Tuesday, June 18, 2019

NOSTALGIA


 பழைய நினைவுகள்.     J K SIVAN 
                                 
                             அம்மாவின்  ஓடியும் புத்தகங்கள்                                                                                                                                                                                   
 இன்று  ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சில் விக்ரமாதித்தன் நுழைந்தான்.  அவனைப்பற்றி பேசினால் கூடவே  அவன் நிழல் போல வேதாளத்தையும் நினைக்கநேரிட்டது.  நீங்கள் விக்ரமாதித்தன் எழுதுங்களேன் என்கிறார். அதற்கென்ன எழுதினால் போகிறது என்று வாய்  மெஷின்  மாதிரி  சொன்னாலும்  உடனே தீயை மிதித்தது போல் ஒரு  திகு திகு நெஞ்சில்.  ஆம் விக்ரமாதித்தன் எனக்கு புதியவன் இல்லை.

ஐந்து் ஆறு வயதில் அறிமுகமானவன். படிக்கத்தெரியாத வயதில் பழக்கம். எப்படி ?   என் தாயார் ஜம்பாவதி
அம்மாள்  பள்ளிக்கூடம்  போகாமலே படிக்க கற்றுக்கொண்டவள். அவள் அப்பா ரத்தம். அவர் ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் என்ற ராமாயண  கர்த்தா. புராண  சாஸ்திரங்களில் கரை கண்டவர். மஹா பெரியவாளிடம் 1940களிலேயே புராண ஸாகரம் '' என்ற விருது பெற்றவர்.

என் அம்மாவின் லைப்ரரி அடிக்கடி இடம் மாறும். அலமாரியில் சுவற்றுக்கும் புளி ஜாடிக்கும்  இடுக்கில், . உத்தரத்தில்  தொங்கும் கொக்கியில் ஒரு   துணிப்பையில்,  அரிசி பானை பக்கத்தில்  என்று  என் கண் படாத , என் கைக்கெட்டாத மறைவிடத்தில்  தான் அவை இடம் பெயரும்.   அவள் லைப்ரரி என்பது நான்கைந்து புத்தகங்கள் என்று இப்போது புரிகிறது.   ஸ்ரீமத் பக்த விஜயம்,  பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைகள், தாயுமானவர் பாடல்கள், அல்லி அரசாணி மாலை, நல்ல தங்காள் கதை, அருணாச்சல கவிராயர் ராம நாடக  கீர்த்தனை என்று  சில அவளே ஊசி நூலில் தைத்தது,    எல்லாமே  அட்டை கிழிந்த, அட்டை  இல்லாத,பின் பக்கங்கள் இல்லாத, நடுவே ஏடாக உள்ளவை தான் அவள் லைப்ரரியில். .   

நல்ல தங்காளை எடுத்து படித்த போதெல்லாம் அவள் அழாத  நாளே இல்லை. ஏன் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அழுகிறாள் என்பது எனக்கு அப்போது புரியாத வயது 

 பெரிய எழுத்து  விக்ரமாதித்தன் கதைகள்  என்ற  புத்தகத்தையும் பக்த விஜயம் புஸ்தகமும்  எப்போதும்  அவள் ஒழிந்த நேரத்தில் கையில் வைத்துக்கொண்டு  இருந்தது நினைவில்  இருக்கிறது.  அந்த  ரெண்டு  புஸ்தகமும் ''அறுதப்பழசு''  என்கிற  வகையைச்  சேர்ந்தவை.   அந்த  ரெண்டு  புத்தகங்களுமே  அவளால்  ஊசி  நூலினால்  மீண்டும்  ஒரு தடவை   தைக்கப்பட்டு   கோந்து போட்டு  நியூஸ் பேப்பர் அட்டை கொண்டவை. அவளால்  பலப்படுத்தப்  பட்டவை.    உள்ளே  பக்கங்கள் பழுப்பு  நிறத்தவை.   நிறைய  பக்கங்கள்  அப்பளம்  போல்  நொறுங்கும்  தன்மையானவை.   ஐம்பது வயது அதிகமானவை.  

 அம்மா  பார்க்காதபோது  ஒரு  சில  பக்கங்களை  மடித்து  அவை  ஒடிந்து சிறு  தூள்களாக  ஓமபொடியாக  கீழே விழுவதை பார்த்து  மகிழ்ந்து இருக்கிறேன்.  பாவம்  அவளுக்கு  தெரியாது  நான்  தான்  செய்தேன்  என்று.  எதற்குமே    அனாவசியமாக என்  அண்ணன் ஜம்பு தான்  திட்டு வாங்குவான்.  செய்யாத தவறுக்கு  தண்டனை  பெறுவதில் அவனுக்கு நிகர்  அவன் தான். ''யார்ரா அவன்  இந்த  பக்கத்தையெல்லாம்  நொறுக்கினவன்.    படுபாவிகளா.  நல்ல  விஷயங்களை எல்லாம்  படிக்க முடியாதபடி  பண்ணிட்டேளே ''  என்று அவள்  பொருமியதின்  அர்த்தம்  தெரியாத வயது  எனக்கு.

அந்த  புத்தகங்களைப் படிக்கும்போதே அவள் அழுவாள் என்று சொன்னேனே .அதன் காரணம் அவள்   அதில்  துயர  சம்பவங்கள்   வர்ணிக்கப்பட்டிருந்தால் அவளும்  அந்த  புத்தகத்தில்  வரும்  நல்லதங்காளாக மாறிவிடுவாள் .   சோக  சம்பவத்தோடு  தன்னை இணைத்துக்கொண்டு தானும்  கரைந்து விடுவாள்   என்பது இப்போது   புரிகிறது.  நல்ல தங்காள்   அவளை  அநேகம்  முறை  அழ வைத்திருக்கிறாள். 

அதற்கு  பிராயச்சித்தமாகத்தான்  இப்போது  நல்ல விஷயங்களை  புத்தகமாக்கி  நிறைய  வீடுகளில் வயதானவர்களும்  தமிழில்  படிக்க  என்னால்  முடிந்ததை  செய்கிறோனோ   என்றும்  எனக்கு புரியவில்லை. ஏதோ இப்போது நான்   செய்வதில்  கொஞ்சம்  திருப்தி  ஏற்படுகிறதே  அந்தவரைக்கும்  சந்தோஷம்.  

மறுபடி  புத்தக விஷயத்துக்குப் போவோமா?   அந்த  ரெண்டு புஸ்தகங்களுமே  வெள்ளைக்காரன்  காலத்தியவை.   அவற்றை  பதிப்பித்தவர்  இரத்தின நாயக்கர்  சன்ஸ்   என்று  போட்டிருந்ததாக  ஞாபகம்.  எனக்குத்தான் அப்போது படிக்கத் தெரியாதே.  பிற்காலத்தில்  எப்போதோ  அந்த  புஸ்தகத்தை படு  பயங்கரமாக  கிழிந்து நாசமான நிலையில்  பார்த்தபோது இந்த  பெயர்  மனதில் பதிந்தது.

ஒரு ஆச்சரியம்  என்னவென்றால்  அந்த  புத்தகத்தில்  நிறைய  படங்கள்  உண்டு.  எனக்கு  அந்த  சிறு வயதில்  படம்  தான்   பார்க்க தெரிந்தது. படிக்க தெரியாதே .  ஆறு  வயதிற்குத்தான்  என்னை  ஒண்ணாம்  க்ளாசில்  என்  தந்தையார்  ஒரு  கூரைக்கட்டு  பள்ளியில்  படிக்கக் கொண்டு   சேர்த்தார்.  கார்பொரேஷன் பள்ளி.   காவேரியம்மா தான்  டீச்சர்.  அடிக்கவே  மாட்டாள்.  நன்றாக  நினைவு இருக்கிறது.   ரெட்டைநாடி.  எப்போதுமே   பச்சை  நூல்  புடவை தான்.  சிரித்துக்கொண்டே  இருப்பாள்.  கோவம்  மட்டும்  திடீர்  திடீர் என்று சொல்லாமல்  கொள்ளாமல்  சுனாமியாக  வரும்.   பிரம்பால்  அடிக்க மாட்டாள்.  காதை மட்டும்  கன்னா பின்னா  என்று  திருகுவாள் .  அதனால்  ஏற்படும் வலியில்  கதறும்போது இனிமே  இப்படி பண்ண மாட்டாயே  என்ற  நீதி வாக்கியம்  எங்களிடம்  எதிர்பார்ப்பாள்.  '' மாட்டேன் மாட்டேன் '' என்று  நாங்கள்  தேர்தல்  வாக்குறுதி அளிப்போம்.   விட்டு விடுவாள்.  இது  ஒரு தொடர்ந்து  நடந்த கதை அப்போதெல்லாம். வீட்டில்  போய் காது திருகிய படலத்தைச்  சொல்வதில்லை.  சொன்னாலும்  காவேரி அம்மாவின்  பக்கம்  தான்  தீர்ப்பு  கிடைக்கும். 

புஸ்தகத்தை பற்றி சொன்னேனே.  அதில்  ராஜா,  மந்திரி, காலாட்படைகள், குதிரைவீரர்கள்  எல்லாருமே  இருப்பார்கள்.  ஒவ்வொருவரிடமும்  ஒரு  பட்டா கத்தி  நீளமாக ஆகாயத்தை பார்த்தபடி  கையில் இருக்கும்  இடுப்பில்  ஒரு  கேடயம்.  தலையில்  கிரீடம்.  காது குண்டலம்.  காதுவரை  மீசை. உடம்பை பிடித்தாற்  போல  ஒரு  ஆடை.  ஒரு  அவசரத்துக்கு  அவிழ்க்கமுடியாது. காலில் ரொம்ப கஷ்டமான  ஒரு  காலணி. நிறைய  சுற்றுகளாக  இருக்கும்.  ஆஹா  இது  என்ன  வேடிக்கை.!!  வினோதம்!   குதிரை  மீது அமர்ந்து கொண்டிருப் பவனும்,  தரையில்  நின்று  கொண்டிருப்பவனும்    அருகே தெரியும் மரங்களும்  ஒரே  உயரம்.  ராஜா  மந்திரி  இத்யாதி  அனைவருமே  ஒரே மாதிரி முக அமைப்பு கொண்டவர்கள், மீசை  குண்டலம் தலை கிரீடம்,  உடம்பை பிடித்துக்கொண்டிருக்கிற  ஆடை  எல்லாம் ஒரே மாதிரி.  உடல்  வாகு  கூட   கட்டுமஸ்தான  உடம்பு  தான் அனைவருக்கும்.  கட்டை  .குட்டை ஆட்கள் . இதுபோதாதென்று  அனைவருமே  ஒரே  பக்கம்  தான்  பார்த்துக்கொண்டிருப்பார்கள்.   

  படத்தில் பெண்கள்  எல்லோருமே  முகத்தை விட  பெரிய  புல்லாக்கு அணிந்து கொண்டிருப்பார்கள்.  அவர்கள் அனைவருக்கும்  ஒரே  மாதிரியான  உணர்ச்சியற்ற  பட்டை  சதுர  முகம்.  குண்டாகத்தான்  அனைவருமே,  குள்ளமாக  இருப்பார்கள்.  மூக்கு  கொஞ்சம்   நீண்டே தான்  இருக்கும். அதில்  தான்  அந்த  புல்லாக்கு  முகத்துக்கு  சம்பந்தமில்லாமல்  தொங்கிக்கொண்டிருக்கும்.   மேலுதடு  கீழுதட்டை விட   கொஞ்சம்  முன்னே  நீண்டு  மூக்கில் பாதி  தூரம் வரை!!   அது  ஏன்   அவர்கள்  அனைவருக்குமே  தாடையில்  மோவாக்கட்டையில்  ஒரு  வளையம்?  அவர்கள்  அணிந்துள்ள  புடைவை மேலாடை  அனைத்துமே  யூனிபார்ம்  போல  ஒரே மாதிரியானவை.  உட்கார்ந்தவள், நின்றவள்   அனைவருமே  ஒரே உயரம்.  

அந்த  கால  சித்திரக்காரர்கள்,  சம நோக்கு கொண்டவர்கள்,  பாரபட்சம்  அற்றவர்கள்  என்று  அப்போது எனக்கு  புரியவில்லை. இந்த  படங்களை  திரும்ப  திரும்ப  பார்ப்பதிலேயே  எனக்கு அந்த  வயதில் பொழுது போனது.  அந்த  புத்தகங்களை நான் அடிக்கடி  தேடுவதால்  அவற்றை காப்பாற்ற   அம்மா  எப்போதும்  சமையில்  அரை   பாத்திரங்களுக்கு  இடையே எங்காவது  மேலே சொன்னபடி ஒளித்து எங்காவது  செருகி  வைத்திருப்பாள். 

நான்  அவற்றை  எளிதில்  ஆக்ரமிப்பேன்.  முடிந்த இல்லை  கிடைத்த  நேரத்தில்--  எனக்கு  நேரமில்லாமல் ஒன்றும்  இல்லை  -  புத்தகம்  கிடைத்த  நேரத்தில் -  அந்த காய்ந்த  அப்பளம் போன்ற  பக்கங்களை  ஒடிப்பதில் அலாதி  ஆனந்தம். 

அந்த  கால  புத்தகங்களில் படங்களை பற்றி இன்னும் கொஞ்சம்.    சில பக்கங்களில்  ஆறு ஓடிக் கொண்டிருக்கும்.  அதில்  நண்டு  மீன்கள்  எல்லாம்  நன்றாகவே  நமக்கு கண்ணுக்கு தெரியும்.  எல்லாம்கோடிட்ட ஓவியங்கள் தான். வண்ணங்கள் இல்லை.  எதற்கு  எல்லா  மீன்களும் ஒரே  பக்கம்  பார்த்துக்கொண்டு   ஒரே  அளவில் ??  ஆற்று நீர் வரிசையாக கோடுகளாக  காட்டபட்டிருக்கும்.  கீழிருந்து  மேலாக  பல  வரிசைகள். இது தான்  ஆறு.   எங்காவது  சில பக்கங்களில்  ஒரு முனிவர் சிலையாக  அமர்ந்திருப்பார்.  அல்லது  ஒரு  சிவலிங்கமோ நந்தியில்லாமல் தனித்து  இருக்கும்.    தலைமேல் ஒரு  வாழைமரமோ,  வேறு  எதாவது  மரமோ  அதன் கிளைகளை   தலைக்கு  மட்டும்  குடையாக  அமைத்துக்கொண்டிருக்கும்.  அல்லது முக்கால் வாசி சிவலிங்கங்கள் மேல் பசு பால் சொறியும் . மறுபடியும்  மரமும்  அதன் அடியில் உட்கார்ந்திருக்கும்  முனிவரோ  அல்லது  சிவலிங்கமோ  கிட்டத்தட்ட   ஒரே உயரம்.    எழுந்தால்   தலை மரத்தில் மோதிவிடும் போல்  காணும். 

புத்தகத்தின்  வாக்யங்கள்  பெரிதாக  இருக்கும்,  பெரிய  எழுத்திலும்  இருக்கும்   '' அஹோ  வாரும்  பிள்ளாய்...'' போன்ற  சொற்கள்  அதிகம்  இருக்கும்.  நீள   நீள  வாக்கியங்களில் தான் ஆசிரியர் எழுதுவார் போல் இருக்கிறது. 

இத்தகைய  புத்தகங்களை  மீண்டும் ஒரு முறை  பார்த்து  படிக்க  ஆவல் அதிகரிக்கிறது.  தேடிக்கொண்டு இருக்கிறேன்.  இந்த முறை  நிச்சயம்  பக்கங்களை  உடைக்க மாட்டேன். உங்கள்   பொக்கிஷங்கள் இருந்தால்  வீணடிக்காதீர்கள்.

இனி விக்ரமாதித்தன் வேதாளம்  பற்றி பேசுவோம்.


  




1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...