  ராம்ஜியோ யாரோ ஒரு மீசைக்காரன் கடையில் கண்ணாடி பிஸ்கட் ஜாடி பின்னாலே  அமர்ந்தவன்  திடீரென்று தோன்றிய  15  கஸ்டமர்களை விடுவானா?. எழுந்து வணங்கி வரவேற்று சூடான டீ பிஸ்கட்கள்  கைமாறியது. காலியானது.  மேஜர் சுப்பிரமணி மீசைக்காரனிடம்   அவனது  வாழ்க்கை ஏழ்மை பற்றி பேசி வருந்தினான்.  ''கடவுளே  இல்லை, இருந்தால் உங்களை இப்படி வருந்தச் செய்வாரா?'' என்றான் மேஜர்.

''மிலிட்ரி ஸார்,   அப்படி சொல்லாதீங்க. கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கட்டாயம் கடவுள் இருக்கிறார் என்று என்னால் நிரூபிக்க முடியும். ''
''எப்படி ?''
மீசை தொடர்ந்தார்:
''சுமார் மூன்று மாசங்களுக்கு முன் என் வாழ்க்கையில் ஒரு பெரிய  துன்பம், கஷ்டம் ஏற்பட்டது. என் மகனை தீவிரவாதிகள் பிடித்து   அடித்து  அவனுக்கு தெரியாத  ராணுவ ரகசியங்களை பற்றி சொல்லச்  சொல்லி வாட்டி  அவனுக்கு பல  எலும்பு உடைந்து நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி, என் மனைவிக்கும்  சறுக்கி விழுந்து  கால்  ஒடிந்து மருந்துகள் வாங்க பணமின்றி  கஷ்டப்பட்டேன் . எழுநூறு  எண்ணூறு ரூபாய் அவசரமாக தேவைப்பட்டது. எங்கு போவேன். யாரும் கடன் கொடுக்கவில்லை. வசதியில்லை. பகவானே  கிருஷ்ணா நீயே துணை என்று  இரவு லேட்டாக என் கடைக்கு வந்தேன். பகீரென்றது. என் கடை பூட்டை உடைத்து யாரோ உள்ளே  கொள்ளையடித்துவிட்டான்.  '' ஆஹா  என் பிழைப்பும் போய்விட்டது'' என்று அலறினேன். உள்ளே சென்று பார்த்தேன்.   டீ பொடி சர்க்கரை, பால் தவிர எந்த நஷ்டமும் இல்லை.   வந்தது திருடன் இல்லை. என் கடவுள் கிருஷ்ணன்.   என் கஷ்டம் தெரிந்து எனக்கு தேவையான   ஒரு ஆயிரம் ரூபாயை இந்த பிஸ்கட் ஜாடியில்  நோட்டாக மடித்து உள்ளே போட்டு மூடி இருக்கிறான்.  ஓடிப் போய்  வைத்தியரை அழைத்து என் பையன் மனைவிக்கு  வைத்தியம் பார்த்து  குடும்பத்தை ஓட்டினேன். அதனால் தான் சொல்கிறேன். அன்று இரவு பார்த்து  யார் எனக்கு இப்படி உதவி செய்திருக்க முடியும்?  கடவுள் நிச்சயம் இருக்கிறார்  ஐயா''  என்றான் உணர்ச்சி வசமாக  கடைக்காரன்.

மேஜர் சுப்ரமணியன் கண்களில் கண்ணீர்.  மற்றவர்கள் யாரும் அதற்கு முன் தாம் இதற்கு முன்  வந்ததை பற்றி வாய் திறக்கக்கூடாது என்று   ஜாடையாக  கட்டளையிட்டிருந்தான்.

'' ஓ.  நீங்கள் சொல்வதை பார்த்தால் கடவுள் நிச்சயம் இருக்கிறார். கருணா மூர்த்தி என்று தெரிகிறது''  என்று தலையாட்டிய மேஜர்  சுப்பிரமணி  அவர்கள் அன்று சாப்பிட்டதற்கு மற்றுமொரு முறை  ஆயிரம்  ரூபாய் நோட்டுகளாக எடுத்து பிஸ்கட் ஜாடிக்குள்  போட்டான்.  கடைக்காரன் சிலையானான். 15 ஜோடி கண்களும் ஆனந்தமாக அதை பார்த்தன. அதில் ஒரு ஜோடி கண்கள் சொன்ன விஷயமாம் இது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...