Thursday, June 6, 2019

MANI VACHAKAR


மணி வாசகர்     J K  SIVAN 

                                      ஆத்ம நாதர்  ஆலயம் 
  
துறை என்றால்  ஒரு   நீர் நிலையின்  கரை.  ஆற்றுத்துறை. படித்துறை  வண்ணான் துறை என்ற வார்த்தைகள் தான்  தெரியுமே.  அந்த   ஊருக்கும் அப்படி ஒரு  பெயர்.  நமது பாபங்களிலிருந்து சம்சார சாகரத்திலிருந்து  கரையேற  அருளும்  மாணிக்க வாசகரால கட்டப்பட்ட   சிவன் கோயில் கொண்டுள்ள  துறை என்பதால் மரியாதையோடு  'திருப் பெரும் துறை''.  அதற்கு எல்லோரும் அறிந்த இன்னொரு பெயர்  தான்  ஆவுடையார் கோவில்.  திருப்பெருந்துறை என்ற  வார்த்தை  இல்லாமல்  திருவாசகம் படிக்க முடியாது.  இங்கே  சிவன் பெயர் ஆத்மநாதர்,   ,  அம்பாள்:  யோகாம்பாள்.   விருக்ஷம்   குருந்தமரம்.   

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

வாதவூரரை மணிவாசகராய் மாற்றிய அதிசய  ஊர்  திருப்பெருந்துறை .  இதற்கு பதினெட்டு பெயர்கள் வேறு இருக்கிறது. 1. திருப்பெருந்துறை, 2. குருந்தவனம், 3. சதுர்வேதபுரம், 4. சிவபுரம், 5. ஞானபுரம், 6. திரிமூர்த்திபுரம், 7. தென்கயிலை, 8. தேசுவனம், 9. பராசத்திபுரம், 10. பவித்திரமாணிக்கம், 11. யோகபீடம், 12. ஆளுடையார் கோயில், 13. உபதேசத்தலம், 14. அனாதிமூர்த்தத்தலம், 15. ஆதிகயிலாயம், 16. சதுர்வேத மங்கலம், 17. தட்சிணகயிலாயம், 18. யோகவனம் என்பனவாம்.

ஊருக்கு மட்டும் அல்ல. சிவனுக்கும் இங்கே  18 பெயர்.  1. ஆத்மநாதர், 2. பரமசுவாமி, 3. திருமூர்த்திதேசிகர், 4. சதுர்வேதபுரீசர், 5. சிவயோகவனத்தீசர், 6. குந்தகவனேசர், 7. சிவக்ஷேத்ரநாதர், 8. சன்னவனேசர், 9. சன்னவநாதர், 10. மாயபுரநாயகர், 11. விப்பிரதேசிகர், 12. சப்தநாதர், 13. பிரகத்தீசர், 14. திருதசதேசிகர், 15. அசுவநாதர், 16. சிவபுரநாயகர், 17. மகாதேவர், 18. திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.

தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம்.

ஆத்மநாதர் கோவிலுக்கு  சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதருக்கு  ஒரு தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி அங்குதான் நேர்ந்தது.  இக்கோயில் மாணிக்கவாசகர் காலத்துக்கு  முன்பே உள்ளது.  ஒரு காலத்தில் காடாக இருந்ததாம்.   இப்போது அந்த ஊர்   வடக்கூர் (வடக்களூர்  என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கிறார்கள். ஆதி கயிலாயநாதர் கோயில் கிழக்கு  பார்த்தது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் தரிசித்த  சிவன்  ஆலயம்.   திருவாசகம்  நமக்கு கிடைக்க  மாணிக்க வாசகர் உருவாக்கிய  ஸ்தலம்.   கி பி  10ம் நூற்றாண்டு  பாண்டியநாட்டு   ஆலயம்.

  மாணிக்க வாசகர் முதலில் அரி மர்த்தன பாண்டியனின்  முதலமைச்சர். கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றவரை  குருந்த மரத்தின் அடியில் குருவாக  அமர்ந்து    பரமேஸ்வரன் ஆட்கொண்டு,  பிறகு  குதிரை வாங்க கொண்டு சென்ற பணம் கோயிலாகி, அரசன் குதிரைகள் கொண்டுவா என்ற பொது நரிகள் பரிகளான  கதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 

ஒரு முறை  பரமேஸ்வரன்  கிழ பிராமணனாக உருவெடுத்து  300 பிராமண வீட்டு குழந்தைகளுக்கு வேதம் சாஸ்திரம் எல்லாம் சொல்லி கொடுத்து  பிள்ளையாரை   பிரதிஷ்டை செய்து  ஒரு பாடசாலை நிறுவி,   பிராமணர்கள் வீட்டிலிருந்து தினமும்  புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து கிழ பிராமணருக்கு  உணவு தந்தனர்.    ஒருநாள் கிழ  பிராமண வாத்தியாரை காணோம். சிஷ்ய பிள்ளைகள்   தேடினர், வருந்தினார்.  குழந்தைகளோடு  விளையாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.   அன்று ராத்திரி  எல்லா சிஷ்ய பிள்ளைகள் கனவிலும்  " திருப்பெருந்துறை  ஈஸ்வரன் நான் தான் உங்கள் கிழ வாத்யாராக வந்து கற்பித்தேன்.நீங்கள் கொடுத்த உணவை விரும்பி உண்டேன் '  என்றதால்  இன்றும்  அங்கே  புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் சமையல் அன்னம் தான்  நைவேத்தியம்.   
பிள்ளையார் பெயர் ஸ்ரீ வித்யாகணபதி.

பின்னால்  துண்டகன் என்ற முரட்டு  மந்திரி ஒருவனுக்கு இந்த  கிராமத்தின் மேல்  ஆசை உண்டாகி  பிராமணர்களை விரட்டிவிட்டு  சொந்தமாக்கி கொண்டான்.  ''ஆத்மநாதா, நீயே  கதி என்று எல்லா பிராமணர்களும் வேண்ட   ஒரு  வயதான முதியவர் திருப்பெருந்துறைக்கு வருகிறார்.  

இந்த ஊர்  எனக்கல்லவோ சொந்தம். அதற்கு ஆதாரமான பட்டயம் என்னிடம் அல்லவோ இருக்கிறது என்று அந்த முதியவர் சொல்ல   அவரை பாண்டிய மன்னனிடம் அழைத்து  செல்கிறார்கள்.  

''யார் நீர் ? உமக்கு இங்கே என்ன வேலை?  என்கிறான்   பாண்டியன். 
'நான்  தில்லையை  சேர்ந்தவன். என் பெயர்  பரமசுவாமி,'
''உமக்கு  இந்த சிவபுரம் ஊர்  சொந்தமென்று ஏதோ ஆதாரம் இருக்கிறீரே அதைக்காட்டும்''  என்கிறான் பாண்டியன்.
ரெண்டு பட்டயங்களை காட்டுகிறார்  முதியவர்.  நிலத்தின் அளவு   எல்லைகளை காட்டுகிறார். இங்கே  எவ்வளவு வெட்டினாலும் நீர் வராது என்று அரசன் சொன்ன இடத்தில்,    ஈஸான  திசை மேட்டு   நிலத்தில்  சிவபுரத்தில்  நீர் வரவழைக்கிறார். அனைத்துத் தீர்த்தங்களையும்   அங்கே  வரவழைக்கிறார், திருப்தி அடைந்த பாண்டியன் துண்டகனை தண்டிக்கிறான். அவனிடமிருந்து ஊர்  மீட்கப்படுகிறது.

''இந்த நிலத்தை  பிராமணர்கள் சமூகம் பாதுகாக்கட்டும். எனக்கு  300ல் ஒரு பங்கு வருமானம் கோவிலுக்கு இறையிலியாக சேரட்டும்''   என்ற  கிழவர் காணாமல் போகிறார். அப்போது தான் கிழவராக  வந்தது ஆத்மநாத சுவாமி என்று பாண்டியனும் மற்றவர்களும்  அறிகிறார்கள்.

ஆவுடையார்  கோவில்  பாண்டிநாட்டு  சிற்ப வேலைப்பாடுகள்  நிறைந்த ஒரு  ஆலயம்.    விமான கொடுங்கைகள் அற்புதமானவை. 

முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒ கீழே பார்த்துக்கொண்டிருக்கும்  குரங்கும்,   மேலே பார்க்கும்  ஒரு உடும்பும்  மிக அழகான  சிலைகள். '' அடே  பக்தா,  அலைபாயும்  உன்  குரங்கு மனத்தை அடக்கி, உடும்புப்பிடியாக  ஆத்மநாதரின் திருப்பாதங்களில் அதை செலுத்து  என்று அர்த்தமோ?''

 பத்து பன்னிரண்டு வளையங்கள் கொண்ட  ஒரே கல்லில்  செதுக்கிய கல் சங்கிலி,  ்ஒரு மண்டபத்தின் மேற்கூரை யில் தட்டையான பத்து கற்களை எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் வைத்திருப்பது.   கற்களின் விளிம்பில் கம்பிகள் போல் செதுக்கி, பின்பு இணைப்புக் கற்களில் துவாரம் போட்டு இணைத்துள்ளார்களாம். பாண்டிய நாட்டுச் சிற்பிகளே    எப்படி  உங்களால்  இப்படி பண்ண தோன்றியது செய்தீர்கள்? என்ற ஆச்சர்யம்   உலகத்
தையே  வியக்க வைக்கிறது.

உள்ளே   ரகுநாத பூபால மண்டபம் அற்புதமான வேலைபாடுடைய பெரிய மூர்த்தங்களைக் கொண்ட மண்டபம்.  பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்
களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர்  350  வருஷங்களுக்கு முன்  கட்டியது.  இடது பக்கம்  மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.   வண்ண  ஓவியங்கள்  கொஞ்சம் கொஞ்சமாக  அழிந்து போய் கொண்டிருக்கிறதே?  யார்  என்ன செய்யப் போகிறார் களோ?  அதில் ஒரு ஓவியம்  'அண்டரண்ட பட்சி'   ரெண்டு கழுத்து கொண்ட  பெரிய பறவை.  ரெண்டு யானையை ஒரே சமயம் தூக்குமாம். 

எழுநிலை ராஜகோபுரம் இப்போது தூரத்தில் இருந்தே  பார்க்கலாம். ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் வள்ளல்  பச்சையப்ப முதலியாருடைய தர்மம்    கல்வெட்டாக விவரம்  சொல்கிறது. ''லட்சம் வராகனுக்கு மேல் வரும் வட்டிப்  பணத்தினால் ஆவுடையார்
 கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மம்.'' என்கிறது.

உள்ளே   பஞ்சாக்ஷர மண்டபத்தில் (கனகசபை  என்றும் பெயர் ) முந்நூறு  வருஷங்களுக்கு முன் செதுக்கப்பட்ட புவன அக்ஷரங்களை காணலாம்.   ஒரு தூணில்  ரெண்டு தலை ஒரு உடல்  பாம்புகள் , நவ கிரஹங்கள் காணலாம்.   நவகிரகம் தனியாக இல்லை.  27 நட்சத்திர வடிவங்கள் , பல வித குதிரைகள், சப்தஸ்வர தூண்கள், செதுக்கி
 யிருக்கிறார்கள்.  உருவச்சிலைகளின்  கால்  நரம்பு  தெரிகிறது. தலைமுடி கூட சன்னமாக நீட்டி  அளவோடு  அல்லவா நீவி விட்டிருக்கிறான் சிற்பி..

நிருத்த மண்டபம் தான் நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத்  தெரிகிறது. வேடன் வேடுவச்சி சிற்பங்கள்  பாண்டிய சிற்பிகளின் பெருமையை பறை சாற்றுகிறது.

தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபத்தில்  மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி கொண்டுள்ளார்.
இவரைப் பார்த்தபிறகு தான்  ஆத்மநாதர் தரிசனம். சிவனும் அம்பாளும் தெற்கு பார்த்தபடி அருவமாக இருக்கிறார்கள்.   திருமேனி இல்லை.   பாணம்  இல்லாத  ஆவுடையார் மட்டும்.  சததள பத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள்  மட்டும் தங்கத்தில் செய்த யந்திர வடிவம். உள்ளே செல்ல முடியாது.   அம்பாளின்  திருப்பாதங் களை கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் பண்ணமுடியும்.  

எல்லாச் சிவாலயங்களிலும் உள்ள சிவலிங்கம்  இங்கே  இல்லை.    இங்கே  நடுவில் உள்ள சக்தி பீடம்  மட்டும்,

அதற்கு மேலே  ஒரு குவளையை  கவிழ்த்து சாற்றியிருப் பார்கள்.  சக்தி பீடத்தில் ஞானஒளியாக ஆன்மநாதர் இருக்கிறார். உருவம் அற்ற அருவம்.  சக்தி பீடம் மட்டுமே இருப்பதால்  உலகமே ப்ரம்ம சக்தியால் இயங்குகிறது என்ற தத்துவம் புலனாகிறது.    எதிரே  உள்ள  சதுர  கல்மேடையில்  புழுங்கலரிசி அன்னத்தை ஆவி ததும்ப பரப்பி  அதைச் சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை என்று  பல  பக்ஷணங்கள் வைத்து நைவேத்தியம்.
ஆவியிலுள்ள நறுமணமே ஆத்மநாதருக்கு  நிவேதனம்.    கொடிமரமோ, பலி  பீடமோ, நந்தியோ   இல்லாத  விசேஷ விசித்திர சிவன் கோவில்.  
இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மறக்காமல் கல்லில் வடித்துள்ள குருந்தமரம்  அடியில் ஆத்மநாதர் கிழ பிராமண  குருவாக இருக்கும்   சிற்பம்.  பவ்யமாக  மாணிக்கவாசகர்  உபதேசம் பெறும்  சிலை. 

சத்சபை -விசாலமான கல்மேடை.  இன்றும் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம்  தான் நைவேத்தியம். சுட சுட  வடித்து கொட்டி  ஆவியாக நைவேத்யம் .அர்த்த சாமத்தில் தினமும்  புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நிவேதனம்,

பழைய கால  வாத்தியங்கள் கெத்து வாத்தியம்  தினமும் சாயரட்சை முடிந்ததும்  வாசிப்பார்கள்.
வாசிக்கப்பட்டு வந்துள்ளது. மண்டபங்களில் கல்வெட்டுக்கள் நிறைய  படிக்கமுடியாமல்  இருக்கிறது.

 ஆறு கால பூஜையின்போது 108 மூலிகைகள் கலந்த  தைல முழுக்கு நடப்பது சிறப்பு.

காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை ஆலயம் திறந்திருக்கும்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...